Wednesday 24 February, 2016

வேறுபட்ட மனங்கள் இணைய உணவு டிப்ளமசி!

வேறுபட்ட மனங்கள் இணைய உணவு டிப்ளமசி!
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஒ)

சென்ற கட்டுரையில் 'உறவுகள்  இணைப்புப்   பாலத்தினை அமைக்காதவர் முஸ்லிமா?' என்ற கட்டுரை ஒன்றை எழுதி இருந்தேன். அதில் முஸ்லிம் இயக்க தலைவர்கள், தொண்டர்கள் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களானாலும் மனம் விட்டுப் பேசி கலந்துரையாடல் செய்வதில்லையே என்ற ஆதங்கத்தினை தெரியப்  படுத்தியிருந்தேன். அந்தக் கட்டுரைக்கு பல்வேறு தரப்பினர் தங்களது ஒத்தக் கருத்துக்களையும்  தெரியப் படுத்தியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக ஒரு உண்மை சம்பவத்தினை சமூதாய நல்லிணக்கத்திற்காக எடுத்துக் காட்டுகிறேன்
மேற்காசியாவில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் பாலஸ்தீன மக்களிடையே இஸ்ரேயில்  என்ற நாட்டினை மேற்கத்திய வல்லரசு நாடுகள் உருவாக்கி, மேற்காசிய மக்களுக்கு சொல்லவென்னா துன்பத்தினை ஏற்படுத்தி வருவதுடன், எங்கே பாலஸ்தீன நாடே ஒன்று இல்லாமல் போய் விடுமோ என்ற அடக்குமுறை நிலை உள்ளதினை பத்திரிக்கை, எலக்ரானிக் மீடியாவினைத் திறந்தால் படித்தும், பார்த்தும் இருப்பீர்கள்.
பாலஸ்தீன மண்ணில் நடக்கும் வன்முறையால் வேறுபட்டிருக்கும் இஸ்ரேயில, பாலஸ்தீனர் மனங்களை இணைக்க ஒரு புது வழியினை வட இஸ்ரேயில் கிபார் விட்கின் நகரில் ஹோட்டல் நடத்தும் கோபி சபிரிர் நினைத்தார். அதன் பயனாக எழுந்தது தான் இந்த டின்னெர் டிப்ளமசி. அரேபியர் மிகவும் விரும்பிச் சாப்பிடும் உணவு வகையினைச் சார்ந்தது தான் ஹம்முஸ் என்று அரேபியா சென்றவர்களுக்குத் தெரியும். அதாவது சென்னா பயறு, எள்ளு,  வெள்ளைப் பூடு நசுக்கி பொடியாக்கி, எலும்பிச்சை, ஆலிவ் எண்ணெய் கலந்து, சிறிது உப்பினைத் தூவி செய்யப் படும் களி என்றால் சரியாக இருக்கும். அராபியருக்கு சுவைதரும் உணவாகக் கருதப் படுகிறது. அதனை இஸ்ரேயிலரும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இதனை அறிந்த அந்த ஹோட்டல் உரிமையாளர் வாடிக்கையாளர்களைக் கவர, தன் உணவகத்தில் ஒரே மேஜையில் அமர்ந்து ஹம்முஸ் சாப்பிடும் பாலஸ்தீனருக்கும், இஸ்ரேயிலருக்கும் தாங்கள் சாப்பிட்ட உணவின் விலையில் 50 சதவீதம் மலிவு விலையில் தரப்படும் என்று அறிவிப்பு செய்தாரே பாருங்கள், அவர் ஹோட்டலில் ஈ மொயத்ததுபோல இஸ்ரேயிலரும், பாலஸ்தீனர்களும் மொய்க்க ஆரம்பித்து வியாபாரம் ஆகோ, ஓகோ என்று நடக்கின்றதாம்.
ஜும்மா தொழுகைக்குச் செல்லும்போது தொழுகை ஆரம்பிக்கும் முன்பு இமாம், தொழுகைக்கு வந்தவர்களைப் பார்த்து நேராகவும், நெருக்கமாகவும் நில்லுங்கள், எல்லாம் வல்ல அல்லாஹ் ரஹ்மத் செய்வான் என்று கூறுவார். அது ஏன் என்று நினைப்பீர்கள்? உங்களில் ஏழை, பணக்காரன், தாழ்ந்தவன், உயர்ந்தவன், வெள்ளை-கருப்பு நிறத்தவன் என்ற வேறுபாடு வராமல் இருப்பதிற்காகவே இதனைச் சொல்லுவார். சில சமயங்களில் நம்மைப் பயம் முருத்துவதிற்காக இடை விட்டு நின்றால் ஷைத்தான் நுழைந்து விடுவான் என்றும் சொல்லுவார். அது எந்த ஷைத்தானும் இல்லை, மாறாக மனதிற்குள் வேறுபாடு சுவர் எழுப்பும் ஷைத்தானைத் தான் கூறுவார்.


ஆகவே இஸ்லாமிய இயக்கங்களைச் சார்ந்த தலைவர்களும், தொண்டர்களும் இன்ப, துன்பங்களில் ஒருவருக்கொருவர் கலந்துகொண்டு, மனம் விட்டு பேசிக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதுடன், உங்கள் மனக் கதவைத் திறங்கள், உங்கள் நல் வாழ்விற்கு இறைவன் வழிவிடுவான் என்று கூறிக் கொள்கிறேன்!

ஒற்றுமை என்ற இணைப்புப் பாலத்தினை அமைக்காதவர் முஸ்லிமா?

ஒற்றுமை என்ற இணைப்புப் பாலத்தினை அமைக்காதவர் முஸ்லிமா?

2016 மே மாத முதல் வாரத்திற்குள்ளாக தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்தி புது அரசு பற்றி அறிவிப்பு வரவேண்டும் என்று தமிழகமே எதிர்பார்க்கிறது.
வழக்கம் போல் தமிழக முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள், பெயரளவு உள்ள அரசியல் அமைப்புகள் என்று பிரிந்து பல் வேறு நிலைப்பாட்டினை எடுக்கும் என எதிர் பார்த்து கொண்டு இருக்கின்றோம். அது ஒருபுறம் இருக்க;

இன்றைய இந்தியாவில் அரசுக்கு எதிராகப் பேசும் தலித் இனத்தவர் மற்றும் மைனாரிட்டி சமூகத்தினரை தீவிர வாத அமைப்புக்கு ஆதரவு அளிப்பவர்கள் என்று முத்திரை குத்தும் அச்ச நிலை உள்ளது. அது மாணவர்கள் ஆனாலும் சரியே! அப்படிப் பாதிக்கப் பட்டவர்கள் நீதி மன்றங்களை  அணுகும்போது  குண்டர்களால் தாக்கப் படும் நிலையினை தொலைக் காட்சி நிறுவனங்கள் படம் பிடித்து காட்டுவது அதிர்ச்சியினை அளிக்கின்றது என்று பல்வேறு பத்திரிக்கைகள் கூறுகின்றன.

தமிழக முஸ்லிம் தலைவர்கள் சக  இயக்கத் தலைவர்களுடன் சுமூக உறவு காண்பது அரிதாக இருப்பது  வேதனையாக உள்ளது. தலை எப்படியோ அப்படியே தொண்டர்களும் இருக்கின்றார்கள் என்ற பரிதாப நிலை.

இஸ்லாம் ஒரு சகோதர இயக்கம் என்று மார் தட்டும் நாம், சகோதரர்களுக்குள்ளேயே வெட்டு, குத்து என்ற நிலை சமீபத்தில் மண்ணடி பகுதியில் கொடி ஏற்றும் பிரச்சனையில் வெடித்து, காவல் நிலையம் வரை சென்று, வட சென்னையே சிரித்தது. முஸ்லிம் அல்லாத சமூகத்தினரும் 'ஒற்றுமை என்னும் பாசக் கயிரினைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள' என்று சொல்லும் மார்க்கத் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் முட்டி, மோதிக் கொள்கிறார்கள் என்று வட சென்னையில் பேசப் பட்டது அனைவருக்கும் தெரியும்.
அதற்குக் காரணம் இயக்கத் தலைவர்களிடையே யார் பெரியவர், யார் பேசுவதிற்கு அதிகம் கூட்டம் சேருகிறது. நானா, நீயா என்ற ஈகோ(தலைக்கனம்) இருப்பது தான் என்றால் மிகையாகாது. அந்தத் தலை, தலைக்குள் இருக்கும் அறிவு  எல்லாம் வல்ல அல்லாஹ் அருளால் வழங்கப் பட்டது, அவன் அருளிய தலையில் கனம் கூடாது. அந்தக் கனத்தினை இறைவனுக்கு சஜ்தா செய்தால் இறக்கி  விடும். தலைவர்களுக்கிடையே ஒரு புன் முறுவல், பாசம், பற்று மருந்துக்குக் கூட அரவே இல்லையே அது ஏன்? அவர்கள் உண்மையான உம்மத்தாக இருக்க முடியுமா?
உங்களுக்கெல்லாம் தெரியும் மேற்காசிய நாடுகளில் முஸ்லிம் நாடுகளில் போர்கள் நடக்கின்றன. அவைகளில் தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடி வரும் மக்களை ஐரோப்பிய நாடுகளில் ஐரோப்பிய யூனியன் குடியமர்த்துகிறது. அமெரிக்காவும் அவர்களை குடியமர்த்த முன் வந்துள்ளது. அதற்கு அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட தயார் நிலையில் உள்ள 'டிரம்ப்' என்பவர் முஸ்லிம்களை அமெரிக்காவில் குடியமர்த்தக் கூடாது என்று கூக்கிரலிடுகிறார். அதனை அறிந்த கத்தோலிக கிருத்துவ மத குரு போப் பிரான்சிஸ் அவர்கள் 18.2.2016 அன்று ரோமில் பேசும்போது 'மனித உள்ளங்களில் பிரிவை எற்படுத்தி சுவர் எழுப்புவன் உண்மையான கிருத்துவனாக இருக்க முடியாது'. 'மாறாக  உள்ளங்களை பாலங்கள் மூலம் இணைப்பவனே உண்மையான கிருத்துவனாக இருக்க முடியும்' என்று நெற்றியில் அடித்தது போல சொல்லியுள்ளார்.
சகோதர மதமான கிருத்துவ மத குரு போப் அவர்களே மனங்களை பாலங்கள் மூலம் இணைக்கச் சொல்லும் போது, ஒற்றுமை என்ற கயிறைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று போதித்ததினை  இஸ்லாமிய மார்க்கத் தலைவர்களும், அதன் தொண்டர்களும் மறுக்கலாமா?

ஆகவே இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று பேசி வரும் சட்டமன்றத் தேர்தலில் நல்ல முடிவினை எடுக்க வேண்டும் என்ற கருத்தோடு   நின்று விடாமல், தேர்தலுக்குப் பின்னும் மனம் விட்டுப் பேசி சகோதரப் பாசத்துடன் பழக வேண்டும் என்று கேட்டுக் கொண்டால் சரியா?





Saturday 20 February, 2016

திருமணம் வாழ்க்கையில் ஓர் வசந்தம்!



(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,பிஎச்.டி;ஐ.பீ.எஸ்(ஓ)
உலகில் பிறந்த ஒவ்வொரு மானிடனுக்கும்  ஒரு துணை என்ற மண வாழ்வு நீதிக்குப் புறம்பாக வாழும் மனிதர்களின் சறுக்குகள் பற்றி சமீப கால செய்திகள் கூறுகின்றன. அவை என்னென்ன என்று பார்ப்பதுடன், மண வாழ்வின் மகத்துவத்தினையும் சற்றே உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்..
அமெரிக்காவினைச் சார்ந்த ‘டைமீனிக்’ என்ற பெண் 1973ம் வருடம் வருங்கால போப்பான போலந்து நாட்டின் கார்டினல் ‘கரோட்டினை’ தத்துவம் மற்றும் ஆன்மிகம் சம்பந்தமாக சந்தித்து ஒரு புத்தகம் எழுதுவதிற்காக போலந்து நாட்டினுக்குச் சென்று கிறுத்துவ மதக் குருவினை சந்தித்தார். அது ஒரு காலக் கட்டத்தில் மிகவும் நெருக்கமான உறவு ஏற்பட்டதாகவும், அதுவே ஒரு காலக் கட்டத்தில் கார்டினல் துறவரத்தினை விட்டுவிட்டு திருமண வாழ்க்கைக்கு சென்று விடலாம் என்று தோன்றியதாகவும், போலந்து தேசிய நூலகத்தில் பாதுகாக்கப் பட்ட கடித போக்குவரத்தில் இருந்து புலனாகிறது என்று பி.பி.சி. நிறுவன செய்தி குறிப்பு சமீபத்தில் வெளியாக்கி உள்ளது. அந்தக் கார்டினல் தான் பிற்காலத்தில் போப் ஜான் 2 என்று அழைக்கப் பட்டார்.
இது ஒருபுறம் இருக்க அமெரிக்க, ஜெர்மனி, ஹாலந்து,ஆஸ்ட்ரிய, ஐயர்லாந்து  போன்ற நாடுகளில் பாதிரிமார்கள் தேவாலயத்தில் சாமி-கோரஸ் பாடும் சின்னஞ்சிறு பாலகர்களை ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தினார்கள் என்ற அதிர்ச்சி தரும் தகவலை 14.3.2010 தேதியிட்ட ஹிந்து ஆங்கிலப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது ஜெர்மன் நாட்டு மக்கள் கிறித்துவ பாதிரிமார்கள் தேவாலயங்களில் சேவையாற்ற சென்ற சிறுவர்களை பாலியல் குற்றத்திற்கு தள்ளியது கண்டு கொதித்தெழுந்து  அந்த நாட்டு மக்களின் கோபாதாபங்களை 12.3.2010 அன்று ஜெர்மன் நாட்டு பிஷப்புகள் போப் ‘பெண்டிக்கினை’ச் சந்தித்து எடுத்துரைத்ததாகவும் செய்தி வெளியாகி உள்ளது. பல்வேறு மேலை நாடுகளில் ஓரினச் சேர்க்கை சட்டப் படி செல்லும் என்று கூறப் பட்ட நிலையில் இந்திய சுப்ரீம் கோர்ட்டிலும் இது சம்பந்தமாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. அதனைத் தொடர்ந்து இ.த.ச  377( கிரிமினல் சட்டத்தினை) பரிசீலித்து அறிக்கை அனுப்ப மத்திய அரசுக்கு உத்திரவிட்ட   செய்தி வந்துள்ளது பற்றி உங்களுக்குத் தெரியும்.

அல் குரான் அத்தியாயம் 29:28:29 அல் அன் கபூத்தில், 'லூத்தை நம்முடைய தூதராக அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம். அவர் தம் சமூகத்தாரிடம் மானக் கேடான ஒரு காரியத்தை நீங்கள் செய்கின்றீர்கள். உலகத்தாரில் எவரும் அதைகண்டு உங்களை முந்தவில்லை, நீங்கள் பெண்களை விட்டு ஆண்களிடம் மோகம் கொண்டவர்களாக வருகின்றீர்களா' என்று கூறி அந்தக் கூட்டத்தினருக்கு சொல்ல, அதனை அவர்கள் உதாசீனப் படுத்திய நேரத்தில், அந்த சமூகத்தினவருக்கு தாங்க முடியாத மவேதனையைக் கொடுத்தான் எல்லாம் வல்ல அல்லாஹ்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் உலக குத்துச் சண்டை சாம்பியனும், வருங்கால ஜனாதிபதியாக கனவில் இருப்பவருமான மேனி பக்யு 16.2.2016 அன்று ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், 'மனிதனும், மனிதனும், பெண்ணும், பெண்ணும் பாலின சேர்க்கையில் ஈடுபடுவது மிருகத்தினை விட கேவலமானது. எந்த மிருகமாவது அதே இனத்துடன் பாலினத்தில் ஈடுபடுகின்றதா, பின் ஏன் மனிதன் அதனைப் பற்றி பேசவேண்டும், அந்தக் கேவலமான செயலில் ஈடுபட வேண்டும். எந்த மனிதன்  தன் இன நபருடன் இன்பத்தில் ஈடுபடுகின்றாரோ அவர் மிருகத்தினைவிட கேவலமானவரில்லையா' என்று கூறியிருப்பது அனைத்துப் பத்திரிக்கையிலும் செய்தியாக வந்துள்ளது.
மனிதர்களுக்கு திருமணம் ஏன் அவசியம் என்பதினை அல் குரான் அந் நூரில்(24:32) தெளிவாக அல்லாஹ் சொல்கின்றான் என்பது ஈமான் உள்ளவர்களுக்குப் புரியும்.
திருமண வாழ்வு ஒரு மனிதனை புனிதனாக்கிறது. திருமண வாழ்க்கை அவனை முழு மனிதனாக்குகிறது.
திருமண வாழ்வு என்பது வாழ்க்கையில் மனிதர்களை தன்னல வாதியாகவும், சுய இன்பம் கொள்பவர்களாகவும் இருப்பதிலிருந்து தடுக்கும் ஒரு தடுப்பு அணை. மண வாழ்வு என்பது ஒரு மனிதன் தன் மனைவியுடன் உனக்கு நான், எனக்கு நீ என்று செய்து கொள்ளும் வாழ்க்கை ஒப்பந்தம். மனிதன் அமைதி பெற்று இளைப்பாறும் பசுமையாக பெண் இருக்கிறாள். இன்பத்தினைத் தரும் அதே நேரம், கணவனுக்குத் துன்பம் வரும்போது தனது எல்லா சுகத்தினையும்  அவனுக்காக தியாகம் செய்து அவனை பாதுகாக்கும் பெட்டகமாகிறாள் என்பது கண்மணி ரசூலல்லாஹ் அவர்களுக்கு கதிஜாப் பிராட்டியார்(ரழி) அவர்கள் துன்பம் வரும்போது காப்பாற்றியது பற்றி அனைவரும் படித்திருக்கின்றோம்.
திருமணம் என்பது கணவனுக்கும், மனைவிக்கும் உள்ள பாசப் பிணைப்பினை ஏற்படுத்தும் சமூக அமைப்பாகும்.
அந்த சமூக அமைப்பின் விரிசல் அந்த சமூக அமைப்பினையே தகர்த்து விடும். திருமணம் என்பது மேலை நாடுகளில் அவை ஒரு பாலின உணர்ச்சி வசப்படுகிற சடங்காகவே உள்ளது. ஆசிய நாடுகளில் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் திருமணம் ஒரு சிவில் சட்டத்திற்குள் அடங்குவதில்லை. மாறாக திருமணம் இஸ்லாத்தில் உணர்ச்சிகரமான, உடல் ரீதியான, மத சார்பான ஒருங்கிணைப்பாகும். உடல் ரீதியான ஒருங்கிணைப்பு என்பது மணமக்கள் தங்களுக்கென்று வருங்கால சந்ததிகளான குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதாகும்.
கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த தத்துவ ஞானி அகஸ்டின், 'திருமணம் என்பது சமூக, நல்லிணக்க,  நல்லொழுக்கம் ஏற்படுத்தும் ஓர் அடித்தளமாகும்’ என்று கூறுகிறார்.
திருமணம் ஒரு உரிமை மட்டுமல்ல. மாறாக ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் பொறுப்பாகும், இணைப்புப் பாலமாகும்.
ஆமாம் இவையெல்லாம் தெரிந்ததும், கேள்விப் பட்டதும் தானே பின் ஏன் இதனைச் சொல்கிறார் என்று உங்களுக்குக் கேள்வி கேட்கத் தோன்றுவது இயற்கையே!

சமீப கால திருமணங்கள் நானா, நீயா என்று போட்டிப் போட்டுக் கொண்டு ஆடம்பர செலவு செய்து திருமணம் விமரிசையாக செய்து, சென்னையினை நவம்பர்-டிசெம்பர், 2015ல் புரட்டியெடுத்த அடைமழை ஓய்ந்த பின்புபோல திருமணம் முடிந்தாலும் மணமகள், மணமகன் வீட்டிற்கு சென்ற சில மாதங்களிலேயே தாய் வீட்டிற்கு அழுகையும், பெட்டியும் கையுமாக திரும்பும் செய்திகள் எங்கே சமூதாய கட்டுக் கோப்பினை குழைத்து விடுமோ என்று பயமாக இருப்பதினால் நான் மேல்கோள் காட்டுகின்றேன். முன்பெல்லாம் மனைவியினை விட்டுவிட்டு பர்மா, மலேசியா, ஸ்ரீலங்கா போய் இரண்டு அல்லது மூன்று வருடம் சென்று மனைவியினைப் பார்க்கும் காலம் கரை ஏறிவிட்டது. அப்போது கூட கண்டதே கணவன், கொண்டதே கோலம் என்று எப்போது கணவன் வருவான் என்று காத்திருக்கும் காலம் மலையேறி விட்டது. இப்போது கணவன் அருகில் இருக்கும் போதே கணவன்-மனைவிக்கும், மனைவி-மாமியார்-நாத்தனார் ஆகியோருக்கும் கருத்து வேறுபாடு வந்து பிரிந்து வாழும் பெண்களை, ஆண்களை நாம் காணாமல் இருக்க முடியவில்லையல்லவா?
அது ஏன்?
!) திருமணம் நடக்கும்போது நாம் கவனம் செலுத்துவது ஆடம்பர உடைகள், ஆபரண ங்கள், சுவைமிகு உணவு வகைகள், கேளிக்கைகள் ஆகியவற்றில் தான் கவனம் செலுத்துகின்றோம். அரேபியால் உள்ளது போல திருமணம் செய்து கொள்ளும் மணமகன், மணமகள் ஒத்தக் கருத்துடையோராக்க இரண்டு வீட்டார் முன்னிலையில் கவுன்சிலிங் செய்து நல் போதனைகள் செய்வதில்லை.
2) திருமணம் செய்யும் போது எவ்வாறு இரு வீட்டாரும் இனணந்து வேளைகளில் ஈடுபட்டூமோ அதனை சிறிது சின்னஞ்சிறு மணமக்கள் வாழ்க்கை ஒப்பந்த கட்டிடம் ஆடாமல், அசையாமல் இருக்க அடித்தளம் போடுவதில்லை.
3) உறவினரும் மூக்குப் பிடிக்க, நா சுவைக்க விருந்து சாப்பிட்ட கையேடு அந்த மணமக்கள் சந்தோச வாழ்க்கை நடத்துகின்றார்களா என்று பார்ப்பதில்லை, மாறாக மணமக்களுக்குள் வேற்றுமை வந்தால் அதனை ஊதி பெரிதாக்கி இன்னொரு விருந்து சாப்பிடமாட்டோமா என்று என்னும் மனநிலை தற்போது இருக்கின்றது.
4) ஜமாத்தாரும் திருமண தினத்தில் பதிவேட்டில் பதியும் அளவிற்கு நின்றுவிட்டு, மன முறிவு பற்றிய வழக்குகள் வரும்போது, அவர்களுக்கு பிரிவு நோட்டிஸ் கொடுக்கும் லெட்டெர் பேடுகளாக இருப்பதினைக் காண்பது வேதனை அளிக்கின்றது.
5) நவீன டி.வி. சீரியல்கள், நெட், செல் போன், சினிமா மோகம் நிறைய இளசுகளின் மனதுகளில் நச்சு விதிகளை விதைத்து விடுகின்றன. அவைகளைப் போக்க வயதான குடும்பத்தினர் முயற்சி எடுக்காது, அவர்களுடன் சேர்ந்து அதனைப் பார்த்து சிரித்து மகிழ்வது வீட்டுக்கு மட்டுமன்றி,சமூகத்திற்கே வேட்டு வைக்கும் என்று எண்ணுவதில்லை.
6)  சில அமைப்புகள் பெற்றோர் சம்பந்தம் பெறாமல் வரும் ஆண்களையும், பெண்களையும் புரட்சி செய்கின்றோம் என்று திருமணம் செய்து வைப்பது அவர்களை பெற்றோர், உற்றார், உறவினரை விட்டு ஒதுக்கித் தள்ளப் பட்டு, இளம் தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு வரும்போது அவர்களுக்கு ஆலோசனை சொல்லக் கூட நாதியில்லா பரிதாப நிலையினைக் காண முடிகின்றது.
7) மேற்கூறிய நிலை தொடருமேயானால் வருங்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வாழாத பெண் மட்டுமல்ல, மண வாழ்வு முறிந்து தனியே வாழும் ஆண்களும் இருக்கும் நிலை வருமல்லவா?


ஆகவே மண வாழ்வு முறியாமல், நமது சமூக அமைப்பினை பலப் படுத்த மார்க்க அறிஞர்கள் கூடிய விரைவில் நடவடிக்கையினை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.