Friday 26 November, 2021

மீலாதுநபி முக்கியத்துவ உறுதிமொழி

 


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ )

உங்களுக்கெல்லாம் தெரியும் வருகிற அக்டோபர் 19ந்தேதி நானிலம் போற்றும் பெருமானார் ரசூலுல்லாஹ் பிறந்தநாளை மீலாது நபி என்று அழைத்து, அதற்கு தமிழக அரசும் விடுமுறை விட்டுள்ளது. ஆங்கில எழுத்தாளர் மைக்கேல் ஹார்ட்ஸ் உலகில் முக்கியமான 100 நபர்களை தேர்ந்தெடுத்து  அதில் மிக சிறந்த நபர் யார் என்று ஆராயும்போது முகமது  ரசூலுல்லாஹ் பெயரினை சொல்லியுள்ளார். பாலைவனம், வறண்ட பூமி, பசுமையில்லா மலை குன்றுகள் கொண்ட அராபியா நாட்டில் எழுத்தறிவில்லா ஒரு மனிதர் எல்லாம் வல்ல இறைவனால் புனிதராக்கப் பட்டு அங்குள்ள காட்டரபிகளை நல்வழிப் படுத்த ஏக இறைவனால் அல் குரானை 1400 ஆண்டுகளுக்கு முன்பு ரஸூலல்லாவிற்கு  அருளி இன்று கிட்டத்தட்ட 170 கோடி முஸ்லிம்களை கொண்ட மார்க்கமாக இருப்பதிற்கான பெருமை ரஸூலல்லாவினைப் பொருந்தும். ஆகவே தான் ரஸூலல்லா பிறந்த நாள் சிறந்த நாளாக கருதப் படுகிறது. அவ்வாறு கருதுவதினால்  ரஸூலல்லாவினை, அல்லாஹ்விற்கு இணையாக யாரும் நினைப்பதில்லை. ஏனென்றால் ரஸூலல்லாவே தனக்கு முதலிடம் கொடுக்கக் கூடாது என்றும், தன்னுடைய ஒரு சிறு வரைபடம் கூட இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். ஆகிய உலகில் சிறந்த மனோதத்துவ நிபுணரும், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளின் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவரும், பத்ம விருது பெற்றவருமான மதிப்புமிகு பேராசிரியர் பி.ராமகிருஷ்ண ராவ் அவர்கள் கூறியிருப்பதாவது: ரசூலுல்லாஹ் முகமது அவர்கள் பற்றிய முழு உண்மையும் மக்களுக்கு இன்னமும் அறிவதில்லை. அவர் சிறந்த போர் வீரர், நாணயமான வியாபாரி, சிறந்த நாட்டின் நலம் பேனிக் காத்தவர், மக்களைக் கவரும் பேச்சாளர், சீர்திருத்தவாதி, அனாதைகளுக்கு அடைக்கலம், அடிமைகளை காத்தவர், உலகிலேயே முதல் பெண் விடுதலைக்குக் குரல் எழுப்பியவர், நெறி தவறா நீதிமான், உண்மையிலே போற்றத்தக்க இறை தூதர் என்று வானளாவிய புகழ் சூடியுள்ளதினை பார்க்கும் போது ஒரு ஹிந்து மதத்தினை தழுவியவர், கல்விமான், உலக மாணவர்களுக்கு பாடம் எடுத்தவர் பல்வேறு தூதர்களை ஆராய்ந்து அதில் முகமது ரசூலுல்லாஹ் தான் சிறந்தவர் என்று கூறியிருப்பது சால சிறந்தது என்று நீங்கள் கருதவில்லையா?

            நம்மிடையே சிலரும், மாற்று மதத்தினவரும், சில தர்க்க வாதிகளும் ஏன் ரஸூலல்லாவே திருகுரானை எழுதி இருக்கக் கூடாது என்றும்  விவாதம் செய்யவதினை பார்க்கின்றோம். அவர்களுக்கெல்லாம் நெத்தியடி பதில் சொல்லும் விதமாக திருகுரான் அல்லாஹ்வினாலேயே ரஸூலல்லாவிற்கு அருளப்பட்டது என்று இரத்தின சுருக்கமாக கீழ்கண்ட உதாரணத்துடன் விளக்க ஆசைப் படுகிறேன்:

1)    திருகுரான் 600 பக்கங்கள் கொண்டது. அது ஒரே மூச்சிலேயோ, ஒரே நாளிலேயோ, ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கிடையிலேயோ இறக்கி அருளப்படவில்லை மாறாக 23 நீண்ட வருடங்களில் ரஸூலல்லாவிற்கு அருளப்பட்டது. அது ஒரு குறிப்பிட்ட செய்தியினை மட்டும் சொல்லவில்லை மாறாக மக்களை நல்வழிப் படுத்த பல செய்திகளைக் கொண்டதாக உள்ளது.

2)    நீங்கள் சாதாரணமாக ஒரு புத்தகம் எழுத வேண்டுமென்றால் ஒரு தவறில்லாமல் எழுதமுடியாது. ஆனால் திருக்குரானில் இலக்கணப் பிழையில்லாமல், ஒன்னொன்றுக்கு முரண்படாமல் அறிவுபூர்வமான பல்வேறு உண்மையான தகவல்கள் உள்ளன.

3)    பாலைவனத்தில் ஒரு பாடசாலையோ, அல்லது அறிவினுக்கு உணவாக கூறப் படும்  லைப்ரரியோ அங்கு இருக்கவில்லை. அப்படியிருந்திருந்தால் அங்கே கற்று குரானை எழுதியிருக்கலாம் என்று சொல்வார்கள்.

4)    குர்ஆனில் மார்க்க சம்பந்தமாக மட்டும் சொல்லப் படவில்லை. மாறாக சிவில் சட்டம், கிரிமினல் சட்டம், குடும்பவியல் சட்டம், வேலை சம்பந்தமான சட்டம், ராணுவ சட்டம், தனிப் பட்டவர் காயம் ஏற்படுத்துதல் சட்டம், ரியல் எஸ்டேட் சட்டம், வரி விதிப்பு சட்டம் போன்ற பல்வேறு விதமான சட்ட நுணுக்கங்களை கொண்ட பொக்கிஷமாக உள்ளது. நீங்கள் அறிந்திருப்பீர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்ற அம்பேத்கார் தலைமையில் ஒரு கமிட்டி 1950ல் அமைக்கப் பட்டதும் அதில் பல்வேறு சட்ட ஓட்டைகள் உள்ளது என்றும் பல்வேறு தரப்பு மக்களால் சொல்லப் படுகிறது நமது நாட்டில். ஆனால் குர்ஆனில் சொல்லப் பட்ட சட்டங்கள் பல்வேறு நாடுகளில் நிறைவேற்றியும், இஸ்லாம் இல்லாத நாடுகளில் உள்ள மக்கள் கூட குர்ஆனில் கூறிய சட்டம் போன்று தங்கள் நாட்டில் அமைய வேண்டும் என்று சொல்லுவதினை காணலாம்.

5)    மக்காவில் வாழ்ந்த ரஸூலல்லாவிற்கு கிறித்துவ சமுதாயத்தினைப் பற்றிய தகவல் தெரிந்திருக்க நியாயமில்லை காரணம் அங்கே கிருத்துவர் வாழவில்லை. ஆனால் கிருத்துவர்கள் நமது மூதாதையர் என்றும், ஈஷா நபி என்ற ஜீசஸ் பற்றி விலாவாரியாக விவரித்துள்ளது. எந்த இடத்திலும் ரஸூலல்லா தான் மரித்த பின்பு மீண்டெழுப்பப் படுவேன் என்று சொல்லவில்லை. மாறாக ஈஸா நபி அவர்கள் மீண்டெழுவார் என்றும் கூறுகின்றது. ஈஸா நபி சரித்திரத்தினை எழுதிய சீடர் பர்னபாஸ் எழுதிய தோலிலான நூல் ஒன்று துருக்கி நூலகத்தில் உள்ளத்தினை கிருத்துவர்களின் தலைவர் போப் பெனெடிக் சென்று பார்த்து ஆச்சரியப் பட்டாராம். காரணம் தனக்குப் பின்பு முகமது ரசூலுல்லாஹ் என்பவர் வந்து மக்களை நல்வழிப் படுத்தியும், ஓரிறை கொள்கையினை எடுத்தியம்பியும் மக்கள் சேவை செய்வார் என்றும் உள்ளதாம். அது பாட்டுமல்ல ஈஸா நபி சிலுவையில் அறையப்படவில்லை மாறாக வேறொருவர் அறையப் பட்டார் என்றும், திருகுரானில் சொல்லப் பட்டதுபோல அவர்களை அல்லாஹ் தன்னிடம் அழைத்துக் கொண்டான் என்றும் கூறியதைக் கண்டு ஆச்சரியப் பட்டு பின்னாளில் இஸ்லாம் மார்க்க நெறியினை தேர்ந்தெடுத்தார் என்றும் கூறப் படுகிறது.

6)    ரஸூலல்லாவிற்கு வகி வருவதற்கு முன்பு ஒரு அரசு எப்படி இருக்கவேண்டும் அல்லது எப்படி அமைக்க வேண்டும் என்றும், அல்லாஹ்வினை வணங்குவதிக்கு முன்பு எப்படி தன்னை தூய்மை படுத்திக்  கொள்ளவேண்டும் என்றும் தெரியாது.

7)    மனோதத்துவ மந்திரங்கள் ரஸூலல்லாவிற்கு தெரிந்திருக்கின்றது நியாயமில்லை. குழந்தைச் செல்வங்களை எப்படி வளர்ப்பது, எவ்வாறு சமரச நடவடிக்கைகள் மேற்கொள்வது என்றும் தெரியாது. சொத்துக்களை பிரித்துக் கொள்ளும் முறைகள் மற்றும்  நிதித்துறை கையாள்வதும் தெரியாது.

8)    ஒரு தாய்க்கு எப்படி கருத்தரிக்கும் முறை, கடலின் அமைப்பு, பூகம்ப ரேகை அமைப்பு, மேகமூட்டம் சொல்லும் ஒன்று கூடுதல், அதன் விளக்கம், கதிரியக்கம், பறவை, செடி கொடி, விலங்கினங்கள் உயிர் வாழ்வது மற்றும் ஒன்றுக்கொன்று பேசிக்கொள்வது, மலை அமைப்பு, தேனை எடுக்கும் தேனீ எவ்வாறு வெளிப்படுத்துகிறது, ‘பிக் பங்’ என்ற உலக பெரு வெடிப்பு ஏற்பட்டதும், கோளரங்கம் அமைக்கப் பட்டது போன்ற எண்ணற்ற  செய்திகளை துல்லிதமாக ரஸூலல்லாவிற்கு வகி இறங்குவதற்கு முன்பு தெரியாது.

9)    வருங்காலத்தில் எழுத வேண்டுமென்றால் தனி மனிதரான ரஸூலல்லாஹ்வினால் எழுதமுடியாது. உலகத்தினைப் பற்றிய செய்திகளை பற்றி எழுத வேண்டுமென்றால் அந்தந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யவுமில்லை.

10)  பைபிளுக்கு வேறுபட்டு குரான் இருக்க முடியாது. வகியால் இறக்கியருளப்பட்டதால் தான் பைபிளை சார்ந்தே குரானும் உள்ளது.

11)  எழுத்தாளர்களுக்குத் தெரியும் ஒரு புத்தகத்தினை எழுதும் போது எழுத்தாளருடைய தனிப் பட்ட வாழ்க்கையினை எழுதாமல் இருக்க முடியாது. உதாரணத்திற்கு மனைவி இறந்த சோகம், எப்போது குழந்தை பிறந்தது, எப்போது மணமுடிக்க செய்தது, பேரக் குழந்தைகள் பிறந்த செய்தி, போரில் எப்போது வெற்றி மற்றும் தோல்விகளை கூறாமல் இருக்கமுடியாது.

12)  குரானை அர்த்தம் தெரிந்து படித்தவர்களுக்கு எப்படி ஒரு தனி மனிதரால் 1400 ஆண்டுகளுக்கு முன்னாள் எழுதமுடியும் என்ற கேள்விக்கணை எழுப்பாமல் இருக்க முடியாது. குரானை எந்தவித முரண்பாடுமில்லாமல் அறிவு சால் அறிஞர்கள் கொண்ட குழு அமைத்து காலத்திற்கு ஏற்ற மாறுபட்ட விஞ்ஞானம், வாழ்க்கை தத்துவம், போன்றவற்றை அனுசரித்து எழுத வேண்டும்.

13)  சரி, அப்படியென்றால் ஏன் சாத்தான் ஓதும் வேதமாக இருக்கக் கூடாது என்றும் சிலர் கேட்கலாம், அதற்கும் பதிலுண்டு. சாத்தான் ஈஷா நபி அவர்களை புகழுமா, ஏழைகளுக்கு உதவுங்கள் என்று சொல்லுமா, சாத்தானுக்கு பயந்து சொல்லுங்கள் என்று சாத்தானே சொல்வானா? என்றும் சிந்தித்துப் பாருங்கள்.

14)   ரசூலுல்லாஹ் தனிமனிதராக இருந்து பின்பு தனது கடைசி அரபா உரையினை லட்சக் கணக்கான மக்கள் கேட்கும் அளவிற்கு மார்க்க, அரசியல் தலைவராக இருந்தார் அராபிய துணைக் கண்டத்தில். அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் மக்கள் தன்னை வணங்குவதிற்கோ, காலில் விழுவத்திற்கோ, தான் வரும்போது எழுந்து நிற்பதிற்கோ, தன்னை யாரும் புகழ்வதிற்கோ, தான் இறந்த பின்பு தன்னை இறைவனுக்கு இணையாக ஆக்கிவிடக் கூடாது என்று கவனமாக இருந்த காரணத்தால் இன்று உலகில் அவருடைய சிறு கீரல் படம் கூட வெளிவந்தாலும் முஸ்லிம் மக்கள் வெகுண்டெழுகின்றனர். அவர்களுடைய மதினா அடக்கத் தலத்திற்கு செல்லும் முஸ்லிம்களை அங்கே இருக்கும் அதிகாரிகள் எங்கே கையேந்தி ரஸூலல்லாவினை இறைவனுக்கு இணையாக ஆக்கிவிடுவார்களோ என்று அடித்து விரட்டுகிறார்கள் என்றால் ரசூலுல்லாஹ் எவ்வளவு கவனமாக இருந்தார்கள் தான் வெறும் தூதர்தான் தான் மற்ற மதத்தலைவர்களை அவர்கள் மரித்த பின்பு அவர்களுக்கு  சிலைகள்  வைத்து வழிபடுவது போல தனக்கும் வைத்து விடுவார்கள் என்பதினுக்கு மிகவும் கவனமாக இருந்த மாமனிதர் ரசூலுல்லாஹ் ஆகும்.

ஆகவே அல் குரான் சைத்தானாலும் எழுதப் படவில்லை, அறிவு சால் அறிஞர்களாலும் எழுதப் படவில்லை, முகமது என்ற தனி நபராலும் எழுதப் படவில்லை, அது எல்லாம் வல்ல அல்லாஹ்வால் ரஸூலல்லாஹ்விற்கு அருளப் பட்ட ஒன்றே என்று பல மதத் தலைவர்கள், அறிஞர்கள் ஒப்புக் கொள்ளப் பட்ட ஒன்றாகும். ஆகவே அதில் தர்க்கம் செய்ய யாருக்கும் உரிமையில்லை. அதன் படி நடப்பதே நாம் ரஸூலல்லாஹ்விற்கும், வகியை இறக்கி அருளிய அல்லாஹ்விற்கும் செய்யும் நன்றிக் கடன் என்று மீலாது நபி நாளில் உறுதி கொள்ளலாமா?

Friday 12 November, 2021

அமைதியான நதியினிலே ஓடம்!

 

              

           (டாக்டர் ஏ.பீ. முகமதுஅலி,ஐ.பீ.எஸ்.(ஓ) 

வாழ்க்கை ஓர் ஓடமாகும். அந்த ஓடம் கடலோ அல்லது ஆரோ அமைதியான அலைகள் இருந்தால் தான் படகோட்டிகள் சீராக, சிறப்பாக தன்னுடைய இலக்கினை நோக்கி செலுத்தமுடியும். அதற்கு மாறாக கொந்தளித்தால் படகும் கவிழும், அவைகளை செலுத்துபவர்களுக்கும் ஆபத்தினை விளைவிக்கும். அந்த அமைதியினைத் தருவது தான் இஸ்லாமிய மார்க்கம். பலருக்கு பழமும், பாலும் இருக்கும், ஆனால் தூக்கம் வராது. சிலர் மாட மாளிகைகளில் வாசிப்பர் ஆனால் பல்வேறு பிரச்சனைகளால் தூக்கம் வராது. சிலர் ரயிலில் கூபே என்ற இரண்டு இருக்கை கொண்டதினை ரிசர்வ் செய்து பயணம் செய்வர், ஆனால் ரயில் பயணத்தில் வரும் கடக், கடக் என்ற சப்தம் அவர்களை தூங்க விடாது. சிலர் அமைதிக்காக கோடை வாசஸ்தலங்களுக்கு செல்வர். ஆனால் அங்கேயும் கவலை தூங்க விடாது. தமிழ்நாட்டின் பிரபல சினிமா தயாரிப்பாளர் தற்கொலை செய்ததது போல மன கொந்தளிப்பில் தவறானமுடிவினை எடுத்து விடுவர்... அப்படிப் பட்ட நிம்மதியற்ற, கரையான் அரிப்பு கவலைகளுக்கெல்லாம் தீர்வு காண்பது தான் இஸ்லாமிய மார்க்கம் என்றால் மிகையாகாது.

            சிலர் நிம்மதி தேடி தியானம் செய்வதிற்காக இமயமலை குகைகளை நோக்கி படையெடுப்பர். அங்கேயும் அவர்களால் நிம்மதியாக இருக்கமுடியாது. அந்த நிம்மதி பொருள் விரையும் செய்யாத வகையில் உங்கள் இருப்பிடத்திலேயே இருக்கின்றது. அது தான் தொழுகை. தொழுகை நேர்மறை கொள்கைகளையும், படைத்த இறைவனுக்கு நன்றி மறவாமல் இருப்பதினையும், இறக்க குணத்தினையும், தன்னம்பிக்கையும், சகோதர பாசத்தினையும், உள்-புற சுத்தத்தினையும் தருகின்றது. தொழுவது மூலம் உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கவும், வயது முதிர்ச்சியினால் ஏற்படும் ஞாபக சக்தியினையும் திரும்பப் பெற முடியும். சிறைகளில் கூட தொழுகை நடத்துவதினை நானும், நீங்களும், பார்த்திருக்கின்றோம். சிறைவாசிகளின் கரடு, முரடான முரட்டு வன்முறை குணங்கத்தினை தொழுகை குறைகின்றது. வேலை தளங்களில் தொழுகையில் ஈடுபடுவதினால் உற்பத்தி அதிகப் படுத்தமுடியும், கல்வி நிலையங்களில் தொழுகைக்கு வழிவகை செய்வதால் மாணவர்கள் கவனம் சிந்தாமல், சிதறாமல்  சிறந்த கல்வியிலும், மெச்சத்தக்க நன் நடத்தையினும் காண முடியும் என்று ஆய்வு குருப்புகள் கூறுகின்றன.

            அமெரிக்க ஹார்வோர்ட் பல்கலைகழக ‘நிரோசயின்ஸ்’ ஆய்வு குறிப்பில் மனிதன் தியானம் செய்வதால் மூளையின் இயக்கத்தினை ஓய்விலிருந்து தட்டி எழுப்பி நினைவாற்றலை அதிகரிக்கும் என்று கூறுகின்றது. அவ்வாறு செய்வதற்கு எட்டு வாரம் போதும் என்றும் கூறுகின்றது. ஆனால் ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு நாளைக்கு ஐவேளையும், நடு நிசியில் தொழும் தகஜத் அமைதியாக நின்று மனதினை அலை பாயவிடாது, படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் போது மூளை செயல்பாடு இன்னும் அதிகரிக்கின்றது.  யோகாவிற்கு தனி உடை, விரிப்பு, பயிற்சியாளர் தேடி அலைய வேண்டும். ஆனால் சுத்தமான இடம் எங்கே இருக்கின்றதோ அங்கே உடுத்திய துணியுடன் தொழும் பாக்கியம் முஸ்லிம்களுக்கு கிடைத்திருக்கின்றது. கண்காணாத இடங்களில் தன் குடும்பத்திற்குக் கூட தெரியாத  இடத்தில் தியானத்தில் ஈடுபடுவது போல தொழுகையில் இல்லை. குறிப்பிட்ட நேரத்தில் குடும்பப் பொறுப்பினையும் கவனித்துவிட்டு தொழும் நெகிழ்வுத்தன்மை வேறு எந்த வழிபாட்டிலும் இல்லை.

            யோகா, தியானம் ஆகியவைகளில் ஈடுபடுபவர்கள் ஒரு ஆடியோ கேஸட்டினை இயக்கிக் கொண்டு, கண்ணை மூடிக் கொண்டு செய்வதினை பார்த்திருப்பீர்கள். அவர்களிடம் விளக்கம் கேட்கும்போது இசை மூளையின் செயல் திறனை தட்டி எழுப்புகின்றது என்று கூறுகின்றனர். ஆனால் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் தொழும்போது கிபிலாவினை நோக்கி அல்லாஹ்விற்காக தொழுகின்றேன் என்று 'அல்லாஹு அக்பர்', இறைவன் பெரியவன் என்று சொல்லி இமாம்கள் குரான் ஆயத்துக்களை ஓதும் போது காது கொடுத்து கேட்டும், அடக்கம் ஒடுக்கத்துடன், அருகில் நிற்பவர் அந்தஸ்து பாராது, தன் பதவி பகட்டுகள் மறந்து ஓரிறைக் கொள்கையுடனும், மனதினை ஓர் நிலைப் படுத்தியும் தொழும்  போது மெய் சிலிர்ப்பு இயற்கையாகவே ஏற்படும்.

            சிலர் ரயிலிலோ, விமான பயணத்திலோ கையில் புத்தகங்களை வைத்துக் கொண்டு பயணம் முடியும் வரை படிப்பார்கள் என்பதினை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நோயாளிகளிடம், புத்தகங்களை கொடுத்து படிக்கச் சொல்லி ஆய்வுகள் நடத்தப் பட்டன. அவர்கள் தங்கள் கவலை, நோய்களை மறந்து படிப்பதினை கண்டார்களாம். பள்ளிவாசல்களில், குரான், ஹதீஸ் சம்பந்தமான புத்தகங்கள் அடுக்கி வைத்திருப்பதினை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் அதனை எடுத்து ஓதுவதோ, படித்து பயன் பெருவரோ ஒரு சிலர் தான். தொழுகைக்கு முன்பே பள்ளிகளுக்கு வருபவர் அருகில் இருப்பவரிடம் வெளி விவகாரங்களை நிசப்தத்தினை கெடுக்கும் விதமாக சப்தம் போட்டு பேசுவதினையும், சிலர் செல்போனில் பல விஷயங்களை தேடுவதிலும், அடுத்தவர் கவனத்தினை திருப்புவதிலும் ஈடுபடுவதினை பார்த்திருப்பீர்கள். அதற்கு பதிலாக பள்ளியில் வைத்திருக்கும் புத்தகங்களை எடுத்துப் படிக்கலாம், அதன் மூலம் இறை தொழுகைக்கு வந்திருக்கின்றோம் என்று உணர்ந்து செயலாற்றலாம். பஜர் தொழுகைக்குப் பின்பு இமாம் குரான் ஆயத்துகளை ஓதி அதற்கான விளக்கத்தினை சொல்வது 'கம்யூனிட்டி ரீடிங்' என்று கூறப்படுகின்றது. நீங்கள் கூட உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல புத்தகத்தினில் கண்டுள்ள விஷயங்களையோ அல்லது செய்தித் தாள்களில் வந்துள்ள செய்திகளையே சொல்லிக் காட்டுவது மூலம் தங்களது கவனங்கள் வேறு திசைகளில் செல்லாது பார்த்துக் கொள்வதுடன், மார்க்க மற்றும் பொது அறிவுவினை புகுத்த முடியும். இரண்டாம் நூற்றாண்டு கிரேக்க அறிஞர் டாக்டர் அண்ட்டிலஸ்(Antyllus) 'படிப்பது  உடலுக்கு உற்சாகம் தரும் டானிக்' என்று கூறியுள்ளார். நான் இளையாங்குடி பள்ளியில் பயின்றபோது பிரேயர் முடிந்து ஒரு அன்றைய செய்தி தாளில் வந்துள்ள தலைப்பு செய்திகளை படிக்க மற்ற மாணவர் கேட்கும் முறையினை மேற்கொண்டார்கள், அதன் மூலம் மாணவர்கள் நாட்டில் நடந்த செய்திகளை அறிந்து கொள்வதோடு பொது  அறிவினையும் அதிகப் படுத்தினர். 2007ல் லண்டனில் நடத்திய ஆய்வின்படி சமூக வாசிப்பின் மூலம் அதனில் ஈடுபாடு கொள்ளும் பேரியக்கமாக மாறும் என்று கூறுகின்றது. அதனையே உங்கள் வீடுகளிலும் செயல் படுத்தினால் சால சிறந்த செயலாகுமல்லவா?

                        இந்தியாவில் ஹிந்துக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது முகமன் கூறும் விதமாக 'நமஸ்தே' என்று சொல்வதினை பார்த்திருக்கின்றோம், தமிழர்கள் 'வணக்கம்' என்றும் கூறுகின்றோம். ஜப்பானியர் ஒருவருக்கொருவர் 'தலை குனிந்து' முகமன் கூறுவதினையும், மேலை நாட்டவர் கால பருவநிலைக்கு ஏற்ப 'good morning, afternoon, evening, night' கூறுவதனை பார்க்கின்றோம். அந்த முகமென் எல்லாம் ஒருவருக்கொருவருடைய எந்த நெருக்கத்தினையும் ஏற்படுத்தாது. ஆனால் முஸ்லிம்கள் மட்டும் 'மலகாத்' என்ற அரவணைப்பு ஆங்கிலத்தில் cuddling முறையில் ஈடுபடுவதினால் ஒருவருக்கொருவர் அன்பு, பாசம், பரிவு, நட்பு ஆகியவற்றினை பரிமாறிக்கொள்ள முடியும் என்று BBC நடத்திய Touch test ல் கூறுகின்றது. 12th Nov 2021 ல் Gloscow வில் நடந்த உலக தலைவர்கள் சுற்றுப் புற சூழல் சம்பந்தமான மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் கூட எப்போதும் இரு கை கூப்பி நமஸ்தே என்று சொல்பவர் இந்தத் தடவை தலைவர்களை கட்டி அணைப்பதினை காணொளியில் பார்த்திருப்பீர்கள்.

            கொரானா காலத்தில் தனிமைப் படுத்தப் பட்ட 112 நாடுகளைச் சார்ந்த 40,000 நோயாளிகளைக் கண்டு ஆய்வு நடத்தினார்களாம். தனிமைப் படுத்த காலத்தில் தங்களை உற்றார், உறவினர், உடன் பிறந்தோர் கூட வந்து பார்க்காதது மனதளவில் பாதிக்கப் பட்டார்களாம். பாஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர், மனோதத்துவ நிபுணர் James Cordova, 'We are born cuddlers' நாம் அனைவருமே ஒருவரோடு ஒருவர் ஓட்டிப் பிறந்தவர் தான் என்று கூறி அதற்கு உதாரணமாக தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தை எப்படி ஒட்டி இருக்கின்றது என்ற உதாரணத்தை கூறுகின்றார்.

            பல்காரியா நாட்டின் சோபியா பல்கலைக்கழகத்தின் immunologist நோய் எதிர்ப்பு சக்தி நிபுணர் Velikova , 'அரவணைப்பு மூலம் ஒருவருடைய ஹார்மோன் அதிகரித்து, Cortosol என்ற சுரப்பி ரத்த ஓட்டத்தினை சீராக்கி, நரம்பின் இயக்கத்தினை முடுக்கி விடுவதுடன், ஒருவரை சோகத்திலிருந்தும், நிம்மதியற்ற தூக்கத்திலீசுந்தும், படபடப்பிலிருந்தும் விடுபடச் செய்கிறது' என்று கூறுகிறார். அதனையேதான் 2018ல் நடத்தப்பட்ட 'Proceedings of National Academy of Science' ஆய்வில் அரவணைப்பு ஒருவரை அமைதிப் படுத்துவதுடன், வலிநிவாரணியாகவும், ஒருவருக்கு பாதுகாப்பு சூழலையும் ஏற்படுத்தும்' என்றும் கூறுகிறார். அதனையே நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள பெற்றோர், மனைவி, குழந்தைகள், உடன் பிறந்தோர், உற்றாரிடம் காட்டுங்கள் அவர்களிடம் பெரிய மாற்றத்தினை காண்பீர்கள் என்று பேராசிரியர் Velikova கூறுகிறார். சிலர் வளர்ப்புப் பிராணிகள் அமைதியின்றி குறைக்கும்போது அவைகளை தடவிக் கொடுத்தவுடன் அமைதியாகி விடுவதினை பார்த்திருப்பீர்கள்.

            ஆகவே அமைதியான தொழுகை, அறிவான புத்தகங்கள், திருக்குரான், அன்பான அரவணைப்பு மனிதனுக்கு ஆறுதல், அமைதி, பாசம், பரிவு, நோயிலிருந்து ஆறுதல் பெறுதல், சஞ்சலமான மனது ஆகியவற்றிலிருந்து போற்றத்தக்க மாற்றத்தினை பெற்று வாழ்க்கை ஓட்டத்தினை அமைதியாக கரடு, முரடு பயணத்திலிருந்து சீராக செலுத்தலாம் என்றால் சரிதானே!