Saturday 31 October, 2015

இறை இல்ல தேர்தலும், பொது நிர்வாக தேர்தலும்:



பொது நிர்வாக தேர்தல்கள் அதன் சட்ட, திட்டங்களுக்குள் அடங்கும். அதன் நிர்வாக அமைப்புகள் தமிழக பதிவுத்துறை சட்டம், 1975க்குள் உட்பட்டது. சில நிர்வாகம் கம்பனி சட்டத்திற்குட்பட்டு செயல் படும். அதன் சட்டத்தினை மீறும் செயலுக்கு சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுக்க வழி வகுக்கும். அதில் உறுப்பினர் யார், யார் என்பது அந்த பொது நிர்வாகத்தில் தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்கும்.
பள்ளி வாசல்களை வக்ப்த் சட்டம் மற்றும் ஸ்கீம் வழிமுறைகள் படி நிர்வாகித்து வருகின்றனர். சில இடங்களில் தனிப் பட்டவர் களே பள்ளி வாசல்களை நிர்வாகித்து வருகின்றனர். சில இடங்களில் தனிப் பட்டவர் களே பள்ளி வாசல்களை நிர்வாகித்து வருகின்றனர்.
ஆனால் இறைவனின் இறை இல்லங்களில் நிர்வகிப்பது சம்பந்தமாக அல் குர்ஆனில்  அத்தியாயம் 9 அத் தவா வில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
9:17 இறை நிராகரிப்போருக்கு பள்ளி நிர்வாக நிர்ணயம் செய்யும் உரிமையில்லை .
9: 18 அல்லாஹ்வின் பள்ளியினை பரிபாலனம் செய்கின்றவரேல்லாம் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசித்து தொழுகையும் நிறைவேற்றி, சக்காத்துக் கொடுத்தும், அல்லாஹ்வையன்றி மற்றவருக்குப் பயப்படாதவராகவும் இருக்க வேண்டும்.
9: 19 விசுவாசம் கொள்ளாமல் இருந்து கொண்டு, ஹாஜிகளுக்குத் தண்ணீர் ஊற்றுகிறோம் என்று கூறிக் கொள்கின்றவர்களும், இறை இல்லத்தினை சிறப்புற பராமரிப்போர்களும், இறை இணை வைக்காதவர்களும் ஒன்றாக மாட்டார்கள்.
மேற்குறிப்பிட்ட சரத்துக்கள் படி பள்ளி நிர்வாகிகள் தொழுகையினை நிறைவேற்ற வேண்டும், சக்காத்துக் கொடுக்க பொருளீட்ட வேண்டும். ஏனென்றால் பொருளீட்டினால் தான் அல்லாஹ் சொன்ன சக்காத்தினைக் கொடுக்க முடியும். பள்ளியினை நிர்வகிக்கின்றேன், ஓடாய் தேய்கின்றேன் என்பதும் , ஹாஜிகளுக்கு தண்ணீர் கொடுக்கேன்றேன் என்பதும் இறைவன் கூறிய கருத்திற்கு மாறு பட்டது.

அத்துடன் இறைவன் கருத்துக்கு மாறான கருத்தாக;
1) பாரம்பரிய, பரம்பரை என்று நிர்வாகத்திற்கு வருகின்றனர்.
2) பிறரின் மதிப்பினைப் பெற வேண்டும் என்று வருகின்றனர்.
3) தனது பிரபலத்தினைக் காட்டுவதிற்காக சிலர் நிர்வாகத்திற்கு வருகின்றனர்.
4) முகஸ்துதிக்கும், பொருளாதார தகுதிகளுக்காகவும் நிர்வாகத்திற்கு வருகின்றனர்.

தேர்தல் நடக்கும், பல வாக்குறிதிகள் பறக்கும். பொதுத் தேர்தல் போன்று வீடுகள், வீதிகள் தோறும் ஆள் சேர்ப்பதும், பிட் நோட்டீஸ் அடிப்பதும், ஒருவர் பற்றி ஒருவர் வசை படுவதும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானதல்லவா? வெற்றி பெற்ற . நிர்வாகத்தினர் தரையில் கால் படாதவாறு நடக்காமல், மக்கள் பார்வையில் வெற்றி மதிப்பிற்குரியதாகத் தெரியலாம், ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் ஈமானுக்கும், நல்ல பண்புகளுக்குமே மதிப்பளிப்பான். குடும்ப, குலப் பெருமைக்கோ இறைவன் ஒருகாலமும் மதிப்பு அளிக்க மாட்டான்.
 அல் பகறா 2:247 இல் நபி மூஸா அலைஹி வஸலாம் அவர்கள் தனக்குப் பிறகு அரசராக 'தாலூத்' அனுப்பியுள்ளான் என்று இஸ்ரவேலர்களிடம் எதிர்ப்பிற்கு நேர்மாறாக கூறும்பொழுது, 'தாலூத் கல்வியிலும், தேகத்திலும் உங்களைவிட சிறந்தவர் என்று கூறினார்கள்.
இந்த ஆயத்து கூறும் கருத்து  என்னவென்றால், ஒருவர் பொருளாதார வசதியில் மிக்கவர், பரம்பரை செல்வந்தர், உடல் அல்லது ஆள் பலம் என்பதிற்காக எந்த பதவியும் வழங்கக் கூடாது. அதே சமயம் ஒருவர் செல்வந்தர் இல்லை என்பதிற்காக பதவியினை மறுக்கக் கூடாது.
புனிதமான இறை பள்ளிக்கு பொறுப்பு வகிக்கும் ஒருவர் திருக் குரானை கொஞ்சமாவது ஓதி கற்று இருக்க வேண்டும்.
நபி வழியை, ஷரீயத்தினை  பூரணமாக உணந்தவர்கள், இஸ்லாத்தை, இஸ்லாமிய வரலாற்றை அறிந்தவர்களே பொருத்தமானவர்கள். குர்ஆனில் உள்ளவை பற்றி சில கேள்விகள் பாடமாக கேட்டாலும் கூறத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். தொழுகையினைப் பேனுவராகவும், தன் குடும்பத்தினை தான் ஏற்றிருக்கும் பொறுப்பிற் கேற்ப நெறிப் படுத்திச் செல்வோராக இருப்போர் மட்டுமே தகுதியானவர்.
பள்ளி நிர்வாகிகள் 'பைத்துல் மால்' பொருளை இறை நேசமுள்ள பயனுள்ள வழியில் செலவு செய்யத் தெரிந்தவராக இருக்க வேண்டும். மாறாக பொருளை சுரண்டு வராகவோ, ஆடம்பர வழியில் செலவு செய்வராகவோ இருக்கக் கூடாது.
ஒரு முறை உமர்(ரழி) அவர்கள் வீதி வழி செல்லும் போது பொது நிலம் ஒன்றில் ஒரு மாடு மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டு, அருகிலிருந்தோரிடம் இந்த மாடு எவருடையது என்றார்கள். அங்கே இருந்தவர்கள், 'இந்த மாடு உங்கள் மகன் அப்துல்லாவிற்கு சொந்தமானது' என்றார்களாம். உடனே அந்த இடத்திலேயே மகனை அழைத்து வரச் செய்து, பைத்துல்மால் சொத்தில் மேய்ந்த இந்த மாட்டை சந்தைக்குக் கொண்டு சென்று விற்று விடு. அப்பணம் முழுவதையும் பைத்துல்மால் மக்களுக்கான பொது நிதியகத்தில் சேர்த்து விடு' என்று உத்தரவிட்டார்கள் என்பது வரலாறு.ஆகவே பைத்துல் மால் சொத்தை தான் சொத்தாக பாவிக்காது, அதனை நெருப்பாக பாவிக்க வேண்டும்.
சென்னையில் உள்ள ஒரு பள்ளிவாசலில் பள்ளியின் தலைவர் நீண்ட நாள் நோயில் இருந்து கொண்டு, ஜும்மா தொழுகைக்குக் கூட வரமுடியாத நிலை இருந்தும் நீடித்துக் கொண்டு இருந்தார். அதற்கான காரணத்தினைக் கேட்டபோது, 'அவர் தான் மரித்ததும், தன் ஜனாஸா தெருவில் போகும்போது 'யார் ஜனாசா என்று பிறர் கேட்டால், ஊர் ஜமாத்துத் தலைவர் ஜனாஸா' என்று சொல்ல ஆசைப் பட்டாராம்.
இன்னும் சிலர் பள்ளிவாசல் குடியிருக்கும் பகுதியிலிருந்து வெகு தொலைவில் குடியிருந்தாலும், தான் செய்த தொண்டிற்காக பள்ளியின் நிர்வாகக் குழுவில் இடம் வேண்டும் கேட்பதிணை பார்த்திருக்கின்றேன்.
 பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு வருவதிற்கு முன்பு ஒரு தடவைக்கு இரு தடவை சிந்தித்து நாம் இஸ்லாமிய வரலாறு சொன்ன நிர்வாகப் பொறுப்பிற்கு தகுதியானவரா என்று சுய சிந்தனையில் ஈடுபட வேண்டும் என்று சொன்னால்  சரியா



Wednesday 14 October, 2015

என்னோடக் கதையைக் கேளுங்கள் என் சொந்தங்களே!


(டாக்டர் ஏ பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் 11.9.2001 அன்று தாக்கப் பட்டதிற்கு பின்பு ஆஸ்திரேலியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான எதிர்ப்புக் குரல் எழுப்பப் பட்டு அமெரிக்கக் கூட்டுப் படை ஆப்கானிஸ்தான் 2001 ஆண்டு   படையெடுப்பின் போதும், இராக் 2003 ஆண்டு படையெடுப்பின் போதும் தனது நாட்டுப் படைகளை ஆஸ்திரேலியாவும்  அனுப்பியது அனைவரும் அறிவர்.  அதன் எதிரொலியாக முஸ்லிம்களை கறுப்புக் கண்ணாடியோடு பார்க்க ஆரம்பித்தனர் ஆஸ்திரேலிய மக்கள். அப்படிப் பட்ட நாட்டில் 'கிப்ஸ் லாண்ட்' என்ற சிறு நகரத்தில் வாழும் சாரா ப்ரைஸ் என்ற கிறுத்துவ மதப் பெண்மணி பிற்காலத்தில் ஏன் முஸ்லிமாக மாறினேன் என்ற கதையினைச் சொல்ல, அதனை  உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகின்றேன்!

மரியா பிரைஸ் ஆஸ்திரேலியா நாட்டில் மனாஸ் பல்கலைக் கழகத்தில் பத்திரிக்கைப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்று பத்திரிக்கையாளராக உலகில் பல நாடுகளுக்குச் சென்று செய்திகள் தயாரிப்பவர் ஆவார். அவர் கிருத்துவ மதத்தில் மிகுந்த நம்பிக்கையும், இயேசு பெருமான் மீது அளவற்ற பாசத்தினையும் கொண்டவராவார். ஏனெறால் மனித இனத்திற்குத் தேவையான -பரிவு, இறக்கக் குணம், அன்பு, பாசம் ஆகியவை கிருத்துவ மதத்தில் போதிப்பதாலும், சமூக சேவையில் அதனைக் காட்டுவதாலும் அதன் மீது பிடிப்புடன் இருந்தார். கிருத்துவ மதத்தின் மீது இருந்த அசைக்க முடியா நம்பிக்கை அவர் ஒரு முறை மலேசியா சென்றது வரை இருந்தது.
மலேசியாவிற்கு மாணவர் பண்பாடு பரிமாற்றத்தின் அடிப்படையில் ஒரு முறை சென்றார். அந்த நாட்டிற்கு செல்வதிற்கு முன்பு அவருக்கு முஸ்லிம்கள் பழக்க வழக்கங்கள், பண்பாடு ஆகியவை தெரியாது. அதுவும் முஸ்லிம் பெண்கள் என்றால் கருப்பு ஆடை தலை முதல் கால் வரை அணிபவர்கள், மேற்காசியா நாட்டினைச் சார்ந்தவர்கள், நாகரீகத்திற்கும் அவர்களுக்கும் ஒரு காத தூரம், ஆண்களால் நசுக்கப் படுபவர்கள், கணவர் இல்லாமல் வெளியில் செல்ல மாட்டார்கள், கல்வி அறிவு இல்லாதவர்கள், வெளி வேலைக்குச் செல்வது அபூர்வம் என்று எண்ணி இருந்தார்.
ஆனால் மலேசியா சென்ற பிறகு அவர் கண்ட காட்சி முஸ்லிம்கள் பற்றிய தவறான எண்ணத்தினை மாற்ற ஆரம்பித்தது. அப்படி என்ன அவர் அங்கே கண்டார் என்று நீங்கள் கேட்கலாம்.
அவைகள்: 1) முஸ்லிம் பெண்கள் வித வித மான கலர் கொண்ட ஹிஜாப் மற்றும் ஆடைகளை அணிந்து உலா வந்தனர். 2) பல்கலைக் கழக மேல் படிப்பினை தொடரும் ஏராளமான பெண்களைக் கண்டார். 3) பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பெண்கள் வேலைக்குச் செல்வதினைக் கண்டார். 4) சிலர் மட்டும் முகத்திரையினை அணிந்திருந்தார்கள். 5) இஸ்லாமிய மார்க்கத்தில் பற்றுடன் இருந்தனர்.
பத்திரிக்கை மாணவரான மரியாவிற்கு முஸ்லிம் பெண்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் அவர்களைப் பற்றியும் வெளி உலகிற்கு தெரிய எழுத தூண்டியது. அவர் எழுத, எழுத செய்திகள் நீருற்று போல வெளியே பீறிட்டு கிளம்பின.
அவைகளில் சில: 1) முஸ்லிம் பெண்கள் திருமணம் அவர்கள் சம்மதத்தோடு தான் நடந்தது.
2) சொத்துரிமை, பணபரிமாற்ற உரிமை மேற்கத்திய நாட்டு பெண்களுக்குக் கூட இல்லாத அளவு முஸ்லிம் பெண்களுக்கு இருந்தது.
3) இஸ்லாமிய மார்க்கத்தின் மீது அசைக்க முடியா நம்பிக்கை கொண்டு இருந்தனர்.

ஆகவே மரியா அல் குரானையும் பல்வேறு ஹதீதுக்களையும்  அர்த்தத்தோடு படிக்க ஆரம்பித்து, அவைகளை தன் எழுத்துத் திறன் மூலம் வெளி உலகிற்கு தெரியப்படுத்தினார்.
கோலாலம்பூர் நகரில் உள்ள துங்கு அப்துர் ரஹ்மான் பெரிய பள்ளிவாசலுக்கு ஒரு முறை சென்றார். அவர் அங்கு கண்ட காட்சி அமைதி, நிசப்தம், ஆடம்பர மில்லாத அமைப்பு அவரது உள்ளத்தினை கொள்ளைக் கொண்டது. அப்போது பாங்கு சப்தம் கேட்டு தொழுகைக்கு அழைப்பதினை அறிந்தார். வாழ்க்கையில் முதல் முறையாக காபாவினை நோக்கி தலை சாய்த்தார். ஆனால் மலேசியா இருந்தது வரை அவர் இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறவில்லை.
இஸ்லாம் பற்றி இன்னும் ஆழமாக தெரிந்து கொள்ளவேண்டும் என்று எண்ணினார். அப்போது தான் ஐக்கிய நாட்டு சபையால் அந்த ஆண்டின் சிறந்த பெண்மணிக்கான விருது மலேசியாவினை 27 ஆண்டுகள் ஆட்சி செய்த பிரதமர் மகாதீர் மூத்த மகள் மரினா மகாதீருக்கு கிடைத்திருந்தது. அவர் சமூக சேவைக்கான அந்த விருதினைப் பெற்றிருந்தார்.  உடனே அவரை அணுகி இஸ்லாம் பற்றிய பல்வேறு கேள்விக் கணைகளை விடுத்தார். அத்தனைக்கும் மிக விரிவான பதில்களை மரினா கொடுத்தார்.  அவரிடமிருந்து விடை பெறும்போது மரினா, 'நாமெல்லாம்(கிருத்துவர்கள், முஸ்லிம்கள்) ஒன்று பட்டவர்கள்  ஆனால் பல்வேறு நாட்டில் வாழ்வதினால், இனம், மொழி, நிறம் ஆகியவற்றால் மாறு பட்டுள்ளோம்.  ஆனால் நாம் சிந்தும் ரத்தமும், சுவாசிக்கும் காற்றும் ஒன்றே என்று தினம், தினம் நினைவு கொள் என்று  சொன்னது ஆஸ்திரேலியா திரும்பிய பின்னரும் அவர் காதுகளில் ரீங்காரம் இட்டு ஏதோ ஒன்று அவர் மனதினை நெருடியது.
நாடு திரும்பியதும் கிருத்துவ மற்றும் முஸ்லிம் மார்க்கத்தினை பற்றிய பல்வேறு ஒற்றுமை, வேற்றுமையினை புனித புத்தகங்களான பைபிள், அல் குரான்  மூலமும், வராற்று புத்தகங்கள் மூலமாகவும், கிருத்துவ, முஸ்லிம் பெரியவர்களிடையே நடந்த பட்டி மன்றம் மூலமும்  ஆராய ஆரம்பித்தார்.
அதில்: 1) குர்ஆனில் கிருத்துவர்கள், யூதர்கள் புனித நூல்களின் மக்கள் என்று கூறியிருப்பதினை அறிந்தார்.
2) கிருத்துவர்களும், யூதர்களும் இப்ராஹிம்(அலை) அவர்களின் வழிதோன்றல்கள் என்று அறிந்தார்.
3) இயேசு பிரான் பற்றி அல் குர்ஆனில் முகமது(ரசூலல்லா) விட அதிகமான இடத்தில் சொல்லப் பட்டத்தினையும் அறிந்தார்.
4) முஸ்லிம்கள் எப்படி கிருத்துவர்களை நடத்த வேண்டும் என்று ரசூலுல்லா கூறியிருப்பதாவது, 'கிருத்துவர்களை மரியாதையுடன் நடத்துங்கள், எந்த அளவிற்கு என்றால் ஒரு முஸ்லிம் ஆண் ஒரு கிருத்துவப் பெண்ணை திருமணம் செய்யும் போது அவள் கிருத்துவ மதத்தினை வழிபடுவதிலிருந்து தடுக்காதீர்கள் என்பது வரை' என்றார்கள்.
5) இயேசு பிரானை முஸ்லிம்கள் தூதராக ஏற்றுக் கொண்டார்கள், ஆனால் கிருத்துவர்கள் இயேசு பிரானை கடவுளாக கண்டார்கள்.
தனது ஆராய்ச்சியின் முடிவில் இஸ்லாமிய மார்க்கத்தினை ஏற்றுக் கொண்டார். கிருத்துவ மதத்திலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தில் மாறிய பின்பு பல்வேறு சிரமங்கள் இருந்தன.
அவைகள்: 1) புற சுத்தம், உள  சுத்தத்துடனான ஐவேளை தொழுகை.
2) பெண்களின் பாலின வெளித் தெரியா ஆடை
3) ஏழைகளுக்கு கொடுக்கப் படும் சக்காத்து, சதக்கா
4) குடும்ப, சமூக மாறு பட்ட கண்ணோட்டம்
5) முக்கியமாக இது வரை பயன் படுத்தி வந்த மது ஒழித்தல்
 அத்தனை வேதனைகளையும் தாங்கிக் கொண்டு இஸ்லாமில்லாத அந்நிய நாட்டில் இன்று இஸ்லாமிய மார்க்கத்திற்கு ஈர்க்கப் பட்டு இஸ்லாம் பற்றி மிக உயர்வாக தனது பத்திரிக்கை தொடர்பினை  வைத்துக் கொண்டு வெளி உலகிற்கு பறை சாட்டுகிறார், மரியா பரிஸ்.

ஆனால் நாம் முஸ்லிம்களாக பெயரளவில் இருந்து கொண்டு, இயக்கங்களிடையே நானா நீயா என்று பதவி வேட்கையில் இறங்கி, நாலு காசு சம்பாதிக்க நினைப்பதும், நம் வீட்டுப் பெண்கள் தடம் புரள்வதினை கண்டும் காணாது இருப்பதும், சகோதரிடையே சொத்து சுகத்திற்காக சண்டை இடுவதும், பெண்களுக்கு கல்வியினை மறுப்பதும், பொது நிறுவனங்களில் பதவிக்கு வந்தவர்கள் சுரண்டுவதிற்கு வழி தேடுதலும், உலக முஸ்லிம்கள் கூடாரத்திற்குள்ளே குத்து வெட்டு நடப்பதும்  சரியா சகோதர சகோதரிகளே!