Monday 26 August, 2024

பயணங்களின் படிப்பினை!

 

(டாக்டர் .பீ.முகமது அலி,.பீ.எஸ்()

கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு  என்பது பழமொழி.   அதற்கேற்ப நான் என் குழந்தைகள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களை  காண இந்த வருடம் ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது அங்கே கண்ட சில தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என இந்த கட்டுரையினை வரைகிறேன்.

          முன்பெல்லாம் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் மலேசியா, பர்மா போன்ற நாடுகளுக்கு சென்று தொழில் செய்தும், வசித்தும் வந்தார்கள். அந்த சமயத்தில் தமிழ் நாட்டிலிருந்து எந்த உறவினர்கள் வந்தாலும் அவர்களை முக மலர்ச்சியுடன் வரவேற்று உபசரித்து அவர்களை போட்டிபோட்டுக்கொண்டு விருந்தோம்பலில் திக்கு முக்காடச் செய்வார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் இந்த நவீன காலத்திலும் தமிழ் நாட்டினை விட்டு 14,000 கிலோ மீட்டர் தொலைதூரத்தில் இருந்தாலும் தமிழ் நாட்டு முஸ்லிம்கள் ஒரு கூட்டுக் குடும்பம் போல தொடர்பினை ஏற்படுத்தி வசிக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து உறவினர்கள் வந்தால் அவர்களை போட்டிபோட்டுக்கொண்டு தங்கள் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுக்கின்றனர்.

அருகில் பள்ளிவாசல்களில் ஜும்மா தொழும்போது குடும்பத்துடன் வருகை தந்து தொழுகை முடிந்ததும் கலந்துரையாடுகிறார்கள். சிலர் ஜும்மா தொழும்போது வீட்டில் சுவையான உணவு வகைகளை சமைத்துக் கொண்டுவந்து விற்பனை செய்து அதில் வரும் தொகையினை பள்ளிவாசல் செலவிற்கே சதக்காவாக கொடுத்து விடுகிறார்கள். பள்ளிவாசலில்ஓபன் ஹவுஸ்’ என்று ஒரு நிகழ்ச்சி வைத்து பெண்கள் தயாரித்த கைவினைப் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். இதில் பெண்கள் சுய வேலை செய்ய ஊக்கிவிக்கும் பாராட்ட வேண்டிய செயலாகும். ஹஜ் பெருநாள் தொழுகைக்கு பொது பூங்காவில் ஆண்களுக்கும்,  பெண்களுக்கும் போதுமான வசதி செய்து தருகிறார்கள். வயதானவர்களுக்கு நார்காலிகள் போதுமான அளவு தருகிறார்கள். சென்னையில் ஈத் பெருநாள் முடிந்து தன்வந்தர்கள் மட்டும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடக்கும். அதில் முக்கிய பிரமுகர்களை அழைத்து 'கன்னிமாரா' நட்சத்திர ஹோட்டலில் அவர்களின் அறிமுகத்திற்காகஈத் மிலான்’ பார்ட்டி என்று நடத்துவார்கள். சில ஆண்டுகள் நானும் கலந்து கொண்டுள்ளேன். ஆனால் அமெரிக்காவில் ஹஜ் பெருநாள் முடிந்த பின்பு ஒரு நாள் அமெரிக்கா வாழ் முஸ்லிம்கள் என்ற அமைப்பு 'ஈத் மிலான்' கூட்டம் கலிபோர்னியா பிரீமான்ட் நகரில் நடத்தினார்கள். அதில் சிறுவர்களுக்கு கிராத் ஓதுவது, நிகழ்ச்சி நடக்கும். அதில் வினா விடைபோட்டிகள் நடத்தி பரிசுகளும் கொடுத்தார்கள். அப்போதுபால் ஆல்டோ’ நகர மேயர் அன்டோனியோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதில் கலந்து கொண்ட நானும் தியாகங்கள் பற்றி சொற்பொழியாற்றினேன். குழந்தைகளுக்கு மார்க்க போதனைகள் தவறாமல் திருக்குர்ஆன் ஓத மற்றும் தொழுக பழக்குகிறார்கள்  தொழும் நேரம் வந்தால் சிறுவர்களை தொழ வைத்து அல்லது ஆசான் சொல்ல பழக்குகிறார்கள் என்பதினை பாராட்டாமல் இருக்க முடியாது. அமெரிக்காவில் நான் சென்ற நகரங்களில் முஸ்லிம் அல்லாத பெண்கள் அரைகுறை ஆடை அணிந்திருந்தும், முஸ்லிம் பெண்கள் தங்கள் கலாச்சாரம் குறையாது சேலை, சுடிதார், ஹிஜாப் அணிந்து கண்ணியம் குறையாமல் பொது இடங்களுக்கு வருகின்றனர் என்று பார்க்கும்போது Islamia phobia என்ற முஸ்லிம்களுக்கு எதிரான மனப்பான்மை இருக்கின்றது என்று சொல்ல முடியாத நிலை உள்ளது.

சான் பிரான்ஸ்கோ நகர் பிரசித்தி பெற்ற துறைமுகத்திற்குச் சென்றேன். அங்கு துறைமுக இரும்பு தடுப்புகளில் சிறு சிறு பூட்டுகள் போடப் படுத்திருந்தது. அது சம்பந்தமான விளக்கங்கள் பெற்றேன். நமது ஊர் கோயில் அரச, ஆல மரங்களில் தங்களது வேண்டுகோள் நிறைவேற கயிறுகளை அல்லது மஞ்சள் துண்டுகளை கட்டி தொங்க விடுவதினை நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த நவீன காலத்திலும் வல்லரசு நாடு என்று பார்க்கக் கூடிய அமெரிக்காவிலும், அந்த துறைமுகத்திற்கு சுற்றுலா வருகின்ற காதலர்கள் தங்கள் காதல் நிறைவேற பூட்டுகளை கொண்டு வந்து பூட்டிவிட்டு செல்வார்கள் என்றது எனக்கும் மட்டுமல்ல உங்களுக்கும் ஆச்சரியமான மூட நம்பிக்கை என்று கருத முடிகிறதல்லவா?

நீயு யார்க் நகர் சென்றேன். 159உறுப்பினர் நாடுகள் உறுப்பினர்களாக உள்ள .நா.சபை பிரமாண்டமான கட்டிடம் அமைந்துள்ள இடத்திற்கு எதிரே உள்ள சிறிய பூங்காவில் சுமார் 15  நபர்கள் கையில் கென்யா கொடியினை தாங்கி ஒருவர் ஒலி பெருக்கி மூலம் அங்கு ஜனநாயகத்திற்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு தீர்வு காண கோசம் எழுப்பிக் கொண்டு இருந்தார்கள். பெரும்பாலான முஸ்லிம்கள் வாழும் பழமை புகழ் சொல்லும் பாலஸ்தீனத்திற்கு தனி உறுப்பினர் அந்தஸ்து வேண்டும் என்று .நா.சபை சொன்ன பின்பும் இதுவரை அது செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கும்போது, 15பேர் போடும் சத்தம் அவர்களுக்கு எங்கே கேட்கப் போகிறது.

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி 315 மைல்கள் தூரத்தில் பாயும் ஹட்ஸன் ஆறு பார்க்க வேண்டிய ஒன்றாகும். அதில் 200 உயரமும், 200 அடி அகலமும் கொண்ட பாலம் உள்ளது. அதில் 825 அடி கொண்ட டவர் உள்ளது. அதில் 10 மாடி கட்டிடத்தில் நின்று கொண்டு கனமான கண்ணாடி அமைப்பின் மூலம் கீழே பார்த்தால் நியூயார்க் நகரம் முழுவதும் தெரியும் அளவிற்கு அமைத்துள்ளார்கள். பழங்கால கட்டிடங்களான டைம் சுகுவர் , எம்பியர் பில்டிங், வால் ஸ்ட்ரீட் ஆகியவை பார்க்க வேண்டிய இடங்களாகும். இரவில் 'டைம் சுகுவரில்' பல இடங்களில், பாடல், ஆடல், மேஜிக் போன்ற நிகழ்ச்சிகளும், உணவு தளங்களும் உள்ளன. நியூயார்க் 'Bedloe' தீவில் அமைந்துள்ள 'statue of liberty' அதாவது Liberty of enlightening world உலக விழிப்புணர்வு அடையாளமாக 1886ல் ஜனாதிபதி குரோவர் என்பவரால் நிறுவப்பட்டது, அதனை படகு மூலம் சென்று பார்வையிட வேண்டும். அதில் மிகவும் கவலை கொள்ளும் விதமாக பல இடங்களில் அட்டையில் கலரில் 'ப்ளீஸ் ஹெல்ப்' என்ற அட்டைகளை ஏந்தி வசூல் செய்யும் பணக்கார நாட்டின் பரிதாபங்களும் உள்ளன. நான் காண சென்றபோது அங்கே ஒரு கிழிந்த ஆடையினை அணிந்த அமெரிக்கர் குப்பை தொட்டியில் கிடந்த உணவுப் பொருட்களில் மிச்சம், மீதத்தினையும் எடுத்து சாப்பிடுவதும், பாட்டில்களில் உள்ள மீத குளிர் பானங்களை குடிப்பதும் பார்த்து நமது நாட்டில் பிச்சை எடுக்கும் நபர்களை மிஞ்சும் பரிதாபமான நிலையாக இருந்தது.

நயாகரா நீர் வீழ்ச்சி அமெரிக்காவினையும், கனடாவினையும் பிரிக்கும் சர்வதேச எல்லை கொண்ட நீர் வீழ்ச்சியாகும். கனடா அரசு நீர் வீழ்ச்சியினைக் காண வரும் மக்களுக்கு சிகப்பு கலர் பிளாஸ்டிக் சட்டையையும், அமேரிக்கா பகுதியில் வரும் பார்வையாளர்களுக்கு நீல ஜாக்கட்டினையும் அடையாளத்திக்காக கொடுக்கின்றார்கள். இரவு நேரத்தில் அருவியில் கலர் கலராக லேசர் மூலம் நிகழ்ச்சியினை ஏற்படுத்தி, வான வேடிக்கையும் நிகழ்த்துகின்றனர். நமது குற்றாலத்திலும் அதுபோன்ற ஒரு நிகழ்ச்சியினை இரவு நேரத்தில் நடத்தலாம்.

நியூயார்க் நகரில் 1971ம் ஆண்டு அமைக்கப் பட்ட இரட்டை கோபுரம் கொண்ட கட்டிடம் பத்து லட்சம் சதுர அடியில் அமைக்கப் பட்ட வியாபார ஸ்தலமாகும். அதில் 430 நிறுவனங்கள் கொண்டது, 35000 மக்கள் வேலை செய்த இடம். அதனை 2001 ஆண்டு தகர்த்தது உங்களுக்குத் தெரியும். அந்த இடத்தில் தற்போது பெரிய பூங்கா அமைத்து அதில் 2996 உயிர் நீத்தவர்களுக்கு சதுர வடிவிலான சுவரில் செப்புகளான எழுத்துக்களில் பொறிக்கப் பட்டுள்ளது. அதில் முஸ்லிம்களும் உள்ளனர், அத்துடன் 343 தீயணைப்பு வீரர்கள், 72 காவல் படை வீரர்கள் பெயர்களும் அடங்கும்.   அந்த பூங்காவில் நிழல் தரும் வகையில் 'Callery Peer'  அல்லது survivor tree உயிர் பிழைத்தவர் மரங்கள் என்ற பேரிக்காய் வகை மரங்கள் நூறு கணக்கில் வைத்துள்ளனர். திருக்குறளில், 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண  நன்னயம் செய்துவிடல்' என்று சொல்லும் அளவிற்கு வருகிற பார்வையாளர்களுக்கு எல்லாம் குளிர்  நிழல் தரும் நடவடிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டுமல்லவா?

பெரும்பாலான அமெரிக்கர்கள் பள்ளிப் படிப்பினை முடித்ததோடு குடும்பக் கட்டுப்பாட்டிலிருந்து விலகி விடுவதால் பட்டப் படிப்பை தொடர்வதில்லை, ஆகவே தான் கணினி வேலைக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளில் பட்டப் படிப்பினை முடித்து உயர் கல்வி பயில வரும் மாணவர்களுக்கு அரிய வேலை வாய்ப்பு உள்ளது. அப்படி வரும் பட்டதாரிகள் வீடு, கார் என்று வசதியாக வாழ முடிகிறது. ஆகவே மேல் படிப்பு மற்றும் ஆராய்ச்சி பட்டதாரிகளுக்கு அமெரிக்காவில் வாய்ப்பு அதிகம். அதனைப் பார்த்த அமெரிக்க இளைஞர்கள் ஆத்திரத்திற்கு தள்ளப் படுவதால் அங்கொன்று, இங்கொன்று வன்முறைகளை இந்திய பட்டதாரிகள் சந்திக்க நேரிடுகிறது.

நமது நகரங்களில் உள்ளது போன்ற 'Fast Food' தள்ளு வண்டிகள் நடைபாதையில் அதிகமாக நகர நிர்வாக அமைப்பின் அனுமதியுடன் செயல் படுகின்றது. அத்தனையும் ஹலால் உணவகம் என்ற விளம்பரம் செய்கிறார்கள். அமெரிக்கர்கள் ஹலால் உணவகத்தினையே விரும்பி வருகிறார்கள், ஏனென்றால் அவைகள் சுத்தமாகவும், நோய் பரப்பாத உணவுகள் என்று அவர்கள் கருதுகிறார்கள். இந்திய உணவுகளுக்கு அமெரிக்காவில் பிரியம் அதிகம். ஆகவே தான் அங்கே இங்கேயுள்ள உணவகங்களான 1) அன்ன பூர்ணா 2) சரவண பவான்,3) அடையார் ஆனந்த பவன், 4) செட்டிநாடு உணவகம், 4) அஞ்சப்பர் உணவகம், 5) கோவை கஃபே 6) மயிலாப்பூர் எக்ஸ்பிரஸ் 7) அண்ணாச்சி கடை 8) ஆப்ப கடை 9) தோசா கடை 10) முருகன் இட்லிக்கடை ஆகியவைகள் அதிக பயனாளிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது.

ஏர்போர்ட்டில் இறங்கிஉபேர்’ வாகன வசதிகள் துணையுடன் எந்த இடத்திற்கு செல்லவும், சொந்தமாக வாகனங்களை வாடகைக்கு எடுத்து ஓட்ட வசதியுடன் கூடிய வாடகை வண்டிகளும் உள்ளன. அத்துடன் நடக்க முடியாதவர்கள் பயன்பாட்டிற்காக சக்கர நாற்காலிகளையும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். நடைபாதைகளும் சக்கர நாற்காலிகள் உபயோகத்திற்கு சருக்கலாக அமைக்கப் பட்டுள்ளது. நமது நகரங்களில் நடைபாதைகள் எல்லாம் வீடு இல்லாதோரும், கடைகள் வைத்திருப்போரும்  ஆக்கிரமிப்பு செய்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

சுத்தமான, அகலமான ஒவ்வொன்றும் 4, 6, 8 போக்குவரத்துக்கு உதவும் வகையில் சாலைகள் அமைக்கப் பட்டுள்ளது. நடு இரவில் வந்தால் கூட சாலைகள் பளிச் என்று தெரியும் அளவிற்கு வண்ண கோடுகள் போடப் பட்டுள்ளன, சிக்கனல்களும் உள்ளன. சாலையின் இரு புறத்திலும் நிழல் தரும் மரங்கள் உள்ளன. மக்கள் உபயோகிப்பதிற்காக பூங்காக்களும் உள்ளன. உடல் பயிற்சியில், நடைப் பயிற்சியில், சிறு ஒட்டப்பயிற்சியில் சிறுவர் முதல் வயதானவர் வரை உடல் ஆரோக்கியத்திற்காக பயிற்சியில் ஈடுபடுகின்றனர். அங்கு வித விதமான கார்கள் சென்றாலும் இங்கு காதை பிளக்கும் எந்த ஹார்ன் சப்தமும் கேட்பதில்லை. எந்த இடத்திலும் கார் ஓட்டுனர்கள் இடையே முந்தி செல்வது, காரை நிற்பாட்டுவது போன்றவைகளுக்காக சண்டை சச்சரவு பார்க்க முடியாது.  கடைகளுக்கு சென்றால் கூட வரிசையாக நின்று செல்லும் பழக்கம் உள்ளது. எலெக்ட்ரிக் கார், பைக், சைக்கில்  ஆகியவை அதிக பயன்பாட்டிற்கு உள்ளது. அதனால் தான் எலன் மஸ்க் தயாரிக்கும் 'டெஸ்லா' தொழிற்சாலை கலிபோர்னியாவில் உள்ளது. ஜூலை 4ந்தேதி அமெரிக்காவின் சுதந்திர தினமாகும். அதனை கொண்டாட நகர நிர்வாகம் மூலம் வான வேடிக்கைகள் நடத்துகின்றனர். இங்கு சில வருடங்களுக்கு முன்பு சுதந்திர  கொண்டாட்ட தினத்தின் போது வீடுகள் தோறும் கொடி ஏற்றுங்கள், வீட்டுமுன் கோலம் போடுங்கள் என்ற வேறு எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் அங்கே இல்லை.

தன் வினை தன்னைச் சுடும்: இந்தியாவில் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கடுமையான சட்டங்கள் உள்ளன. 'Non Prohibited' குழல்கள் துப்பாக்கிகள் தான் பாதுகாப்பிற்காக, பயிற்சிக்காக அனுமதிக்கப் பட்டுள்ளது. ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் ராணுவ, பாதுகாப்பினர் உபயோகிக்கும் 'prohibited' குழல் துப்பாக்கிகளோ, தானியங்கி துப்பாக்கிகளோ பயன் படுத்த அனுமதியில்லை. பாலிவுட் சினிமா நடிகர் 'சஞ்சய் தட்' அனுமதியில்லாத தானியங்கி துப்பாக்கிகளை வைத்திருந்ததால் 6 வருடங்கள் சிறை தண்டனையினை அனுபவித்தார் என்று உங்களுக்குத் தெரியும். அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் 360 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடக்காமல் இல்லை. அதற்குக் காரணம் அங்கே அமெரிக்க பிரஜைகள் தங்கள் பாதுகாப்பிற்காக ஆயுதக் கடைகளில் தாங்கள் விரும்பும் துப்பாக்கியினைப் பெற்றுக் கொள்ள உரிமையுள்ளது. அதுபோன்ற உரிமையால் அமெரிக்காவில் 4 ஜனாதிபதிகள் கொல்லப் பட்டனர். ஆகவே தான் முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமாவும், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும் துப்பாக்கி வாங்கும் சட்டத்திற்கு சீர்திருத்த கட்டுப் பாடுகளைக் கொண்டு வந்தனர். அதற்கு குடியரசு கட்சியினர், அதன் தற்போதைய வேட்பாளர் டொனால்டு டிரம்ப் ஆகியோரும் எதிர்த்தனர். ஆனால் அதன் பயன் தான் டொனால்டு டிரம்ப் 13.7.2024 அன்று அவருடைய தேர்தல் பிரச்சாரத்தில் கொல்லும் முயற்சியில் பென்சில்வானிய மாகாணத்தில் காயமுற்றார். இனியாவது அமெரிக்கர்கள் தங்கு, தடையில்லா துப்பாக்கி வாங்க கட்டுப் பாடுகள் கொண்டு வந்தால் அப்பாவி மக்கள்,பள்ளி மாணவ,மாணவியர் உயிர் காப்பாற்றலாம் என்று உலகம் முழுவதும் எதிர்பாக்கப் படுகிறது.