Sunday, 12 May 2013

எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களல்ல'-அமெரிக்கப் பெண்மணி 'இறை இல்லத்தில் புகுந்தால் உயிர் வாழலாம்'-டாக்கா பெண்மணி




எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களல்ல'-அமெரிக்கப் பெண்மணி  'இறை இல்லத்தில் புகுந்தால் உயிர் வாழலாம்'-டாக்கா  பெண்மணி

'காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் நோய்' மற்றும் 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பார்கள்.
11.9.2001 நியுயார்க் இரட்டைக் கோபுர சம்பவத்திற்குப் பின்பு அமெரிக்கர்கள் உலக முஸ்லிம்களை அக்னிக் கக்கும் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்பதினை இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நடிகர்கள் சாருகான்,அமீர்கான், உ.பி.மாநில அமைச்சர் ஆஜம் கான் போன்றோர் முஸ்லிம் பெயரினைத் தாங்கியதாலேயே அமெரிக்கா செல்லும் பொது அங்குள்ள விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளால் அவமானப்படுத்த  பட்ட சம்பவங்கள் வேதனையாக இருந்திருக்கும்.
ஆனால் அதே அவமானத்தினை அமெரிக்க ராணுவத்திலேயே பணியாற்றும் ஒரு அமெரிக்கக் கிருத்துவப் பெண்மணி.' நொய்டா ஹோசென்' பெயர் ஒரு முஸ்லிம் பெயர் போன்று இருப்பதாலேயே தன சக ராணுவ வீரர்களால் அவமானப் பட்டுள்ளார்.
40 வயதான விமானப் படையில் முதல் வகுப்பு சார்ஜெண்டாக உள்ள நோய்டா ஹோசென் ஒரு கத்தோலிக்க கிறிஸ்டியன் பெண்மணி. ஆனால் அவர் பெயர் முஸ்லிம் பெயரான ஹுசைன் போன்று இருப்பதால் ஒருக் கேலிப் பொருளாக தன சக ராணுவ வீரர்களிடம் காணப் படுவதாக வேதனையுடன் புலம்பியிருக்கிறார் என்றால் பாருங்களேன். அப்படி என்ன கேலிப் பொருளாக சக ராணுவ வீரர்கள் கூப்பிடுகிறார்கள் என்றால் ,'சார்ஜெண்ட்  ஹுசைன் நீங்கள் எந்தக் கடவுளை வணங்குகிறீர்கள்' என்று கேலி செய்வார்களாம்'.  சார்ஜெண்ட் ஹோசென் கூறும்போது, 'உலகில் தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்கள் அத்தனை பேர்களும் முஸ்லிம்கள் அல்ல'. அது மட்டுமல்லாமல் முஸ்லிம்கள் அத்தனை பேர்களும் முஸ்லிம்கள் அல்ல ' என்றும் கூறியிருக்கிறார். அவர் சாதாரணமாகக் கூறவில்லை. ஆப்கானிஸ்தானில் ராணுவப் பணியாற்றித் திரும்பியிருக்கும் நிலையில் சொல்லியிருக்கிறார் என்றால் எத்தனை உண்மை என்று உலகிற்குப் புரிந்திருக்கும். யார் கண்டது பிற்காலத்தில் சார்ஜெண்ட் நொய்டா ஹோசென் எல்லா வல்ல அல்லாஹ்வால் ஹுசைனாக மாறினாலும் மாறலாம் என்று நம்புவோமாக.
இஸ்லாமிய மார்க்கம் வன்முறைக்கு எதிரானது, பக்கத்து வீட்டுக்காரன் பசியோடு இருந்தால் தான் மட்டும் வயிறு முட்டச் சாப்பிடுவது சரியல்ல, மதத்தால் எந்த மனிதரையும் வெறுக்ககூடாது, பிற மத வழிபாடு தளங்களை சேதப் படுத்துதல் கூடாது, வழிச் சண்டைக்குப் போகக் கூடாது, சாந்தியும், சமாதானமும் மனிதனுக்குக் கேடையங்கள் என்று மனிதனைப் புனிதனாக்கும் ஒரு அற்புத மார்க்கம் தான் இஸ்லாம். .   அதே சமயத்தில் எலித் தொல்லைக்குப் பயந்து அழகான வீட்டினையே கொளுத்தும் செயலாக இஸ்லாமிய நாடுகளையும், அங்குள்ள மக்களையும் அல்லது பிற நாடுகளில் வாழும் முஸ்லிம்களையும்  அமெரிக்கா போன்ற மேலை நாடுகள் வஞ்சகக் கண்ணோடு பார்க்குமேயானால் சார்ஜெண்ட் நோய்ட ஹோசென் போன்ற மேலை நாட்டுப் படை வீர்கள் மட்டுமல்ல அங்குள்ள மக்களும் தீவிரமாக பரவி வரும் இஸ்லாமிய மார்கத்திற்கு வருவது காலத்தின் கட்டாயமே என்றால் மிகையாகாது!

பங்களா தேசத்தில் 24.4.2013 அன்று எட்டு மாடிகள் கொண்ட அமெரிக்கர் நடத்தும் ஆயத்த ஆடை நிறுவனக் கட்டிடம் இடிந்தது அதில் 1000 பேர் மாண்டதினையும், நூற்றுக் கணக்கானோர் காயம் பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவதினையும் பத்திரிக்கைகளும், 'எலெக்ட்ரானிக் மீடியாக்களும் வெளிச்சம்  போட்டுக் காட்டின அனைவருக்கும் தெரியும். பங்களா தேஷ் அரசாங்கம் மீட்புப் பணிக்கு எந்த அந்நிய நாட்டு உதவியும் தேவையில்லை என்று தன் ஊழியர்களை வைத்தே மீட்புப் [பணியினை மேற்கொண்டது. அவ்வாறு 10.5.2013 ஈடுபடும்போது என்னே அதிசயம், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு ஊழியருக்கு யாரோ ஒருவர் இடிபாடுகளிடையே தட்டுவது போன்ற ஓசைக் கேட்டு சக ஊழியர்களை அழைத்து அந்த இடத்தில் தோண்டும்போது, சுபானல்லாஹ், ஒரு பெண்மணியின் முகம் தென்பட்டது. உடனே அவசரமாக செயல்பட்டு அவரை உயிருடன் 17 நாட்களுக்குப் பின்பு மீட்டிருக்கிறார்கள் என்றால் அதிசியத்திலும் அதிசயம்.
அந்தப் பெண்மணி 19 வயதான முஸ்லிம் பெண்மணி ரேஷ்மா ஆகும். மருத்துவமனையில் சிகிச்சைப் பெரும் அவர் கூறும்போது,'தான் மாட்டிகொண்ட இடம் தொழும் அறையாகும்.  தன்னோடு வேலைப் பார்த்தவர்கள் சிலர் மாண்டு அருகில் கிடப்பதினை பார்த்திருக்கிறார். அந்த அறையின் மூலையில் சில காய்ந்த பேரித்தம் பழங்களும், ஒரு குடுவையில் தண்ணீரும் இருந்தது. அதனை சிறுக, சிறுக சாப்பிட்டு உயிர் வாழ்ந்தேன் எப்படியும் தன்னை மீட்டு விடுவார்கள் என்று உறுதியுடன் அங்கே கிடந்த ஒரு இரும்புத் துண்டையும், இடிபாடுகள் கிடந்தக் கல்லையும் எடுத்து 17 நாட்களும் வெளியே இருப்பவர்கள் கேட்ப்பார்கள் என்ற எண்ணத்தில் தட்டியுள்ளார். ஆனால் 16 நாட்கள் ஆகியும் பலனில்லை என்று சோர்ந்திருக்கும் போது 17ஆம் நாள் தட்டும்போது சத்தம் கேட்டு மீட்டார்கள்' என்று சொல்லியுள்ளார்.
இதிலிருந்து கீழ்கண்டவை புலனாகிறது:
1) புகலிடம் தேடி இறை இல்லத்தில் புகுந்தவர்களை அல்லாஹ் ஒருபோதும் கை விட்டதில்லை.
2) 'எந்தத் துன்பம் தீர்ப்பதிற்கும் என்னிடம் கையேந்துங்கள்' என்ற கூற்று உண்மையாகி இன்னல் பட்ட ரேஷ்மாவினை ஏக இறைவன் காப்பற்றியதுபோல ஈமான் கொண்ட அனைவரையும் அல்லாஹ் காப்பாற்றுவான்.
3) பெருமானார் ஸல்லலாகு அலைவ ஸல்லம் அவர்களும் அவர்கள் தோழர்களும் பல நாட்கள் பேரித்தம் பழத்தினையும், கொஞ்சம் தண்ணீரையும் வைத்தே பல போர்களை வென்றிருக்கிறார்கள் என்பது வெறும் கதை அல்ல. மாறாக நிஜமான நிகழ்வு என்று உங்களுக்கு தற்போதுத் தெளிவாகுமல்லவா?.
4)பெண்கள் அல்லது குழந்தைகள் தனிமையில் இருந்தால் பேய்,பிசாசு , முனி, பூதம் பிடித்துக் கொள்ளும் என்ற சாத்தான் வேதம் ஓதும் பூச்சாண்டிக் புலம்பல் எல்லாம் இனி எடுபடாது. ஏனென்றால் ஒரு பெண்மணி தனிமையில் 17 நாட்கள் 90 டிகிரி வெப்பத்தில் மனத் தைரியத்துடன் வாழ்ந்து இருக்கிறாள். 
5) பயத்தினாலேயே செத்து மடியும் இந்த நவீன உலகத்தில்  மனதில் 'தில்' இருந்தால் எப்படியும் வாழலாம் என்று உலகிற்கு, குறிப்பாக பெண்களுக்கு எடுத்துக் காட்டகத் திகழ்கிறாள் ரேஷ்மா என்ற முக்காடுப் போட்ட முஸ்லிம் பெண்மணி.

'தாயின் காலடியில் சுவர்க்கம் உள்ளது'. தாயார் தின நினைவுக் கட்டுரை!





13.5.2013 அன்று தாய்மார் நாள் அனுசரிக்கப் படுகிறது. ஏனன்றால் கணவனின் அல்லது தன்னைக் கவர்ந்தவனின் நினைவாக பிள்ளையினைத் தன் வயிற்றில் தாங்கி, தான் உண்ணும் உணவுகளை அதற்கு தொப்புழ்க் கொடி மூலம் பகிர்ந்துக் கொடுத்து,வயிற்றில் வளரும் பிள்ளை செய்யும் சேட்டைகளை இன்ப சேட்டையாக தாங்கிக் கொண்டு, பிள்ளை பெறும்போது தான் சில வேளையில் இறக்க நேரிடும் என்ற பயம் இருந்தாலும் பிள்ளையினைப் பெற்றெடுத்து, பெற்றெடுத்த பிள்ளையினை தன உதிரத்தில் பாலூட்டி,தாலாட்டி, சீராட்டி  வளர்க்கும் மகிமையினைக் கொண்ட தாயினை கௌரவிக்க தாய்மார்கள் நாள் உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. ஒரு தாய் எப்போது முதல் தடவையாக சிரிக்கிறாள் என்றால் தனது பிரசவத்தின் போது குழந்தை அழும் சத்தத்தினைக் கேட்டு மகிழ்ச்சியில் சிரிப்பாளாம். 'ஆகவே தான் தாயில் சிறந்த கோவிலுமில்லை' என்ற தமிழ் பழமொழியும் உள்ளது.
1912 ஆம் ஆண்டு அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலத்தில் அண்ணா ஜார்வின் என்ற பெண் தன தாய் நினைவாக 1908ஆம் ஆண்டு ஒரு விழா எடுத்தாள். 1912 ஆம் ஆண்டு ஜனாதிபதி உட்ரோ வில்சன் தாய்மார்களின் நினைவு நாளினை ஒரு விடுமுறை நாளாக அறிவித்தார். அதன் பின்பு உலகில் பல்வேறு இடங்களில் தன் தாய்மார்களுக்கும், பாட்டிமார்களுக்கும் விழா எடுத்தும், பரிசுப் பொருள் வழங்கியும் பெருமைப் படுத்தப் படுகிறார்கள். நமது நாட்டில் சரஸ்வதி பூஜை நேரத்தில் மாதா பூஜையும் நடத்துகிறோம்.
'தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கின்றது என்று சொல்கிறது திருக்குர்ஆன்'. ஆனால் எத்தனையோ மனிதர்கள் பெற்று வளர்த்து, ஆளாக்கிய தாயினையே தனக்கு ஒரு மனைவிக் கிடைத்ததும் எட்டி உதைக்கும் அகங்கார நிலையினை இன்றைய நவீன உலகத்திலேயே கண்கூடாகக் காணலாம்.
அதுபோன்ற ஒரு சம்பவம் எகிப்து நாட்டிலே நடந்துள்ளது. அதாவது ஒரு விதவைத் தாய் தன் மகனை நன்றாகப் படிக்க வைத்து, டாக்டராக ஆக்கி அழகு பார்த்தாள். அவனுக்கு அழகான ஒரு துணைவியையும் தேடி திருமணம் செய்து வைத்தாள். அதன் பின்பு அவன் தன் தாயினை அவன் உதாசீனப் படுத்த ஆரம்பித்தான். அதனைக் கேள்விப் பட்ட முஸ்தபா அமீன் என்ற பத்திரிக்கையாளர், 1943 ஆம் ஆண்டு 'சிரிக்கும் அமெரிக்கா' என்ற(அமெரிக்காவினைக் காப்பி அடிக்கும் கலாசாரம்) ஒரு நூலினை எழுதினார். அதன் எழுச்சியின் பயனாக 1956ஆம் ஆண்டு ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் 'தாயார் தினத்தினை' கொண்டாடும் நாளாக அறிவித்தார். பெற்ற தாயினை, 'கோபத்தில் கூட, "சீ" என்று சொல்லகூடாது என்று இஸ்லாம் சொல்கிறது.
பெற்ற தாய், தந்தையினை சொத்துக்களை நயவஞ்சகமாக அபகரித்து விட்டு, அவர்களை நடுத்தெருவில் அபலைகளாகவும், முதியோர் இல்லத்திலும் தள்ளி விடும் அநாகரிக காலத்தில் தாயார்மார்களுக்கு கௌரவப் படுத்தும் விதமாக தாயார் தினம் கொண்டாடப் படுகிறது பாராட்டக் கூடிய ஒன்றேயாகும்.
ஆஸ்திரேலியா நாட்டில் சிட்னி நகரில் வாழும் கென்னெத் ஹைடன் என்ற பெண்மணி, கைவிடப் பட்ட தாய்மார்கள், தனியாக வாழும் பெண்மணிகளுக்கு உதவ சிறார்களைத் திரட்டி நிதி வசூல் செய்து அவர்களைக் காப்பாற்ற ஒரு நிறுவனத்தினை நிறுவினார். இலை உதிர் காலத்தில் அங்கே பூக்கும் 'கிரிச்தோமம்' என்ற பூக்களினை தங்கள் சட்டையில் குத்தி தாய்மார்களுக்கு அஞ்சலி செய்வார்கள்.

பிரான்ஸ் நாட்டில் 1986 முதல் 1904ஆம் ஆண்டு வரை குழந்தைப் பிறப்பது குறைவாக இருந்ததால் பெண்கள் அதிகக் குழந்தைகள் பெறவேண்டும் என்று தலா ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்த பத்துத் தாய்மார்களுக்கு 1906ஆம் ஆண்டு, 'அதிக குழந்தை பெற்ற தாய்மார்கள்' என்ற பட்டம் சூட்டி கௌரவப் படுத்தப் பட்டார்களாம்.

அமெரிக்காவில் கிளீவ்லாந்து மாநிலத்தில் மூன்று பள்ளிச் சிறார்களை 2002 முதல் 2004 ஆம் ஆண்டுகளில் கடத்தி, கட்டி வைத்து, சித்திரவதை செய்து சிதைத்த காமக் கொடியவனிடமிருந்து 8.5.2013 அன்று மீட்கப் பட்ட நாளினை அந்தக் குழந்தைகளின் தாயார்கள் தங்கள் நாட்களாக கொண்டாடுகிறார்களாம். அதேபோன்று நமது நாட்டில் பாலியல் கொடுமையில் சிதைந்தது பெரும்பாலும் சிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது. அவர்களின் தாய்மார்கள் வேதனையிலிருந்து விடுபட இந்த தாய்மார்களின் நாளினை அவர்களுக்கு அர்ப்பணிப்பது  சாலச் சிறந்ததாகும். 
இந்த ஆண்டு இந்திய பெண்களுக்கு முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். என்னவென்றால், பெண்களுக்கு சொத்துரிமை சட்டமாக்கப் பட்டுள்ளது. பாலியல் குற்றங்களுக்குக் கடுமையான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இப்போதெல்லாம் தனியாக இருக்கும் பெண்களைக் குறிவைத்து கொடியவர்கள் தாக்கி ஒன்று கொலை செய்வது அல்லது அவர்களைத் தாக்கி ஆபரணங்களை அபகரிப்பது போன்ற சம்பவங்கள் நடப்பது அதிகரித்துள்ளது. ஆகவே தனியாக இருக்கும் பெண்கள் பகுதியில் வாழும் ஆண், பெண், இளைஞர்கள் அத்தனை பேர்களும் அவர்களைக் காக்கும் கேடையமாக வாழ்ந்தால் நாடு செழிப்போடு இருக்கும் என்றால் மிகையாகாது  

ஒரு குழந்தை நல்லவனாகவோ அல்லது நல்லவளாகவோ வாழ்ந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் தாயைப் போல சேலை என்று சொல்வார்கள். அந்தப் பெருமை தாயினைச் சேரும்  அதே பெருமையினை இந்த நாளில் நமது தாய்மார்களுக்குச் சேர்ப்போமாக.


Thursday, 28 March 2013

சமூதாய சிந்தனை தேரோட்டம்!



    இன்று அதிகாலை(27.3.2013) நடைப் பயிற்ச்சியில் நண்பர்களுடன் டுபட்டிருக்கும்போது சாவன்னா என்ற நண்பர்  கேட்டார், 'ஏன் காக்கா, நமது சமூதாயத்தில் பெரிய தனவந்தர்கள் இருக்கிறார்களே, அப்படி இருந்தும் ஏழை முஸ்லிம்கள் தங்குவதிற்கான தங்கும் இடங்களோ, அல்லது மருத்துவ சேவைக்கான  மருத்துவமனைகளோ இல்லை,' என்ற ஏக்கத்துடனான வினா எழுப்பினார். அவர் கேட்ட கேள்வியில் பிறந்த விடை தான் இந்தக் கட்டுரை! 
            தமிழகத்தில் குஜராத், மகாராஷ்டிரா,ராஜஸ்த்தான் போன்ற மாநிலங்களில் இருந்து குடியேறிய ஜைன மத மக்கள் 85,000 அதாவது 0.13 சதவீத மக்கள் உள்ளனர். ஆனால் அந்த மக்கள் மண்டலகள் அமைத்து வெளியூரிலிருந்து வரும் ஜைனர்கள் தங்குவதிற்கும், சாப்பிடுவதிற்கும் வசதி செய்து கொடுக்கின்றார்கள்.
அது மட்டுமல்ல இலவச மருத்துவ முகாம்கள் அமைத்து மருந்துடன் கூடிய சேவைகளையும் செய்கிறார்கள்.
சென்னை மின்ட் பகுதியில் ஜெயின் கோவில் பகுதியில் சென்றால் தெரியும்,  கலை,மாலை ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்குகிறார்கள்.
அதேபோன்று திருநெல்வேலி, தூத்துக்குடி விருதுநகர் போன்ற மாவட்டங்களில் உள்ள  நாடார் மகாசபையினைச் சார்ந்தவர்கள் சென்னை வந்தால் தங்குவதிற்கு மண்டபங்கள் கட்டி உள்ளனர். மற்ற ஊர்களிலும் அதுபோன்ற அமைப்புகள் உள்ளன. 
ஆனால் ஏழு சதவீதம் கொண்ட நமது சமூதாயத்தினர் சென்னை வந்தால் இலவசத்திலோ அல்லது குறைந்த கட்டணத்தில் தங்க சென்னை சென்ட்ரலுக்கு எதிர்ப்புறமுள்ள சித்திக் செராயும், புளியந்தோப்பிலுள்ள ஹஜ் கமிட்டியும் தான் உள்ளது. அதேபோன்று இலவசமாகவும் குறைந்த செலவில் உள்ள மருத்துவ சேவையும் சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள கிரசண்ட் மருத்தவ மனையும், வர்த்தக ரீதியாக உள்ள கீழ்பாக் ஆயிசா மருத்துவ மனையும், திருவல்லிகேணியில் ஹிபா, மதனி மருத்துவ மனைகளும் உளளன. கடற்கரை நகரங்களான கீழக்கரை யூசுப் சுலைகா மருததுவ மனை , காயல்ப் பட்டிணம் கே .டி .எம் மருத்துவமனையும், இளையாங்குடியில் செம்பிறை மருத்துவமனையும்  செயல் பட்டு வருகின்றன. ஆனால் மற்ற ஊர்களில் அதுபோன்ற ஒருங்கிணைந்த மருத்துவ மனைகள் இல்லை. ஆகவே பெரும்பாலான சமூதாய மக்கள் அருகில் உள்ள மருத்துவ மணிக்குப் படையெடுக்கும் நிலை ஏற்படுகிறது. அதுவும் வெளிநாடுகளில் வாழும் ஆண் துணையில்லாத பெண்கள் அடுத்த  ஆண் துணையினைத்  தேடுவதால் பல்வேறு தவறுகளுக்கு ஆளாக நேரிடுகிறது. பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் தங்கள் உறுப்பினர்களிடம் ரத்த முகாமுகள் நடத்தி அந்நிய மருத்துவ மணிக்குத்தான் வழங்குகிறார்கள். ஆகவே நமது சமூதாய மக்கள் மருத்துவ மனைகள் அமைத்து சுகாதாரத்தில் தன்னிறைவு பெற வேண்டும்.
ஏற்கனவே உள்ள மருத்துவ மனைக்கு வரும் டாக்டர்ஸ் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க தரமான கல்வி நினையங்கள் இல்லாததால் முஸ்லிம் ஊர்களில் தங்குவதில்லை என்ற குறை இருப்பது உண்மைதான்  சென்னை போன்ற ஊர்களில் உள்ள முஸ்லிம் கல்வி நிலையங்களும் தரமில்லாததால் கிருத்துவர்கள் நடத்தும் பள்ளிகளுக்குப் படைஎடுக்கின்றார்கள். ஆனால் அந்த நிர்வாகத்தால் முஸ்லிம் பெண்கள், ஆண்கள் நடத்தப் படும் விதமே அவமானம் தான்  மியாசி என்ற தென் இந்திய முஸ்லிம்கள் அமைப்புக் கூட்டத்தில் ஒரு உண்மை சம்பவத்தினை ஒரு பொறுப்புள்ள உறுப்பினர் சொன்னார். அதாவது ஒரு முஸ்லிம் பெண் மண்ணடியிலுள்ள ஒரு கிருத்துவ பள்ளிக் கூடத்தின் தலைமை ஆசிரியரின் காலில் தன் மகன் அட்மிஷனுக்கு காலில் விழுந்திருக்கிறார். ஏன் இந்த பரிதாப நிலை என்றால் மண்ணடியில் கூட முஸ்லிம்கள் நடத்தும் மெட்ரிகுலேசன் பள்ளி உள்ளது. ஆனால் அதன் தரத்தினை உயர்த்த முடியாத பரிதாப நிலைத்தான். இந்த கேடுகெட்ட செயலுக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். ஆகவே பதவிக்காக பள்ளி அல்லது கல்லூரி நிர்வாகிகள் என்ற நிலைமாறி முஸ்லிம் சமூதாய மக்களுக்குத் தரமான கல்வி நிலையங்கள் நடத்த வேண்டும்.
            ஐரோப்பாவில் உள்ள முன்னாள் யுகோஸ்லாவியாவில் பிறந்து கல்கத்தாவில் சேவைக்காக தன் வாழ்நாளைத் தியாகம் செய்த அன்னை தெரசா நோபிள் பரிசினை 1979 ஆம் ஆண்டு வாங்கும் பொது அதன் பொருட்டு ஆறு லக்ஷம் ரூபாய் செலவில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.ஆனால் தெரசா தனக்கு விருந்து வேண்டாம். அந்தப் பணத்தினைக் கொடுத்தால் கல்கத்தாவில் நடை பாதையில் வாழும் ஏழைகளுக்கு வழங்குவேன் என்று கேட்டுப் பெற்று பணியாற்றினார். அதே போன்று பதவிக்காக சமூதாய பொது நிர்வாகங்களுக்கு வராது முஸ்லிம் மக்களை வாழ வைக்க வழி வகைகளை சமூதாய இயக்கங்கள் செய்ய வேண்டும்.

Tuesday, 5 March 2013

பெண்கள் உரிமையும் -பெண்களை வலிமைப் படுத்தலும்!


பெண்கள் உரிமையும் -பெண்களை வலிமைப் படுத்தலும்!

ஒவ்வொரு வருடம் மார்ச் மாதம் மனித உரிமை நாளும், பெண்கள் வலிமை நாளும் கொண்டாடப் பட்டு வருகிறது. உரிமை என்பது உறுதி செய்யப் பட்ட சுதந்திரமாகும். ஆனால் பெரும்பாலோருக்கு என்னன்ன உரிமை பெற்றிருக்கிறார்கள் என்பது கூட தெரிவதில்லை. அதிலும் பெரும்பாலான பெண்கள் படிப்பறிவு இல்லாததால் அவர்களுடைய உரிமையினை நிலைநாட்டுவதில்லை.
சமூதாயம் என்பது பல சிறு குழுக்கள் கொண்ட ஒரு கூட்டமைப்பாகும். சமூக விஞ்ஞானி ரோஸ்கோ பவுண்ட் என்பவர், 'பல குழுக்களை நடு நிலை குலையாது பாது காத்தல் அவசியம்' என்கிறார். பல சமூக குழுக்களில் பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள், ஊனமுற்றோர், மற்றும் பிற்படுத்தப் பட்டோர் மிகவும் பாது காக்கப் பட வேண்டியவராவர். ஒவ்வொரு நாகரீக சமூதாயமும் மனித உரிமையினை காக்க வேண்டியது கடமையாகும். 
இன்னொரு சமூக விஞ்ஞானி ராபர்ட் இங்கர்சால், 'ஒரு சமூதாயத்தில் பிரபலமான சாதனைப் படைக்கும் மனிதர்கள் உருவாக வேண்டுமென்றால் அந்த சமூதாயம் பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்த சமூகமாக இருக்க வேண்டும்' என்று கூறுகிறார்.
ஆண்களும் பெண்களும் சமூதாயம் என்ற அழகு கட்டிடத்தினைத்  தாங்கிப் பிடிக்கும் பலமான தூண்களாகும்.  ஆனால் சமீப கால சம்பவங்கள் பெண்களை தரம் தாழ்த்தி அழகு பார்க்கும் ஒரு நிலையாக உள்ளது. பெண்கள் உடல் வாகு இலகுவானதுதான். ஏனெறால் அவர்கள் குழந்தை பெற்கும் திறனும், குழந்தையினை பாலூட்டி வளர்க்கும் சக்தியும் கொண்டதால் வலிமை இழந்தவர்களாக  காட்சி தருகிறார்கள். மிகவும் வலிமை மிகுந்த ஆடவர் பெண்களை காட்டில் புள்ளி மான்களை வேட்டையாடும் வலிமையான புலிகள் போன்று  இருக்கிறார்கள். ஆனால் நாகரீக உலகம் அவர்களை மென்மைப் படுத்த வேண்டும்.
ஆசியாவிலும், தென் அமெரிக்காவிலும் இன்னும் ஆணாதிக்க சமூதாயம் தான் நடந்து கொண்டு இருக்கிறது. ஆணாதிக்க சமூகத்தில் கணவர்கள் மனைவிமார்களை கொடுமைப் படுத்தும் சம்பவங்களும், ஆண்கள் பெண்களை பாலியல் தொந்தரவு செய்வதும், ஆண்கள் சிறார்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதும், இளம் சிறுமிகளை அவர்கள் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொடுப்பதும், அத்துடன் தேவதாசி முறையும், விதவைத் திருமண மறுப்பும், பலதார மணமும்  நடந்து கொண்டுதான் உள்ளது. ஆகவே அரசும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் மக்களுடைய, அதுவும் குறிப்பாக நலிந்த சமூகத்தினரின் உரிமைகள் என்னன்ன என்பதினைப் போதிக்க வேண்டும் என்பது அவசியமான ஒன்றாகும்.
இரண்டாம் உலகப்போரில் பாதிக்கப் பட்டோர் பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளும்,மூத்த குடிமக்களாவோர் ஆவர். ஆகவே பெண்களின் நலன் ஐ.நா.சபையின் பட்டயத்தில் 1945 ஆம் வருடம் அதிகமாக காணப் பட்டது. 1946 ஆம் ஆண்டு உலக பெண்களின் அரசியல், பொருளாதாரம், சிவில், சமூக மற்றும் கல்வி போன்றவற்றின் நிலை பற்றி அறிய ஒரு கமிசன் அமைக்கப் பட்டது. அதன் பலனாக 1948 ஆம் ஆண்டு மனித உரிமை பற்றிய சர்வதேச அறிவிப்பு வெளியானது. அதில் மனிதராக பிறந்தவர் அனைவரும் சுதந்திரப் பறவை மற்றும் சம உரிமை கொண்டவர்கள் என்றும் கூறப்பட்டது. பெண்களைப் பாலியல் குற்றங்களில் தள்ளும் பழக்க முள்ள அந்நாளில் 1949 ஆம் ஆண்டு பெண்களை பாலியல் குற்றத்தில் ஈடுபடுத்துவது குற்றம் என்றும், அவ்வாறு தொழிலில் ஈடு பட்டவர்களை நல்வழிப் படுத்துவது அரசின் கடமை என்று அறிவிக்கப் பட்டது. 1952 ஆம் ஆண்டு பெண்களுக்கு அரசியல் உரிமை கொடுத்து அவர்கள் ஓட்டுப் போடும் வாய்ப்பும் வழங்கி, பெண்களை ஓட்டுப்போடாமல் தடுப்பது குற்றம் என்றும் அறிவிக்கப் பட்டது . வெளிநாட்டுப் பெண்களை மணம் முடித்து அவர்களை கணவர்மார்கள் தங்களுடைய தாய் நாட்டிற்கு அழைத்துச் செல்ல முடியாத நிலையினை 1957 ஆம் ஆண்டு அமைக்கப் பட்ட கமிசன் அவர்களுக்கு கணவர் நாட்டுக் குடிமக்கள் என்று அறிவிப்பு செய்தது. 1967 மற்றும் 1979 ஆண்டுகளில் அமைக்கப் பட்ட கமிசன்கள் பெண்கள் என்பதால் ஒதுக்குவது குற்றம் என்று அறிவிப்புச் செய்ததோடு அவர்களுடைய சுய கௌரவத்தினைப் பாதிக்கும் செயலாக அறிவிப்பு செய்தது. 1993 ஆம் ஆண்டு ஐ.நா.சபை உறுப்பு நாடுகள் அனைத்தும் பெண்களுக்கு எதிரான பொது இடத்திலோ அல்லது தனிமையிலோ வன்முறையில் ஈடுபடுவது குற்றமாக அறிவிக்க வகை செய்தது. இதில் ஒரு ஆச்சரியப்பட விஷயம் என்னவென்றால் கற்காலத்தில் ஸ்கன்டிநேவியன் நாட்டில் எடுக்கப் பட்ட ஆறு பெண்களின் மண்டை ஓடுகளில் ஒரு ஓட்டில் அடிபட்ட காயம் இருந்திருக்கிறது. இது எதனைக் காட்டுகிறது என்றால் காலங்காலமாக பெண்களுக்கு எதிரான வன்முறை நடந்து கொண்டுதான் வந்துள்ளது. ஏன் இன்றைய தமிழக முதல்வர் அவர்களை  1989ஆம் ஆண்டு சட்ட சபையிலேயே அந்நாள் மந்திரிகளும் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களும் இரக்கமின்றி தாக்கிய நிகழ்ச்சி தொலைக் காட்சியில் ஆயிரக் கணக்கானோர் அதிர்ச்சியுடன் பார்த்த வன்முறை சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. 1995ஆம் ஆண்டு பீஜிங் நகரில் கூடிய கூட்டத்தில் ஆண், பெண் ஆகியோரின் அனைத்து வேறுபாட்டினையும் களைந்து அறிவிப்பு வெளியானது.
இந்திய நாட்டின் அரசியல் சட்டம் 1951 பகுதி இரண்டில் பெண்களுக்கான சமத்துவ உரிமையினை உறுதி செய்தது. அதில் சதி தடுப்புச் சட்டம், சீதன ஒழிப்புச் சட்டம், பாலியல் தொழில் ஒழிப்புச் சட்டம் போன்றவை முக்கியமானவையாகும்.
அரசியல் சட்டம் பகுதி  நான்கில் டிரெக்டிவ் ப்ரின்ச்பில் ஆப் ஸ்டேட் பாலிசி என்ற அரசின் கொள்கையினை வழிச் செலுத்தும் நெறிகள் என்ற  பகுதியில் வேலையில் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான ஊதியம்,கருவுற்ற நேரத்தில் பெண்களுக்கான சலுகைகள், பெண்களை மதிக்கும் விதமான அறிவுப்புகள் மற்றும் பெண்களுக்கு அவமான காரியங்களிருந்து விலக்கம் போன்ற நடவடிக்கைகள் போன்றன செயல் படுத்தப் பட்டன.

அதிலும் மனித உரிமைக் காப்பதிலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதிலும் இந்திய நாட்டு நீதி மன்றங்களின் பல் வேறு தீர்ப்புகள்  மெச்சத்தகுந்தது என்றால் மறுக்க முடியாதது ஆகும்.
உதாரணத்திற்கு:
i ) கைதிகளுக்கு கைவிலங்கு இடுவது தடுக்கப் பட்டுள்ளது
ii ) இரவு நேரத்தில் ஆண்கள் இல்லாத வேலையில் வீடுகளில் சோதனை இடுவது தடுக்கப் பட்டுள்ளது.
iii ) பெண்களை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்வது தடுக்கப் பட்டுள்ளது.
iv ) உண்மை இல்லாத கைது போன்ற நடவடிக்கையில் பாதிக்கப் பட்டோருக்கு நிதி உதவி அளிப்பது
v ) பாலியல் கொடுமை  மனித உரிமைக்கு எதிரானக் குற்றம் என்று அறிவித்தல்.
vi ) சிறுமியர் திருமணம் தடுக்கப்பட்டுள்ளது.
vii ) இஸ்லாமியப் பெண்களுக்கு ஜீவனாம்சம் அளிக்கப்பட்டுள்ளது.
viii ) தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினருக்கு எதிரான வன்முறைச் சட்டத்திற்கு வழிவகை செய்தது.
ix ) தேசிய மனித உரிமை கமிசன் அமைப்பதிற்கு வழி வகுத்தது.
x ) தகவல் உரிமைச் சட்டம் இயற்றி சாதாரண குடிமகன் தகவல்ப் பெற சட்டம் இயற்ற வழிவகுத்தது.
xi ) வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு அரசு உணவு வழங்க வேண்டும் என ஆணையிட்டது.
xii ) பிரிடிஸ்  காலனி போலீஸின் புரையோடிய சட்டங்களைத் திருத்த போலிஸ் சீர்திருத்த கொண்டு வர ஆணைப் பிறப்பித்தது.
சமூகத்தில் பெண்களுக்கு வலிமை சேர்த்தல்:
ஒவ்வொரு மார்ச் 8 ஆம் தேதியும் பெண்களுக்கு வலிமை சேர்க்கும் நாளாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. இந்திய தேசம் 1857 ஆம் ஆண்டு முதலாவது விடுதலைப் போரினைக் கண்டது. அதே வருடத்தில் நியூ யார்க் நகரில் மார்ச் மாதம் எட்டாம் நாள் ஆயிரக் கணக்கான வேலைப் பார்க்கும் பெண்கள் தங்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம்பளம் கொடுக்க வேண்டும் என்று போராட்டம் செய்து போலீஸாரால் ஓட, ஓட விரட்டி அடிக்கப் பட்டனர். அந்த நாளை குறிக்ககூடிய தனமே பெண்கள் தினமாக கொண்டாடப் பட்டு வருகிறது. ஆனால் பெண்களுக்கு நிகரான ஊதியம் அமெரிக்காவில் 2008 ஆம் ஆண்டு பாரக் ஒபாமா ஜனாதிபதியான்ப் பின்புதான் வழங்கப் பட்டது என்றால் ஆச்சரியமாகத் தெரியவில்லையா? அப்படிப் பட்ட ஆணாதிக்க மிக்க உலகில் பெண்கள் உலா வருகின்றனர். பெரும்பாலும் பெண்கள் புகுந்த வீட்டிதால் கொடுமையினை அனுபவிக்கின்றனர்.
இன்றைய உலகில் பெரும்பாலான பெண்கள் வறுமையில் வாடுகின்றனர். உலக விலை வாசி உயர்வில் ஒரு வேலை உணவு உண்பது என்பதே பெண்களுக்கு அரிதாக இருக்கும்போது அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கு எப்படி பாலூட்டமுடியும் என்பதினை சோமாலிய, மொசாம்பிக்,நைஜீரியா போன்ற நாடுகளில் பெண்கள் நிலையும், குழந்தைகள் நிலையினையும் தொலைக் காட்சிகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. உலகில் படிக்காதவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள், எச்,ஐ.வி. போன்ற நோயால் பாதிக்கப் பட்டோர் பெரும்பாலும் பெண்கள்தான். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவ மனைகளும் உண்டு. ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்று மில்லியன் பெண் குழந்தைகள் பள்ளிகூடத்திலிருந்து நின்று விட்டன. காரணமென்ன என்று ஆராய்ந்தால் பள்ளிக்கூடத்தில் தனியான கழிவறை இல்லை என்பதுதான்.
ஆகவே பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற மைக்ரோ பினான்ஸ் என்ற சிறு பொருளுதவி தொழில் தொடங்க மகளிர் சுய உதவி குழுக்கள் போன்ற உதவி செய்தால் பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற முடியும்.
இன்று இந்திய நாட்டில் பஞ்சாயத் ராஜ் என்ற மூன்றடுக்கு தேர்தல் முறையும் அதில் பெண்களுக்கான முப்பது சதவீத ஒதுக்கீடு மூலம் 80,000 மகளிர் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். அதேபோன்று பிற்பட்டோருக்கும் மகளிரில் ஒதுக்கீடு செய்து சட்டமன்றம் மற்றும் மக்களவையிலும் ஒதுக்கீடு செய்து பெண்கள் குரல் அதிகமாக இந்திய ஜனநாயகத்தில் ஒலிக்க வழி வகை செய்ய வேண்டும்.
அனால் அவர்களுக்கு கல்வியும் உரிய உரிமையும் கொடுத்தால் அவர்கள் ஆண்களை மின்சுபவர்களாக இருக்கின்றார்கள் பல உதாரணங்களால் நிரூபிக்க முடியும்:
i ) இன்று உலகின் முக்கிய நாடுகளான ஜெர்மனி,தென் கொரியா,பிரேசில், கொசோவோ, ஐயெர்லண்ட், செர்பியா, மாளவி,பங்களாதேஸ் போன்ற நாடுகளில் பெண் அதிபர்கள் உள்ளனர்.
ii ) உலகின் உயர்ந்த விருதான நோபெல் பரிசினை 40 பெண்கள் பெற்றுள்ளனர். இந்த வருடம் அமைதிக்கான நோபெல் பரிசினை கூட்டாக எமனைச் சார்ந்த தவக்கல் என்ற பெண்மணியும், கென்யாவினைச சார்ந்த மதாயும் கூட்டாகப் பெற்றுள்ளனர்.
iii ) பர்மாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறை சென்றாலும் போராடி ஜனநாயகத்திற்கு நோபெல் பரிசுப் பெற்ற ஆங் சன் சூ கி வழி வகுத்துள்ளார்.
iv )  தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தாலும் பரவாயில்லை என்று பெண் கல்விக்காக குரல் பாகிஸ்தானைச் சார்ந்த மலாலா கொடுத்துள்ளார்.
v ) வின் வெளிப் பயணத்தில் ஆண் துணையில்லாது விண்கலத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்று திரும்பி இருக்கிறார் சுனித வில்லியம்.
vii ) லண்டன் ஒலிம்பிக்கில் மெடல் வாங்கிதிரும்பி இருக்கிறார்கள் மேரி கொமும் மற்றும் சைனா நேஹ்வாலும்.
viii ) அண்டை நாட்டின் வாலாட்டத்தினை 1971 ஆண்டுப் போரில் ஒடுக்கியும், தேசிய ஒருபைப்பாட்டினை காளிஸ்த்தான் தீவிரவாதிகளை ஒடுக்கி தன உயிர் போனாலும் பரவாயில்லை என்று உலகிற்கு காட்டிய இந்திரா காந்தியாலும்
ix ) வல்லரசு அமெரிக்காவில் இந்திய வம்சா வழி பொருளாதார நிபுணராக பொருபேற்றிருக்கும் இந்திரா நூயி 
 x ) ஆணாதிக்க மிக்க தமிழகத்தில் சிறை சென்றாலும் மூன்றாவது முறையாக அரியணை ஏறிய தமிழக முதல்வர் ஆகியோராலும் பெண்கள் முன்னேற முடியும் என்று உலகிற்கு காட்டப் பட்டுள்ளது.