Monday 3 November, 2014

பரபரப்பு மத மாற்ற பேச்சும், பத்திரிக்கை செய்திகளும்!

பரபரப்பு மத மாற்ற  பேச்சும், பத்திரிக்கை செய்திகளும்!
(டாக்டர் .பீ .முகமது அலி, .பீ.எஸ்()  
பத்திரிக்கைகள் இஸ்லாமிய மத மாற்றம் பற்றி சமீப காலமாக  தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது அனைவரும் அறிந்ததே! அதற்குக் காரணம் சினிமா பிரபலங்கள் மற்றும் பத்திரிக்கை பிரபலங்கள் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதுதான். சமூக, சமூதாயத்தில் புரையோடி இருக்கும் மூடப் பழக்க வழக்கங்களை நீக்கி, ஏக இறைக் கொள்கையினை பரப்பி, மனிதனைப் புனிதனாக்கக் கூடிய மார்க்கம் தான் இஸ்லாம் என்று அறியாத பலர் தான் இன்னும் இஸ்லாமிய மதமாற்றம் என்று சொல்கிறார்கள்.
இஸ்லாம் இந்தியாவில் இரண்டாவது பெரிய மார்க்கம். 2011 ஆய்வுப்படி 18 கோடி இஸ்லாமியர் கொண்ட மார்க்கமாக திகழ்கிறது. இஸ்லாமியர்  அஸ்ஸாம், மேற்கு வங்கம், .பி , பிகார்  மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் அதிகமாக வாழ்கின்றனர். ஏழாம் நூற்றாண்டில் மலபார் கடற்கரை ஓரம் வர்த்தகத்திற்கு வந்த இஸ்லாமியர் மூலமாகவும், 11 மற்றும் 12 ஆம்  நூற்றாண்டில் வந்த துருக்கிய வம்ச படையெடுப்புகளால் இஸ்லாமிய மார்க்கம் வட இந்தியாவிற்கு தெரிய வந்தது. படைஎடுப்பிற்காக வந்தாலும், இந்திய நாட்டின் பண்பாடு, பொருளாதாரம், கல்வி, அரசியலில் பெரும் பங்காற்றினார் என்று பல்வேறு இந்திய மற்றும் பன்னாட்டு வரலாற்று ஆசிரியர்கள் விவரமாக நூல்களில் எடுத்து இயம்பி உள்ளனர்.
இஸ்லாமிய மார்க்க மாற்றம் ஏழாம் நூற்றாண்டில் மலபார் மன்னர் சேரமான் பெருமாள் மூலம் மனமாற்றம் ஏற்பட்டு இஸ்லாமியத்தினை தழுவினர். அதன் பின்பு பல்வேறு காரணங்களால் இஸ்லாமிய மார்க்கத்தினை தழுவியதாகக் கூறப்படுகிறது வரலாறு. அவைகளில் சில பின் வருமாறு:

1) துருக்கிய வம்சா வழியினர் இந்திய மண்ணில் ஆட்சி செய்தபோது இஸ்லாமியர் இல்லாதவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதிற்காக வரி விதிக்கப் பட்டது. அந்த வரியிலிருந்து தப்பிப்பதிற்காக சிலர் இஸ்லாமிய மார்க்கத்தினை தழுவி உள்ளனர்.
2) இஸ்லாமிய ஏகத்துவ கொள்கைகளை சூபி மற்றும் சுன்னி மகான்கள் மூலம் அறிந்து பலர் இஸ்லாமிய மார்க்கத்திற்கு வந்துள்ளனர்.
3) இந்திய நாட்டு ஜாதி துவேசத்தில் மனம் நொந்த தலித் மக்கள் புத்தமதத்திலிருந்து அம்பேத்கார் மறைவிற்குப் பின்பு இஸ்லாத்திற்கு வந்துள்ளனர்.
இந்திய அரசியல் வாதிகள் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் சிலராலும் இஸ்லாமிய மார்க்கம் வாளால் பரப்பப்பட்டுள்ளது என்றக் குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் இந்திய நாட்டினை 12ஆம் நூற்றாண்டிலிருந்து முதலாம் இந்திய விடுதலைப் போர் நடந்த 1857 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த இஸ்லாமிய மன்னர்களால் இந்திய மக்களில் பெரும்பாலோரை முஸ்லிமாக கட்டாயப்படுத்தி மாற்றவில்லையே அது எப்படி! இன்னும் இந்திய நாட்டு மக்கள் தொகையில் 15 சதவீதம் தானே இஸ்லாமியராக உள்ளனர்! அது மட்டுமா? இஸ்லாமியர் படையெடுக்காத பங்களா தேஷ்இலங்கை, பர்மா, தெற்கு தாய்லாந்து , மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இஸ்லாமியர் அதிகமாக வாழ்வதிற்கு  மன மாற்றம் தானே காரணம்.
உலகில் சமீபகால  இஸ்லாமிய மார்க்கத்தினைத் தழுவிய பிரபலங்கள் என்றால் அமெரிக்காவின் மால்கம் எக்ஸ்குத்துச்சண்டை சாம்பியன்கள் முகமது அலி, மைக் டைசன், எழுத்தாளர் ரிட்லே, விளையாட்டு வீரர்கள் ஜிடேன், யாயாடோரே, பிராங் போன்றவர்கள் முக்கிய மாணவர்கள்.
உலகில் பெரும்பாலான நாடுகளில் இஸ்லாமியர் ஆட்சி நடக்கவில்லை. இருந்தாலும் 10 வருடத்தில் இஸ்லாமியர் 137 சதவீதம் அதிகரித்துள்ளனர். அதிக நாடுகளில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள கிருத்துவர்கள் 46சதவீதம் தான் அதிகரித்துள்ளனர். இதனைப் பார்க்கும்போது இஸ்லாம் வாளால் பரவவில்லை என்ற உண்மைப் புலப்படுகின்றது அல்லவாஒரு வருடத்தில் அமெரிக்காவில் ஒரு லட்சம், ஜெர்மனியில் 4000, இங்கிலாந்தில் 25,000 பேர்கள் இஸ்லாத்திற்கு மாறி உள்ளனர்.


தமிழகத்தினைப் பொருத்தமட்டும் இஸ்லாமிய மார்க்கத்தில் மாற்றம் என்ற பேச்சு 1981ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் மீனாக்ஷிபுரம்  கிராமத்தில் ஜாதி துவேசத்தில் இணைந்தாதால் இந்திய அரசியல் வாதிகளையும் பத்திக்கையாளர்களையும் பரபரப்பாக்கியது. அதனையடுத்து இராமநாதபுரம் மாவட்டத்தில் கூரியூர் கிராமத்தில் மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்ததால்  அது போன்ற பரபப்பு ஏற்பட்டது. அப்போது சிலர் பக்கத்து ஊரில் உள்ள முஸ்லிம் செல்வந்தர்கள் அந்த மக்களுக்கு வளைகுடா நாடுகளில் வேலை தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறியதினால் அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தினைத் தழுவி உள்ளனர் என்று கூப்பாடு இட்டனர்.
1979 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இஸ்லாத்தினை ஏற்று பரபரப்பக்கினார். ஏனென்றால் அவர் ஏற்கனவே பிரகாஷ் கௌர் என்ற பெண்ணை திருமணம் செய்தவர். ஹிந்து திருமண சட்டப் படி முதல் மனைவி இருக்கும்போது இரண்டாம் மனைவி திருமணம் செய்ய வழியில்லை. தர்மேந்திரா நடிகை ஹேமமாலினியை திருமணம் செய்ய முற்படும்போது ஹிந்து திருமணச் சட்டம் தடங்கலாக இருந்தது. ஆகவே முஸ்லிம் மார்க்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு ஹேமமாலினியை திருமணம் செய்தார். இஸ்லாமிய மார்க்கம்  வசதி, மற்றும் உடல் வாகு திடமாக இருந்தால்  நான்கு மாணவி வரை திருமணம் என்ற விதி விலக்கு இருந்ததால் அவருக்கு வசதியாகப் போய் விட்டது.
தமிழகத்தில் ஆஸ்க்கர் விருது பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உண்மைப் பெயர் ஏ.ஆர். திலிப் குமார். அவர் இஸ்லாமிய மார்க்கப் பெயரான ரஹ்மான் என்பதினை தன் பெயருக்குச் சூட்டிக் கொண்டார். அதன் பின்பு இஸ்லாமிய குடும்பத்தில் திருமணமும் செய்து கொண்டார். இதுபோன்று தமிழகத்தில் 2006 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரை இஸ்லாமிய மார்க்கத்தில் இணைத்துக் கொண்டவர்கள் எண்ணிக்கை 2500 என்று புள்ளி விபரம் கூறுகிறது.
தமிழகத்தில் இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்த  மூன்று பிரபலங்கள் பற்றி கேள்விப்பட்டதினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். முன்னாள் திராவிட இயக்க பத்திரிக்கையாளர் இஸ்லாமிய இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பல்வேறு நாடுகளுக்குச் சென்று புகழோடு வந்தார். ஒரு தடவை சென்னை பர்மா பஜார் சங்கக் கட்டிடத்திற்கு வருகை தந்து அங்குள்ள நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருந்தாராம். அதன் பின்பு சங்க நிர்வாகிகளிடம் தான் கஷ்டப் படுவதாகவும் தனக்கு ரூ.10 லக்ஷம் வேண்டும் என்று கேட்டாராம். அதற்கு சங்க செயலாளர் சாகுல் ஹமீது , ' ஆமா,இஸ்லாத்தில் நீங்க மட்டும் தானா மாறினீர்கள் அல்லது உங்க குடும்பமும் மாறியதா என்று கேட்டாராம்'. அதற்கு அந்த பத்திரிக்கையாளர், 'நான் மட்டும்தான் மாறி இருக்கின்றேன், குடும்பத்தினர் இஸ்லாமியத்திற்கு மாறுவது அவர்கள் விருப்பம் என்றாராம்'. உடனே சாகுல் ஹமீது ஒரு முஸ்லிம் முஸ்லிம் அல்லாத பெண்ணுடன் வாழ்வது எங்கள் மார்க்கத்தில் அனுமதியில்லை, ஆகவே உங்கள் மனைவியும் இஸ்லாத்தில் மாறிய பின்பு வாருங்கள் உதவி செய்கிறோம்' என்றாராம். அதன் பின்பு அவர் வரவே இல்லையாம்.
 நான் 2011 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்றிருந்தேன். அப்போது மெல்போர்ன் நகருக்குச் சென்று விக்டோரியா பள்ளியில் ஜும்மா தொழுகைக்காக சென்றிருந்தேன். அங்கே தமிழ் முஸ்லிம் சங்க நிர்வாகி முஜிபுர் ரஹ்மானை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தில் இணைந்த பேராசிரியருக்கு வரவேற்ப்புக் கொடுத்து பட்ட சிரமத்தினை சொன்னார். அந்தப் பேராசிரியருக்கு அழைப்பு விடுக்கும்போது அவர் விதித்த நிபந்தனை அவருடன் மேலும் இருவர் வரவேண்டும் என்பது. அதற்கு ஒத்துக் கொண்டு அதற்காக செலவு செய்து வர வழைத்தார்களாம். அங்குள்ள பள்ளியில் அன்று அவர் பேச அழைத்தார்களாம். மேலை நாடுகளில் தமிழ் முஸ்லிம்கள்  வளைகுடா நாடுகளைத் தவிர குறைவாகவே உள்ளனர். அவர் பேசச் சென்ற இடத்தில் சுமார் 30 பேர்கள் இருந்தார்களாம். அப்போது அந்தப் பிரமுகர் வானத்திற்கும் பூமிக்கும்க் குதித்து, 'தான் 1000 பேர்கள் இல்லாத கூட்டத்திலே பேசியதே இல்லை ஆகவே நான் தங்கி உள்ள ஹோட்டலுக்குப் போகிறேன் என்று அடம் பிடித்தாராம்'. அதன் பின்பு சமாதானம் செய்து 50 பேர்கள் கூடிய பின்பு ஒரு வழியாக பேசி விட்டுச் சென்றாராம். அந்த நிர்வாகிகளுக்கே இவரை ஏன் கூப்பிட்டோம் என்றாகி விட்டதாம்.
சில நாட்களாக தமிழகத்தில் இசைக் குடும்பத்தில் உதித்து, இரு திருமண வாழ்வினைத் துறந்து இருந்த  இசை அமைப்பாளர் ஒருவர் மூன்றாவதாக ஒரு இஸ்லாமிய பெண்ணைத் திருமணம் செய்யப் போவதாகவும் அதற்கு அந்தப்  பெண்ணின் பெரிய தாயார் துவாச் செய்யுங்கள் என்ற  ஆடியோவும், அதனைக் கேலி செய்து மற்ற ஆடியோக்களும் வாட்சப்பில் வலம் வந்த வண்ணம் உள்ளன அனைவரும் அறிவர்.
இஸ்லாமியர் மத்தியில் எழுப்பப்படும் சிலக் கேள்விகளை உங்கள் முன் வைத்து அதற்கு விடை காணலாம் என்ற நோக்கத்தில் இந்தக் கட்டுரை வரையப்பட்டுள்ளது:
1) ஒருவர் இஸ்லாமிய மார்க்கத்தில் சேர்ந்தார் என்றால் அவர் முழுமையாக தன்னை இணைத்துக் கொண்டு அதற்கான அரசு  ஆவணங்களை பூர்த்தி செய்து நிறைவேற்றி உள்ளாரா என்று கவனிக்கத் தவறி விடுகிறோம்.
அதனால் அவர் பெயர் அளவிற்கு முஸ்லிமாக இருந்து வருகிறார். ஒரு பிரமுகர் இறந்தபோது அவர் தன் சட்டக் கடமைகளை சரிவரச் செய்யாததால் அவரை எரிப்பதா அல்லது புதைப்பதா என்ற வீணான  சர்ச்சை ஏற்பட்டது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே!.
2) சிலர் முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்வதிற்காகவே இணைவதாக தர்மேந்திரா போன்றவர் திருமணத்திலிருந்து தெரிகிறது. அதுவும் புகழ் பெற்ற வீடுகளில் திருமணம் செய்து பெயரும் புகழும் அடைய விரும்புவதாகவும் பேசப் படுகிறது. ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து செய்தவர்கள் மறுமணம்  செய்பவர்கள் ஒரு விதவைக்கு அல்லது விவாகரத்தான ஒரு பெண்ணுக்கு  வாழ்வு கொடுத்தால் அல்லது தன்னைப் போன்று இஸ்லாத்தில் இணைந்த ஒரு வேற்று மதப் பெண்ணையோ மணமுடித்தால் நலமாக இருக்கும் என்ற ஆதங்கம் இஸ்லாமியரிடையே இல்லாமல்லில்லை.
3) சிலர் இஸ்லாத்தில் இணைந்தால் வலைகுடா நாடுகளில் வசூல் செய்யலாம், வேலை செய்யலாம் என்ற எண்ணமும் உள்ளது.
4) சிலர் இஸ்லாத்தில் இணைந்து மக்கா, மதினா சென்று அங்கு அச்வத்க் கல்லினைத் தொடும் சடங்குபோல சில சடங்குகளை இஸ்லாமியர் அல்லாதவர் கேள்வி எழுப்ப வேண்டிய செய்திகளை சொல்லி அதனைப் பூதாகரமாக்க முயல்வதாகவும் கூறப்படுகிறது.

இஸ்லாமிய மார்க்கத்தினை முழு மனதுடன் ஏற்று, அதற்கானக சட்ட சம்பந்தமான காரியங்களை நிறைவேற்றி, புகழ் வாய்ந்த மதராசாக்களில் மாணவராக இருந்து  மார்க்கக் கல்வியினைக் கற்று  அதன் பின்பு முழு அளவு இஸ்லாமியர் ஆனால் போற்றப்பட வேண்டியக் காரியமாகும். அதனை விட்டு விட்டு ஏற்கனவே இரண்டு திருமண வாழ்வு நடத்தி, இரண்டு பெண்களையும் விவாக ரத்து செய்து, பின்பு  மார்க்கத்தினைத்  தழுவி சில நாட்கள் சென்று திருமணத் தகவல் தெரிவிப்பதால், ஒரு இஸ்லாமியப் பெண்ணை  திருமணம் செய்வதிற்காக மார்க்கத்தில் இணைந்ததாக வீணான பேச்சுக்கு ஆளாக நேரிடுகிறதல்லவா?


No comments:

Post a Comment