Tuesday 12 April, 2022

காற்றில் பறந்த கீதமா அடிப்படை உரிமை!

 


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

இந்திய நாடு சுதந்திரத்தினை சுவைத்த பின்பு 20.08.1947 ஆம் தேதி அரசியலமைப்பு சபையினால் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் தலைமையில் முகமது சாதத்துல்லா உள்பட 6 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்புக்கு வழி வகுத்தது. அந்த அமைப்பு ஜனநாயகத்தில் அடிப்படை உரிமை என்று அத்தியாயம் 12லிருந்தது 35 விரிவாக சொல்லப் பட்டுள்ளது. முக்கியமாக ஆறு அடிப்படை உரிமைகளாக1) சம உரிமை, 2) சுதந்திரம், 3) சுரண்டலுக்கு எதிரான உரிமை, 4) மதம், 5) கல்வி மற்றும் பண்பாடு, 6) அடிப்படை உரிமை கோரல்  போன்றவையாகும்.

            ஆனால் என்ன நடக்கின்றது இந்திய நாட்டில். முஸ்லிம்கள் தொழுகை நடத்த பள்ளிவாசல் தேவையில்லை என்று அயோத்தியில் மஸ்ஜித் இடிப்பை நியாயப் படுத்தியது நீதி மன்றம். ஹரியானா மாநிலம் குர்கோன் பகுதியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகைக்கு கூடும் மைதானத்தில் தொழுகை நடத்தக் கூடாது என்ற ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டு நிறுத்தப் பட்டதும் ஒரு செய்தி. புது டெல்லியில் 'லால் கும்பத்' பஞ்சு ஷீல் என்க்ளேவ்' நில்லி மஸ்ஜித்' ஆகியவற்றில் தொழுகைகள் நிறுத்தப் பட்டத்திற்கு யார் காரணம் என்று தெரியவில்லை. மஹாராஷ்டிராவில் அரசியல் ரீதியாக வெல்ல முடியாத ராஜ் தாக்கரே முஸ்லிம்கள் தொழுகைக்கு அழைக்கும் ஆசான் ஒலி பெருக்கிகளை நிறுத்த வேண்டும் அல்லது நாங்கள் தெரு தோறும் அனுமான் பஜனை நடத்த ஒலி பெருக்கிக்கு அனுமதிக்க வேண்டும் என்று முண்டாசு கட்டுகிறார். அவரைத் தொடர்ந்து கர்நாடக பஜ்ரங் தால் மற்றும் ஸ்ரீ ராம் சேனா அமைப்பும் குரல் கொடுத்துள்ளது. முஸ்லிம்கள் தொழுகைக்கு அழைக்கும் பங்கு அதிகமாக 2 நிமிடமாகும். மாறாக அவர்கள் சொல்லும் பஜனை மணிக்கணக்கில் காதைப் பிளக்கும். அவைகளெல்லாம் பார்க்கும்போது நாட்டில் மத சுதந்திரம் பறி போகிறதோ என்று எண்ணத் தோன்றவில்லையா?

            முஸ்லிம் பெண்கள் வயதுக்கு வந்து விட்டால் ஹிஜாப் அணிந்து தங்களது அங்கங்கள் வெளி ஆடவர் கண்ணுக்கு இருக்க ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கலாட்சார பண்பாடு அதனை இந்திய அடிப்படை உரிமையும் அனுமதிக்கின்றது. அதுபோன்ற முக்காடுகளை வட மாநிலத்தில் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கிலும் கடைப் பிடிக்கப் படுவதினை நாம் பார்க்கலாம். ஏன் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி கூட முக்காடு அணிந்திருப்பதினை பலர் பார்த்திருப்பீர்கள். இதுகாறும் இதனை யாரும் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் கர்நாடகாவில் பி.ஜெ.பி அரசு பதவி ஏற்ற பின்னர் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப் பட்டுள்ளது. அது மட்டுமா? உணவு முறையும் விட்டு வைக்கவில்லை வலது சாரி அமைப்புகள். தெற்கு மற்றும் கிழக்கு டெல்லியில் அமாவாசை முந்திய, பிந்திய அமாவாசை அன்றும் இறைச்சி கடை திறந்திருக்க அனுமதியில்லை என்ற அறிவிப்பு சொல்லப் பட்டது. விஸ்வ ஹிந்து பரிசத், பஜ்ரங் தால், இந்து ஜார்கன் வேதிகா அமைப்புகள் இந்துக்கள் முஸ்லிம் இறைச்சி கடைகளில் வாங்குவதினை தவிர்க்க அறைகூவல் விட்டுள்ளது, அதற்கு காரணமாக அது ஹலால் இறைச்சியாம். அந்த ஹலால் இறைச்சியில் எவ்வாறு விஞ்ஞானப் பூர்வமான செயல் இருக்கின்றது என்று அவர்களுக்கு தெரிந்திருந்தாலும் மத துவேசம் அவர்களை அப்படி சொல்ல வைக்கின்றது. ஒருவர் என்ன உணவு உண்ண வேண்டும், எந்தக் கடையில் என்ன வாங்க வேண்டும் என்ற உரிமையை அடுத்தவர் எந்த சட்டத்தில் அனுமதிக்கின்றது என்று தெரியவில்லை. ஏப்ரல் 10ந்தேதி இரவு டெல்லியிலுள்ள ஜவஹர்லால் பல்கலைக் கழக காவேரி விடுதியில் இரவு புலால் உணவு பரிமாறப் போகிறதை அறிந்த ஏ.பி.வி.பி(ஹிந்து மாணவர் அமைப்பினர்) உள்ளே புகுந்து தாக்கியுள்ளனர். அதில் பெண் மாணவர்களும் பாதிக்கப் பட்டுள்ளனர். உங்களுக்கு எல்லாம் தெரியும் வண்டியில் வியாபாரத்துக்காக அல்லது வளர்ப்பதிற்காக பசு மாடுகளை ஏற்றிப் போனவர்களை அடிப்பதும், கொலை சமபவத்தில் ஈடுபடுவது. அதுபோன்ற Lynching சம்பவத்தில் ஈடுபட்டவர்களை ஏன் NIA  என்ற தேசிய காவல் படை நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடென் 1.4.2022ல் Lynching போன்ற குற்றங்கள் நடந்தால் அது தேசிய குற்றம் என்ற சட்டத்தில் கையொப்பம் இட்டுள்ளார்.  கர்நாடகாவில் உள்ள தார்வாடில் உள்ள கோவிலில் முஸ்லிம்கள் கடை வைக்கக் கூடாது என்று கூக்குரல் எழுப்பப் பட்டதாம். கர்நாடக முன்னாள் முதல்வர் எட்டி வீரப்பா கூட வலது சாரி அமைப்பினருக்கு 11.4.2022 அன்று ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். முஸ்லிகள் நமது ஒரு தாய் மக்கள் அவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும். ஆனால் சில விஷமிகள் மத நல்லிணக்கத்தினை குழைப்பது நல்லதல்ல என்று அறிவுரை வழங்கியுள்ளார். நீங்கள் பழனி கோவிலுக்குப் போகும் வழியில் உள்ள கடைகள் பெரும்பாலும் பழனி பெரிய மசூதிக்கு சொந்தமாகும். அப்படியென்றால் அங்கே முஸ்லிம்கள் கடை வைக்கக் கூடாதா? அவ்வாறு செய்தால் அடிப்படை உரிமை மீறுவது ஆகாதா? டெல்லி சென்றவர்கள் குத்புதீன் ஐபக் என்ற முஸ்லிம் மன்னன் கட்டிய குதுப் மினாரை பார்க்காமல் வர மாட்டீர்கள். அந்த கோபுரம் 1993ம் ஆண்டு UNESCO ஐநா கலாச்சார மையத்தினால் பழமை வாய்ந்த கட்டிடக் கலை என்று ஏற்றுக் கொள்ளப் பட்டது. தற்போது VHP விஷ்வா ஹிந்து பாரிசாட் அதனை கடவுள் விஷ்ணு சிலம்பி என்றும் அதனை இடித்து விட்டு விஷ்ணு கோவில் கட்டவேண்டும் என்றும் சொல்வது என்ன நியாயம் என்று உங்களுக்கு கேட்கத் தோன்றவில்லையா?

            வட இந்தியாவில் நடந்த மகா கும்பாபிஷேகத்தில் 2/2022ல் வலது சாரி சுவாமி மஹாசாவானந் இந்துக்கள் ஒவ்வொருவரும் ஆயுதம் வைத்துக் கொள்ளவேண்டும் என்றும்  அது தான் ஆர் எஸ் எஸ் அமைப்பு ஜக்கா என்ற பெயரில் கம்பு, கத்தி மற்றும் பெண்களுக்கு துப்பாக்கி பயிற்சியினை நாட்டில் பல இடங்களில் நடத்துகின்றன. உத்திரபிரதேச சுவாமி முனி  கெஜராபாதில் பேசும்போது முஸ்லிம் பெண்களை கற்பழிக்க வேண்டும் என்று முண்டாசு தட்டியுள்ளார். அவருக்குத் தெரியாது சீரிப் பாயும் புலியினை அரிசியில் உமியை பிரித்து எடுக்கும் சொளகு கொண்டு விரட்டும் வீரப்பெண்கள் நிறைந்த நாடு இந்திய மண் என்று. இப்படி மத, மற்றும் பண்பாடு, வன்முறை தூண்டுகிற பேச்சினை வலது சாரி அமைப்பு தலைவர்கள் எல்லாம் பேசிவருகிறார்கள், ஆனால் இம் என்றால் என்.ஐ.ஏ. என்று சொல்லும் அரசுகள் ஏன் இந்த செயல்களுக்கு மட்டும் கண்டும் காணாமல் உள்ளது என்று தெரியவில்லையே!

            அதற்கு ஒத்து ஊதுவதுபோல கர்நாடக உயர் நீதிமன்றமும் ஹிஜாப் அணிவது முஸ்லிம்களுக்கு கட்டாயமில்லை என்று கூறியுள்ளது. ஒரு மதத்தினர் பண்பாடு பற்றி கூறுவதற்கு யாருக்கு உரிமை உண்டு. பெண்கள் வன் முறை பற்றி பேசும் சட்டத்தில் மத வழி பாடுகளில் பெண்களை படுக்க வைத்து அவர்கள் முதுகில் ஆண்கள் நடக்க மட்டும் அனுமதியுண்டு. தூக்கு விழா என்று பச்சிளம் குழந்தைகள் கதற கதற உயரத்தில் ஒருவர் முதுகில் அலகு குத்திவிட்டு தூக்கும் அனுமதிக்கு யார் அனுமதி கொடுத்தது, பெண்களுக்கு தோசம் மற்றும் பேய் பிசாசு விரட்டுகிறேன் என்று சாட்டையால் பெண்களை சராமாரியாக அடிக்கும் வன்முறை செயல்  உரிமை எந்த சட்டத்தில் உள்ளது. அவையெல்லாம் அவர்கள் மத பண்பாடு, வழிபாடு தானே! ஏன் அதனையெல்லாம் பேசுவதில்லை, நீதிமன்றங்கள் கண்டும் காணாது உள்ளதே என்ற கேள்வி உங்களுக்கு தோன்றவில்லையா!

            நம் சமுதாயம் இது போன்ற கொடுமைகளை இதுவரை அனுபவிக்கவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஏன் இல்லை ரசூலுல்லாஹ் காலத்திலிருந்து, சிலுவை யுத்தம் வரை எதிர் கொண்டுதான் எழுச்சி கண்டுள்ளது. 13ம் நூற்றாண்டில் மங்கோலிய பேரரசின்  செங்கிஸ்கான் பேரன் மொங்கோகான் பல நாடுகளை கைப்பற்றினான். 500 ஆண்டு பழமையான அப்பாஸிய ஆட்சிமீது மங்கோலியர் கவனம் திரும்பியது. தளபதி ஹுலாகு கான் தலைமையில் பாக்தாத்தை கைப்பற்றி சொல்லவொன்னா துன்பத்தினை முஸ்லிம்களுக்கு தந்தனர். அதன் பின்பு அவனுடைய பார்வை ஜெருசலம் மீது திரும்பியது. அப்போதைய மல்லுக்கு மன்னன் குத்தூஸ் ஜென் ஜலாலுதீன் தலைமையில் மங்கோலிய படையினை எதிர்த்து போரிட்டு வெற்றி கண்டான். அதேபோன்று சிலுவை யுத்தத்தில் முஸ்லிம்கள் ரத்தம் ஜெருசலத்தில் கிரண்டை கால் அளவிற்கு சிந்தினாலும் மன்னன் சாலாவுதின் இறுதியில் வெற்றிகொண்டான். எத்தனை துன்பம் வந்தாலும் முஸ்லிம்களுக்கு வரும் துன்பங்களை கண்டு புறமுதுகிட்டு ஓடாது நேர் கோட்டில் எதிர்த்து நின்று வெற்றி கொள்வதே முஸ்லிம்கள் வரலாறு.

            டெல்லியில் நடந்த ஹிந்து மகாசபா பஞ்சாயத்தில் அர்ச்சகர் பதி நரசிம்மானந்தா பேசும்போது முஸ்லிம் ஒருவர் மட்டும் பிரதமரானால் 50 சதவீத ஹிந்துக்கள் முஸ்லிமாக்கப் படுவர் என்று கூறியுள்ளார். இந்தியாவினை 500 ஆண்டுகள் ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் இருந்தும் முஸ்லிம்கள் ஜனத்தொகை 15 விழுக்காடு தாண்டாத போது ஒரு முஸ்லிம் பிரதமர் மட்டும் எப்படி அந்த காரியத்தினை செய்யமுடியும் என்று யாரும் கேள்வி கேட்கத்தானே செய்வார்கள். ஏன் முஸ்லிம்கள் எவருக்கும் இந்திய நாட்டின் பிரதமராகும் தகுதி இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். 8.8.2018ந்தேதி திபெத்தின் ஆன்மிக தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசினை வென்றவருமான  தலாய்லாமா அவர்கள் கோவாவில் உள்ள சாந்திநிகேதன் நகரத்தில் உள்ள கோவா இன்ஸ்டிடூட் ஆப் மானேஜிமென்டில் போசும்போது தேச பிதா மகாத்மா காந்தி அவர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தால் முகமது அலி ஜின்னா அவர்கள் தான் வரவேண்டும், ஏனென்றால் அவர்தான் தகுதியானவர் என்று சொன்னதாகவும், ஆனால் சில காரணங்களுக்காக அவருடைய ஆசையினை நிறைவேற்றுவதற்கு ஜவர்கர்லால் நேரு தடையாக இருந்து பின்பு அவரே முதல் பிரதமரானதும், நாடு பிரிவினைக்கும் அது தான் காரணம் என்று பேசியிருக்கும் போது முஸ்லிம்களை பிரிவினைக்கு முழுக்காரணம் என்று தற்போது சிலர் சொல்வது வரலாற்றை முழு சோற்றில் பூசணிக்காயை மறைக்கும் செயலாக உங்களுக்குத் தெரியவில்லையா?

            பிரிட்டிஷ் அரசிடம் இந்தியாவிற்காக ஆணித்தரமாக போராடிய தலைவர்களில் 1930ம் ஆண்டு லண்டனில் நடந்த முதல்  வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொண்ட அம்பேத்கார், முகமது அலி ஜின்னா, முகமது ஜபாருல்லா ஆகியோரும், 1931 ம் ஆண்டு லண்டனில் நடந்த இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொண்ட சுல்த்தான் அஹமத் கான், மிர்ஸா இஸ்மாயில், லியாகத் அலி கான், முகமது இக்பால், முகமது அலி ஜின்னா ஆகியோரும், மூன்றாம் வட்ட மேஜை மேஜை மாநாட்டில் கலந்து கொண்ட ஆகாகான், ஹஸ்னவி, ஹாபிஸ் கிகாயத், முகமது இக்பால் ஆகியோரும் முக்கியமானவர்கள். அப்படி இருந்தும் அவர்கள் எல்லோரும் பிரதமராகவில்லையே அதற்குக் காரணம் உள்ளடி வேலையா என்று தெரியவில்லையா உங்களுக்கு?

            இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள 'இந்தியா கேட்டில் உள்ள நினைவு சின்னத்தில்' இந்தியாவின் சுதந்தர போராட்டத்திற்காக உயிர் நீத்த 95300 தியாகிகளின் முஸ்லிம்கள் மட்டும் 61945 என்று குறிக்கப் பட்டிருக்கும் ஏதோ முஸ்லிம்கள் எல்லாம் அந்நியர் என்றும் அவர்களுக்கு இந்தியாவில் எந்த உரிமையும் இல்லை என்பது போல கூக்குரல் எழுப்புவது ஏன் என்று தெரியவில்லையா உங்களுக்கு!

            இந்தியாவில் இருக்கும் 15 சதவீத முஸ்லிம்களும் மற்றவர்கள் போல திராவிட மக்களை மொஹஞ்ஜோதாரா-ஹரப்பா நாகரீகத்திலிருந்து விரட்டிய நாடோடிகளா? இல்லையே! இந்திய மணணில் மண்ணோடு மண்ணாக உழைத்து முன்னேறிய இந்தியர் தானே! அவர்கள் இஸ்லாம் என்ற அமைதி மார்க்க அகிம்சை கொள்கையில் கவர்ந்து மாக்களை புனிதர் ஆக்கிய மார்க்கத்தினை தழுவிக்கொண்டதால் அவர்கள் எல்லோரும் அந்நியரா? 80 சதவீத கிராமங்களில் சென்று பார்த்தால் முஸ்லிம்களும் அந்நியோந்நியமாக, அண்ணன் தம்பியாக, மாமன் மச்சானாக வாழ்வதினை வலது சாரி கும்பலின் கண்களுக்குத் தெரியவில்லையா? 

            இந்திய சக்ரவர்த்தி அக்பர் அவர்கள் முஸ்லிமாக இருந்தும் அவர் ராஜபுத்ரர்களுடன் பழகியதால் அந்த இனப் பெண் ஜோது பாயினை திருமணம் செய்தார். அந்த இந்தப் பெண் பெற்றெடுத்த மகனே ஜஹாங்கிர் அவருடைய மகன்கள் தான் ஜாஜஹான், அவருடைய மகனார் தான் சக்ரவர்த்தி அவுரங்கசிப். அவர்கள் பெற்றறுத்த பிள்ளைகள் எல்லாம் ஹிந்து கொள்ளு பாட்டி பேரன்கள் தானே! ஏன் அவர்கள் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள் என்றால் இஸ்லாம் திருடக்கூடாது, பொய் சொல்லக்கூடாது, லஞ்சம், ஊழல் கூடாது, பதுக்கல்  கடத்தல் கூடாது, வட்டி கூடாது, கொலை கூடாது, கற்பழிப்பு கூடாது, பிறர் பொருளை அபகரிக்கக் கூடாது, மனிதர்களில் வேற்றுமை கூடாது, பிற மதத்தினை நிந்தனை செய்யக் கூடாது, நம்பிக்கை துரோகம், நாட்டினை துரோகம்செய்தல், பிறர் பொருளினை அபகரித்தல், அனாதையாய் விரட்டி அடித்தல், ஈகை குணம் கொள்ளல், தீமையினை சுட்டெரித்தல், மது, மாது, போதைப் பொருளுக்கு அடிமையாகிவிடக்கூடாது போன்ற 700 கட்டளைகளை போதித்ததால் தானே அவர்கள் இஸ்லாத்தினை ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் எப்படி அன்னியவர் ஆவர். அதனைத் தானே கர்நாடக முன்னாள் முதல்வர் எட்டி வீரப்பா கூட சொல்லியுள்ளார். இப்படி சந்ததி சந்ததியாக வாழும் இந்தியாவில் புது புல்லாங்குழல் சில வலது சாரி அமைப்புகள் ஊதுவதினால்  அடிப்படை உரிமைகள் எல்லாம் ஒரு காலத்தில் காற்றில் பறந்து போய் விடுமா என்று காலம் தான் பதில் சொல்லவேண்டுமா?