Tuesday 22 May 2012


பழமை காலம் பொற்காலமா?
(டாக்டர் ஏ.பீ. முகமது அலி,,பீ.எஸ்(ஓ)

வயதானவர்களுடன் இளைஞர்கள் தனிமையில் உரையாடினால் அவர்களுடைய ஐம்பது வருட கால அனுபவங்கள் சொல்லி அவைகளெல்லாம் மிக சிறந்தவை என்றும் , இன்றைய நடப்பினை தரம் குறைந்தது என்றும் கதை கதையாக தன் பொக்கை வாயினை ஆசைப் போட்டுக் கொண்டு கூறக் கேட்கலாம். ஒருவருடைய மனைவிகூட தன் பிறந்த வீட்டில் குறைந்த வசதி இருந்தாலும் அன்டிய கணவர் வீட்டிற்கு வந்தாலும், தன் வீட்டுப் பெருமையினை வாய் நிறைந்து சொல்வதினைக் காணலாம். ஆனால் அக்கரை எல்லாம் பசுமையில்லை, இன்றைய உலகம் தான் இனிமை, பசுமை நிறைந்தது என்ற கருத்துடன் இந்தக் கட்டுரை வரையப் பட்டுள்ளது.

வயதானவர்கள் தங்கள் இளமைக் காலத்தினை சிறந்தது என்று சொல்வதிற்கு கீழ்க்கண்ட காரணங்களை கூறுகின்றனர்:
1) பழைய பாட்டினை ரேடியோவில் அல்லது தொலைக் காட்சியில் கேட்டால் என்னோ அருமை என்று புகழுவர்.
ஆனால் அவர்கள் காலத்தில் ஆஸ்கார் விருது பெற்ற இசைப்புலி ஏ.ஆர். ரஹ்மான் போன்று இருந்து உலக பரிசினைப் பெற்றார்களா என்றோ, அல்லது மெல்லிசை இசைப்புயல் இளையராஜா போன்று இங்கிலாந்துக்குச் சென்று சிம்பொனி இசை அமைத்தது உண்டா என்று கேளுங்கள் இல்லை என்று கையினை விரிப்பார்கள்.


2) முன்னாள் ஆசிரியர்கள் போன்று எவரும் பாடம் நடத்த இன்று முடியாது என்று ஆசிரியர் புகழ் பாடுவார்கள்.
ஆனால் அவர்கள் காலத்தில் இன்றைய திருநெல்வேலி 11 வயது சிறுமி சாலினி எம்.சி,ஏ. பட்டம் பெற்றும்திருநெல்வேலி மனோன்மணி சுந்தரனார் பல்கலை மாணவர்களுக்கு நெட்வொர்க் பாடம் நடத்தி புகழ் மாலை சூட்டியது போல ஒரு நிகழ்ச்சி உண்டா என்றும், ,, டி.மெட்ராஸ் என்ஜிநீரியங் புதிய பட்டதாரி ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய் வருட சம்பளம் போன்ற வேலை அன்று கிடைத்ததா என்று  கேளுங்கள் இல்லை என்பார்கள். 
3) அந்தக் காலத்து கூரைப் பட்டுசேலை சிறந்தது என்று பெட்டியில் மூடி மூடி வைத்து பேத்திகளிடம் பீற்றிக் கொள்ளும் பெண்களிடம் இன்றைய ஐம்பது டிசைன் கொண்ட ரூபாய் ஐம்பது ஆயிரம் முதல்  ஒரு லட்சம் வரை மதிப்புள்ள பரம்பரா பட்டுச் சேலை போன்று அன்று தயார் செய்ய முடிந்ததா என்று கேளுங்கள் இல்லை என்பார்கள்.
4) சில நகரங்களிலும், கிராமங்களிலும் நடக்கும் மத, ஜாதிக் கலவரம் போன்று அன்று இல்லை என்பார்கள். ஆனால் பல்வேறு மதம், ஜாதி மக்கள் வாழும் இடத்தில் அப்போதைக்கப்போது சிறு,சிறு தீப்பொறிகள் ஏற்படுவது எப்போதும் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதனை ஊதி பெரிதாக்கும் இன்றைய  ஊடகங்களும், தொலைக் காட்சிகளும் அன்று நிறைய மக்களிடம் போய்ச்சேராததால் அவர்கள் அறியாமல் இருந்து இருக்கலாம்.




5) தங்கள் காலத்தில் கூட்டுக் குடும்பத்தில் உள்ள குடும்ப பாசத்தினை அளவிற்கு அதிகமாக புகழ்வார். ஆனால் கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்த ஜோடிகளைக் கேளுங்கள் தாங்களின் புது திருமண வாழ்வின் சுவையினை இன்றைய இளம் ஜோடிகள்போல் அறிய முடிய வில்லை என்று புலம்புவார்கள்.
6) அந்தக் காலத்தில் குடிசை வீடானாலும் காற்றோட்டமும் இயற்கை சூழலும் நிறைந்ததாக கூறுவார்கள். ஆனால் அதே பெரியவர்கள் இன்றைய ஜன நெருக்கடியிலும்  கட்டில் மெத்தையும் வசதியான ஏ.சி. அறையினைத் தேடுவது ஏன் என்று கேளுங்கள் பாரக்கலாம், அசட்டுச் சிரிப்பினை உதிர்ப்பார்கள்.
7) அந்தக் காலத்தில் கிராமங்களில் மண் ரோடும், நிலக்கரி புகை கக்கும் ரயிலும், டீசல் புகை கக்கும் கம்பி வைத்து ஸ்டார்ட் செய்யும் பஸ்சும் தான், ஆனால் இன்று பசுமை நிறைந்த அகலப் பாதை ரயிலும், ஏசி மற்றும் ஏர் பஸ்சும், பேட்டரி காரிலும் தார் மற்றும் சிமிண்ட் ரோடுகளில் பயணம் செய்து சுகம் அனுபவித்தது உண்டா என்று கேளுங்கள். இல்லை என்பார்கள். 
என் தந்தை மலேசியாவில் உள்ள பினாங் துறைமுகத்திலிருந்து  1965 ஆம் ஆண்டு நாகை துறைமுகத்திற்கு கப்பலில் ஆறு நாட்கள் பயணம் செய்து களைத்துப் போய் வந்தார்கள். அவர்களை வரவேற்க நான் சென்றிருந்தேன். கப்பல் கடலில் ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பால் நிறுத்தி பயணிகளை சிறு, சிறு போட்டுகளில் அழைத்து வந்து பொட்ட வெயிலில் உள்ள குவாரண்டின் என்ற முள் கம்பிக்குள் நிறுத்தி பல மணி சோதனைக்குப் பின் பயணிகள் வெளியே வந்தார்கள். ஆனால் இன்று மலேசியாவிலிருந்து குளு, குளு வசதியுடன் கூடிய விமானத்தில் மூன்று மணி நேரத்தில் சென்னை வந்து விடுகிறது, அது மட்டுமா பயணிகளுக்கும், அவர்களை வரவேற்க நிற்கும் உறவினர்களுக்கும் குளிர் வசதி செய்யப் பட்ட அறைகள்  உள்ளது போன்று அன்று இல்லையே என்று பழமை வாதிகள் நினைத்துப் பார்க்க வேண்டாமா?

8) அந்தக் காலத்தில் தகவல் ஒலி பரப்பு வசதிகள் எட்டாக் கனியாகவே இருந்தன. 1964 ஆம் வருடம் புயல் அடித்து தனஷ்கோடி தீவே அழிந்தும், ராமேஸ்வரம் ரயிலும் பாம்பனில் அடித்துச் செல்லப்பட்டது சென்னைக்கு சில மணி நேரம் தெரியவில்லையாம். தனஷ்கோடி போஸ்ட் ஆபீசில் பணியாற்றிய 'மோர்ஸ்' என்ற சங்கத மொழி தொழிலாளி அனுப்பிய  தகவல் மூலம் தான் தெரிந்து  மீட்பு நடவடிக்கை எடுக்கப் பட்டதாம். 
சில தபால்கள் ஒரு வருடம் சென்று கூட கிடைத்ததாக சொல்லுவார்கள். ஆனால் இன்று மின் அஞ்சல் அடித்த அடுத்த நிமிடமே அறிந்து கொள்ளும் நிலை வந்து விட்டதே  என்று பெருமைப் பட வேண்டாமா?
9) அந்தக் காலத்தில் கிராமங்களில் தொலைபேசி கிராம தபால் நிலையத்திலும், டவுண் பஞ்சாயத்தில் ஓரிரு வீடுகளிலும் தான் டெலிபோன் சேவை வசதி இருந்தது. ஒரு முறை இங்கிலாந்து முன்னாள் பிரதமர் முதலாவது உலக யுத்தத்திற்கு பின்பு சாதாரண யாத்திரிகராக கொழும்பு சென்று விட்டு, சென்னையிற்கு வந்து அண்ணா சாலையில் ராஜாஜி ஹாலுக்குப் பின் உள்ள அட்மிராளிட்டி கட்டிடத்தில் ஒரு அறையில் தங்கி இருந்தாராம். சர்ச்சில் மதியம் தூக்கம் போடும் பழக்கத்தினை கொண்டவராக இருந்தார். அப்படித் தூங்கும்போது வரண்டாவில் பெரிய சத்தம் கேட்டு விழித்து இருக்கிறார் . அங்கு நின்ற காவலாளியினை அழைத்து யார் சத்தம் போடுவது என்று கேட்டிருக்கிறார். காவலாளியும் பக்கத்து அறையில் தங்கி இருக்கிற மிலிடரி சார்ஜெண்ட் இங்கலாந்தில் உள்ளவர்களுடன் வரண்டாவில் உள்ள போனில் பேசுகிறார் என்று சொல்லி இருக்கிறார். உடனே சர்ச்சில் அந்த காவலாளியிடம் அந்த சார்ஜெண்டிடம் சொல்லுங்கள் அவர் போனில் பேசுகிறார் என்று, அவர் முன்னாள் அவருடைய சேவகர் இருப்பதுபோல சத்த மிடுகிறார் என்று கேலியாக சொன்னாராம். இது எதற்கு சொல்கிறேனென்றால், அப்போதைக்கு போன் வசதி மிகக்குறைவே, ஆனால் இன்று தெருக்  கூட்டும் ஆயாவிலிருந்து, சாகக் கிடக்கும் பெரியவர் வரை இடுப்பிலும், தலை மாட்டிலும் கைபோன் வைத்துக் கொண்டு நேருக்கு நேர் முகம் பார்த்துப் பேசும் அளவிற்கு வசதி வந்து விட்டதே!
10) முன்பு பக்கத்து நாடான சீனாவும், பாக்கிஸ்தானும் இந்தியாவின் படை, மக்களின் மன வலிமை ஆகியவற்றினை 1965, 1971 போர்கள் மூலம் சோதித்தன. அதேபோன்று அமெரிக்க, பிரிட்டன் போன்ற மேலை நாடுகளும் இந்தியாவினை பஞ்ச நாடு என்றும், ஆட்டிப் படைத்தும் கொண்டிருந்தன. ஆனால் இன்று உணவில் தன்னிறைவு பெற்று, ஏற்றுமதியில் சீனாவிற்கு அடுத்த படியாக உலகில் இடம் பிடித்து, அணு ஆயுத படைப்பிலும், விண்வெளிக்கு மேலை நாடுகளை மிஞ்சும் அளவிற்கு கோள்களை அனுப்பி ஆராச்சியில் மிஞ்சுகிற நாடு நம் நாடு. 
ஆகவே சிலர் பழமை பேசி தம்பட்டம் அடித்து புதிய வளர்ச்சியினை தங்களுடைய பேச்சின் மூலம் புறக்கணிப்பது, இக்கரைக்கு அக்கறை மேல் என்று சொல்வது போல் உள்ளதல்லவா? ஆனால் இன்றைய இந்தியாவே சிறந்த பொற்காலம் என்றால் மிகையாகுமா?

Wednesday 16 May 2012


எப்படி எல்லாம் தொழுவதை விட,
இப்படித்தான் தொழுவது என்பதே மேல்!
(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ)

வாழ்வியல் நெறியினை பின்பற்றி வாழ்வது எவ்வாறு என்று அணைத்து மதங்களும், இஸ்லாமிய 
மார்க்கமும் சில கட்டளைகளையும், விதி முறைகளையும் விதித்துள்ளன. ஆனால் எப்படி எல்லாமும் 
வாழெல்லாம் என்று சிலர் நினைப்பதால் சமுதாயத்தில் ஒழுக்கக் கேடுகள் நடக்கின்றன.
அதே போன்று தான் அகிலத்தினைப் படைத்து, அனைத்துக் கண்டங்களையும் அதன், அதன் இடங்களிலேயே நிறுத்தி,
கடலைப் படைத்து மனிதன் பயணம் செல்லும் கப்பலையும், எண்ணெய், வாயு, ஆபரண முத்து போன்றவையினயும்,
உணவு வகைகளையும் படைத்து, மனிதன் பூமியில் வசதியாக வாழ பொன்னும், பொருளும் வாரி வழங்கிய, ஏக 
இறைவனுக்கு நன்றி செலுத்த வசதியாக தொழுகையினை அல்லாஹ்  கட்டாயப் படுத்தியுள்ளான்.
வீட்டில் இருந்து தொழுவதினை விட பள்ளிக்கு நடந்து வந்து ஜமாத்துடன் தொழுபவர்களுக்கு அல்லாஹ் பல நன்மையினை வழங்குவதாக இமாம் புகாரி சொல்லி உள்ளார்கள்.
தொழும்போது நெற்றி,இருக்கைகள், இரண்டு கால்கள், இரண்டு கால் மூட்டுகள் ஆகிய ஏழு உறுப்புகள் சஜ்தா செய்யும் அளவிற்கு தொழ வேண்டும் என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்.
மன அமைதிக்காகவும், உடல் உறுப்புகள் கட்டுபாடுடன் வைதிருப்பதிற்காகவும் சிலர் பணத்தினை செலவழித்து 
'யோகா' கற்றுக் கொள்கிறார்கள். சென்னையில் சில பூங்காக்களில் யோகா பயிற்ச்சியில் முஸ்லிம் சகோதரர்களும்,
சகோதரிகளும் கூட கலந்து கொள்கிறார்கள். ஆனால் பயிற்சி முடிந்ததும் யோகா குருக்கள், 'பாரத் மாதாகி கி ஜே' என்று சொல்லும் போதும் முஸ்லிம் சகோதரர்களும் அறியாமல் சொல்லுகிறார்கள். அவர்களுக்கு நமது நாடு இந்திய நாடு என்று தெரியாமலில்லையே! பின் ஏன் பாரத மாதாவுக்கு ஜே என்று சொல்ல வேண்டும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழாமலில்லைதானே! அப்படி யோகா நடத்தும் பயிற்சியில் யோகா குரு ராம்தேவ் படம் பெரிதாக வைக்கப் பட்டு இருக்கும். ஆகவே உருவமில்லா இறைவனுக்கு உருவம் கொடுத்து முஸ்லிம்களையும் அதற்கு ஆள் சேர்க்கும் வேலை அல்லவா இது?
ஏன் அதே அமைதியினையும், உள், புற சுத்ததினையும்  தொழுகை தரவில்லையா? மனதில் பல்வேறு அலை பாயும் முஸ்லிம்கள் தான் தொழுகையினைப் புறக்கணித்து வேறு பயிற்சிகளை தேடுவார்கள். ஈமானுள்ள எவரும் யோகா பக்கம் தலைக் காட்டாது தொழுகையில் அத்தனை உடல், உளப் பயிற்சியும் உள்ளது என்று ஐவேளை தொழுகையினை கட்டாயமாக கடைப் பிடிப்பார்கள். 
சிலர் எப்படி எல்லாம் தொழலாம் என்ற கொள்கையினை கொண்டுள்ளதினை சில எடுத்துக் காட்டுதல் மூலம் விளக்கலாம் என நினைக்கின்றேன்:
1)   வெள்ளி தோறும் ஜும்மா தொழுகைக்கு முந்தி அடித்துக் கொண்டு வருவதினைப் பார்க்கலாம். 'ஜும்மா தொளுகையினைப் பற்றி முஸ்லிம் 1500 யில் ரசூலல்லாஹ் கூறியிருப்பதாக சொல்லும்போது, ‘மக்கள் ஜும்மா தொழுகையினை கைவிடுவதினை விலகியிருக்கட்டும், ஏனென்றால் அவர்கள் இதயங்கள் மீது அல்லாஹ் முத்திரை குத்தி அலட்சிய வாதிகளின் பட்டியலில் சேர்க்கப் பட்டு விடுவார்கள்' என்று கூறியதாக சொல்லப் பட்டுள்ளது. ஆனால் அப்படி முந்தி அடித்துக் கொண்டு பள்ளிக்கு வருகிறவர்கள், குத்பா பிரசங்கத்தினையும், குத்பாவினையும் செவி மடுத்துக் கேளாது எங்கிருந்துதான் அந்தத் தூக்கம் வருமோ, அதில் ஆழ்ந்து விடுவார்கள். அதற்கு வசதியாக தற்போது பள்ளிகளில் குளிர் சாதன வசதியும் செய்துள்ளார்கள  பின் கேட்கவா வேண்டும். 
திர்மிதி 484இல்  ரசூலல்லா கூறியிருப்பதாக சொல்லப் பட்டுள்ளதாவது, 'ஜும்மா நாளில் உங்களில் எவருக்கும் உறக்கம் வந்தால், அவர் தம் இடத்தை மாற்றிக் கொள்ளட்டும்' என்பதினை கூட அவர்கள் செய்வதில்லை.
ஆகவே தூக்கமும் கண்களை தழுவட்டுமே என்ற நிலையினை மாற்றி தூக்கமும் கண்களை விட்டு ஜும்மாத் தொழுகையில் அகலட்டுமே என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
இடம் பிடிப்பதிற்காக பிந்தி வந்தவர்கள் இடம் இல்லாவிட்டாலும் உட்கார்ந்து இருப்பவர்கள் முதுகினை மிதித்துக் கொண்டு முன்னே செல்வது மட்டு மல்லாமல், ஜும்மா பயான் இமாம் உரத்தக் குரலில் சொல்லும்போது விட்ட தொழுகையெல்லாம் எனக்கென்ன என்று உட்கார்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு இடைஞ்சல் வரும் அளவிற்கு தொழுது  கொண்டு இருப்பார்கள். அது மட்டுமா சிலர் தொழ தக்பீர் கட்டும்போது இரண்டடி அகலத்திற்கு காலை விரித்துக் கொண்டு அடுத்தவர்க்கு இடைஞ்சல் செய்யும் அளவிற்கு நின்று கொண்டிருப்பதினைக் காணலாம். ரசூலல்லா சபைக்கோ அல்லது தொழுகைக்கோ பின்னால் வந்தால் பின் சப்பில் அமருவதையும், தொழுவதையும் கடைப் பிடித்தார்கள் என்று ஹதீசுகள் சொல்கிறதே! பின் ஏன் நாம் ரசூலல்லா வழி பின்பற்றக்கூடாது?ஒரு சிலர் பய பக்தி இல்லாமல் காலை கிப்லா நோக்கி நீட்டிக் கொண்டும், சுவரிலோ, தூணிலோ சாய்ந்து கொண்டும்  உட்கார்ந்து இருப்பதினை ஜும்மா தொழுகையினில் காணலாம். அப்படி நடப்பவர்கள் எப்படி எல்லாம் தொழலாம் என்ற கொள்கையினை கொண்டவர்கள் என்று உங்களுக்குத் தோனவில்லையா?
2)   2011 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியா நாட்டின் ஹான்ஸ்பி நகரில் உள்ள ஜும்மா தொழும் இடத்திற்கு சென்றேன். அது சிட்டி கவுன்சில்  கம்யுனிட்டி சென்டர் ஆகும். வெள்ளி அன்று வாடகைக்கு எடுத்து தொழுகை  நடத்துகிறார்கள். வருகை தந்தவர் மொத்தம் முப்பது பேர் ஆகும் அதில் நான்கு பேர் நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார்கள். ஒரு லெபனான் நாட்டுக் காரர் ஆங்கிலத்தில் பயான் செய்து கொண்டு இருந்தார். அப்போது தொழிலாளர் மூவர் மஞ்சள் ஜாக்கெட் அணிந்து வந்தார்கள். அதில் இருவர் பேகி என்ற முழங்கால் வரை உள்ள அரை ஆடையும், ஒருவர் முழங்கால் மேல் உள்ள கால் சட்டையும் அணிந்து இருந்தார். அப்போது நாற்காலியில் அமர்ந்து இருந்த ஒருவர் உட்கார்ந்து கொண்டே தனது கைலியினை கழட்டிக் கொடுத்துக் கட்டிக்கொள்ள கேட்டுக் கொண்டார். அப்போது அவருடைய கால்கள் முட்டிக்குக் கீழ் செயற்கைக் கால்கள் பொருத்தப் பட்டு, பேகி என்ற முட்டுக்குக் கீழ் உள்ள டவுசர் அணிந்து இருந்தார். தொழுகை முடிந்ததும் அவரை சந்தித்து நலம் விசாரித்து அவர் பெயர் ஹுசைன் என்றும் அவர் பாகிஸ்தான் நாட்டு ராணுவத்தில் பணியாற்றும்போது கால்களை இழந்ததாக சொன்னார். நான் அவருடைய ஈமானையும், ஈகைக் குணத்தினையும் பாராட்டாமல் இருக்கவில்லை. அவர் தனது கைலியினைக் கொடுக்காவிட்டால் அந்த வாலிபரும் முழங்காலுக்கு மேலுள்ள டவுசரை அணிந்து தொழுதிருப்பார்.
3)   5.5.2012 அன்று இளையான்குடி மேலப் பள்ளிக்கு தொழுகச் சென்றேன். அங்கு ஒரு ஹாலில் முப்பது சேர்களுக்கு மேல் போடப்பட்டு அதில் பலர் உட்கார்ந்து தொழுதும், சஜ்தாவில் தரையில் நெற்றி வைப்பதிற்க்குப் பதிலாக எழுதும் மரப் பலகையில் நெற்றியினை வைத்து தொழுவதினையும் கண்டேன். தொழுகை முடித்து வெளியே வரும்போது என் பள்ளித்தோழன் கமால் கையில் ஒரு துணிப் பையினை கொண்டு வந்தான். அவனிடம் பையில் என்ன என்று கேட்டேன். அவன் சொன்னான், 'முன்பு நானும் கால் வலியால் நாற்காலியில் உட்கார்ந்து தொழுவேன். ஆனால் ஒரு தடவை இமாம் பயான் செய்யும் பொது நெற்றி தரையில் பட தொழுவது நல்லது என்பதால், நான் தரையில் தொழும்போது முட்டி வலிக்காமல் இருப்பதிற்காக துண்டை முட்டிக்குக் கீழ் வைத்துத் தொழுவேன் என்றான். முடியாவிட்டாலும் எனது பள்ளித் தோழனின் ஈமானை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
4)   சென்னை மண்ணடி செம்புதாஸ் பள்ளிக்கு ஜும்மா தொழுகச் செல்வேன். அங்கு ஒரு 22-25 வயது மதிக்கத் தகுந்த வாலிபர் சிறிது தாமதித்து தொழுக வந்தார். அவருடைய இடது கால் முட்டிக்கு மேல் வடிவில் வளைந்து இருந்து, வலது காலில் மாடிப் படிகளில் தத்தி தத்தி ஏறி இரண்டாவது மாடிக்கு தொழுகச் செல்வதினைக் கண்டேன். அவர் நினைத்து இருந்தால் முதல் மாடியிலே ஒரு நாற்காலியினை தயார் செய்து உட்கார்ந்து கொள்ளலாம். ஆனால் சற்று காலந்தாழ்த்தி வந்ததால் அவர் இரண்டாவது மாடிக்கு செல்வதுதான் சிறந்தது என்று நினைத்து சென்றார். அங்கு தொழுகச் செல்லும் பலரும் ஜும்மா நாள் அன்று காணலாம். அவருடைய ஈமானும், தொழுகையின் ஒழுக்கமும் எவ்வளவுச் சாலச் சிறந்தது என்று எண்ணி வியந்தேன்.

தொழுவதினை ஒரு சடங்காக கருதும் சிலர் இனிமேல் வாகனத்தில் அமர்ந்து சினிமா பார்ப்பது போல் வாகனங்களில் பள்ளிவாசல் முன்பு உட்கார்ந்து தொழுதாலும் ஆச்சரியப் படுவதிற்கில்லை.  ஆகவே தொழுவது ஒரு சடங்காகக் கருதாது, அது கடமையாகக் கருதி, நம்மைப் படைத்து, பலன் பல வகை தந்து, அழகு பார்க்கும் வல்ல அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதிற்காக செய்யும் கடமையாக கருதி பய பக்த்தியுடன் நாமும் தொழுது, நமது சந்ததிகளையும் தொழச் செய்வது நமது கடமையல்லவா?



Thursday 10 May 2012


முஸ்லிம்களுக்கு உதவுங்கள், ஆனால் உபத்திரம் செய்யாதீர்கள்.
(டாக்டர் ஏ பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ)

சமீப கால அரசு நடவடிக்கைகள், நீதி மன்ற தீர்ப்புகளுக்கும் நமது சமூதாய மக்களுக்கு விளக்கி, எந்த விதத்திலும் உங்கள் நடவடிக்கை முஸ்லிம் மக்கள் சலுகை பெற தடையாக இருக்கக் கூடாது என்பதினை வழியுறித்தி இந்த கட்டுரை எழுதப் பட்டுள்ளது:

1) அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 30 படி கல்வி நிறுவனங்களை நிறுவவும், செயலாட்சி செய்யவும், சிறுபான்மையிரின் உரிமை. கல்வி நிறுவனங்களுக்கு உதவி செய்வதில் சமய அடிப்படையிலோ, மொழி அடிப்படையிலோ சிறுபான்மையிரால் உள்ளவர்களின் மேலாண்மையில் இருக்கிறது என்ற காரணத்தைக் 
சமுதாய சொந்தங்களுக்கு சமீப கால நடவடிக்கைகளையும், அதில் நம்மவர் செயல் முறைகளையும் 
காட்டி கல்வி நிறுவனம் எதற்கும் எதிராக அரசு வேற்றுமை பாராட்டக் கூடாது.
ஆனால் சிறுபான்மையிரில் கல்வி நிறுவனத்தின் உரிமையானது, மாநில அரசின் ஒழுங்கு முறைப் படுத்தும் வழி முறைகளுக்கு கட்டுப் பட்டதாகும் என்று உச்ச நீதி மன்றம் ஜோசப் டீச்சர் ட்ரைனிங் கல்லூரி மற்றும் மாநில அரசின் 
வழிக்கில் தீர்ப்பு வழங்கி உள்ளது.
சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் மைனாரிட்டி அந்தஸ்துக்காக மாநில அரசிடம் முறையாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த ஒரு வருடத்தில் அனுமதி கிடைக்காவிட்டால் தேசிய சிறுபான்மை ஆணையகத்திடம் விண்ணப்பித்து அனுமதி பெறலாம் என்ற முறையினை பல கல்வி நிலையங்கள் அறியாமல் உள்ளன. அப்படி விண்ணப்பிக்கும் போது, கல்வி நிறுவனம் முஸ்லிம் மைனாரிட்டி மாணவர்களுக்காகவும், மற்ற மாணவர்களுக்க்காகவும் நடத்தப் படுகிறது என்று விண்ணப்பம் அனுப்ப வேண்டும். 
9.5.2012 அன்று பாராளு மன்றம் ஆறு வயதிலிருந்து பதினாறு வயதுள்ள குழைந்தைகளுக்கு கட்டாய கல்வி என்ற சட்டத்தினை நிறைவேற்றி உள்ளது. அதாவது அனைத்துக் குழந்தைகளும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டாயம் கல்வி கற்க வேண்டும். அத்துடன் கல்வி நிறுவனங்களில் 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு அனுமதி 
வழங்க வேண்டும். ஆகவே சமுதாய மக்கள் இந்தத் தருணத்தினை விட்டுவிடாது அனைத்து முஸ்லிம் குழந்தைகளையும் கல்வி நிலையம் செல்ல வழி வகுக்க வேண்டும்.
சில முஸ்லிம் இயக்கங்கள் முஸ்லிம் அல்லாத நபர்களை தேடிச் சென்று அல்குரானை வழங்கும் பழக்கத்தினையும், அடுத்த மதத்தினவருடன் விவாதங்கள் நடத்துவதினையும் பத்திரிக்கை வாயிலாக பார்க்கின்றோம். சில ஹோட்டல் அறைகளில் இலவசமாக  பைபிளை வைத்திருப்பதினை காணலாம். எத்தனை முஸ்லிம் சகோதரர்கள் அதனை எடுத்துப் படித்திருப்பார்கள் என்றால் ஒரு சதவீதம் கூட தேறாது. நாம் சில சமயங்களில் ரோட்டில் நடந்து செல்லும்போது சில கிருத்துவர்கள் நின்றுகொண்டு மதபோதனை பிட் நோட்டிசுகளை 
விநியோகித்துக் கொண்டிருப்பதினை காணலாம். உங்கள் கையில் கிடைத்தால் என்ன செய்வீர்கள். கீழே தூக்கி எறிந்து செல்வீர்கள். அதுபோன்ற நிலை அல்குரானுக்கும் மாற்று மதத்தினரிடமிருந்து வந்து விடக் கூடாது. 'உங்கள் மதம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு' என்ற கொள்கையினை மேற்கொண்டு நமது குழந்தைகளுக்கு மார்க்க கல்வியினையும், உலகக் கல்வியினையும் வழங்க இது சிறந்த சமயம், அதனை நழுவ விடக்கூடாது.

2) உச்ச நீதி மன்றம் 8.5.2012 அன்று ஹஜ் பயணச் சலுகைகளை பத்து வருடத்திற்குள் குறைத்து நிறுத்தி விட வேண்டும் என்று மத்திய அரசினை கேட்டுக் கொண்டுள்ளது.
அதனை வரவேற்றும், எதிர்த்தும் முஸ்லிம் சமுதாய தலைவர்கள் அறிக்கையினை விடுவதைப் பார்க்கலாம். 
'வாகன, தங்கும் இட வசதி உள்ளவர்களுக்கும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது' யாரும் மறுக்க மாட்டார்கள். 
ஆனால் இந்திய திருக் கண்டத்தில் அறுபது சதவீத மக்கள் சமூக,கல்வி, பொருளாதாரத்தில் தலித் மக்களைவிட 
[பின் தங்கி இருக்கிறார்கள் என்று சொல்லும்போது தங்கள் வாழ்நாளில் எங்கே பெரும்பாதியான முஸ்லிம்கள் ஹஜ் செல்ல முடியும். அரசு உதவியில்லாமல் அரசு மானியம் பெரும் நவாப்களும், செல்வந்தர்களும், ஸ்டார் ஹோட்டல் முஸ்லிம் முதலாளிகளும்  தான் ஹஜ் பலனை அனுபவிக்க முடியும். அனால் அதே மதத் தலைவர்களும், செல்வந்தர்களும், அரசு வழங்கிய மற்ற சலுகைகளையும், டி.வி. காஸ் அடுப்பு, மிக்சி, போன்ற இலவசங்களை வாங்க 
வில்லை என்று சொல்ல தைரியம் இருக்கிறதா என்று கேளுங்கள். குறைந்த பட்சம் நவாப் தனது சொகுசுக் காரில் பறக்கும் கொடியினையும், அரசு சலுகையினையும் விட்டுத் தந்து சாதாரண குடிமகனாக நடமாட தயாரா என்று கேட்டுப் பாருங்கள். முடியாது என்பார்கள்.,
இந்தியாவில் புண்ணியத் தளங்களாக உள்ள இமய மலை திபெத் எல்லையில் இருக்கும் மானசரோவர், மற்றும் காஷ்மீரில் இருக்கும் பத்ரிநாத் கோயிலுக்கும் செல்ல சலுகைகள் இருக்கும்போது மைனாரிட்டி முஸ்லிம்கள் சலுகையினுக்கு மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு. அதுவும் பணக்கார முஸ்லிம்களிகளிருந்தும், சில காரணங்களுக்காக மக்கா செல்ல இயலாத சமுதாய தலைவர்களிடமிருந்தும்  வருவது ஏன் என்று தெரியவில்லை. 
 ஏற்கனவே அரசு 25 சதவீத வருமானத்தினை மக்கள் சமூக நலன் கருதி செலவழிக்கலாம் என்ற நீதி மன்ற தீர்ப்பு இருக்கும்போது அரசு ஹஜ் பயண செலவிற்கு சலுகைகளை வழங்குவது தவறாகாது என்று அரசிடம் சொல்லி உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு மறு ஆய்வு செய்ய குரல் எழுப்ப வேண்டும். அத்துடன் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் லீகும், மற்ற சமுதாய இயக்கங்களும்  அரசிடம் கோரிக்கையினை வைப்பதோடு, மறு ஆய்வு மனுவும் தாக்கல் செய்ய வேண்டும். 

3) சாதி கணக்கெடுப்பு:
மத்திய அரசு கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேறிய சமூகம், பின் தங்கிய சமூகம் என்று அறிந்து சலுகைகளை வழங்குவதிற்காக சாதி வாரி கணக்கு எடுக்கப் படுகிறது. ஏற்கனேவே முஸ்லிம்  சமூதாயம் அரசு சலுகைகளுக்காக லெப்பை, தக்கினி,மாப்பிளா, தெலுகு பேசும் வகுப்பினர் என்று கணக்கு எடுத்து அதன்படி கல்விக்காகவும், வேலை வாய்ப்பிலும் சலுகை வழங்கப் படுகிறது. தற்போது எடுக்கப் படும் கணக்குப் படி துல்லிதமாக 
சலுகைக்கு தகுதியான சமூகம் எது என்று பார்பதிற்காக  கணக்கெடுப்பு நடத்தப் படுகிறது.
உடனே ஒரு மேதாவி இமாம், வெள்ளிகிழமை பிரசங்கத்தில் தனது முகம் இரவு டி.வியில் தெரிவதிற்காக அனைவரும் முஸ்லிம் என்று தெரிவியுங்கள், சாதி உட்பிரிவு இல்லை என்று தெயவியுங்கள் என்று கூறியுள்ளார்.
சிலருக்கு தங்களை பஞ்சாபின் தீவிரவாத தலைவர் பிந்தரன் வாலே என்று நினைப்பு. அதுதான் முஸ்லிம் மக்களை எந்த சலுகையும் பெறாமல் படு குழியில் தங்கள் பிரசங்கம் மூலம் தள்ளப் பார்க்கிறார்கள்.
கணக்கெடுப்பில் மதம் என்ற இடத்தில் இஸ்லாத்தினையும், சலுகைக்கான உட்பிரிவில் லெப்பையோ, தக்கினியோ மற்ற இரு பிரிவினையோ சொல்ல வேண்டும். அப்போது தான் நமக்கு சலுகை கிடைக்கும். இஸ்லாம் மதமில்லா மார்க்கமானாலும் கணக்கெடுப்பில் இஸ்லாமிய மதத்தினவர் என்றே சொல்ல வேண்டும்.
அதே போன்று தான் முக்குலத்தோர் பல பிரிவு இருந்தாலும், சலுகைக்காக அகமுடையார் என்று குறிப்பிட வேண்டும் என்று அந்த தலைவர் சொல்லும்போது, நமது இமாமிற்கு மட்டும் எப்படி இந்த ஞானோதயம் வந்தது என்று தெரியவில்லை.  ஆகவே சமுதாய இயக்கங்களும், மார்க்க தலைவர்களும் முஸ்லிம்களுக்கு சலுகைகள் பெற்றுத் தர உதவ வேண்டுமே தவிர, தடைக்கல்லாக இருக்கக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.
4) 7.5,2012 அன்று இந்திய சிவில் செர்விசெஸ் பரீட்சை முடிவுகள் அறிவிக்கப் பட்டன.
அந்தப் பரிட்சையினை நாலரை லட்சம் போட்டியாளர்கள் எழுதி உள்ளனர். அதில் முஸ்லிம்கள் 1200 பேர்கள் ஆகும்.
அதில் வெற்றி பெற்ற முஸ்லிம்கள் 29 பேராகும். அது 15 சதவீதம் கொண்ட இந்திய முஸ்லிம்களில் 2.3 சதவீதமே ஆகும்.
இன்னும் கூட முஸ்லிம் கல்வி நிலையங்களும், சமூதாய அமைப்புகளும் முனைப்பு எடுத்து முஸ்லிம் மாணவர்களை சிவில் செர்விசெஸ் மத்தியிலும், மாநிலத்திலும் எழுத தயார் செய்யவில்லை என்பதே இந்தக் கணக்கு காட்டுகின்றது.
சிலர் பயிற்ச்சி மையம் என்று போலியாக ஆரம்பித்து முஸ்லிம்களை திசை திருப்புகிறார்கள். ஒரு இமாம் I.A.S பயிற்ச்சி மையம் ஆரம்பித்திருப்பதாக சொல்லிதொழுகை நடத்துவதினை விட்டு விட்டு, ஊரெல்லாம் பவனி வருகிறார். அவர் I.A.S என்று சொல்லுவதிற்கு 'இஸ்லாமிய அட்மிநிச்ற்றேடிவ்  சர்வீஸ்' என்று  விளக்கம் தருகிறார் என்றால் பாருங்களேன். அவர் எப்படி அறிவு ஜீவியாக இருப்பார் என்று.  வீணான விளக்கங்களைத் தராது வழி தெரியாத முஸ்லிம் படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைக்க கல்வி நிலையங்களில் பயிற்ச்சி மையம் நடத்தி வழி காட்ட வேண்டும்.
முஸ்லிம் இளைஞர்களை, சமூதாய மக்களை நம்மால் இயன்ற அளவு நல்வழி காட்ட வேண்டும்.
அவ்வாறு முடிய வில்லை என்றால் அவர்கள் முன்னேற எந்த விதத்திலும் தடைக்கல்லாக இருக்ககூடாது என்று
வேண்டுகோள் விடுக்கின்றேன்.

Thursday 12 April 2012

கல்மனது என்று கனியுமோ!”

'பெண்ணாய் பிறப்பதிற்கு மாதவம் வேண்டுமம்மா' என்று பாடினார் புரட்சிக் கவிஞர்.
ஆனால் அந்தப் பெண்ணாய் பிறந்ததால் மூன்று மாதத்தில் பெற்ற தந்தையினாலேயே வன்கொடுமைக்கு ஆளான ஒரு சம்பவம் பெங்களூரில் சென்ற வாரம் நடந்திருக்கிறது.
அதுவும் பெண்களை மதிக்கக் கற்றுக் கொடுத்த இஸ்லாமிய குடும்பத்தில் நடந்திருப்பதினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
அகிலத்தில் இஸ்லாமிய மார்க்கம் தோன்றி 1400 ஆண்டுகள் முன்பாக அடித்தளம் பெருமானார்(ஸல்) அவர்களால் அமைக்கப்பட்டு இன்று 700 கோடி ஜனத்தொகையில் 197 தொகை கொண்ட மக்கள் அமைப்பாக இருக்கிறது.
அதன் காரணம்:
1) ஆர்ப்பாட்டமில்லாத ஏக இறைக் கொள்கை,
2) சமத்துவ, சகோதரத்துவ சமுதாய அமைப்பு.
3) உபரி செல்வத்தில் சக்காத், சதக்கா என்ற பகிர்ந்துண்ணும் பண்பு.
4) பெண்ணினம் மேம்படுத்தும் கொள்கை.

இஸ்லாம் தோன்றுவதிற்கு முன்புள்ள இருண்ட காலத்தில்
அரேபியாவில் பெண்ணடிமை, பலதார மணம், பெண்சிசு வதை, கொலை போன்ற கொடுமைகள் இழைக்கப் பட்டன. ஆனால் அதனை எல்லாம் தலை கீழாக புறட்டிப்போட்ட பெருமை அல் குரான் வழிப் படி நடந்த பெருமானாரின் ஹதிசுகளும்,
வழி காட்டுதலாகும். இஸ்லாம் தோன்றிய பிறகு பெண்களுக்கு ஒரு புரட்சி யுகம் ஏற்பட்டது என்றால் மிகையாகாது. அவை பின் வருமாறு:
1) பெண் சிசு கொலை தடுக்கப்பட்டது.
2) பெண்ணிற்கு சொத்தில் பங்கு உத்திரவாதம் செய்யப்பட்டது.
3) பெண்ணிற்கு மஹர் கொடுத்து திருமணத்திற்கு வழி வகுத்தல்.
4) மனம் போன போக்கில் பலதார மணம் தடுக்கப் பட்டது.
5) ஆணின் மானத்தினை மறைக்கும் ஆடை என்று பெண் வர்ணிக்கப் பட்டாள்.
இந்தியாவில் கூட ஹிந்துப் பெண்களுக்கு சொத்துரிமை சம்பந்தமான சட்டம் சமீபத்தில் தான் வந்தது.
அமெரிக்காவில் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம்பளமும் சமீபத்தில் தான் அறிவிக்கப் பட்டது.
உலக நாடுகளில் இன்னும் ஸ்ரீதனம் பெரும்பாலான முஸ்லிம் அல்லாத நாடுகளில் ஒழிக்கப் படவில்லை.
மேற்கூறப்பட்ட இஸ்லாமிய பெண்களுக்கான பெருமைகளைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கும் போது, சரித்திரத்தில் பெருமானாருக்கு கதிஜாப் பிராட்டியாராலும், அன்னை ஆயிஷாவினாலும் எவ்வளவு உறுதுணையாக இருந்துள்ளார்கள் என்ற வரலாறுகள் எடுத்தியம்பிய பிறகு," பொட்டப் பிள்ளை பெத்துப் போடு" என்று சொல்லுவதிற்குப் பதிலாக இடி விழுந்தாப் போல ஒரு செய்தி பெங்களூரில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நடந்துள்ளது. அது என்ன என்று கீழே விவரிக்கின்றேன்:

25 வயதான உமர் பாரூகிற்கும் 19 வயதான ரேஷ்மா பானுக்கும் திருமணம் இனிதே நடந்தது. கனவுலகில்
மிதந்த திருமண வாழ்வில் ரேஷ்மா கர்ப்பமானாள். உடனே கணவன் தன் மனைவியிடம் தனக்கு பெண்
குழந்தை பிடிக்காது. எனக்கு ஆண் குழந்தை தான் பிடிக்கும் என்றிருக்கிறார். ஆனால் அது எல்லாம் வல்ல
அல்லாஹ்வின் படைப்பு என்று அவருக்குத் தெரியாது. தலைப் பிரசவ வேதனையெல்லாம் தாங்கிக்
கொண்டு அழனான பெண் குழந்தையினை பெற்றெடுத்தாள். அதற்கு அப்ரீன் என்றும் பெயரிட்டு, தன் உதிரத்தில் பாலூட்டு சீராட்டினாள். வந்ததே வினை கணவன் உமர் பாரூக் வடிவில்.
நீ பெண் குழந்தை பெற்றதால் உன் பெற்றோடிடம் சொல்லி ரூபாய் ஒரு லக்ஷம் வாங்கி வா என்று கட்டளை இட்டான்.
தன்னுடன் பிறந்த இன்னொரு சகோதரி திருமணம் நடப்ப இருப்பதால் தன் பெற்றோரால் அவ்வளவு பணம் கொடுக்க
இயலாது என்றாலே பார்க்காலாம். அன்றிலிருந்து அவனுடைய கொடூர குணத்தினைக் காட்ட ஆரம்பித்து விட்டான்.
பெற்ற குழந்தை என்றும் பாராது அதனைக் கிள்ளுவதும், கடிப்பதும், சிகரெட்டால் சூடு போடுவதும் போன்ற கொடூர
செயல்களை அந்த பச்சிளம் குழந்தையிடம் காட்டினான். இறுதியாக தலையில் கனமான ஒரு அடி கொடுத்தான் பாருங்கள், மூன்று மாதக் குழந்தை மூர்ச்சியானது. பதறிய தாய், தன் பெற்றோருடன் மருத்துவ மனையில் சேர்த்து
தன் சிறிய சகோதரி திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த ரூபாய் முப்பது ஆயிரத்தினையும் செலவழித்துப் பார்த்தும் பெண் குழந்தையினைக் காப்பாற்ற முடியாமல் இன்று 12.4.2012 அன்று பெங்களூரில் இறைவனடி சேர்ந்து விட்டது. கணவன் உமர் பாரூக் போலிசாரால் கைது செய்யப் பட்டு கம்பி எண்ணுகிறான்.
இது எதனைக் காட்டுகிறது என்றால் இன்னும் நம்மிடையே பெயரளவில் உலா வரும் முஸ்லிம்கள் தான் உள்ளனர்.
அவர்கள் எல்லாம் இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறாக வாழ்ந்து கொண்டு உள்ளனர். அவர்கள் செயல்பாடுகள் பின் வருமாறு:
1) கையூட்டு வாங்கி திருமணம் செய்கின்றனர். சீர் சீராட்டு என்ற பெயரில் மணமக்கள் குடும்பத்தினை உறிஞ்சி எடுக்கின்றனர்.
2) பெண்ணிற்கு வீடு, சொத்தில் பங்குவினை திருமணத்தின் போதே எழுதி கேட்கின்றனர்.
3) பெண்ணின் சீர் சீராட்டு போத வில்லை என்றால் திருமணத்திற்குப் பின்பு பெண்ணிற்கு மனகோளாறு என்று
படிக்காத டாக்டராக இருந்து பட்டமும் கொடுத்து விடுகின்றனர்.
4) பெண் குழந்தை பிறந்தால் போதும் மருமகளை படாத பாடு படுத்தி விடுகின்றனர்.
இதில் பெரும் பங்கு குடும்பத்தில் உள்ள பெண்களாலே செயல் படுத்தப் படுத்தப்படுகிறது என்றால் கேவலமாகத்
தெரியவில்லையா?
ஆகவே சமுதாய இயக்கங்கள், மௌலவிகள், மார்க்க அறிஞர்கள், படித்த இளைஞர்கள் தங்களின் பரப்புரைகள் மூலமும், பத்திரிக்கைகள் மூலமும் புரையோடிக் கிடக்கும் இருண்ட கால பழக்கங்களிலிருந்து விடுபெற கடுமையான முயற்சிகள் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்வது சரியாகுமா சகோதர சகோதரிகளே!

Tuesday 3 April 2012

பயம், பயம், என்று மறையுமோ இந்த கூடங்குளம் பயம்!

கிராமங்களில் மின்சாரம் வரும் முன்பு பெரியவர்களும், பெற்றோர்களும் குழந்தைகளை இருட்டு நேரத்தில் வெளியே செல்ல விடக் கூடாது என்பதற்காக பேய் கதைகளைச் சொல்லி இரவானதும் வீட்டிலேயே அடைய வைத்து விடுவார்கள். ஆனால் மின்சார உலகில் அந்த பேய் கதைகளெல்லாம் புதை குழிக்கு போய் பதுங்கிக் கொண்டன.

கண்மாய், குளத்தில் குளிக்கச் சென்றால் தண்ணீர் ஆழமாக இருக்கும், ஆகவே கரையில் நின்று குளித்து விட்டு வரச் சொல்லுவார்கள் பெற்றோர். ஆனால் இன்று ஆங்கிலக் கால்வாயினை நீந்தும் திறன் குற்றாலீஸ்வரன் போன்ற சிறுவர்களுக்கு உண்டு. ஏன் ஆறு மாத குழந்தைக்கு கூட நீச்சல் கற்று கொடுக்கும் காலமாக மாறி விட்டது
30.12.2011 அன்று 'தானே' புயல் சென்னை உள்பட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்விக்கும் என்றார் வானிலை டைரக்டர் ரமணன். ஆனால் மெரினா கடலில் ஆர்ப்பரிக்கும் அலைகளை ரசிக்கும் தமிழ் வீர பெண்களை மேலே காணும் படத்தில் காணலாம்.

வாகன விபத்து அன்றாட நிகழ்வுகளாகத் தான் உள்ளது. அதற்காக பள்ளி சிறுவர்கள் இரண்டு சக்கர வாகனத்தினை ஓட்ட விடாமல் பெற்றோர்களால் தடுக்க முடிகிறதா, இல்லையே!

விண்வெளி பயணத்தில் கல்பனா சாவ்லா போன்றோர் துரதிஷ்டவசமாக இறக்க நேரிட்டது. அதற்காக விண்வெளியில் அமெரிக்காவும், ரஷ்யாவும் விண்வெளி பயணத்தில் ஆட்களை அனுப்பாமல் இல்லையே!

அமெரிக்காவின் மெக்ஸிகோ கடலில் ஆழ் குழாய் மூலம் எண்ணை எடுக்கும் பிரிட்டிஷ் எண்ணைக் கிணறு 2010 ஆம் ஆண்டு வெடித்து சுற்றுப் புற சூழலுக்கு கெடுதி ஏற்பட்டது. அதற்காக அந்தக் கிணறினையும் மற்ற உலகில் உள்ள கடல்களில் எண்ணை எடுக்கும் முயற்சியினை யாரும் கைவிடவில்லையே!

ஒவ்வொரு சந்திர கிரகணமும், சூரிய கிரகணமும், கோள்களின் மாற்றம் ஏற்படும் போதும் ஏதாவது ஒரு ஜோசியர் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு உலகம் அழியும், அல்லது உலக மக்களுக்கு கேடு விளையும் என்று புது, புது கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருப்பார். ஆனால் கோளங்களின் மற்றும் கிரகங்களின் மாற்றமும் அன்றாட நிகழ்ச்சியாகத் தான் இருந்து கொண்டு உள்ளது.

வேதியியலில் நோபல் பரிசினை பெற்ற, இங்கிலாந்து அரசால் 'சர்' பட்டம் சூட்டப் பெற்ற தமிழ் அறிஞர் வெங்கட்ராமன் ராமக்கிரிஷணன் சென்னையில் 29.12.2012 அன்று நடந்த எஸ்.வி.நரசிம்மன் நினைவு சொற்பொழிவில், 'ஜோதிடம் அறிவுப் பூர்வமானது அல்ல. கோலங்கள், நட்சத்திரங்கள் நமது தலைவிதியினை நிர்ணயக்கக் கூடியது அல்ல. சுற்றியிருக்கும் உலகத்தினை நம்பிக்கையின் அடிப்படையில் பார்க்காமல், அறிவுப் பூர்வமாக பார்க்க வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரளா அரசு முல்லைப் பெரியார் அணை பூகம்பத்தால் பளுவற்றதாக உள்ளது, அந்த அணை உடைந்தால் கேரளா கிராம மக்களுக்கு ஆபத்து என்று கூக்குரல் விட்டதால் இரு மாநிலத்திலும் விரும்பத் தகாத நிகழ்ச்சிகள் நடந்து மன கசப்பு உண்டாகியது. ஆனால் உச்ச நீதி மன்றத்தால் நியமிக்கப் பட்ட நிபுணர் குழு ஆராய்ந்து அது போன்ற ஆபத்து இல்லை என்று உச்ச நீதி மன்ற செயல் குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.

அதேபோன்றுதான் திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையில் அமைக்கப் பட்டிருக்கும் கூடங்குளம் அணு நிலயம் பற்றியும் அண்டப் புழுகு, ஆகாயப் புழுகு மூட்டைகளை அங்குள்ள மீனவர்கள் மற்றும் கிராம மக்களை பயமுறுத்தும் வேளையில் சிலர் உள்நோக்கத்துடன் கிளம்பியுள்ளனர் என்றால் ஆச்சரியமில்லைதானே!

அணு உலை மின்சாரம் எவ்வாறு உற்பத்தி ஆகிறது?

சுருக்கமாக சொல்வோமானால் உரோனியம் என்ற தாது குறிப்பிட்ட ஐசோடோப் என்ற தாதுடன் மோதும்போது அதிக
அளவில் வெப்பம் ஏற்பட்டு நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்கி அனல் மின் நிலையத்தில்
உற்பத்தி செய்ததுபோல மின் உற்பத்தி ஆகிறது. உலகில் அதிக அளவில் உரோனியம் உற்பத்தி ஆகும் நாடு ஆஸ்திரேலியா தான்.

அமெரிக்காவுடன் இந்தியா அணுவினை ஆக்கபூர்வமான காரியங்குளுக்கு பயன்படுத்துவது சம்பந்தமாக செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பலனாக ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு உரோனியம் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.

ஏன் உலகில் வேறு எங்கேயும் அணு உலை இல்லையா?

உலகில் மொத்தம் 433 அணு உலை உள்ளன. அவை பின் வருமாறு:

1) அமெரிக்கா 104 உலைகள் 1, 01, 240 மெகா வாட்ஸ், நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் பங்கு 19.59%
2) பிரான்ஸ் 58 அணு உலை 63,130 மெகா வாட்ஸ் மின் உற்பத்தி, நாட்டின் உற்பத்தியில் பங்கு 74.12%
3) ஜப்பான் 50 அணு உலை 44,215 மெகா வாட்ஸ் மின் உற்பத்தி, நாட்டின் உற்பத்தியில் பங்கு 29.21%
4) ரஷ்யா 32 அணு உலைகள் உற்பத்தி 22,693 மெகா வாட்ஸ், உற்பத்தியில் பங்கு 17.09%
5) ஜெர்மனி 9 அணு உலைகள் உற்பத்தி 12,068 மெகா வாட்ஸ், நாட்டின் பங்கு 28.38%
6) தென் கொரியா 21 அணு உலைகள் உற்பத்தி 18,698 மெகா வாட்ஸ், நாட்டின் பங்கு 32.18%
7) சீனா 15 அணு உலைகள் உற்பத்தி, 11,078 நாட்டின் பங்கு 1.82%
8) இந்தியா 20 அணு உலைகள் உற்பத்தி 4780 மெகா வாட்ஸ் நாட்டின் பங்கு 2.85%

இந்தியாவின் மின் உற்பத்தி:

இந்தியவின் மின் உற்பத்தி நிலக்கரி கொண்டு தயாரிக்கப் படும் தெர்மல் எனர்ஜி, நீர் சுழற்சியில் இயங்கும் ஹைட்ரோ எனெர்ஜி, காஸ் மற்றும் கடல் அலைகள் கொண்டு தயாரிக்கப் படும் எனேர்ஜியோடு அணு உலைகள் மூலம் தயாரிக்கப் படும் 4780 மெகா வாட்ஸ் எனர்ஜியினையும் சேர்த்து 1,10௦,256 மெகா வாட்ஸ் எனர்ஜி தான் உற்பத்தி ஆகி உள்ளது. அனால் நமக்குத் தேவை 1 22,287 மெகா வாட்ஸ் மின்சாரம் ஆகும். நமது உற்பத்தி அமெரிக்காவினை விட 12 மடங்கும், ஐரோப்பாவினை விட ஏழு மடங்கும் மின் உற்பத்தில் குறைவாக உள்ளோம்.

முக்கிய பிரமுகர்கள் கருத்து:

முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் இந்திய நாடு 2030 ஆம் வருடத்தில் வல்லரசாக மின் உற்பத்தி 4,00,000 மெகா வாட்ஸ் மின் உற்பத்தி தேவை அதில் அணு மின் உற்பத்தி 50,000 மெகா வாட்ச்சினைத் தொட வேண்டும் என்கிறார்.

பாரதப் பிரதமர் 2020 ஆம் ஆண்டு நாடு பொருளாதாரத்தில் முன்னேற 20,000 மெகா வாட்ஸ் அணு மின்சாரம் தேவை
என்கிறார்.

தொலை நோக்குப் பார்வை:

இன்று பிரதமரும், அப்துல் கலாமும் சொல்லும் அணு உலை உற்பத்தியினை அதிகரிக்க தொலை நோக்குத் திட்டத்துடன் 1988ஆம் ஆண்டு முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் சோவித் யூனியன் தலைவர் கோபரசோவுடன் கூடன்குள அணு உலைக்கான திட்டத்தினை செயலாக்க ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

ஆனால் துரதிஷ்டமாக சோவியத் யூனியன் உடைந்து ரஷ்யா நாடானபோது கூடங்குளம் அணு நிலைய திட்டம் கிடப்பில் போடப் பட்டது.அதன்பின்பு 2001 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதம மந்திரியாக இருந்தபோது ரஷ்யாவுடன் மறு ஒப்பந்தம் போடபட்டு அதன் வேலை ஆரம்பிக்கப் பட்டது. ஆனால் பத்து வருடமாக எதிர்ப்பினைக் காட்டாத சிலர் இப்போது களத்தில் இறங்கி இருப்பது ஆச்ச்சரியமளிக்கவில்லையா?

ஏன் இந்தியாவில் வேறு எங்கும் அணு உலை இல்லையா?

இந்தியாவில் மொத்தம் 14 அணு உலைகள் உள்ளன. அவை பின்வருமாறு:

1) தாராபூர் -மகாராஷ்டிர மாநிலம், அணு உலை= 4
2) ராவட்பாட்டா- ராஜஸ்த்தான் மாநிலம், அணு உலை =4
3) கல்பாக்கம்- தமிழ்நாடு, அணு உலை=2
4) நரோரா-உ.பி மாநிலம், அணு உலை=2
5) கைகா-கர்நாடகா மாநிலம், அணு உலை=2

ஆறு அணு மின் உலைகள் கட்டப் பட்டு வருகின்றன:

1) ராவட்பாட்டா- ராஜஸ்த்தான் மாநிலம்- 2
2) கைகா- கர்நாடகா மாநிலம்- 2
3) கூடங்குளம்- தமிழ்நாடு- 2. இதில் ஒன்று முடிவடைந்துள்ளது ஆனால் போராட்டத்தால் செயல் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

அத்துடன் ஜெயட்டாபூரில்(மகாராஷ்டிரா) ஒரு நிலையம் ஆரம்பிக்க நிலம் ஆர்ஜிதப் பட்டு வருகிறது.

பாதுகாப்பானது:

1) இந்திய நாட்டில் அமைந்துள்ள அனைத்து அணு மின் நிலையமே பாதுகாப்பான இடத்தில் உள்ளது. 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியில் கல்பாக்கம் அணு மின் நிலையத்திற்கு ஆபத்து ஏற்படவில்லையே! ஏனென்றால் கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் மின் நிலையம் இரண்டுமே கடல் மட்டத்திற்கு எட்டு மீட்டருக்கு மேல் உயரத்தில் உள்ளது.

2) உலகில் அமைந்துள்ள நிலநடுக்க பாதை (எர்த் குவாக் பால்ட்) விட்டு விலகி உள்ளது.

3) ஆக்டிவ், பாஸிவ் என்ற சுருசுருப்பானதும், மந்தமானதுமான (ஆபத்து விளைவிக்காத) கொள்கை கொண்டது.

பாகிஸ்தானுக்கு கிடைக்காத அணு மின் நிலையம் அமைக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது, அதனை ஏன் தடுக்க வேண்டும்?

116 கோடி ஜனத் தொகை கொண்ட இந்திய நாட்டு மக்கள் பயன் படுத்தும் மின்சாரம் 811 பில்லியன் யுனிட்ஸ் ஆகும்.

ஆனால் 133 கோடி ஜனத் தொகை கொண்ட சீனாவின் மக்கள் பயன் படுத்தும் மின்சாரம் 4690 பில்லியன் யுனிட் ஆகும்.
ஆகவேதான் சீன நாடு நம்மை விட உற்பத்தியில் முன்னேறி உள்ளது.

ஏன் நம்மிடம் அணு மின் நிலையத்திற்கான தாதுப் பொருட்கள் இல்லையா?

இந்திய மண்ணில் இன்னும் தோண்டி எடுக்கபடாத 1,75,000 டன் உரேனியம் மற்றும் தாதுப் பொருட்கள் இருப்பதாகக் கூறப் படுகிறது. அப்படி இருக்கும்போது நாம் ஏன் இன்னும் அதிகமான மின் உற்பத்திக்கு தேவையான மின் உற்பத்தியினை பெற வழிவகுக்காமல் தடுக்க முற்படுகிறோம் என்று விளங்கவில்லை.

மின் செலவு முக்கிய தேவைகள்:

55-60 ஆண்டுகளுக்கு முன்பு முட்டை மண்ணெண்ணெய் விளக்கு வைத்து படித்த போது வெளிச்சத்திற்காக தலையினை கிட்டக் கொண்டுபோய் தலை முடி கருகிய காலம் போய், இப்போது பள்ளி மாணவனுக்கும் ஏசி அறையில் படிக்க, படிக்க வசதி செய்து கொடுக்கின்றோமல்லவா?

விவசாயம் செய்ய கிணத்தில் தண்ணீர் எடுக்க மாட்டின் உதவியுடன் வாளிவைத்து இறைத்த காலம் போய், இன்றுஇலவச மின் வசதியுடன் விவசாயம் செய்ய வில்லையா?

குடிசை வீட்டிற்கு கூட இலவச மின்சாரம் எங்கிருந்து வரும்?
தொழில் உற்பத்திக்கு மின்சாரம் எங்கிருந்து வரும்?
இந்தியா முழுவதும் ஓடும் மின்சார ரயில் போக்குவரத்திற்கு தேவையான மின்சாரம் எப்படி கிடைக்கும்?
வீதிகள் தோறும் விளக்கு எரிய வேண்டுமென்றால் மின்சாரத்திற்கு எங்கே செல்வது?
அலுவலகங்களில் ஊழியர்கள் காற்றோற்றதுடனும், வெயில் காலங்களில் குளிர்ச்சியுடனும் இருக்க ஆசைப் பட்டால் மின்சாரத்திற்கு என்ன செய்வது?

தெர்மல், ஹைட்ரோ , காற்றாலை, சூரிய வெளிச்சம், காஸ், கடல் அலை ஆகியவற்றில் கிடைக்கப் பெரும் மின்சாரம் போத வில்லை என்றால் அணு மின் நிலையம் தான் வழி என்றால் மிகையாகாது.

ஜப்பானில் புகுசிமா அணு மின் நிலைய விபத்துவினை வைத்து சிறரால் உள்நோக்கத்துடன் தூண்டி விடப் பட்டு உள்ளது இந்த எதிர்ப்பு என்றால் மிகை ஆகாது.

ஏன் உலகில் வேறு எங்கேயும் அணு மின் உலைகள் கட்டப் பட்டு வரவில்லையா?
1) சீனாவில் 27 அணு உலைகள், அதன் மூலம் கிடைக்கப் பெரும் மின்சாரம்: 27, 230 மெகா வாட்ஸ்.
2) ரஷ்யா 11 அணு உலைகள், அதன் மூலம் கிடைக்கும் மின்சாரம் 9,153 மெகா வாட்ஸ்.
3) தென் கொரியா 5 அணு உலைகள், அதன் மூலம் கிடைக்கும் மின்சாரம் 5560 மெகா வாட்ஸ்.
4) ஜப்பான் 2 அணு உலைகள், அதன் மின் உற்பத்தி 2650 மெகா வாட்ஸ்.
5) பிரான்ஸ் 1 அணு உலை, மின் உற்பத்தி 1600 மெகா வாட்ஸ்.
6) அமெரிக்கா 1 அணு உலை, மின் உற்பத்தி 1165 மெகா வாட்ஸ்.

ஆக மொத்தம் 65 இடங்களில் உலகத்தில் அணு மின் உலை அமைக்கும் போது சிலர் மட்டும் மின் பற்றாக்குறைக்கு தேவையான அணு மின் நிலையம் அமைக்க விடாது போராடுவது ஏன் என்று புரியவில்லை!

இப்போது போராட்டக்காரர்கள் சொல்லும் காரணங்கள் எடுத்துக் கொண்டு அதற்கு என்ன பதில் என்று பார்ப்போம்:

1) பேராபத்து விளைவிக்கக் கூடியது.

அணு மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால் அதனை செயலிழக்கச் செய்யும் முறையான குளிரூட்டும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது.

2) அணு கதிரியக்கம் பரவாமல் தடுக்க புயுவல் மாற்றிக், புயுவல் கிளாட், பிரிமேரி கூலன்ட், ஸ்டீல் லைன், பிரிமேரி கண்டைன்மென்ட் மற்றும் செகண்டரி கண்டைமென்ட் ஆகியவற்றின் மூலம் தடுப்பதிற்காக ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

3) சுற்றுப் புற சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடியது:

ஆனால் அணு நிலையங்கள் பசுமைகளின் நண்பன் என்றால் மிகையாகாது. சுற்றுப் புற சூழலுக்கு கேடு விளைவிக்கும் வாயுவுகலான CO2, NO2, SO2 போன்றவைகளிணை அணு மின் நிலையங்கள் வெளிப் படுத்துவதில்லை. இது குளோபல் வார்மிங் என்ற வெப்ப மாற்றத்திலிருந்து பாதுகாப்பானது.

4) ஓசோன் என்ற புகை மண்டலத்தினை கெடுப்பது தெர்மல் மின் நிலையத்திலிருந்து வெளியாகும் கரும் புகையாகும்.

5) வட சென்னையினை கரும்புகை மண்டலமாக்குவது எண்ணூர் அனல் மின் நிலைய புகையும், நிலக்கரி இறக்குமதியால் வரும் புகையும் ஆகும். நெய்வேலி டவுன்ஷிப்பு பகுதிக்குச் சென்றால் எவ்வளவு கரும் சாம்பலும், புகையும் இருக்கிறது என்று அறியலாம்.

6) கதிரியக்கக் கழிவுகள் தீங்கு விளைவிப்பதால் வெகு கவனமாக கட்டுப்பாடு முறைகள் கையாண்டு நிரந்தர சுரங்கங்கள் மூலம் புதைக்கப் படுகிறது. இதேபோல் தான் இங்கிலாந்திலும், கனடாவிலும் செயல் படுத்தப் படுகின்றன.

மேலே பார்க்கும் படம் 2001 ஆம் ஆண்டு கூடங்குளம் அணு மின் நிலையம் ஆரம்பிக்குமுன் பொட்டகாடாகவும், கருவக்காடாகவும் புள் கூட முளைக்காத காட்சி அளிக்கும் கூடங்குளம் படம்.

ஆனால் கூடங்குளம் இன்று எழில் மிகு நகரமாக தோற்றமளிப்பதினை மேலே பார்க்கலாம்.

கூடங்குளம் சுற்றுப் புற மக்களுக்காக பொது நிறவனங்கள் செய்த நலப்பணிகள் பின் வருமாறு:
1) அங்குள்ள பள்ளிக் கூடங்களுக்கு கணினி,மேஜை நாற்காலி, வழங்கியுள்ளது.
2) ஆழ் துளை கிணறுகள் அமைத்துள்ளது.
3) சூரிய ஒளி மூலம் தெரு விளக்குகள் அமைக்கப் பட்டுள்ளன.
4) அனாதை இல்லங்கள் பராமரிக்கப் பட்டு வருகின்றன.
5) சுய வேலை மகளிர் அமைப்புகளுக்கு தேவையான பொருளாதார உதவிகள் வழங்கப் பட்டு வருகின்றன.
6) மீனவர்களுக்கு உயிர் காக்கும் உடைகள் வழங்கப்பட்டு உள்ளன.
7) 500 நிரந்தர தொழிலாளர்களும், அதே அளவு காண்ட்ராக்ட் ஊழியர்களும் தமிழர்கள் உள்ளனர்.

அணு மின் நிலையத்தினை எதிர்ப்பவர்கள் உள் நோக்கத்துடன் எதிர்ப்பதாக சொல்லப் படும் காரணங்கள் பின் வருமாறு:

1) பொருளாதாரத்திலும், ஆளுமையிலும் அசூர வேகத்தில் முன்னேறி வரும் இந்தியாவினை எப்படியும் தடுத்து நிறுத்தி, ரஷ்யா நாட்டின் பக்கம் இந்தியா சாய்ந்து விடக் கூடாது தங்கள் கட்டுப் பாட்டுக்குள்ளேயே வைத்துக் கொள்ள நினைக்கும் மேற்கத்திய நாடுகள் சூழ்ச்சி செய்வதாகவும் அதற்கு கோவிலில் மணியடித்து மக்களைத் திரட்டும் மதத் தலைவர்கள் உதவி செய்வதாகவும் கூறப் படுகிறது.

2) முதல் அணு மின் நிலையத்தின் செயல் பாடுகளின் முதல்ப் படியாக நீராவி வெளியேற்றும் முன்பு பத்திரிக்கைகள் மூலம் சர்வதேச வழிமுறைகள் படி எச்சரிக்கை செய்யப் பட்டது. ஏதாவது ஒரு காரணம் கிடைக்காதா ஆர்ப்பாட்டம் செய்ய என்று அலையும் சிலரால் புரளி எழுப்பப் பட்டதால் சிலர் எதிர்ப்பு ஆரம்பத்தில் தெரிவித்தனர்.
ஆனால் அண்ணா ஹசாரே ஆதரவுக் கூட்டம் வர வரக் குறைந்தது போல, ஆர்ப்பாட்டக் காரர்களின் கூட்டமும் குறைந்து கொண்டு வருகிறது என்றால் மிகையாகாது.

3) திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகப்படியான விலை உயர்ந்த அரிய வகை மணல் கிடைக்கிறது. அதனை இதுவரை கொள்ளை அடித்துக் கொண்டு இருந்த கும்பலுக்கு கூடங்குளம் ஒரு தடங்கலாக இருக்கிறதாம். ஆகவே அவர்கள் உதவியுடன் ஆர்பாட்டம் நடக்கிறதாகவும் கூறப் படுகிறது. 2011 ஆம் வருட கணிப்புப் படி பாசிட், அயோடின், மன்க்னேசியா, சோடா ஆஷ், பாஸ்பேட், பொட்டாஷ் ஆகியவைகளை விட அரிய வகை மணல் 15% அதிக விலைக்குப் போனதாக கூறப் படுகிறது. ஆகவேதான் மணல் திருடும் கும்பல் தூண்டி விடுவதில் ஈடு படுவதாக சொல்லப் படுகிறது.

4) அணு விஞ்ஞானி அப்துல் கலாம் போன்றோரும், மத்திய அரசால் நியமிக்கப் பட்ட விஞ்ஞான குழுவும் அணு மின் நிலையத்தினை ஆராய்து நிலையம் பாது காப்பாக இருக்கிறது என்று சொன்ன பின்பும், சிலர் வேண்டாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதினால் இன்று அணு மின் நிலையம் முடங்கிக் கிடக்கிறது.

5) ஆர்ப்பாட்டக் காரர்கள் தாங்களும் அணு மின் நிலையத்தினை பார்வையிட வேண்டும் என சொல்கிறார்கள். அவர்கள் என்ன நிபுணர்களா என்ற கேள்வி பலர் மனதில் எழாமலில்லை தானே!

யார் கண்டது அவர்களுடன் மேற்கத்திய நாடுகளின் ஒற்றர்களும் இருக்கலாம்.

1987 ஆம் ஆண்டு கல்பாக்கம் மின் நிலையத்தில் அந்நிய தீவிரவாதிகளால் ஆபத்து என்ற ஒரு தகவலின் பேரில், அந்த நிலையத்திற்கு பாது காப்பு நடவடிக்கையில் ஈடுபட ஆவடி சிறப்பு காவல் படையின் கமாண்டன்ட் ஆக பணிபுரிந்த நானும், கியூ பிரிவு எஸ்.பி. ஆக பணிபுரிந்த இன்றைய டி.ஜி.பியான ராமானுஜமும் பணிக்கப் பட்டு இருந்தோம்.

எங்களுக்கு அணு உலையின் வெளிப் புற பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குத் தான் அனுமதி வழங்கப் பட்டது. அணு உலை தயாரிக்கும் உள்ளே அனுமதி இல்லை. அரசு அதிகாரிகளே பாதுகாப்பு நடவடிக்கைக்காக அனுமதிக்காதபோது ஆர்ப்பாட்டக் காரர்களை எப்படி அனுமதிப்பது என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

மின் பற்றாக்குறையினால் கிராமங்களில் ஆறு மணி நேர மின் தடை இருக்கும்போது, மக்கள் சிரமத்தினை தாங்கிக் கொண்டு இருக்கும்போது, உற்பத்தியாளர்களும், விவசாயிகளும் மின் தடையால் உற்பத்தி பாதிக்கும்போது, நம் நாடு எப்படி வளம் பெரும். ஆனால் மின்சாரத்தில் கூட நாம் கனவு காண முயற்சிக்கின்றோம்.

இந்தத் தருணத்தில் ஒரு சுவையான சம்பவத்தினை உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கின்றேன்.

40 வருடங்களுக்கு முன்பு பள்ளிக் கூடத்தில் இடைவேளையின் போதும், பள்ளி ஆரம்பத்திலும் முடிவுலும் வெண்கல மணி மூலம் ஓசை எழுப்புவார்கள். அப்போது மாணவர்களும், பள்ளி அறைகளும் குறைந்தவையாகும். ஆனால் மின்சாரம் வந்த பின்பு அதன் மூலம் ஒவ்வொரு வகுப்பு அறைக்கும் இணைப்புக் கொடுத்து தெரிவித்தார்கள். ஆனால் தற்போதுள்ள மின் தடை காரணமாக பெற்றோர் தங்களுக்குள் ரூ 3000 வசூல் செய்து எல்லா வகுப்பு அறைக்கும் கேட்கும் அளவிற்கு பெரிய வெண்கல மணியினை சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் கிராம பள்ளிக் கூடத்திற்கு வழங்கி இருக்கிறார்களாம்.

இது மூலம் நாம் மின் பற்றாக்குறையினால் எவ்வளு பின் தங்கி உள்ளோம் என காட்ட வில்லையா?

ஆகவே தான் போராட்டக் காரர்கள் தங்கள் வீணான, வீம்பு நடவடிக்கையில் ஈடுபடாமல் கூடங்குளம் முதல் அனு மின் நிலையம் செயல் பாடவும், இன்னும் இரண்டு அணு மின் நிலையம் செயல் நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்கவும் அனைத்து தமிழ் மக்களும் குரல் எழுப்பவேண்டுவது அவசியமென்றால் மிகையாகுமா?