Thursday 7 January, 2016

கருணைக் காட்டுதலும், பசித்தவர் புசித்தலும் இறை விசுவாசிகளின் கடமை!



டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி;ஐ.பீ.எஸ் (ஓ)
பெருமானார் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், 'பூமியில் உள்ளோர் மீது கருணைக் காட்டுங்கள், வானத்தில் உள்ள அல்லாஹ் உங்களுக்கு கருணைக் காட்டுவான்'(முஹ்ஜமுத் தப்ரானி)
அது போன்ற கருணையினை உத்திரப் பிரதேச ‘ரே பரேலி’  நகரில் வெளி உலக வெளிச்சத்தினைக் காணாது வெங்கொடுமை சிறையில் வாடிய 15 முஸ்லிம் அல்லாத கைதிகளை வெளிக் கொண்டு வரும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளார்கள் இஸ்லாமிய இளைஞர்கள்.
சிறையில் வசதியுள்ளவர்களின் வாழ்க்கையில் சக்கரைப் பொங்கலாகவும், வசதியில்லாதவர் வாழ்வில் நொந்து நூலான வாழ்வாகவும் அமைந்திருப்பதினை நீங்கள் கேள்விப் பட்டு இருப்பீர்கள். சிலருக்கு சிறை வாசம் மாமியார் வீட்டுக்குச் சென்று விருந்து சாப்பிட்டது போலாகவும் இருக்கும். ஆனால் ரே பரேலி நகரின் சிறையில் சிறு வழக்குகளில் சம்பத்தப் பட்டு இருந்த 15 ஹிந்து சிறைவாசிகள் தங்கள் தண்டனைக் காலத்தினை முடித்து விட்டாலும், தங்களுக்கு நீதிமன்றத்தால் விதிக்கப் பட்ட அபராதத்  தொகையினை கட்ட முடியாமல் சிறையில் வாடியதினை அறிந்த ஒரு தன்னார்வ முஸ்லிம் இளைஞர் அமைப்பினர் அந்த 15 சிறைவாசிகளும் கட்ட வேண்டிய அபராதத் தொகையான ரூபாய் 50,000/ த்தினை வசூல் செய்து அந்தப் பணத்தினை அபராதமாக 2015 ஜூன் மாதம் செலுத்தி வெளிக் கொணர்ந்தனர். அந்தக் கைதிகள் சிறை வாசலை விட்டு வெளியேறும் போது, அந்த முயற்சியில் ஈடுபட்ட முஸ்லிம் இளைஞர்களை கண்ணீர் மல்க நெஞ்சோடு கட்டியணைத்து தங்களது நன்றியினை சொன்னதும் தான் தாமதம், அந்த இளைஞர்கள் சிறை வாசிகளிடம் அந்த நன்றி எங்கள் அல்லாஹ்விற்கே தகும் என்றார்களாம் பாருங்களேன்!


தானத்தில் சிறந்தது அண்ண தானம்:
அன்றாடம் உண்பதிற்கு உணவில்லாமல் அல்லல் படும் பல மக்களை நாம் காண்கின்றோம். அதே போன்று உ.பி. மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சிற்பங்கள் அமைந்த அஜந்தா-எல்லோரா குகைகள் கொண்ட நகரம் ஔரங்கதாபாத் ஆகும். அந்த நகரத்தில் ஒரு வாய் உணவிற்குக் கூட தாளம் போடும், கட்டிய கைகளும், ஒட்டிய  வயிர்களும் கொண்டு முடங்கிக் கிடக்கும் முஸ்லிம்களைக் கண்டு, 'ஹாருன் இஸ்லாமிக் செண்டெர்' நடத்தும் யூசுப் முகாதி வேதனைப் பட்டார். உடனே தன் மனைவி கௌசர், திருமணமான தன் 4 சகோதரிகளிடம் பசி என்ற ஆராப் பிணிப் போக்குவது பற்றி ஆலோசனை நடத்தினார். அதன் பயனாக டிசெம்பர் , 2015ல் ஆரம்பிக்கப் பட்டது தான், 'ரொட்டி வங்கி'.
அந்த வங்கியில் 250 உறுப்பினர்கள் இது வரை சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு தனித்தனியே ஒரு உறுப்பினர் எண் வழங்கப் பட்டுள்ளது. ஒவ்வொருவரும் இரண்டு ரொட்டி, அத்துடன் சைவ அல்லது அசைவ கூட்டு கொடுக்க வேண்டும். வங்கியின் அலுவல் நேரம் காலை 11 மணியிலிருந்து இரவு 11 மணி வரை. அப்படிக் கொடுக்கப் படும் உணவின் தன்மை ஆராயப் படும். அதன் பின்பு ஏழை எளிய மக்களுக்கு ஒரு தூக்குப் பையில் முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர் வேறுபாடு இல்லாமல் கொடுக்கப் படும். 'ஆனால் நிச்சயமாக அந்தப் பையில் இங்கு உள்ள இலவச  பைகளில் உள்ளது போன்று எந்தப் படமும் இல்லை என்று நம்புங்கள்'.
இந்த வங்கியில் 700 உணவுப் பொட்டலங்களை சேகரித்து வைக்கக் கூடிய குளிர் சாதனப் பெட்டி உள்ளது. இந்த வங்கியின் குறுகிய கால  சிறப்பினை அறிந்த முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர் விசேச நிகழ்ச்சியின் போது தயாரிக்கப் படும் உணவில் ஒரு பங்கினை இந்த வங்கியினுக்கு வழங்கி விடுகின்றனர். அதனை அறிந்து சில உணவு விடுதிகளும் தங்கள் விடுதியில் மிஞ்சிய உணவினை இந்த வங்கியினுக்கு வழங்குகின்றனர். இது போன்ற உதவியினால் கணவனால் கைவிடப் பட்ட, விதவைப் பெண்கள் பலர் பயன் படுவதாக யூசுப் அவர்களின் மனைவி கௌசர் கூறுகிறார். யூசுப் நடத்தும் , 'ஹாருன் நடத்தும் இஸ்லாமிக் செண்டரில் பயிலும் 2000 மாணவிகள் தங்களோடு படிக்கும் மாணவிகள் உணவு இல்லாதவர்களுக்கு மத வேறு பாடு இல்லாமல் உணவு எடுத்துச் செல்கின்றனர்.
இவ்வுலகத்தினை அல்லாஹ் ஒரு நாள் அழித்து விட்டு எல்லா மனிதர்களையும் மீண்டும் உயிர்பித்து மனிதர்களின் நன்மை, தீமைகளுக்கு ஏற்ப விசாரணை நடத்துவான். நன்மை, தீமைகளுக்கு ஏற்ப கூலியும் வழங்குவான் என்று இறை நம்பிக்கையாளர்களுக்குத் தெரியும். நாத்தீகர்கள் நம்புவதில்லை என்பதினை ஒதுக்கி விடுவோம். அல்லாஹ்  அப்படிக் கேட்கப் படும் கேள்விகளில் ஒன்றாக எம்பெருமானார் நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதாவது; 'மானிடனே உன்னிடம் நான் உணவு கேட்டு வந்த போது எனக்கு உணவு அளிக்க மறுத்து விட்டாயே' என்று கேட்பானாம் அல்லாஹ். அப்போது மனிதன், 'நீயே அகிலத்தையும் படித்துப் பராமரிப்பவனாக இருக்கின்றாய், நான் உனக்கு எவ்வாறு உணவளிக்க இயலும்?' என்று மனிதன் கூறுவான். அப்போது இறைவன், 'என் அடியான் உன்னிடம் உணவு கேட்டு வந்தபோது அவனுக்கு நீ உணவளிக்க மறுத்தது உனக்குத் தெரியாதா? என்று கேட்பானாம். மேலும் எல்லா  வல்ல நாயன் கூறுவானாம், 'நீ அவனுக்கு புசித்திருந்தால் அங்கேயே என்னைக் கண்டிருப்பாய்' என்றும் கூறுவானாம்.
மனிதனுக்கு உதவுவது தான் இறைவனுக்குச் செய்யும் வணக்கம் என்பது இந்த விசாரணை முறையிலிருந்து தெரிந்து கொள்ளலாமே!