Wednesday, 2 October 2013

வாய்க்கு எட்டியது கைக்கு எட்டவில்லையே ஏன்?



(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ )
இந்திய திருநாட்டில் மைனாரிட்டி சமூகம் என்றால் முதலில் 72 விழுக்காடு கொண்ட முஸ்லிம்களும், இரண்டாவது இடத்தில் 12.71 விழுக்காடு கொண்ட  கிருத்துவர்களும், மூன்றாவது இடத்தில் 10.13 விழுக்காடு கொண்ட சீக்கியவர்களும் உள்ளனர்.
நீதி அரசர்கள் சச்சாரும், ரங்கநாத் மிஸ்ராவும் உயர் சாதியினராக இருந்தாலும் நெறி தவறாது முஸ்லிம்கள் வாழ்க்கைத் தரத்தின் கடைகோடியில் இருப்பதாக தங்களது உண்மை கண்டறியும் அறிக்கையில் வெளியிட்டனர்.
அந்த அறிக்கையினை கையிலெடுத்து சமூதாய இயக்கங்கள் இட ஒதுக்கீடுகளுக்குப் போராடின. பாராட்டக் கூடிய செயல் என்பதால் மெச்சலாம், போற்றலாம். ஆனால் அந்த இயக்கங்கள் அரசு மைனோரிட்டி மக்கள் சுய வேலை திட்டங்களுக்காக ஒதுக்கிய பணத்தினை தங்களுடைய மக்களுக்குப் போய் சேர்ந்து அவர்கள் வாழ்க்கைக்கு ஒளியேற்றி வைத்தார்களா என்றால் மிகவும் குறைவே என்ற புள்ளி விவரங்கள் சொல்லுகின்றன. அவற்றினை கீழே காணலாம்:
மைனாரிட்டி சமூகத்தினவர் சுய வேலை கடன் திட்டத்தில் பயன் பெற ரூ 1,83,072.45 கோடிகள் ஒதுக்கப் பட்டன. இந்திய நாட்டில் 72 விழுக்காடு கொண்ட முஸ்லிம் மைனாரிட்டி மக்கள் பெற்ற கடன் வெறும் ரூ.87,603 கோடிகள் தான். அவை வெறும் 50 விழுக்காடு தான்.
ஆனால் 12.71 விழுக்காடு கொண்ட கிருத்துவ மக்கள் அடைந்த பலன் 23.35 விழுக்கடுகளும், சீக்கிய மக்கள் 10.13 விழுக்காடு இருந்தாலும் ரூ. 47.577 கோடிகள் பெற்று இரண்டாவது இடத்தில் பலன் அடைந்துள்ளார்கள்.
ஆனால் முஸ்லிம்கள் 72 விழுக்காடு ஜனத்தொகை மைனாரிட்டியாக இருந்தாலும் மிகக் குறைவாகவே 50 விழுக்காடு கடன் உதவிப் பெற்றுள்ளனர். இதிலிருந்து அரசு பணம் மக்களுடையது. அதனைப் பெற்று நமது வாழ்க்கைத் தரத்தினை முன்னேற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வு வரவில்லையே அது யாருடைய குறை?
பல்வேறு அரசியல், சமூகப் போராட்டங்களுக்காக மைனாரிட்டி மக்களைத் திரட்டிப் போராடும் சமூதாய இயக்கங்கள், தேர்தல் நேரத்தில் ஓரிரு இடத்திற்காக தன்மானத்தினை விட்டுக் கொடுக்கும் தலைவர்கள் ஏன் ஏழை மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை?
வாரந்தோறும் பள்ளி வாசல் முன்பும், வணிகத் தளங்களின் முன்பும், செல்வந்தர்கள் வீடு முன்பும் கையேந்தி யாசகம் செய்யும் ஏழை முஸ்லிம் மக்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்ற, சுயமாக சம்பாதிக்க, சொந்தக் காலில் நிற்க  ஏன் முஸ்லிம் சமூதாய இயக்கங்கள் முன் வரவில்லை?
மைனாரிட்டி சமூகத்தினருக்காக ஒதிக்கிய லக்ஷம் கோடி ரூபாயில் ஏன் தங்களது மக்கள் தொகைக்கு ஏற்ப பெற்று வழங்க வில்லை?  என்று சுய சிந்தனை செய்ய வேண்டாமா?
தங்கள் இயக்கங்கள் வளரக் கொடிப் பிடிக்க முஸ்லிம் மக்களை எதிர் பார்க்கும் இயக்கங்கள் ஏன் அந்த புண் பட்ட கைகளுக்கு மருந்து போட, குழந்தைகள் படிப்பினிக்கு கல்விக் கடன் பெற, குடியிருக்க வீடு லோன் கிடைக்க, விவசாயம், தொழில் தொடங்க கடன் பெற, திருமண, முதியோர், ஊனமுற்றோர், விதவையினர் வாழ்க்கையில் ஒளியேற்ற ஏன் இயக்கங்கள் அதன் தொண்டர்கள் செயல் படக்கூடாது என்று சுய சோதனை செய்ய வேண்டும் என்று உங்களுக்குக் கேட்கத் தோணவில்லையா என் சமூதாய உள்ளங்களே!

மூடு மந்திரங்களும், மாயாஜாலங்களும்!



2003 ஆம் ஆண்டு ஈராக்கினை அமெரிக்காவின் ஆதரவு படைகள் பிடித்து அதன் ஜனாதிபதியான சதாம் ஹுசைனை கைது செய்யும்போது என்ன சொல்லப் பட்டது என்று உங்களுக்கு பலருக்கு தெரிந்து இருக்கும். இருந்தாலும் மனிதன் எதனையும் விரைவில் மறக்கக் கூடியவனானதால் ஞாபகப் படுத்துவது நல்லது என நினைக்கின்றேன். சதாம் ஹுசைன் தனது சொந்த ஊரான டிக்ஹிரிடில் உள்ள பண்ணை வீட்டில் மறைந்து இருந்ததாகவும், அமெரிக்காவின் கூட்டுப் படைக்குப் பயந்து ஒரு பதுங்கு குழியில் எலிபோல ஒளிந்து இருந்ததாகவும், அவரை வெளியே இழுத்து, பரட்டைத் தலையுடன் காட்சி தந்த அவர் வாயினைத் துறந்து பல்லினை சோதனை போடுவது போலவும், அதன் பின்பு அவரை சதாம் ஹுசைன் தான் என உறுதி செய்து கழுவில் ஏற்றி நாடகம் அரங்கேற்றியது யாவரும் அறிந்ததே!
அதே போன்று தான், லிபியா நாட்டின் மாவீரன் கடாபியினை ஒரு கழிவு நீர்க் குழாயில் ஒளிந்திருப்பதுபோலவும், அவரைப் பிடித்து அவர் நாட்டவரே கொண்டது போலவும் கபட நாடகம் ஆடப் பட்டது.
ஒசாமா பின் லேடன் வேட்டையிலும் பாக்கிஸ்தானிலுள்ள அபேட்டபாட்டில் அதிரடி நடவடிக்கை எடுத்து சுட்டுக் கொல்லப் பட்டு கடலில் அடக்கம் செய்யப் செய்யப் பட்டதாகவும் கூறப்பட்டது.
உடனே நமது மேதாவி சென்னை அண்ணாசாலை இமாம் ஒருவர் ஜனாசாவே இல்லாமல் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு மாறுபட்டு தொழுகை நடத்தினார். அதில் அனுதாபத்துடன் பலர் கலந்து கொண்டதாகவும் கூறப் பட்டது.
பல மக்களுக்கு புதிராத, மற்றும் புரியாத கேள்வியினை என்னிடம் சிலர் கேட்டனர்.
அவைகள்:
1) ஒரு குற்றவாளி என்றால் ஏன் சதாம் ஹுசைன்போல விசாரணை நடத்தி பாகிஸ்தானில் தண்டனை தரவில்லை?
2) மிகக் கொடியவர் என்றால் புரட்சிப் படையால் கடாபி போல கொல்லப் பட்டிருக்க வேண்டும், அது நடக்க வில்லையே ?
3) சர்வதேச குற்றம் புரிந்து இருந்தால், சர்வதேச குற்றங்களில் ஈடுபட்டவர்களை விசாரிக்கும் நீதி மன்றத்தில் லைபீரியா ஜனாதிபதி மார்க் டைலர் போலோவோ, செர்பியாவின் கொடுங்கோலன் மில்சொவிக் போலோவோ, ருவாண்டா நாட்டில் இனப் படுகொலை நடத்தி தண்டனை பெற்ற தலைவர் போலோவோ சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்தி ஏன் தண்டனை வழங்க வில்லை?
அதற்கு விடையாக உயர்ந்த புளிட்ஸ் பரிசு வென்ற பத்திரிக்கையாளர் செமோர் ஹேர்ஸ் என்பவர் எழுதியிருக்கும் தேசிய பாதுகாப்பு என்ற புத்தகத்தில், 'பாகிஸ்த்தானின் அபேட்டபாட்டில் அமெரிக்காப் படையினரால் கொல்லப் பட்டதாக கூறுவது வெறும் கப்சா என்று கூறுகிறார். அந்தத் தகவலை நியூ யார்க் டைம்ஸ் என்ற பத்திரிக்கையும் வெளியிட்டுள்ளது. ஒரு வேலை அதுவே உண்மையாக இருந்தால் ஜனாசா இல்லாமலிலேயே  ஜனாஸா தொழுகை நடத்தியவர்கள் தான் பிற்காலாத்தில் பதில் சொல்லியாக வேண்டும். அவர்கள் யாருடைய தூண்டிதல் மேல் அவ்வாறு செய்தார்கள் என்று எல்லாம் வல்ல இறைவனுக்கே வெளிச்சம். ஏனென்றால் சில மாதங்களுக்கு முன்பு அந்த இமாமை வெளிநாட்டு தூதர்கள் சந்தித்தார்கள் என்றும் கூறப் பட்டது.
ஆகவே தான் நான் தலைப்பில் சொன்ன, இந்த நவீன உலகத்தில் மூடு மந்திரங்களும், மாயாஜாலங்களும் சகஜம் என்றால் சரியா?
 

Sunday, 15 September 2013

என்னுடைய பெயர் கிங் கான்!

என்னுடைய பெயர் கிங் கான்!
(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ)
பாலிவூட் நடிகர் சாருக் கான் சமீபத்தில் நடித்த 'என் பெயர் கான்' என்ற படம் வசூலில் சக்கைப் போடு போட்டதாக ஊடகங்கள் வெளியிட்டன. அந்தப் பணம் அதனை தயாரித்த, விநியோகித்த அத்தனை மனிதர்களுக்கும் கிடைத்து அவர்கள் செல்வத்தில் அதிக செல்வம் சேர்ந்திருக்கும்.
ஆனால் தன்னலமற்ற கணினி கல்வியினை உலக மாணவர்களுக்கு, குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கியது மூலம் 2012 ஆம் ஆண்டு உலக பிரபலங்கள் நூறு பேர்களில் ஒருவராகத் திகழும் ஒரு முஸ்லிம் இளைஞர் சல்மான் கான் தான் நான் குறிப்பிடும் கான்.
அமெரிக்காவில் உள்ள நியூ ஆர்லீன்ஸ் நகரில் பங்களா தேசிய தகப்பனாருக்கும் இந்திய தாயாருக்கும் மகனாகப் பிறந்தவர் சல்மான் கான். மத்திய வர்க்கக் குடும்பத்தில் பிறந்த கான் கணிதத்திலும், கணினியிலும் மிகவும் சுட்டி .மாசாசுசெட்டஸ் தொழில் நுட்பக் கல்லூரியில் கணினி மற்றும் மின்சார சம்பந்தமான படிப்பில் பட்டம் பெற்று, ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ மேல் படிப்பினை முடித்தார். அதன் பின்பு போஸ்டன் நகரில் வேலை வாய்ப்பினைப் பெற்றார்.
கணினி உலகான சிலிகான் நகரில் கை நிறைய சம்பளம் . ஆனால் மனதில் உலக பாலகர்களுக்கு மன நிறைவான பேசும் படத்தில் பாடம் எடுத்துக் கல்விக் கண்ணைத் திறக்க வேண்டும் என்ற சின்ன சின்ன ஆசை.
அதற்கு அச்சாரமாக அமைந்தது.  2004 ஆம் ஆண்டு நியூ ஆர்லின்ஸ் நகரில் குடியிருக்கும் தனது சித்தி மகள் நாடியாவிற்கு தான் வசிக்கும் பாஸ்டன் நகரிலிருந்து கணிதம் மற்றும் சயின்ஸ் பாடங்கள் எடுத்தது.
நாடியாவின் அபார கல்வி முன்னேற்றத்தினைத் தொடர்ந்து  அவளுடை சகோதரர்களான அர்மானும், அலியும்   கல்வி கற்க கானின் உதவினை நாடினார்கள். 2006 ஆம் ஆண்டில் ஒரு பூனை பியானோவில் இசை வாசிப்பது போன்ற யு டூபில் வெளியிட்டார்.
விளையாட்டாக ஆரம்பித்த கணினி கல்விப் பாடம் யாஹூ, ஆராகுள், சிஸ்கோ , எச்.பி, கூகிள் போன்ற தொழில் நுட்பக் கம்பனிக் கிடையில் கான் முழு நேர உலக இலவச கணினிக் கல்வியினை ஆரம்பித்துள்ளார்.
நான் 55 ஆண்டுகளுக்கு முன்பு   பள்ளி மாணவனாக இருந்தபோது கணித டூசனுக்கு மாதம் ரூ 10/ கொடுத்த ஞாபகம். அதோடு   ரெமிங்டன் மெசினில் டைபிங் பழக ரூ 10/ கொடுத்துள்ளேன்.   அப்போது அந்தப் பணமே பெரிய விசயமாக இருந்தது. கணினி பழகியது எனது 57 வது வயதில் தான். ஆனால் இப்போது பாடங்களை 3 வயது குழந்தைகள் கூட கணினியில் கற்க முடிகிறது, ஐபெட் , ஐபாக் போன்ற ஸ்தானங்கள் உதவி செய்கின்றன.
ஆஸ்திரேலியாவின் நரம்பியல் நிபுணர் சூடி வில்ஸ் என்பவர், 'குழந்தைகள் தங்களது மதிய சாப்பட்டினைக் கூட மறந்து ஏன் வீடியோ பார்க்கின்றது என்றால் தங்களது வீட்டுப் பாடத்தினை மிகவும் சிறப்பாக செய்ய வேண்டும் என நினைக்கின்றார்கள்என்று கூறுகின்றார். வீடியோ கேம்ஸ் தங்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை உடனுக்குடன் திருத்திக் கொள்வதாகவும் கூறுகின்றார். குழந்தைகள் தங்கள் பழைய கல்வி கற்கும் முறையிலிருந்து புதிய முறை படம் பார்த்து கல்வி கற்கும் முறையினை ஆர்வத்துடன் பயில்கிறார்கள் என்று கூறுகிறார்.r நான் உயர் நிலைப் பள்ளி மாணவனாக இருந்தபோது வகுப்பில் ஆசிரியர் சயின்ஸ் பாடத்தினை வெள்ளை பலகையில் எழுதி போதிப்பதினை விட, ப்ரொஜெக்டர் வைத்து படம் காட்டி விளக்கும்போது மிகவும் ரசித்து புரிந்து கொண்டேன். அதே போல் தான்  இன்று கான் தனது கல்வி முறையினை உலகத்தில் பரப்புகிறார்.
கான் தனது திட்டகளை, 'டெட்' என்ற சிறப்புரையில் விளக்கும்போது, வீடியோ மூலம் கல்விக்கு புத்துனர்வூட்டுவது.  அவற்றின் சிறப்பு அம்சம் கீழ் வருமாறு:
1) பள்ளியில் விடுபட்ட பாடங்கள் கற்பது
2) சிறந்த ஆசிரியர்கள் கொண்டு கணினியில் பாடம் கற்பிப்பது.
3) இலவச கல்விச் சேவை பாலகர்களுக்கு அளிப்பது.
சல்மான் கானின் அறிவுச் சோலையில்( khanacademy.org). 4000 கல்வி சம்பந்தமான வீடியோக்கள் உள்ளன. அதனை இது வரை 250 மில்லியன் மக்கள் பார்த்திருக்கிறார்கள்.
2) coursera.org ஆன் லைன் பட்டங்கள் சிறந்த ஆசியர், பேராசிரியர் மூலம் வழங்கப் படுகிறது.
3) TED Talks, ted.com மூலம் தலை சிறந்த அறிவு ஜீவிகள் கொடுத்த உரைகளை 1400 வீடியோ மூலம் தரப்படுகிறது.
4) ocwconsortium.org மூலம் சிறந்த பல்கலைகழகங்களின் சிறப்புரைகளை தரப்படுகிறது.
5) apple.com/education/tunes.u என்ற பாடத்தின் மூலம்
iPod, iPhone or iPad ஆகியவற்றின் உபயோகங்களை அறியலாம்.
6) en.wikiuniversity.org மூலம் விக்கி மீடியா ஸ்தாபனத்தின் திறந்த நிலை கல்வி பாடங்களை தெரிந்து கொள்ளலாம்.
7) textbookrevolution.org மூலம் உலக புத்தகங்களை இலவசமாக கணினியில் தெரிந்து கொள்ளலாம்.

சிலரிடம் இது போன்ற கணினி படிப்புகளால் ஆசிரியர்களின் துணை அறவே மறுக்கப் படும் என்று பயம் உள்ளது. ஆனால் கணினி கல்வியினை ஆசிரியர்கள் மூலம் மேற்ப் பார்வையிட்டால் இன்னும் சிறப்பாக குழந்தைகள் கல்வி கற்க முடியும் என்கிறார் கான்.
மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கான் கல்வி நிறுவனத்திற்கு வருகை தந்து அவரைப் மனமாரப் பாராட்டியதோடு அவரின் ரசிகரும் ஆகி விட்டதாக 2011 இல் கூறியுள்ளார் என்று நினைக்கும் போது நாமும் அவருடன் சேர்ந்து பாராட்டுவதோடு நில்லாமல் உங்களால் முடிந்த அளவிற்கு கல்வி சேவையினை உங்கள் குடும்பத்திற்கு, சமூதாயத்திற்கு, நீங்கள் பணிபுரியும் நாட்டு மக்களுக்கு, உங்கள் ஊர் ஜமாத்து மக்களுக்கு வழங்க உறுதி எடுத்துக் கொள்வோமாக!


Monday, 9 September 2013

கண்டதும்-கேட்டதும்

கண்டதும்-கேட்டதும் 

எனது புதுக் கல்லூரி நண்பர் அமீரும், நானும் அவர் ஊரைச் சார்ந்த ஒரு பணக்கார பெருமுகர் ஜனாஸா தொழுகைக்கு சென்னை ராயப் பேட்டையில் உள்ள அடக்கஸ்தலத்திற்கு சென்றிருந்தோம். அசர் தொழுகைக்குப் பின்பு அடக்கம் செய்வது  அறிந்து அசர் தொழுகைக்கு தயாரானோம். அப்போது அந்தப் பிரமுகரின் ஜனாசாவினை தொழும் உள்ளறைக்குள் வைக்கப் பட்டது. அசர் தொழுததும் ஜனாஸா தொழுகையும் வைக்கப் பட்டது.
ஆனால் ஜனாஸா தொழுகைக்கு என்று தனியாக பள்ளிக்கு வெளியே அதற்கான இடம் ஒதுக்கப் பட்டது அறிந்தும் ஜனாஸா உள்ளே வைக்கப் பட்டிருந்தது அவரின் பணக்கார அந்தஸ்து அறிந்து வைக்கப் பட்டது என்று கூறப் பட்டது.
சில நாட்களுக்கு பின்பு எனது நண்பர் அமீர் அவர் ஊரைச் சார்ந்த ஒரு மத்திய வர்க்க பிரமுகரின் ஜனாசத் தொழுகைக்குச் சென்றதாகவும் அப்போது அவருடைய ஜனாஸா தொழுகை பள்ளிக்கு வெளியே உள்ள இடத்தில் தொழுகை வைத்ததாகவும் கூறினார்.

அதே போன்று தான்  வாடியில் முக்கிய பிரமுகர், பணக்காரர் என்றால் முன்புறத்திலும், சாதாரண குடிமகனுக்கு மைய வாடியில் கடைசியிலும் இடம் அளிப்பது வாடிக்கையாக இருக்கிறது.
அல்லாஹ்வின் படைப்பில் ஏழைப் பணக்காரன் பார்ப்பதில்லை. அவன் வளரும் போதுதான் உயர்நிலை, தாழ் நிலை பார்க்கிறான்.
எவ்வளவு உயர் நிலையில் இருந்தாலும் ஒருவன் உயிருடன் இருக்கும்போது தான் அவன் மனிதனாகிறான். அவன் இறந்த பின்பு ஜனாசாவாகத் தான் கருதப் படுகிறான். ஜனாசாவிற்கு உரிய மரியாதைக் கொடுத்து அடக்கம் செய்ய வேண்டும் தான். ஆனால் உயிருடன் வாழ்ந்த படோபத்தினை ஜனாசவான பின்பும் நாம் காட்டத் தான் வேண்டுமா என்று ஒரு கணம் சிந்திக்க வேண்டாமா?

புகாரி 6490 இல் அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறியதாக சொல்லப் பட்டது: அல்லாஹ்வின் தூதர் பெருமானார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்," செல்வத்திலும், தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மை விடக் கீழானவர்களை அவர் நினைத்துப் பார்க்கட்டும்.

உயிரோடு இருக்கும்போதே மேற்கோள்காட்டிய பெருமானார்(ஸல்) அறிவுரை இருக்கும்போது ஒருவர் ஜனாஸா ஆனா பின்பு ஏன் இந்த வீண் ஜம்பம்?
சில நாட்களுக்கு முன்பு ஒரு பெரியார் கட்சிப் பிரமுகர் இஸ்லாம் மார்க்கத்தில் சேர்ந்ததும், அது சம்பந்தமாக சில இஸ்லாமிய இயக்கங்கள் உணர்ச்சி மேலிட மாற்று மதப்  பிரமுகர்களை சென்னைப் பிரதான பள்ளிவாசலுக்கு அழைத்து ஒரு அரசியல் கட்சிப் பிரமுகர் போன்று வரவேற்புக் கொடுத்து அவருக்குக் கைரவப் படுத்தியதும் பத்திரிக்கை வாயிலாகப் படித்து விட்டு என்னுடைய ஒருக் கட்டுரையில், இஸ்லாமிய மார்க்கம் ஒரு கடல் போன்றது அதில் பல துளி மழை நீரும், ஆறுகளும் கலக்கலாம் அதற்காக ஏன் இந்த வீணான ஆர்ப்பாட்டம் என எழுதி இருந்தேன்.
பல ஆண்டுகளுக்கு முன்னாள் முரசொலி அடியார் என்பவரும் இதுபோன்று இஸ்லாத்தினைத் தழுவி இஸ்லாம் சம்பந்தமாக பல கூட்டங்களில்  பேசியும், தனது கருத்துக்களை  புத்தகமாகவும் வெளியிட்டார். அவர் சொல்லிலும், செயலிலும் இஸ்லாத்தினை தழுவியதோடு தோற்றத்தில் இஸ்லாமியனாக தாடி வைத்துக் காட்சி அளித்தார். அவரை பாராட்டி பாகிஸ்த்தான் ஜனாதிபதியும் விருந்து கொடுத்தார்.
ஆனால் சமீபத்தில் இஸ்லாத்தில் சேர்ந்த அந்தப் பிரமுகரோ இஸ்லாத்தில் சேர்ந்ததோடு நின்று விட்டு தனது மாற்றத்தினை அரசு கெசட்டுவில் கூட மாற்றவில்லை. முக்கிய பத்திரிக்கையில் விளம்பரமாக தன்னுடைய பெயரினை மாற்றியதாக கொடுக்க வில்லை, அல்லது ஒரு நீதி மன்றத்தில் தான் முஸ்லிமாக மாறிவிட்டேன் என்று ஒரு பிரமான பத்திரமாக தாக்கல் செய்ய வில்லை. தன்னுடைய பழைய பெயரினையும் இஸ்லாமிய பெயரோடு அடை மொழியில் சேர்த்துக்  கொண்டார்.  நான்  நினைத்தேன் அவர் வேலூர்  பாக்கியாத்துஸ் சாலியா, தேவ பந்த் தாருல் உலூம், பெங்களூர் ஷபீலூர்  ரஷாத்  போன்ற அரபிக் கல்லூரிகளில்  சேர்ந்து முறையாக இஸ்லாமிய கல்வியினைப் புரிந்து, பின்பு இஸ்லாமியக் கூட்டங்களில் பேசுவார் என்று. ஆனால்  அவர் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து விட்டார். தோற்றத்திலும் முரசொலி அடியார் போன்று தாடி  கூட இல்லாத ஒரு பிரமுகரானார்.
அவர் சமீபத்தில் இறைவனடி சேர்ந்தார். அந்த ஜனாஸா தொழுகை சென்னை அண்ணா சாலைப்  பள்ளியில் பலக் கட்சிப் பிரமுகர் படை சூழ நடத்தப் பட்டது. அந்தப் பள்ளியின் முக்கிய நிர்வாகிக் கூட அப்படி ஜனாஸாத் தொழுகை நடத்தப் படவில்லை என்று அவருடைய வாரிசுகள் என்னிடம் வருத்தப் பட்டுள்ளனர். அதன் பின்பு அவர் ஜனாஸா அடக்கம் செய்வதா அல்லது எரிப்பதா என்பதில் சர்ச்சை வந்து அந்தப் பிரமுகர் வாய்மொழியாக சொன்னது என்று சிலக் கட்சிப் பிரமுகர்கள் சொன்னதால் தன்னால் சீரணிக்க முடியாத முடிவான ஒன்றினை எடுத்ததாக ஒரு சமுதாய வார இதழில் அதன் தலைவரே சொல்லி உள்ளார்.
மந்தவெளி தலைமை இமாம் மௌலவி இலியாஸ் அசரத்து அவர்கள் அந்தப் பெரியாரின் சீடர் ஜனாசா கொடுக்கப் பட்ட விதம் சரியா என்ற கேள்விக்கும் பதில் ஒரு  இஸ்லாமிய வாரப் பத்திரிக்கைக்கு பேட்டிக்  கொடுக்கும் பொது, அது' தவறான வழிக் காட்டுதல்' என்றும் அதற்குத் துணை போனவர்கள் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இறந்த பிரமுகராவது இஸ்லாத்திற்கு வழிக் காட்டுதலாக தான் இஸ்லாத்தினை தழுவி விட்டேன், தான் வாழ்வது அல்லது மடிவது இஸ்லாமிய வழிமுறைப் படி தான் நடக்கும் என்று கூறியிருந்தால் இந்த குளறுபடி நடந்திருக்காது அல்லவா?


இது போன்ற நிகழ்வுகள் இனிமேயும் நடக்கலாம். தொப்பி அணியாத, கைலி அணியாத முஸ்லிம் நான் என்று ஒருவர் சொன்னார் என்றால் சமூதாய மக்கள் இனிமேலும் ஏமாற வேண்டாம் அவர் உண்மையிலேயே மார்க்கம் மாறி அதன் படி சட்ட நடவடிக்கைகளையும் மார்க்க நடவடிக்கைகளிலும் எடுத்திருக்கிறாரா என அறிந்து கொள்ளவேண்டும்  என்று சொன்னால் சரியா?

Tuesday, 27 August 2013

Historical and scientific facts


சக்கரை நோய் தீர்க்கும் அருமருந்து நோன்பு!
உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, சிறந்த ஆகார வசதிகளை அளித்தான் எல்லாம் வல்ல அல்லாஹ் என்று அல்குரான் சொல்லுகிறது (40:84)
அதே அல்லாஹ் வருடத்தில் ரமலான் மாதத்தில் நோன்பு கடைப் பிடியுங்கள் என்று கட்டளை இட்டுள்ளான். ஆகவே தான் கடந்த ரமலான் மாதம் கோடிகனக்கானோர் பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து நோன்பினைக் கடைப்பிடித்தனர். எம்பெருமானார் ஸல்லல்லாஹு (அலை) அவர்களும் பலப் போரினிலும் பட்டினிக் கிடந்து, சகாபிகளுடன் நோன்பிருந்தார்கள் என்ற வரலாறு கூறுகின்றது.
ஆனால் இன்று சிலர் நோன்பு காலங்களில் வெளிப்படையாக வயிறு முட்ட உண்டும், மது அருந்தியும் இஸ்லாம் மார்க்கத்தில் பெயரளவு முஸ்லிம்களாக உலவி வருகின்றனர்.
இன்னும் சிலர் தாங்கள் இனிப்பு நீர் நோயாளிகள் என்றும், இன்சுலின் மாத்திரை ஊசிகள் வருடம் முழுவதும் போடுவதாக நொண்டிச்சாக்கினை கூறுவார்கள்.
ஆனால் அப்படி சொல்லுவர்களுக்கு பட்டினி கிடந்தால் நீரழிவு குணமாகும் என்று ஆராச்சியில் தெளிவாக கூறப் பட்டுள்ளது:
இங்கிலாந்தினைச் சார்ந்த 59 வயதினைச் சார்ந்த ரிச்சர்ட் மிகவும் வாட்ட சாட்டமான ஆசாமி. தினமும் உடல் பயிற்ச்சியினை தவறாக மேற்கொள்ளுபவர். ஒருநாள் அவருக்கு  'டைப் 2' வகை நீரழிவு நோய் இருப்பதாக டாக்டர் சொன்னதும் ஒரேயடியாக அதிர்ந்து விட்டார். அதற்கு மருந்து உண்டா என்று தேடியதில்அதிர்ஷ்ட வசமாக அவருக்கு ஒரு இனிப்பான செய்தி காத்திருந்தது. அதாவது,' நியுகேசில்' பல்கலைக் கழக பேராசிரியர் ராய் டெய்லர் என்பவர் ஒரு மனிதன் தனது உணவு வகையில் குறைந்த அளவு கலோரிகளை உட்கொண்டால், நீரழிவு நோயினை குணப் படுத்தலாம் என்று ஆராய்ச்சியில் கண்டு பிடித்திருந்தார்.
அதன்படி, ஒரு மனிதனுக்கு அன்றாடம் 2500 கலோரிகள் தேவை.
ஆனால் ஒரு மனிதர் அன்றாடம் 800 கலோரிகள் எடுத்துக் கொண்டால் உடம்பில் சேர்ந்துள்ள கொழுப்பு எரிக்கப்பட்டு, உடலை சுற்றியுள்ள கொழுப்பு எரிக்கப் பட்டு, கல்லீரலும், கணையமும் இயல்பான அளவிற்கு இன்சுலினை சுரப்பதால் ரத்தத்தில் சர்க்கரை நார்மல் அளவிற்கு வந்து விடுகின்றது.

அதனை அறிந்த ரிச்சர்ட் தனது உணவு கட்டுபாட்டிற்காக 11 நாட்கள் அரைகுறை உணவு அருந்தி, பட்டிணி கிடந்து சக்கரை நோயினை விட்டோழித்திருக்கிறார் என்று உண்மை வரலாறு சொல்கிறது. இதனைத் தான் ரசூலல்லாவும் 1400 ஆண்டு களுக்கு முன்னாள் விளக்கிச் சொல்லி இன்று கோடிக் கணக்கான முஸ்லிம் மக்களும் நோன்பினைக் கடைப் பிடிக்கின்றனர். ஆனால் இன்றும் கூட சில பெயரளவு முஸ்லிம்கள் இனிப்பு நீர் நோய் என்று நோன்பினைப் கடைப் பிடிக்காமல் இருந்தால் மேற்கண்ட உண்மை நிகழ்வினை எடுத்துச் சொல்லி வருகின்ற  வருடமாவது நோன்பினை நோற்க வலியிருத்துவோமாக!

Thursday, 4 July 2013

சாதனையும்-சமூதாய வேதனையும்!

                         

சாதனையும்-சமூதாய வேதனையும்!

சமீபத்தில் வெளியான(2013) பள்ளி இறுதிப் படிப்பிலும், பத்தாவது படிப்பிலும் சமூதாய மாணவ மாணவிய கண்மணிகள் பலர் மாநில அளவில் சிறப்பான முறையில் தேர்வு கண்டு அனைவரும் மகிழ்ந்திருப்போம். ஆனால் மத்திய சிறையில் இருந்த படியே பள்ளி இறுதிப் படிப்பு எழுதிய சிறைக் கைதிகளில் சமூதாய இளைஞர்கள் மூன்று பேர்கள்  மாநில அளவில் ரேங்கு எடுத்துத் தேறி இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது  ரத்தக் கண்ணீர் வடிக்காமல் இருக்க முடிய வில்லை. ஏனென்றால் அவர்கள் அனைவரும் 1998 ஆம் ஆண்டு  கோவை நகரில் நடந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப் படுத்திக் கைது செய்யப் பட்டு சிறையில் வாடுபவர்கள். அவர்களை நம்பி இருக்கும் குடும்பங்கள் வறுமையில் வாழுவதினை எண்ணி மனம் வெம்பாமல் எந்த மனிதாபமுள்ள சமுதாயதினவரும் இருக்க முடியாது.
அதேபோன்று தான் 1.7.2013 அன்று பதினேழு வயதில் கோவை குண்டு வெடிப்பில் கைது செய்யப் பட்ட ஒரு மைனர் இன்று 34 வயதானாலும் சிறையில் இருந்து விடுதலை செய்ய வில்லை என அறிந்த சென்னை உயர் நீதி மன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. அவர் 15 
வருட பொன்னான வாழ்வினை யாரும் திரும்பப் பெறமுடியுமா என எண்ணிப் பார்க்க வேண்டும்.
2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த குண்டு வெடிப்பில் இரண்டு ரஷ்யா நாட்டின் செச்சன்யா மாநிலத்தில் இருந்து குடிபெயர்ந்த இரண்டு இளைஞர்கள் சம்பந்தப் பட்டுள்ளார்கள். அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு குடியுரிமை கிடைப்பதே குதிரைக் கொம்பு. ஆனால் அந்த இருபரில் இறந்த டாமர்லின் பல்கலைக் கழக குத்துச் சண்டையில் வெற்றி பெற்று குடியுரிமையும், இரண்டாயிரம் அமெரிக்க டாலரும் பரிசாகப் பெற்றுள்ளார்  அப்படி திறமை வாய்ந்த இரு இளைஞர்களும் தவறான வழி நடத்தளாலும், சிந்தனையாலும் ஒருவர் கொல்லப் பட்டுள்ளார். மற்றொருவர் வெஞ்சிறையில் வாடுகின்றார்.
நான் மேற்காட்டிய இரண்டு சம்பவங்களும். கல்வி, கேள்வி, விளையாட்டில் திறமை வாய்ந்த இளைஞர்கள்  தவறான தலைவர்களின் தவறான வழிக் காட்டுதலால் சொல்லவென்னா துன்பங்கள் அடைந்து வருகின்றனர். ஆனால் அவர்களை தூண்டி விடும் தலைவர்கள் சுகமான வாழ்வான குளிர் சாதன படுக்கை அறை, வாகனம், தனக்கும், தனது வாருசுகளுக்கும் தேவையான சொத்துக்களைத் தரும் வியாபார தளங்கள் போன்ற வற்றினைக் கொண்டு இன்பம்  சுவைத்துக் கொண்டு உள்ளனர்.
நான் உயர் நிலைப் பள்ளியில் படிக்கும்போது என்.சி.சி. மாணவப் பிரிவின் சார்ஜென்ட்டாக பணியாற்றினேன். தேசிய மாணவர்ப் பிரிவின் பயிற்சி கட்டளைகள் எல்லாமே ஹிந்தி மொழியில் தான் இருக்கும். அதனை உபயோகித்து  மற்ற கேடட்டுகளிடம் பயிற்சி வாங்கி இருக்கிறேன். அதன் பின்பு 1965 ஆம் ஆண்டு புகுமுக வகுப்பு  கல்லூரியில் படிக்கும்போது ஹிந்தி எதிர்ப்புப் போர் கொழுந்து விட்டு எரிந்தது. அதில் என்னையும் இணைத்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தாது  இறுதி ஆண்டு பரிட்சையில் தோல்வி அடைந்தேன். ஆனால் அந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தினைத் தூண்டி விட்ட தலைவர்களின் குழந்தைகள் ஹிந்திப் படிப்பினை எடுத்து தேர்ச்சிப் பெற்று தலைநகர் டெல்லியிலும் முக்கிய பதவி சுகம் அடைந்தனர் என்று அனைவருக்கும் தெரியும்.
அதேபோன்று தான் இன்றும் சமூதாய இளம் பிஞ்சு உள்ளங்களில் தவறான கருத்துக்களை விதைத்து அவர்கள் உழைப்பில் சுகம் காண்கின்றனர். இஸ்லாம் ஒரு அமைதி காக்கும் மார்க்கம் . அடுத்த வீட்டார் வேற்று மதத்தவரானாலும் மதித்து நடக்க வேண்டும் என்று அல் குரான் 49:11 இல் கூறியுள்ளது 
'மூமின்களே பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள் . ஏனெனில், நிச்சயமாக எண்ணங்களில், நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்ககூடும் என்கிறது அல் குரான் (49:12)'
ஆடம்பர திருமண விருந்து வேண்டாம் என்று கூறிக்கொண்டு தங்கள் குழந்தைகள் திருமண விருந்து மட்டும் மிகப் பிரமாண்டமான திடலில் வைக்கின்றனர் தலைவர்கள். அதனை பார்க்கும்போது ஊருக்குத் தான் உபதேசம் உனக்கில்லை என்று தனது மனைவியிடம் சொல்வது போன்று இருக்கிறதல்லவா?
ஆகவே இளம் சிறார்கள், பள்ளி மாணவ மாணவியர், இளைஞர்கள் கல்வி கேள்விகளில் முன்னேற அனைத்து உதவிகளும் நாம் செய்வதோடு, அவர்கள் முன்னேற தடைக் கல்லாக இருக்கக் கூடாது. சமூதாயத்தினவருக்கு தனி ஒதிக்கீடு வேண்டும் எனக் கோருகிறோம்  பாராட்டக் கூடிய ஒன்றே. ஆனால் கொடுத்த 3.5 சதவீத ஒதுக்கீடிலும் சமூதாயத்தினவர் பயன்பெற நாம் ஆக்கமும் ஊக்கமும் செய்ய வில்லையே அது என் என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. கல்வியில் முக்கியத்துவம் கொடுத்து இளைஞர்களை முன்னேறச் செய்தால் தான் சமூதாயம் முன்னேறும். வெறும் அரசியல் வார்த்தை ஜாலங்களால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. மற்ற அரசியல் கட்சிகள் சமூதாயத்தினவரை தேர்தல் நேர பகடைக் காய்களாக பயன் படுத்த் அனுமதிக் கூடாது. அதேபோன்று தேர்தல் வாக்குறிதிகள் காற்றில்  பறக்க விடும் காகிதத் துண்டாக மாறக்கூடாது. சென்ற தேர்தல் (2011) நேரத்தில் கொடுத்த வாக்குறிதிகள் ஆளும் கட்சியால் நிறைவேற்ற வில்லை என்று தற்போது குற்றம் சொல்லும் சமூதாய இயக்கங்கள், அந்த வாக்குறிதிகளை எழுத்து மூலமாக ஏன் வாங்கவில்லை என்று உங்களுக்கு தோன்றுவது போல எனக்கும் தோன்றத் தான் செய்கிறது.
எனவே இனியும் சமூதாய இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் இளைஞர்களை வழிக் கெடுக்காது நல்வழி நடத்தினால் பல்வேறு சாதனைகளை படைக்கும் வல்லவர்களாக உருவாகுவார்கள் என்பது எல்லோருக்கும் இருக்கும் ஆசையே! 


Tuesday, 21 May 2013

சாதனைக்கு ஒரு சாரார் மட்டும் உரியவரல்ல!



சாதனைக்கு ஒரு சாரார் மட்டும் உரியவரல்ல!
வானத்தினையும், பூமியையும் படைத்து, அதனை ஆராய்வதிற்கு உங்களுக்கு சந்தர்ப்பம் எல்லாம் வல்ல அல்லாஹ் அளித்துள்ளான்' என்று இஸ்லாமிய மார்க்கம் சொல்கிறது.
ஆனால் கல்வியிலும், சாதனையிலும் இன்றும் நாம் பின்னோக்கித் தான் உள்ளோம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஏன் நம்மிடம் திறமை இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். திறமை இஸ்லாமியரிடையே பட்டை தீட்டப் படாத வைரம்போலவும், இலை மறை காயாகவும் உள்ளது. அதனைக் வெளிக்கொண்டு வருவது நமது கையிலேயே தான் உள்ளது என்றால் மறுக்க முடியாது என்பதினைக் கீழ்கொண்ட உதாரணங்களுடன் விளக்கலாம் என உள்ளேன்:
1) தமிழ் நாட்டில் பெண் ஐ.ஏ. எஸ். அதிகாரிகள் வருவது அரிது. அப்படி வந்தாலும் முக்காடுக்கு முழுக்குப் போடும் அதிகாரிகள் சிலர் வந்துள்ளனர். ஆனால் முழு முக்காடுப் போட்டு, அந்த முக்காடு என் பண்பாடுக்கு எடுத்துக் காட்டு என்றும் அதனை என்றும் கைவிடேன் என்று துணிச்சலாக சொல்லும் ஒரு பெண் ஐ. ஏ . எஸ். அதிகாரியாக   சென்னை சைதாபேட்டை மாநகராட்சி பள்ளியில் பள்ளிக் கல்வி பயின்ற தமீம் அன்சாரிய தேர்வாகி உள்ளார்.
2) அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம்கள் சமீப காலங்களில் வேட்டையாடப் படுகின்றனர் என்று நாம் பத்திரிக்கை வாயிலாக அறிவோம். அதில் முஸ்லிம்கள் உயர் பதவிக்கு வருவது மிகவும் அரிது. அந்த மாநிலத்தில் முன்னாள் ஜனாதிபதி பாக்ருதீன் அலி, முன்னாள் முதல்வர் டிமூர் போன்றவர்களுக்குப் பின்பு 60 ஆண்டுகள் சென்று ஒரு முஸ்லிம் பெண் உம்மெ பார்டினா ஆதில் 2012ஆம் ஆண்டு ஐ.ஏ.ஏஸ். பரிச்சையில் வெற்றி பெற்றுள்ளார்.
3) இமயமலையில் ஏறி வெற்றிக் கொள்பவர்கள் என்று பார்ப்போமேயானால் முஸ்லிம்கள் சிலரே. ! . .. முதன் முதலில் துருக்கியினைச் சார்ந்த அலி மெஹ்ரக் என்ற முஸ்லிம் ஆணும், அதன் பின்பு மலேசியா பெண்மணியும், ஈரான் தேசத்தினைச் சார்ந்த இரண்டு பெண்மணிகளும் வெற்றி கொண்டுள்ளார்கள்.
ஆனால் அந்த இமயமலை சிகரத்தினையும் சௌதி நாட்டில் ஜெத்தாவினைச் சேர்ந்த ரஹா  மொபாரக் என்ற முஸ்லிம் பெண்மணி வெற்றி பெற்று இருக்கின்றார் என்று நினைக்கும்போது  நமது நெஞ்சமெல்லாம் இனிக்கும். அதே நேரத்தில் ஒரு கசப்பான செய்தியினையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.
சென்னையின் பல பகுதிகளில் பள்ளிக்குச் செல்லாத அல்லது பாதியில் விடுபட்ட சிறுவர்கள் 2000 பேர்கள் பட்டியல் எடுத்து அதில் எந்தப் பகுதியில் அதிகமான சிறுவர் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால், ஆறு வயது முதல் பதினாலு வயதுவரை உள்ளவர்களில் தலா 192 பேர்கள் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஜார்ஜ் டவுனும், பெரம்பூரும் ஆகும்.
முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஜார்ஜ் டவுனில் சிறார்கள் கல்வி கற்பதும், பள்ளிக் கல்வியிலிருந்து பாதியில் நிற்பதும் உண்மையாகிறது.
2) வறுமைக் கோட்டினுக்குக் கீழே உள்ள முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாது நாலு காசு சம்பாதிக்கும் குடும்ப உறுப்பினர்களாக கருதுகிறார்கள்.
3) அப்படி அனுப்பப் படும் சிறார்கள் குற்றம் செய்யும் வேற்று சிறார்கள் துணைக் கிடைத்து வழி பிரண்டு போகிறார்கள்.
4) வசதி படைத்த பெற்றோர்கள் சிறார்களின் படிப்பில் கவனம் செலுத்தாது, அதிகம் செல்லம் கொடுத்து அந்த சிறார்கள் பாதியில் பள்ளிப் படிப்பினை விடும் நிலையும், படிக்காமல் அவர்களையும் தொழிலில் ஈடுபடுத்துவது.
ஆகவே சமூதாய மக்கள் குழந்தைகள் பள்ளியில் படிக்கவும், சாதனை புரியவும் கீழ்க்கண்ட  வழிமுறைகளைக் கடைப் பிடிப்பது அவசியமே!
1) வயது ஆறிலிருந்து வயது பதினான்கு வரை பள்ளிப் படிப்பு சிறார்களுக்கு கட்டாயம். அதனை முஸ்லிம்களுக்கு எடுத்துச் சொல்லி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பச் சொல்லலாம்.
2) வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள முஸ்லிம்கள் பலன் பெற அரசு திட்டங்கள் கிடைக்க வழி வகை செய்யலாம். பைதுல் மால் போன்று அமைப்பினை ஏற்படுத்தி சுய வேலைக்கு ஏற்பாடு செய்யலாம்.  11.5.2013 அன்று சென்னை புதுக் கல்லூரியில் சிறுபான்மை துறை அமைச்சர் முகமது ஜான் அவர்களுடன், சகோதரர் ஜவஹிருல்லாஹ் சட்டமன்ற உறுப்பினருடன் நானும் கலந்துகொண்டேன்.அப்போது அமைச்சர் கூறும்போது, 'அரசு சலுகை பெற வரும் முஸ்லிம்கள் குறைவே' என்று குறை பட்டார். அதே நேரத்தில் இன்று(19.5.2013) நடைப் பயிற்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது மண்ணடியில் உள்ள வியாபார முஸ்லிம் நண்பர் கேட்டார், 'ஏன் அண்ணே, எங்கள் கடைக்கு தர்மம் கேட்டு முஸ்லிம்கள் தான் அதிகமாக வருகிறார்கள், எனக்குத் தெரிந்த ஏழ்மையான மற்ற மதத்தவர் தர்மம் கேட்டு வருவதில்லையே' என்றார்.
ஆகவே யாசகம் கேட்கும் முஸ்லிம் மக்கள் அதிகமாக உள்ளதினையே அவர் கூற்றுக் கூறுகிறது.
3) அவர் கூற்று ஏழை மக்களிடம் கௌரவத்துடன் 'கால் கஞ்சியானாலும் மூடிக் குடி' என்ற நிலை மாறி கோழையாக கையேந்தும் நிலை ஏற்படுகிறது. அதனை சமூதாய இயக்கங்கள் போக்க வேண்டும்.
4) உயர்தர கல்வி நிலையங்கள் மூலம் படித்தால் தான் உயர் பதவி அடைய முடியும் என்ற நிலையினை மாற்றி சென்னை கார்ப்பரேசன் பள்ளியில் படித்த தமிம் அன்சாரியா போன்று நீங்களும் மாநகராட்சிப் பள்ளியில் படித்தால் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தினை ஊக்குவிக்க வேண்டும்.
5) சாதனை பெண்களுக்குத் தடையில்லை என்பதினை உயரமான இமயமலையினை அடைந்த பெண்களின் கதையினை எடுத்துச் சொல்ல வேண்டும். 
6) முஸ்லிம் பெண்கள் கல்வி கற்கவும், கல்வி, சமூக, அரசியல் அமைப்புகளில் பங்கு பெறவும் வழி வகுக்க வேண்டும். முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், குவைத், எகிப்து, ஈரான் ஆகியவற்றில் முஸ்லிம் பெண்கள் பாராளுமன்றத்தில் பங்கு பெறும்போது பெண்களுக்கு ஒதுக்கீடு உள்ள நமது நாட்டில் பெண்களின் சேவையினை ஒதுக்கித் தள்ளக்கூடாது. தென் இந்திய கல்வி சங்கத்தில் சென்னையில் 2012 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் அமைப்பில் ஐ.ஐ.டி தொழில் கல்வி நிலையங்களில் சேர முஸ்லிம் மாணவர்களுக்கு பயிர்ச்சி கொடுக்க ஒரு குழு அமைத்தார்கள். அதில் சிலர்  மாணவிகளைச் சேர்த்தால் பண்பாடு கெட்டுவிடும் என்றார்கள். அவர்களுக்கு சமீபத்தில் வெளியான பிளஸ் 2 பரிச்சையில் 1200 விழுக்காடுக்கு ஒரு முஸ்லிம் மாணவி 1190 எடுத்துத் தெரியிருக்கின்றார். அவர் கணிதம், கணினி, வணிக வியல் ஆகிய பாடங்களில் 200 மதிப்பெண்ணுக்கு 200 வாங்கி உள்ளார். அவர் ஐ.ஐ.டியில் சேர ஆசைப் பட்டால் அவருக்கு நாம் மத அடிப்படியில் பயிற்சிக் கொடுக்க ஏன் மறுக்க வேண்டும். 
ஆகவே முஸ்லிம் மக்கள் முஸ்லிம்கள் சாதனைகளை ஊக்குவிக்க வேண்டுமே தவிர அவர்கள் வளர்ச்சிக்குத் எந்த விதத்திலும் தடையாக இருக்கக் கூடாது.