Saturday 2 December, 2017

நானிலம் போற்றும் நன்னாளில் நற்செய்தி !

நானிலம் போற்றும் நன்னாளில் நற்செய்தி !
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ)
 பல நபி மார்களை உருவாக்கிய மக்கமா நகரில் கி.பி . 570ஆம் ஆண்டில் நானிலம் போற்றும், உண்மை, நம்பிக்கைக்கு பாத்திரமான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உதித்தார்கள். அவர்கள் பிறந்த நாளினை ஏன் கொண்டாட வேண்டும், ஏன் நினைத்துப் பார்க்க வேண்டும் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். உண்மை தான் பெருமானார் சில மதத்தின் தலைவர்கள் போல தன்னுடைய நிழலையே  அல்லது தனது அங்க அடையாளங்களையோ வைக்கக் கூடாது என்றும், தான் ஒரு கடவுள் இல்லை என்றும், தான் ஏக அல்லாஹ்வால் இறுதி நபியாக மட்டும் அடையாளம் காட்டப் பட்டு தனக்கு இறைவன் போதித்த வஹிக்களை மானிடர் பண் பட எடுத்துரைப்பவன் என்று எளிமையாக சொன்னார்கள் என்பதும் உண்மைதான். அவர்கள் அல்லாஹ்வின் பால் தஞ்சம் புகுந்து 1400 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் கூட அவர்களுடைய உருவ சிறு கோடு கூட வரைந்து வெளிவந்தால் அதனை எதிர்க்கும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் கொண்ட சமுதாயம் தான் இஸ்லாம் என்றும் மறுக்க முடியாது தான்.
ஆனால் அந்த ரசூலுல்லாஹ் இல்லையென்றால் இன்று புனிதக் குரானை  கண்டிருக்க முடியாது, மக்கள் மாக்களாகத்தான் இருந்திருப்பார்கள் என்றால் மறுக்கமுடியாது. உலகினை நல் வழிப் படுத்த வந்த 1,24,000 நபிமார்களில் இறுதி நபியாக வந்த ரசூலுல்லாஹ் உலகில் உதித்த நபி மார்களையும், அவர்களுக்கு அளிக்கப் பட்ட தவ்ராத், சபூர் , இன்ஜீல் வேதத்தினைப் பற்றியும், அவர்களின் அருமை பெருமையினை என்றாவது மறைத்து சொன்னதுண்டா பெருமானார், இல்லையென்றால் அவர்கள் சரிதம் அகிலத்திற்கு தெரிந்திருக்குமா? தன்னை என்றாவது முன்னிலை படுத்தியதுண்டா? அல்லாஹ்வால் இறக்கிய முதல்  வஹியினை ஜிப்ரயில் அலைவ ஸல்லம் அவர்கள் மூலம் பெற்று ஹிரா குகையிலிருந்து உடல் நடுங்கி வந்தபோது என்றும் உண்மை பேசும் நபி அவர்களின் சொல்லை முதன் முதலில் ஏற்ற பெருமை கதிஜா பிராட்டியாரைத் தகும். அன்று ஒரு விசுவாசியாக இருந்த இஸ்லாமிய மார்க்கம் இன்று அகிலத்தில் 150 கோடி மக்களைக் கொண்டிருக்கின்றது என்றால் அவர்கள் பிறந்த தினத்தினை நினைவு கூறாமலே இருக்க முடியுமா?
பெருமானாரின் இளம் வயது வாழ்வு, வளர்ச்சியினை பார்த்த்தோமென்றால், இளம் வயதில் பெற்றோரை இழந்து, உறவினர் அரவணைப்பில் வளர்ந்து, உண்மை, நம்பிக்கைக்கு பாத்திரம், ஒழுக்கம் தவறாமை, நாணயம் குறையாமை போன்ற நல்ல ஒழுக்கங்கள் தன்னகத்தே கொண்டிருந்தார்கள். மக்கமா நகரிலும், சுற்று வட்டாரத்திலும் நடக்கும் அனாச்சாரங்களை கண்டு மனம் வெதும்பி தனக்கு கொடுக்கப் பட்ட வஹிகளால் மக்களை நல்வழிப் படுத்த முயலும் போது விரட்டப் பட்டு, வந்தாரை வாழ வைக்கும் சங்கை மிகு மதினாவில் தஞ்சம் புகுந்து மக்கா நகருக்கு ஹஜ் செய்ய வரும்போது அரபாத் மலை உச்சியில் இருந்து கடைசி உரையாற்றும் போது மக்கள் வெள்ளம் ஒரு லட்சத்தினைத் தாண்டியது. இன்றைய நவீன ஒலி பெருக்கி சாதனமில்லாமல் சிங்கக் குரலில் தன் சங்கை மிக்க சொற்பொழிவினையாற்றினார்கள். இன்று அந்த உம்மத்தின் வானளாவிய வளர்ச்சி இனம், மொழி, எல்லை தாண்டி, உள் நாட்டு சண்டைகள், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, உடல், உடமை, செல்வம் இழந்து பசியும் பட்டினியிலும், கடுங்குளிர், கடுமையான வெயிலிலும் வாடினாலும் முஸ்லிம்கள் ஈமானை இழக்காமல், நம்பிக்கை மோசம் போகாமல், 150 கோடி மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் இருக்கின்றார்கள் உறுதியான ஆல மரம் போலவும், அகண்ட, ஆழமான கடல் போன்றும், வற்றாத ஜீவ நதி போலவும் வளர்ந்திருக்கின்றார்கள் என்றால் அதன் பெருமை  அதனை போதித்த எம்பெருமானின் புகழினையே சேரும்.
            இன்று பல மேலை நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் 2001 நியூ யார்க் இரட்டைக் கோபுர தகர்ப்பிற்கு பின்னர் முஸ்லிம் வழிபாட்டு தளங்களிலும், உடை, விசா, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் பல கட்டுப் பாடுகள் இருந்தாலும் 2050 ஆம் ஆண்டில் ஐரோப்பிய முஸ்லிம் மக்கள் தொகை மூன்று மடங்காக உயரும் என்று 30.11.2017 தேதியிட்ட 'பைனான்சியல் எக்ஸ்பிரஸ்' செய்தி கூறுகிறது. அதனையே நியூ யார்க்கில் உள்ள 'பியூ' என்ற ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் உறுதி சொல்கிறது. அதன் விவர அறிக்கையில் ஜெர்மனியில் முஸ்லிம் மக்கள் தொகை 6.1 சதவீதமாக இருப்பது 2050ஆம் ஆண்டில் 19.7 சதவீதமாகுமாம். இவ்வளவிற்கும் ஜெர்மனியில் வெள்ளை நிறவெறி அதிகமாவதுடன், முஸ்லிம்கள் அகதிகளுக்கு வாழ்வளிக்கும் கொள்கையினை ஜெர்மன் இரும்புப் பெண்மணி மார்க்கள் கையிலெடுத்தபோது அதனை அவருடன் கூட்டணி வைத்திருக்கும் காட்சிகளே எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஐரோப்பிய நாடுகள் முஸ்லிம் அகதிகளுக்கு தங்கள் எல்கைகளை மூடினாலும் முஸ்லிம் மக்கள் தொகை கூடுமாம். அதே போன்று தான் இங்கிலாந்தில் 2016 மக்கள் தொகை கணக்குப் படி 6.3 சதவீத முஸ்லிம் மக்கள் 2050ம் ஆண்டில் 16.7 சதவீதம் அதிகரிக்குமாம்.
            அதற்கான காரணத்தினை சொல்லும்போது முஸ்லிம் மக்களிடையே இளைஞர் பட்டாளம் அதிகமாம், அதனோடு முஸ்லிம் மக்கள் இனப் பெருக்கமும் அதிகமாகுமாம். 2050 ம் ஆண்டில் முஸ்லிம் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் எண்ணிக்கை 27 சதவீதம் அதிகமாகுமாம். அதே நேரத்தில் முஸ்லிம் அல்லாத சிறுவர் எண்ணிக்கை 15 சதவீதம் தான் இருக்குமாம். 2010ல் ஐரோப்பிய முஸ்லிம் மக்கள் தொகை ஒரு கோடியே 95 லட்சமாக இருந்தது 2016 ல் மக்கள் தொகை கனக்குப் படி ஐரோப்பாவின் 30 நாடுகளில் முஸ்லிம் மக்கள் தொகை 2 கோடியே 58 லட்சமாக உயர்ந்து விட்டதினை ஓர் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று தான் சமீப காலங்களில் முஸ்லிம்கள் இந்தியாவில் முன்னேற  பல்வேறு இடர்பாடுகள் இருந்தாலும் 2050ம் ஆண்டில் முஸ்லிம் மக்கள் தொகை 31 கோடியே 10லட்சத்தினை தாண்டும் என்று அதே 'பியூ' ஆராய்ச்சி அறிக்கை சொல்கிறது.
            மேற்கூறிய உதாரணங்களை உங்கள் கவனத்திற்கு ஏன் எடுத்துச் சொல்கிறேனென்றால் பெருமானார் எடுத்தியம்பியது உண்மையான, உறுதி கொண்ட, இயற்கை நல்வழி மார்க்கமாகும். அதில்  ஆடம்பர, அலங்காரங்களுக்கு இடமில்லை. உண்மைக்கு புறம்பான செய்திகளும் இல்லை. மக்கள் எளிதாக கடைப்பிடிக்கும் வழிமுறைகளைக் கொண்டதாக அமைந்திருப்பதே அதன் சிறப்பாகும். இஸ்லாத்தினை யாரும் வாள்  கொண்டோ, பொன்னையும் புகழையும் அள்ளி இறைத்தோ வளர்க்க வில்லை மாறாக மனித உள்ளத்தினை நல் வழிப் படுத்தியே வளர்ந்திருக்கின்றது என்ற செய்திக்கு ஒரு சமீப கால உதாரணம் மூலம் விளக்கலாம் என நினைக்கின்றேன்.
கேரளாவில் ஒரு முஸ்லிம் அல்லாத அகிலா என்ற பெண்மணி தன் கணவர் முஸ்லிம்  மதத்தில் சேர்ந்ததினை ஒரு 'லவ் ஜிகாத்' என்ற முத்திரை குத்தி அந்த வழக்கு உச்ச நீதி மன்றம் வரை சென்று, அந்த பெண் திருமணத்தினை செல்லாது என்று அறிவித்த கேரளா உயர் நீதி மன்ற தீர்ப்பினை தள்ளுபடி செய்து அந்த பெண்ணுக்கு வாழ்வளித்து  நீதியினை நிலை நிறுத்தியது என்றால் அது மத துவேஷ சமீப கால அரசின் நடவடிக்கையில் பரபரப்பாக பேசப் பட்டது. 1.12.2017ல் இந்தியாவிற்கு வருகை தந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா கூட பாரத பிரதமரை தனிப் பட்டமுறையில், 'இந்தியாவினை மதத்தின் பெயரால் துண்டாட வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டதாக  பேட்டி கொடுத்துள்ளார்.
அகிலா என்ற சேலம் ஹோமியோபதி கல்லூரி மாணவி தான் எப்படி இஸ்லாமிய மார்க்கத்தின் பால் ஈர்க்கப் பட்டேன் என்று கூறும்போது, 'தன்னுடன் விடுதியில் தங்கியிருக்கும் முஸ்லிம் மாணவிகள் ஜெஸிலா, பசினா ஆகியோர் நாள் தோறும் புனித குரானை படிப்பதினையும், ஐவேளை தொழுவதையும், மற்ற மாணவியர் போலல்லாமல் ஒழுக்க சீலர்களாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது. தான் முதல் செமஸ்டர் பரிச்சையில் தோல்வியடைந்து மனமுடைந்து தற்கொலை செய்யுமளவிற்கு வந்தபோது தனது அறை முஸ்லிம் ஜெஸிலா தான் தைரியம் கொடுத்து மறுபடியும் பரீட்சை எழுதி தேர்ச்சி பெறச் செய்தார். நானும் புனித குரானின் மலையாள  மொழிபெயர்ப்பினை வாங்கிப் படித்தும் இன்னும் இணைய தளங்கள் மூலம் இஸ்லாமிய மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு பதில்கள் சேகரிக்கும்  போது ஷாபின் என்ற முஸ்லிம் வாலிபர் சிறந்த விளக்கங்களை தந்ததால் அவருடன் இணைய தளம் மூலம் தெளிவு பெற்றேன். என்னுடைய முஸ்லிம் தோழியர் நோன்பு பிடிக்கும் போது நானும்  நோன்பும் கடைப் பிடித்தேன். அதனை அறிந்த தனது பெற்றோர் எனது படிப்பிற்கு முற்றுப் புள்ளி வைக்க நினைத்தனர். ஆனால் அதற்குள் எனக்குப் பிடித்த ஷாபினுடன் திருமணம் செய்து கொண்டேன். அதன் பின்பு தான் பட்ட கொடுமையையும், என் ஐ.ஏ. என்ற அமைப்பினர் விசாரணையும் என்னை கலங்க வைக்க வில்லை. எனக்கு உறுதுணையாக உச்ச நீதிமன்றமும் இருந்து எனது கல்லூரி படிப்பினையும் தொடர அனுமதித்தது' என்று கூறியிருக்கின்றார். அகிலா என்ற ஹதியாவின் இஸ்லாமிய பற்றும், குரானின் வரிகளும், பெருமானாரின் ஹதீஸுகளும் தான் அகிலாவினை இஸ்லாமிய மார்க்கத்திற்கு ஈர்த்ததே அல்லாமல் வாள் , வன்முறை அதிகாரமோ ஈர்க்க வில்லை.

இதனை பார்க்கும் போது எவ்வாறு பெருமானார் அவர்கள் கல்லடியும், சொல்லடியும், சொல்லவேன்னா துன்பமும் அடைந்தாலும் ஏக இறைவன் என்ற கொள்கையிலிருந்து பிறழாது இஸ்லாமிய மார்க்கத்தினை போதித்ததால்தான் இன்று ஹதியா போன்ற மாற்று மதத்தினர் இஸ்லாத்தினை பின்பற்றி வருகின்றனர். அதனையே தான் 'பியூ' ஆராய்ச்சி கட்டுரையும் சொல்கிறது. ஆகவே தான் பெருமானாரின் புகழினை எடுத்துச் சொல்வது தவறில்லை என்று கூறுவதில் தவறில்லை என்று  நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள் என நினைக்கின்றேன். அதே நேரத்தில் ஷிர்க்கான காரியங்களை விட்டு மீலாது நபி விழா என்று ஆடம்பரமாக கொண்டாட இஸ்லாமிய மார்க்கத்தில் இடமில்லைதானே !

Saturday 11 November, 2017

தேசிய கல்வி தினமும்-மௌலானா ஆஜாதும்!


(டாக்டர் .பீ.முகமது அலி, .பீ.எஸ்.()

சுதந்திர இந்திய வானில் கல்வி மேன்பட வால் நட்சத்திரமாக திகழ்ந்த மௌலானா அபுல் கலாம் ஆஜாத்தின் 11.11.1888 ம் ஆண்டின் பிறந்த தினத்தினை தேசிய கல்வி தினமாக இன்று கொண்டாடுகிறோம். ஆஜாத் அவர்கள் பத்திரிக்கையாளராகி, எழுத்தாளராக, மார்க்க அறிஞராக, சுதந்திர போராட்ட வீரராக, தேச பக்தராக, புரட்சியாளராக பண் முகம் கொண்ட அறிஞராக திகழ்ந்தார் என்பது உங்களுக்குத் தெரியும்.

பிரிடிஷ் சாம்ராஜ்யத்தின் வைசிராய் லார்ட் கர்ஷன் முதன் முதலில் முஸ்லிம்களையும், இந்துக்களையும் பிரித்தாளும் கொள்கையின் மூலம் வங்கத்தினை பிரிக்க முடிவு செய்தார். அதனை எதிர்த்த புரட்சியாளர்கள்  சுந்தர் சக்கரவர்த்தி, அரபின்டோ ஆகியோர்களை சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்று அவர்களுடன் தானும் ஒரு புரட்சியாளர் ஆனார். தன்னுடைய கருத்துக்களை மக்களிடையே, குறிப்பாக முஸ்லிகளிடையே கொண்டு செல்ல, 'அல் ஹிலால்' என்ற உருது பத்திரிக்கையினை 1912ல் கல்கட்டாவில் ஆரம்பித்தார். என்னே ஆச்சரியம் அந்தப் பத்திரிக்கை ஒரு வாரத்தில் 20,000 பிரதிகளை விற்று வரலாறு படைத்தது.அதனைக் கண்டு பயந்த பிரிட்டிஷ் அரசு அவரது பத்திரிக்கையினை முடக்கியதோடு மட்டுமல்லாது, அவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் கைது செய்து 1919 வரை ஜெயிலில் வைத்து 1920ல் விடுதலை செய்தது.
சி.ஆர்.தாஸ் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது அவருடன் இணைந்து பணியாற்றினார். இருவரும் சேர்ந்து பிரிட்டிஷ் அரசு கூட்டிய முதலாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள மகாத்மா காந்தி அவர்களை  சம்மதிக்க வைத்தனர். காங்கிரசுக்குள் உட்பூசல்   இன்றைய தமிழக காங்கிரசில் இருப்பதுபோல இருந்ததால் சி.ஆர்.தாஸ், மோதிலால் நேரு, ஹக்கீம் அஜ்மல் கான் போன்றோர் பிரிந்து, 'சுவராஜ் பார்ட்டி' என்று தனிக் கட்சியினை  ஆரம்பித்தனர்.
பிரிவை தடுக்க அனைவரும் ஒத்துக்கொண்ட மௌலானா அபுல் கலாம் ஆஜாத்தினை 35 வயதில்ராஜ்கார்கில்’ நடந்த காங்கிரஸ் மஹாசபைக்கு தலைமை ஏற்று நடத்தச் சொன்னார்கள். இரு பிரிவினையும் ஒன்று சேர்த்த பெருமை ஆஜாத்தினை சாரும் .

பிரிட்டிஷ் அரசு மாநில சுயாட்சி கொடுக்கும் திட்டத்தினை  1935 சட்டம் மூலம் அறிவித்தது. அந்த சட்டம் ஆளுநர்களுக்கு அதிகாரம் கொடுத்துவிடும் என்று காந்தி உள்பட தேர்தலில் பங்கு பெற மறுத்தனர். ஆனால் ஆஜாத்து, 'தேர்தலில் பங்கு பெறுவதில் ஒரு பலன் உள்ளது, அது என்னவெனில் மக்களிடம் தங்களுடைய பிரச்சாரம் மூலம் காங்கிரசின் கொள்கையினை எடுத்துச் சொல்லலாமே' என்று எடுத்துச் சொல்லி அவர்களை தேர்தலில் பங்கு பெற வைத்தார்.

3.9.1939 ல் காந்தி கேட்டுக் கொண்டதிற்கிணங்க காங்கிரசின் தலைவரானார். ஆனாலும் பல்வேறு கொள்கை முடிவுகளில் காந்தியுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார். சுதந்திரத்திற்கு முன்பு காங்கிரசின் தலைவராக 1946 வரை நீண்ட காலம் பணியாற்றியது ஆஜாத் ஒருவரே. சுபாஷ் சந்திரா போஸ் கூட காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு வருடத்திற்குள் ராஜினாமா செய்தது இங்கு குறிப்பிடவேண்டும்.

               
சுதந்திரம் அடைந்த பின்பு 1947ல் முதலாவது கல்வி அமைச்சர் ஆனார். 1947 ல் நாடு இரண்டாக பிரிந்த போது, இந்து முஸ்லிம் கலவரம் ஏற்பட்ட பின்பும் ஒரு முஸ்லிமுக்கு கல்வி அமைச்சர் கிடைக்கப் பெற்று இருக்கின்றது என்றால் அவர் எவ்வாறு திறமை வாய்ந்தவர், அப்பழுக்கற்றவர், அனைவரும் ஒப்புக் கொண்டவர் என்று ஆச்சரியமாக இல்லையா உங்களுக்கு. அதுவும் 1958 ல் தன் கடைசி மூச்சு வரையும் கல்வி அமைச்சராக இருந்தது எல்லோருக்கும் பெருமைதானே!

அவருடைய பிறந்த நாளை ஏன் தேசிய கல்வி நாளாக அறிவித்திருக்கின்றார்கள் என்று சிறிது பார்க்கலாம்:
1) இந்திய மாணவர் ஒவ்வொருவருக்கும் தரமான கல்வியும், கற்ற கல்வி வேலை வாய்ப்பினை பெற்றுத் தருவதாகவும், நன்னடத்தினை போதிப்பதாகவும், இருக்கவேண்டுமென்று பல்வேறு சீர் திருத்தங்களைக்  கொண்டு வந்தார்..
2) கல்வி போதிக்கும் ஆசிரியர்களும் தங்களை நவீன கல்வி போதிக்கும் திறமையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என நினைத்தார்.
3) எல்லா சிறார்களுக்கும் இலவச கல்வி கிடைக்க வேண்டும், பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், தொழில் கவிக்கு முன்னுரிமை அவசியம் என்று நினைத்தார்.
4) நவீன விஞ்ஞான கல்விக்கு முன்னோடியானார்.
5) ..டி யினை, டெல்லியில் கட்டிடக் கலை கல்லூரியினை நிறுவினார்.
6) உயர் கல்வி நிறுவனங்களை கண்காணிக்கும் யு.ஜி.சி என்ற நிறுவனத்தினை அமைத்தார்.
7) படிப்பு மட்டுமல்லாமல் இந்திய கலாச்சாரமும் மங்கி விடக்கூடாது என்று சங்கீத நாடக அகாடமி, லலித் கலா அகாடமி, இலக்கிய சாகித்திய அகாடமி ஆகியவற்றினை நிறுவினார்.
அவர் தேசிய கல்விக்கு அரும்பாடு பட்டார் என்பதற்காக அஜாதிற்கு 1992ம் ஆண்டு இந்திய தேசத்தின் உயர்ந்த விருதான, 'பாரத் ரத்னா' 1992ம் ஆண்டு வழங்கப் பட்டது. ஆகவே தான் ஆஜாத் அவர்களை  கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு நவம்பர் மாதமும் 11ந் தேதி, 'தேசிய கல்வி தினமாக' கடைப் பிடிக்கப் படுகிறது.


ஆனால் ஏன் இன்னும் முஸ்லிம்கள் கல்வி,கேள்வியில், வேலைவாய்ப்பில் பின்தங்கி இருக்கின்றார்கள் என்று உங்களுக்குத் தோன வில்லையா? சமுதாய தலைவர்கள் அரசியலில் முன்னிலை நிறுத்தும் அளவிற்கு, சமுதாய கல்வி,கேள்வி, வேலை வாய்ப்பில் முன்னேற வழிவகை செய்யவில்லை என்று தானே உங்களுக்குத் தோன்றும். ஆகவே சமுதாய மக்கள் அடுத்தவர் ஆட்சியினை பிடிக்க ஏணியாக இல்லாமல், தனது சமுதாய முன்னேற்றத்திற்கு ஏணிப் படியாக இருக்கவேண்டும் என்று கூறுவது சரியா!

Thursday 2 November, 2017

மரண வாயிலிருந்து தப்பித்த வங்க சிங்கமும்-முஸ்லிம்கள் துணையும்!


(டாக்டர் .பீ.முகமது அலி,.பீ.எஸ்.()

ஒரிசா மாநிலத்தில் கட்டாக்கில் 23.1.1897ல் பிறந்த சுபாஷ் சந்திர போஸ் கல்லூரி படிப்பிற்காக வங்கத்தில் குடியேறினார். அந்தக் காலத்தில் ஒவ்வொரு பட்டதாரிக்கும் ஆங்கிலேய கலெக்டர் போல .சி.எஸ்.பரீட்சை எழுத வேண்டும் என்ற ஆசை போஸுக்கும் இருந்தது. அந்த ஆசையில் .சி.எஸ். பரிட்சையில் பொது பிரிவில் 6வது இடத்தைப் பிடித்து வெற்றியும் பெற்றார். அவ்வாறு வெற்றிபெற்று தன் திறமையைக் காட்டினாலும் பிரிட்டிஷ் அரசிலா பணியாற்றுவது என்று ஒரு கணம் சிந்தித்து பதவியினை 1921ல் ராஜினாமா செய்தார். பிரிட்டிஷ் அரசினை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற எண்ணம் கொழுந்து விட்டு எரிந்ததால் விடுதலை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அன்றைய இயக்கத்தில் இரண்டு பிரிவினர் இருந்தனர். மிதவாத பிரிவுக்கு காந்தியும், தீவிர வாத பிரிவிற்கு போஸும் தலைமை தாங்கினர்.

சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பணியாற்றியதால் 1924ல் கைது செய்யப் பட்டு பர்மா மாந்தலை ஜெயிலில் அடைக்கப் பட்டார். உங்களுக்கு எல்லாம் தெரியும் மாந்தலையில் தமிழர் அதிகம் வாழ்ந்தது. அவர்களுடன் அன்று ஏற்படுத்திய தொடர்பு பிற்காலத்தில் அவருடன் சேர்ந்து போரிட படை வீரர்களும், ஆயுதம் வாங்க தேவையான பொருளுதவியும் தேடித்தந்தது என்பதும் வரலாறு. நேத்தாஜி அவர்கள் அந்நிய நாட்டின் உதவியில்லாமல் இந்தியா சுதந்திரம் அடைய முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்.  1933ன் அவருடைய வியன்னா பயணம் மேலை நாடுகளின் தொடர்பினை பெற்றுத் தந்தது. அவருடைய தீவிரவாத கொள்கை பிடிப்பால் இளம் காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் ஆதரவு பெருகியது. அது எந்தளவிற்கு என்றால் 1938ல் போஸ் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டபோது அவரை எதிர்த்து போட்டியிட காந்தியுடன் ஆதரவு வேட்பாளராக பட்டாபி சீத்தராமையா நிறுத்தப் பட்டு படுதோல்வி அடைந்தார். அந்தத் தோல்வி தன்னுடைய தோல்வியாக காந்தி எடுத்துக் கொண்டு போஸ் செயல் படமுடியாத அளவிற்கு தடைகள் ஏற்படுத்தினார். இருந்தாலும் 1939ல் நடந்த தேர்தலிலும் போஸ் வெற்றி பெற்றார். ஆனால் காந்தி கொடுத்த நெருக்கடியால் போஸ் தன் தலைவர் பதவியினை உதறித்தள்ளி, 'பார்வட் பிளாக்' என்ற தனிக் கட்சி துவங்கினார். 1940 ம் ஆண்டு இந்திய சுதந்திரம் வேண்டும்  என்று சாகும் வரை உண்ணா நோன்பு இருந்தார். பிரிட்டிஷ் அரசுக்கு  தன் சாகும் வரை உண்ணா நேன்பு மூலம்  மக்கள் புரட்சிக்கு விதை விதித்து விட்டார் என்று எண்ணி அவரை வீட்டுக் காவலில் வைத்தது பிரிட்டிஷ் அரசு.
lபிரிட்டிஷ் காவலாளிகள் கண்ணில் மண்ணைத் தூவி முஸ்லிம் மிராசுதார் வேடத்தில் முஸ்லிம் பிரமுகர் ரஹ்மான் துணையுடன் 26.1.1941ல் அவருடன் தப்பித்து 29.1.2041ல் காபூலை சென்றடைந்தார். பிரிட்டிஷ் அரசாங்கமோ அவரை இந்தியா முழுவதும் வலை போட்டுத் தேடியது. காபூல் சென்றடைந்த போஸ் அங்குள்ள முஸ்லிம்களின் துணையுடன் ஜெர்மன், இத்தாலி தூதரக அதிகாரிகளின் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். அதன் பின்பு இத்தாலி வெளியுறவு அதிகாரி ஆர்லாண்டோவின் புகைப் படத்தோடு கூடிய பாஸ்போர்ட்டுடன் பல்வேறு வாகனங்கள் மூலம் மாஸ்கோ வழியாக 18.3.1941ல் பெர்லின் நகர் சென்றடைந்தார். அங்கிருந்து அவரால் நிறுவப்பட்ட 'ஆஜாத் ஹிந்து ரேடியோ' மூலம் இந்திய மக்களுக்கு அழைப்பு விடுத்த பிறகு தான் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கே போஸ் ஒரு முஸ்லிம் துணையுடன் வெளியேறியது தெரியுமாம்.
                போஸுக்கு ஜெர்மானிய நாசிச மற்றும் பாசிச கொள்கை பிடிக்காமல் பெர்லினிலிருந்து ஜப்பான் சென்று அங்கு பிரதமர் டாஸோவை சந்தித்து ஆசாத் இந்தியாவிற்கு ஆதரவு கேட்டார். அவர் உதவியுடன் சிங்கப்பூருக்கு 2.7.1943ல் வந்தடைந்தார். அன்றய காலக்கட்டத்தில் நமது மக்கள் மலேசியா, சிங்கப்பூருக்கு பாஸ்போர்ட் இல்லாமல் ரயிலில் டிக்கெட் எடுப்பது போல எடுத்து ஏராளமாக கப்பலில் சென்று அந்த நாடுகளின் செழிப்பினை ஏற்படுத்தியது உங்களுக்கெல்லாம் தெரியும். அப்படி குடியேறிய மக்களிடேயும், இந்தியாவில் சிறைப்பிடிக்கப் பட்டு நாடு கடத்தப் பட்ட கைதிகளின் ஏகோபத்திய  ஆதரவுடன் 'இந்திய நேசனல் ஆர்மி' என்ற சுதந்திர படையினை ஏற்படுத்தினார். அந்தப் படையில் ஏராள முஸ்லிம்கள் சேர்ந்ததோடு, பொன்னையும் பொருளையும் அள்ளி வழங்கினர். அந்தப் படை 13,000 வீரர்களைக் கொண்டதாக ஆனது. சிங்கப்பூரில் 21.10.1943 அன்று, 'ஆஜாத் ஹிந்த் பைஜ்' என்ற தேசிய அரசாங்கத்தினை அமைத்தார். இந்திய தேசியப் படையின் முக்கிய தளபதிகளாக இருந்தவர்கள் யார் தெரியுமா? அவர்கள் ஷாநவாஸ் கான், ஹபீப் ரஹ்மான் போன்றவர்கள் தான்.
                அந்த வீரமிக்க தளபதிகளுடன் தனது தலைமையகத்தினை ஜனவரி, 1944ல் ரங்கோனுக்கு மாற்றினார். மார்ச் மாதம் தனது படைவீரர்களுடன் பர்மா எல்லையினைத் தாண்டி இந்திய எல்லைக்குள் புகுந்து இன்றைய நாகாலாந்து தலைநகர் கோஹிமாவினை 6.4.1944ல் கைப்பற்றினார். ஆனால் மழைக்காலம் ஆரம்பமானதால் மேற்கொண்டு போஸ் படையினால் முன்னேற முடியவில்லை. அதனை பிரிட்டிஷ் அரசு சாதகமாக எடுத்துக் கொண்டு விமானப் படைமூலம் குண்டு மழைப் பொழிந்தது. அதில் பல வீரர்கள் பலியானார்கள். தளபதிகள் ஷாநவாஸ் கான், ஹபீப் ரஹ்மான் போன்றோர் சிறைப்பிடிக்கப் பட்டனர். ஆனால் அதற்கு முன்பே போஸ் அவர்களை தப்பிக்க வைத்து அவர் வியட்நாம் தலைநகர் சைகோன் செல்ல உதவினர். உங்களுக்கெல்லாம் தெரியும் முஸ்லிம் வியாபார பெருமக்கள் சைகோனிலும் செல்வாக்குடன் இருந்தார்கள் என்று. அவர்கள் துணையுடன் போஸ் ஜப்பான் செல்வத்திற்காக விமானப் பயணம் மேற்கொண்டபோது 13.8.1945 அன்று அர்ஜென்டின்னா நாட்டின் பார்மோசா தீவில் விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. கைது செய்யப் பட்ட தளபதிகள் ஷாநவாஸ் கான், ஹபீப் ரஹ்மான் போன்றோர் செங்கோட்டையில் விசாரிக்கப் பட்டனர் என்றதும் வரலாற்று செய்தி .
ஆகவே இந்தியா ஹிந்துஸ்தான் என்ற ஹிந்துக்கள் நாடு, ஹிந்து கலாட்சாரத்தினை கடைப்பிடிக்காதவர் இந்திய மண்ணை விட்டு வெளியேறுங்கள் என்று இன்று கூறும் வெறியர்கள் இந்த இந்திய மண் சுதந்திரம் பெற இன்னுயிர் விட்ட முஸ்லிம்களின் தியாகங்கள், பொருள் அள்ளித்தந்த தியாக வரலாறு எங்கே தெரியப் போகிறதுஏனென்றால் சுதந்திர போராட்ட மிதவாதத்தால் பயனடைந்தவர்கள் டாடா,பிர்லா, பஜாஜ் போன்ற பண முதலைகள் மற்றும் மத தீவிர வாதிகள் தான் என்றால் மிகையாகாது. நவீன ஆயுதங்கள் மூலம் தான் பிரிட்டிஷ் அரசு சுதந்திரப் போரை ஒடுக்க நினைக்கின்றது என்று எண்ணி அவர்களுக்கு இணையாக முதன் முதலில் ராக்கெட்டினை தயாரித்து பிரிட்ஸ் படையினை எதிர்கொண்ட மாவீரன் திப்பு சுல்த்தானுக்கு ஒரு விழா எடுக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வெறியுணர்வு கொண்டவர்கள் முஸ்லிம்கள் இந்த நாட்டின் விடுதலைக்கு செய்த தியாக வரலாறுகளை படித்து தங்கள் வெறுப்புணர்வை மாற்றிக் கொண்டு எல்லோரும் இந்த நாட்டு குடி மக்களே என்ற பரந்த மனப் பான்மை கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை விடுகின்றேன்!