Thursday, 13 April, 2023

நாகாக்க-காவாக்கால் சோகப்பார் சொல்லிழுக்குப்பட்டு!

 

              (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

இஸ்லாமிய மார்க்கத்தில் எல்லா சமுதாயத்திற்கும், எல்லா காலத்திலும் பொருந்தும் விதமாக, 'ஒருவர் மனித உறுப்புகளில் பாதுகாப்பது இரு உறுப்புகள் அவசியம், அவை ஒன்று நாக்கு, மற்றொன்று மர்ம உறுப்பு' ஆகியவையாகும் என்று அறிவுரை கூறியுள்ளது. அந்த இரண்டு உறுப்புகளையும் பாதுகாக்கத் தவறினால் தனக்கும், தனது குடும்பத்திற்கும், தன்னைச் சார்ந்த சமுதாயத்திற்கும், ஏன் நாட்டினுக்கும் கூட இழுக்காக முடியும் என்பதினை அறிந்தே சொல்லி உள்ளது எப்படி சாலச்சிறந்தது இந்தக் காலத்திற்கும் பொருந்தும் என்பதினை விளக்கவே இந்த கட்டுரையினை எழுதுகிறேன்.

            உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் அமெரிக்க கோல்ப் மைதானத்தில் பந்துகளை எடுத்துப் போடும் சேவகராக இருந்த ஒருவரின் மகனாக பிறந்து பிற்காலத்தில் உலக கோல்ப் விளையாட்டில் பல்வேறு பந்தயங்களில் வாகை சூடிய ‘டைகர் வூட்ஸ்’ பிற்காலத்தில் ஒரு போட்டிக்காக ஆஸ்திரேலியா சென்றபோது அங்கே ஒரு பெண்ணிடம் தொடர்பு கொண்டார் என்பதினை அறிந்த  அமெரிக்க மனைவி அவர் அமெரிக்கா திரும்பியதும் அவருடன் சண்டை போட்டதால் அந்த வெறுப்பில் மது அருந்தி தன் சுய நிலை இழந்து ஒரு விபத்தினை ஏற்படுத்தி வழக்கினையும் சந்தித்து விவாகரத்தில் உழன்றார். அதே நிலை தான் கல்லூரி படிப்பில் பாதியில் நிறுத்தி, பின்பு தனது கல்லூரி தோழனுடன் 'மைக்ரோ சாப்ட்ஸ்' என்ற கணினி மையம் ஆரம்பித்து உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் ஐந்திற்கும் இடம் பிடித்தவர் 'பில் கேட்ஸ்'. ஆனால் அவர் தன்னுடைய தொழில் பங்குதாரின் மனைவியுடன் தொடர்பில் இருந்தார் என்ற தகவல் அறிந்து தொழில் தோழனின் நட்பையும் இழந்தார். மனைவியுடையான குடும்ப வாழ்க்கையும் மணமுறிவில் முடிந்தது. இதுபோன்ற நபர்களிடம் யார் தான் வாழ முடியும் மட்டுமல்ல, சம்பாதித்த புகழ் அனைத்தையும், உலக நன் மதிப்பையும் இழந்தது தான் மிச்சம்.

            தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் ராணுவ வீரர் விடுமுறையில் வந்திருந்தார். அப்போது அந்த கிராமத்தில் இரு குழுவினர் தகராறில் காயமடைந்த ராணுவ வீரர் இறந்து விட்டார். அந்த குற்றவாளிகளில் ஒருவர் ஆளும் கட்சியைச் சார்ந்தவர். ஆகவே ப.ஜ.க கட்சியியைச் சார்ந்தவர்கள் 22.2.2023 அன்று ஒரு கண்டனக் கூட்டம் நடத்தினர். அதில் பேசிய முன்னாள் ராணுவ அதிகாரி, 'பாண்டியன்' எங்களுக்கு துப்பாக்கியால் சுடவும் தெரியும், குண்டு வைக்கவும் தெரியும்' என்று வீர வசனம் பேசியது சர்ச்சைக்கு ஆளாகி வழக்கு பதிவும் செய்யப் பட்டது. உடனே அவர் ஜாமீனுக்காக உயர் மன்றத்தில் மனு செய்தபோது உயர் நீதிமன்றம் அவருக்கு கண்டனம் செய்து அவர் கூறியதிற்கு மன்னிப்பும் கோரச் செய்தது. அதேபோன்று சமீபத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் 13.2.2023 அன்று பட்டியலின ‘அருந்ததியர்’ மக்களை கேவலமாக பேசியதால் அந்த மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஆளாகி, அந்த கட்சி வாங்க வேண்டிய வோட்டுகளும் குறைந்தன என்பது நீங்கள் அறிந்தீர்கள். ஆகவே தான் நம் முன்னோர்கள் ஒருவர் பேசும்போது என்ன பேசுகிறோம் என்பதினை உணர்ந்து பேச வேண்டும், ஏனென்றால் ஒருவர் நாக்கிலிருந்து புறப்படும் வார்த்தை வில்லிலிருந்து புறப்படும் அம்பைப் போன்றது, அந்த வார்த்தைகளை திரும்பப் பெறமுடியாது என்றும், நாவினை காத்துக் கொள்ளுங்கள் என்றும் சொன்னார்கள். பெண்கள் கூட்டத்தில் முஸ்லிம் பெண்கள் சத்தம் போட்டு பேசிக்கொண்டு இருந்தால் வயதான பெண்கள் 'ஏம்மா வாயை மூடுங்கள் ஸலாமத்து' பெறுவீர்கள் என்று சொல்லி அடக்குவார்கள்

            அமெரிக்க 2020 ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பிற்கும், ஜோ பிடனுக்கும் நேரடி போட்டி அதில் ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் தோற்றாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு தனது சொந்த நாட்டு பாராளுமன்றத்தினையே தாக்கச் செய்து, பெண் விவகாரத்திலும் கைது செய்யப் பட்ட முதல் முன்னாள் ஜனாதிபதி என்பது அவர் வாயாலும், பெண் ஆசையாலும் அவமானப் பட்டார். அதேபோன்று தென் அமெரிக்க நாடான பிரேசிலில் 2022 ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ‘போல்சாரா சில்வா’  தோற்றாலும் தற்போதைய  ஜனாதிபதி ‘லூலூ’ அவர்களை அங்கீகரிக்க மறுத்து தனது ஆதரவாளர்களை பாராளுமன்றத்தினை தாக்கும் படி உத்தரவிட்டார். அதன் விளைவு தேர்தல் முடிவுகளை ஒப்புக் கொண்டு தன் சொந்த நாட்டினைவிட்டே ஓடினார் என்பதும் ஒரு வரலாறு. ஆகவே வார்த்தை, நடத்தையில் கண்ணியம், நாணயம்  வேண்டும் என்பதே மேற்கூறிய இரண்டு சம்பவங்களும் எடுத்துக் காட்டுகின்றன.

            இந்திய தேசிய காங்கிரசில் தலைவர் பதவி வகித்த ராகுல் சமீபத்தில்  தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இழந்து நீதிமன்ற கதவுகளை தட்டிக்கொண்டுள்ளார் என்பதிற்கு காரணம் என்னவென்றால் அவர் 2019ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் சொல்லிய ஒரு வார்த்தைக்காக குஜராத்தில் ஒரு நீதிமன்றத்தால் இந்திய தண்டனைச் சட்டம் 153(பி)(சி), 506(1) போன்றவைகளில் சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில் பேசினார் என்ற மான நஷ்டஈடு வழக்கில் இரண்டு வருடம் தண்டனை கொடுக்கப் பட்டு அதன் மூலம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தால் மக்கள் சபை உறுப்பினர் பதவியையும் இழந்துள்ளார். அந்த வார்த்தை என்னவென்றால் ‘மோடிகள்’ எல்லோரும் திருடர்கள் அவர்கள் திருடிவிட்டு நாட்டினை விட்டு ஓடிவிடுவார்கள் என்று. ஆனால் மோடி என்பது ஒரு குஜராத்தி ஜாதியினைக் குறிக்கும் என்பதால் அதனால் பாதிக்கப் பட்ட ஒருவர் தொடரப் பட்ட வழக்கில் தான் தண்டனை பெற்றுள்ளார். அவர் குறிப்பிட்டதாக சொல்லப் படும் ‘மோடி’ என்பது சூதாட்டத்தில் தொடர்புடைய 'லலித் மோடி' லண்டனுக்கு ஓடிப் போனதும், பாங்கில் கடன் வாங்கி கட்டமுடியாமல் லண்டனுக்கு ஓடிய ‘நிராவ் மோடி’யினை குறித்தாலும், இந்திய நாட்டு பிரதமரையும் அவர் சார்ந்த மோடி வகுப்பினரையும் குறிவைத்து சொல்லப் பட்ட வார்த்தை என்று வழக்குத் தொடரப் பட்டு தண்டனையும் வழங்கப் பட்டது.

            பாரத நாட்டினில் சுதந்திரத்திற்காகவும், நாட்டிற்காகவும் அதிக தியாகம் செய்தவர்கள் நேரு குடும்பம் என்பதினை யாரும் மறுக்க முடியாது. இரும்பு மனுசி என்று போற்றப் பட்ட ‘இந்திரா காந்தி’ நாட்டின் ஒருமைப்பாட்டினை காக்க 1984ல் உயிர் தியாகம்  செய்தார். நாட்டில் வேகமான இளம் தலைமுனரின் எடுத்துக் காட்டாக வருவார் என்று எதிர்பார்த்த ‘சஞ்சய் காந்தி’ போதிய அனுபவம் இல்லாமல் விமானம் ஓட்டியதால் 1980 ல் இறந்தார். இலங்கை தமிழர்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்று கருதி தீவிர நடவடிக்கை எடுத்த ராஜிவ் காந்தி அந்த இலங்கை தமிழர்களாலே 1991ல்  கொல்லப் பட்டார். அதன் பின்பு இளம் ரத்தம் ராகுல் முன்னேறிவருவார் என்று உ.பி. அமேதி மக்கள் சஞ்சய், ராஜிவ், சோனியாவிற்குப் பின்பு ராகுலை 2004லிலிருந்து 2019 வரை மக்களவை உறுப்பினராக தேர்தெடுத்தார்கள். ஆனால் அவர் தனது தொகுதியில் அதிக கவனம் செலுத்தாது, தேர்தல் நேரத்தில் ஹிந்து மக்களை கவருவதிக்காக மடாதிபதிகள், கோவில்கள் போன்ற வழிபாடு தளங்களில் சென்று கவனம் செலுத்தினார். அடிக்கடி இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டார். ஆகவே அந்த மக்கள் தன்னை மறுபடியும் தேர்தெடுக்க மாட்டார்கள் என்று கேரள மாநிலம் வயநாடு பகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் தொகுதி நேரு குடும்பம் மீது பாசமிக்க முஸ்லிம்கள் என்று அங்கே நின்று வாகை சூடினார். ஆனாலும் அவரால் அந்த வயநாடு மக்கள் பலன் அடையவில்லை என்று பரவலாக பேசப் படுகிறது. அவர் அடுத்தது தமிழ்நாடு கன்னியாகுமரி, அல்லது சிவகங்கை  மாவட்டத்தினை குறி வைப்பதாகவே சொல்லப் படுகிறது. இவை எல்லாம் அரசியல். ஆனால் இங்கே வலியுறுத்துவது என்னவென்றால் காங்கிரஸ் உதவி தலைவர், பின்பு தலைவர் என்று பதவி வகித்தாலும் அதற்கு முதிர்ந்த செயல்கள் இல்லையே என்று சில சம்பவங்களைக் கொண்டு விளக்கலாம் என்று கருதுகிறேன்.

            மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(1),(2),(3) ஆகியவற்றின் படி மன நலம் பாதிக்கப் பட்டவர், கடன் பிரச்சனையால் திவாலானவர், தேசியக் கொடியினை அவமதித்தவர், வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள், தீவிரவாத செயல்களில் தொடர்பு, பாலியல் போன்ற பெண்களுக்கான குற்றங்கள், தேர்தலில் வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல், ஊழல், முறைகேடு போன்ற குற்றங்களுக்காக தண்டனை பெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற, மேலவை உறுப்பினர் போன்ற பதவிகளில் நீடிக்க முடியாது என்பது தான் அந்த சட்டம். அவர்கள் 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதையும் கூறியுள்ளது. ஆனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8 உட்பிரிவு 4ல் அப்படிப் பட்டவர்கள் உடனேயே பதவி இழக்காமல் 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து தண்டனையினை நிறுத்தி மேல் நீதிமன்றங்கள் உத்தரவிட்டால் அவர்கள் பதவி தொடரலாம். இந்த சட்டப் பிரிவு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கே விரோதமானது என்று அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ‘லில்லி தாமஸ்’, ‘சுக்லா’ ஆகியோர் மனு செய்திருந்தனர். அவர்கள் சொல்லுவதினை ஏற்று சட்டம் 8 உட்பிரிவு 4 செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

            அந்த நேரத்தில் பிஹார் பிற்பட்டோர் சமுதாயத்தினைச்சார்ந்த லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் எம்.பி மசூத், சமாஜ்வாடி எம்.பி. ஆசம் கான், டி எம்.கே மந்திரி ராஜா, எம்.பி. கனிமொழி ஆகியோர் தங்கள் வழக்குகளில் தண்டனை எதிர் நோக்கி இருந்தனர். அவர்கள் கட்சிகள் மத்தியில் மன்மோகன் அரசினை ஆதரித்து இருந்தனர். அந்த சமயத்தில் ராகுல் துணை தலைவராக இருந்தார். மத்தியில் மந்திரி சபை தீர்மானித்து 2013ம் வருடத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தனர். அதில் தண்டனை பெற்றாலும் ஒருவர் முழு மேல்முறையீடு முடியும் வரை பதவி இழக்க வேண்டியதில்லை என்பதாகும். அதன் பின்னர் மன்மோகன் சிங் ஐ.நா சபையில் பேசுவதிற்காக அமெரிக்கா சென்றிருந்தார். ராகுல் வெளிநாடு சென்று திரும்பியிருந்தார். காங்கிரஸ் சார்பாக சட்ட திருத்த மசோதாவை பற்றி விளக்க ஒரு நிருபர் காங்கிரஸ் பிரதிநிதிகளிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் நிருபர் கூட்டத்திற்கு வந்த ராகுல் என்ன மசோதா என்று கேட்டுவிட்டு, அதனை பார்வையிட்டபின்பு 'நான்சென்ஸ்' அது குப்பையில் போடவேண்டுமென்று கிழித்து போட்டுவிட்டார். அது அனைத்து தொலைக்காட்சியிலும் காட்டப் பட்டது. அதனை அமெரிக்காவில் முகாமிட்டிருக்கும் மன்மோகன் சிங்கிடம் அவர் காரியதரிசி சொன்னதும், சில நிமிடம் மெளனமாக இருந்த மன்மோகன் சிங் 'காரியதரிசியிடம்' 'do you think I must resign' அதாவது 'நான் ராஜினாமா செய்ய வேண்டுமா' என்று கேட்டுள்ளார். அதற்கு காரியதரிசி அனைத்தையும் டெல்லி சென்று சோனியாவினை கலந்த பின்பு முடிவு எடுங்கள் என்று கூறியதாக அவர் காரியதரிசி Sanjaya Baru ஓய்விற்கு பின்பு எழுதிய சுய சரிதையில் கூறியுள்ளார். அதன் பிறகு டெல்லி திரும்பியதும் சோனியா காந்தியை சந்தித்து விவாதத்திற்குப் பின்பு அந்த திருத்த மசோதா திரும்பப் பெறப்பட்டதால் லாலு பிரசாத் யாதவ், மசூது, ராஜா, கனிமொழி, ஆசாம் கான் ஆகியோர் சிறைவாசம் சென்றனர். காங்கிரஸ் யு.பி.ஏ. கூட்டணி அரசும் பதவி இழந்து 2014ல் பி.ஜே.பி அரசு பதவி ஏற்று இன்று வரை பதவியில் இருப்பதால் மதத்துவேசம், மத கலவரம், சிறுப்பான்மையோர் பாதிப்பு, பசுவின் பெயரால் கொல்லப் படுதல், சமூதாய ஒற்றுமைக்கு வேட்டு வைத்தல் போன்ற சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுள்ளன என்பதினை யாரும் மறுக்கமுடியாது. இதேபோன்று தான் 2019ல் ராகுல் பிரதமந்திரியை ரபேல் விமானம் வாங்கிய விககாரத்தில், 'பிரதமரை குறிக்கும் விதமாக 'சவுக்கிடா சோர்' அதாவது காவலாளி திருடன் என்று குறிப்பிட்டு பேசியதால் உச்ச நீதிமன்றத்தில் மான நஷ்டஈடு வழக்கு தொடரப்பட்டு, 'நிபந்தனையற்ற மன்னிப்பும்' பெற்றார்.

            ‘ராஜா வீட்டு கன்றுக் குட்டி’ என்ற நினைப்பில் மனம்போன போக்கில் காரியங்களை நடத்துவதால்  மிகவும் விசுவாசிகளான குலாம் நபி ஆசாத், ஏ.கே.அந்தோனி, ஜோதிர்மயி சிந்தியா, ஜெட்டின் பிர்சாடா அசாம் ஹேமந்த் சர்மா, அசோக் சவான், கர்நாடக கிருஷ்ணா,அம்ரிந்தர் சிங்   போன்றவர்கள் கட்சியில் இருந்து ஒன்று விலகினர்  அல்லது தாமரை இலை தண்ணீராக இருந்து வருகின்றனர். தவளையும் தன் வாயால் கெடும் என்பதால் ராகுல் தன் வாயால் கெட்டுவிட்டு கன்னியாகுமரியிலிருந்து காஸ்மிர் வரை மராத்தான் நடை போட்டால் தனக்கு 2024 தேர்தலில் ஆதரவு கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றார். மராத்தான் போட்டியில் கலந்து கொண்டுள்ளவர்கள் அனைவரும் மாரத்தான் போட்டியினை நடத்துனருக்கு எல்லா நேரத்திலும் ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர் பார்க்கக் கூடாது. ராகுல் பதவிநீக்கம் தன் வினை தன்னைச் சுடும் என்பதிற்கு எடுத்துக் காட்டு என்று  இப்போதாவது உணர்ந்தால் சரிதானே!

           

           

           

தாழ்த்தப் பட்ட மக்களின் எழுச்சி நாயகர் அம்பேத்கர்!.


(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்.(ஓ)

நாளை சித்திரை முதல் நாள், தமிழ் மக்கள் கொண்டாடும் சித்திரை திருவிழாவிற்கு ஆரம்பம் நாள். அத்தோடு அனைவராலும் அண்ணல் என்று புகழைப் பட்ட அம்பேத்கர் பிறந்த நாளாகும். அவருக்கு மாலை போடுபவர்களுக்கு அவர் ஏன் ‘அண்ணல்’ என்று அழைக்கப் படுகிறார் என்று கேட்டால் இந்திய அரசியல் சட்டத்திற்கு தலைமையேற்றவர் என்று மட்டும் கூறுவார்கள். ஆனால் அவர் இந்திய ஜாதியக் கொடுமையினை காலில் போட்டு மிதித்துவிட்டு பீனிக்ஸ் பறவையாக உயர்ந்தவர் என்று பலருக்கும் தெரியாது.

‘ஜாதிகள் இல்லையடி பாப்பா,உயர் தாழ்வு உயர்வு சொல்வது பாவம்’ என்றார் சுப்ரமணிய பாரதி. அந்த ஜாதிய கொடுமைகளை வேரறுக்க சட்டத்தின் மூலம் அடித்தளம் அமைத்தவர் அண்ணல் அம்பேத்கர். 14.04.1891 அன்று பிறந்தவர். அவருடைய தந்தை ராம்ஜி காரெகோன் ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றினார். அவர் ‘மகர்’ என்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய, தீண்டத்தகாத இனத்தில் பிரிவில் பிறந்தவர். ராம்ஜிக்கு இரண்டு மகன்கள். அதில் இளையவர் அம்பேத்கர் ஆகும். 1901 ம் ஆண்டு அவர்களுக்கு ராம்ஜி ஒரு கடிதம் எழுதியிருந்தார். தந்தை வேலை பார்க்கும் இடத்திற்கு கோடை விடுமுறை கழிக்க வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். அதனை அறிந்த அம்பேத்கரும், அவருடைய சிறு வயது அண்ணனும் ‘சட்டாரா’ ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறி ‘மசூர்’ வந்திறங்கினர். அவர்களின் தந்தை வேலை காரணமாக ரயில் நிலையம் வரவில்லை. அங்கிருந்து தந்தை வேலை பார்க்கும் இடத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் மாட்டு வண்டியில் தான் செல்ல வேண்டும். ஆகவே சிறுவர் இருவரும் ஒரு மாட்டு வண்டியை  வாடகைக்கு அமர்த்த முயன்றனர். ஒரு மாட்டு வண்டி உரிமையாளர் அந்த சிறுவர்கள் கீழ் ஜாதி என்று தெரிந்து அவர் வர மறுத்து விட்டார். அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கும்போது, ஒரு நல்ல மனம் கொண்ட ரயில் நிலைய மேலாளர் வேறொரு மாட்டு வண்டி ஓட்டுனரிடம் அந்த சிறுவர்கள் பரிதாப நிலையினை எடுத்து கூறி அவர்களை தந்தை வேலை பார்க்கும் இடத்திற்கு அழைத்துச்செல்லுமாறு வேண்டினார். சிறிது தயக்கத்திற்குப் பின்பு அந்த மாட்டு வண்டிக்காரர், 'என் வண்டியில் அவர்கள் வரலாம், ஆனால் அவர்கள் தான் ஓட்ட வேண்டும், நான் அவர்கள் பக்கத்தில் உட்கார மாட்டேன், வாடகையும் அதிகம் வேண்டுமென்றார்’. அதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். வண்டி புறப்பட்டடது. வண்டி உரிமையாளர் அவர்கள் தீண்டத்தகாதவர் ஆனதால் அவர்கள் பக்கத்தில் உட்காராது வண்டிக்குப் பின்னால் நடந்து வந்தார்.

போகும் வழியில் அந்த சிறுவர்களுக்கு பசி எடுத்தது, ஆகையால் அவர்கள் கொண்டு வந்த உணவை தின்றார்கள். தாகம் தீர்க்க வழி நெடுக தண்ணீர் கேட்டார்கள் ஆனால் யாரும் கொடுக்க வில்லை. அதே போன்று அம்பேத்கர் படித்த பள்ளியில் அவரை மற்ற பிள்ளைகளுடன் அமர அனுமதிக்க வில்லை. அவருக்கு உட்கார ஒரு சாக்குப் பை கொடுத்தார்கள். அதேபோன்று பள்ளி தண்ணீர் தொட்டியில் அவரை தாகம் தீர்க்க விட வில்லை. மாறாக பள்ளி காவலாளி  உயரத்தில் நின்று கொண்டு ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து அம்பேத்கரை கையில் ஏந்தி தண்ணீர் குடிக்க வைத்தாராம். ஏதாவது ஒரு நாள் காவலாளி அலுவளுக்கு வரவில்லையென்றால் அம்பேத்கர் தாகத்தினை அடக்கிக் கொள்ள வேண்டுமாம். மற்ற மாணவர்களுக்கு ‘சமஸ்க்ரிதம்’ போதனை செய்தால் அவருக்கு மறுக்கப் பட்டதாம். மேற்கொண்ட சமுதாய கொடுமைகள் கண்டு மனம் வெதும்பி நாமும் மற்றவர்களுக்கு மேல் சமுதாயத்தில் உயர வேண்டும் என்று உறுதிமொழி எடுத்து படிக்க தொடங்கினாராம். வகுப்பில் முதல் மாணவராகி, இங்கிலாந்தில் மேல் படிப்பிற்கு இலவச சலுகை பெற்று உயர்ந்த பொருளாதார பட்டம் பெற்றார், அத்துடன் கொலம்பியா பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி டாக்டர் பட்டமும் பெற்றார். பின்பு லண்டனில் பாரிஸ்டர் சட்டம் பட்டமும் பெற்றார். எந்த சமுதாயம் அவரை ஒதுக்கியதோ அதே சமுதாயத்தில் உள்ள புரையோடிய ஜாதிய முறையினை ஒழித்து பின் தங்கிய, தாழ்த்தப் பட்ட மக்களுக்கு சலுகைகள் செய்ய வேண்டும் என்ற வைராக்கியம் கொண்டார். இந்தியா சுதந்திரமடைந்த பின்பு 1950 அரசியலமைப்பு சபையின் தலைவராகி முதன் முதல் சட்ட மற்றும் நீதி அமைச்சரானார். ஆகவேதான் இன்றும் சென்னை உயர் நீதி மன்ற வளாகத்தில் அண்ணல் அம்பேத்கர் ஆளுயர சிலை உள்ளது. அதனால் தான் அவர் பிறந்த நாளை சிறப்பாக இந்தியா முழுவதும் கொண்டாடப் படுகிறது.

Sunday, 19 March, 2023

கண்ணைத் திறந்து விட்டதா-நீதிதேவதை!

 

                      

(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)

இந்திய அரசியலமைப்பு சபை முதன் முதலில் 9.12.1946 அன்று கூடியது. மறுபடியும் 14.8.1947 அன்று ஆங்கிலேய அரசிடமிருந்து விலகி முழு அதிகாரம் பெற்ற சபையாக மாறியது. ஆங்கிலேய அரசின் இந்திய வைஸ்ராயாக இருந்த லார்ட் மவுண்ட்பேட்டன் பிரபு திட்டத்தின் படி பாகிஸ்தான் என்ற தனி நாடாக 3.6.1947 அன்று தீர்மானிக்கப் பட்டது. இந்திய அரசிலமைப்பு சபை பி.ஆர். அம்பேத்கார் தலைமையில் முன்ஷி, முகமது சாதத்துல்லாஹ், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், கோபாலசாமி அய்யங்கார். கெய்ட்டான், பீட்டர் உறுப்பினர்களாக கொண்ட ஒரு குழுவினை 29.8.1947 அன்று இந்திய மக்கள் ஜாதி, மத, இன , மொழி உணர்வின்றி வேற்றுமையில் ஒற்றுமையாக, உரிமை பெற்று வாழ ஒரு அரசிலமைப்பை ஏற்படுத்தித்தர பணித்தது. 29.11.1949 இந்திய அரசிலமைப்பினை அனறைய அரசிலமைப்பு சபை ஏற்றுக் கொண்டு சட்டம் இயற்றப் பட்டது. அதன் படி 26.11.1950 அன்று அரசிலமைப்பு அமலுக்கு வந்தது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

நீதிமன்றம், பார்லிமெண்ட், நிர்வாகம் தனித்தனி அமைப்பாக இருந்தாலும், அரசிலமைப்பு சட்டம் 13ன் படி நீதிமன்றம் சட்டசபையால் இயற்றப்பட்ட சட்டங்கள் மக்கள் உரிமையினை பறிக்கக் கூடியதாக இருந்தால் அவற்றை சட்டப்படி செல்லாது என்று உரிமை வழங்கப் பட்டுள்ளது. அனைவரும் நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு பெண் கறுப்புத் துணியினை கண்ணில் கட்டி கண்ணை மறைத்தும், இடது கையில் சமமாக இருக்கக்கூடிய தராசும், வலது கையில் ஒரு நீண்ட வாளும் இருப்பதனை. அந்த சிலை கிரேக்க நீதி தேவதை, 'தேமிஸ்' என்பதினை பிரதிபலிப்பாகும், அதாவது நீதி மன்றங்கள் தீர்ப்புகள் வழங்கும்போது அரசியல், பொருளாதாரம், சமூக ஏற்றத் தாழ்வு அந்தஸ்து பார்க்காது, சட்டப்படி மக்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டுமென்ற அறிகுறியாகும்.

சமீப வருடங்களில் நீதிமன்ற தீர்ப்புகள் ஒரு பெரும்பான்மை மக்களின் பால் ஈர்க்கப் பட்டு, நீதி தேவன்களும் தங்கள் ஓய்விற்குப் பின்னால், கூலிங் பீரியட் என்ற சில ஓய்வு தினங்களுக்குப் பதிலாக கவர்னர் அல்லது ராஜ்ய சபா உறுப்பினர் பதவிகளை பெற்ற சம்பவங்கள் சாதாரண மக்களுக்கு சந்தேகமெழுப்புவது இயற்கைதானே!

உதாரணத்திற்கு, சொல்ல வேண்டுமென்றால் அரசியலமைப்பின் படி ஒவ்வொரு குடிமகனும் அவரவர் மார்க்கம், மத சம்பந்தமான வழிபாடுகளை நடத்திட அனுமதி அளிக்கப் படுகிறது. அதற்கு மாறாக அயோத்தியில் பாபரி என்ற பெயருள்ள பள்ளியில் இருக்குமிடத்தில் தான் புராணத்தில் கூறிய படி ராமர் பிறந்தார் என்று சொந்தம் கொண்டாடி,  'கர் சேவக்' என்ற இயக்கத்தினை ஆரம்பித்து 6.12.1992 அன்று சதி செய்து இடித்து விட்டார்கள் என்று அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் 30 பேர்கள் மீது வழக்கினை சி.பி யை தொடர்ந்தது, இடித்ததினை அறிந்த உலகமே அதிர்ந்தது. அவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்று லக்னோ நீதிமன்றம் விடுதலை செய்தது அதைவிட பெரிய அதிர்ச்சியுடன் கலந்த தீர்ப்பாக ஆனது. அதன் மீது மேல் முறையீட்டில் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப் பட்டது. எல்லோரும் அரசிலமைப்பின் படி நேர்மையான தீர்ப்பு வரும் என்று நம்பிக்கையுடன் இருந்தபோது அந்த எண்ணத்தில் மண் விழுந்ததுபோல, அந்த இடம் ராமர் கோவில் கட்டிக்கொள்ள அனுமதி அளித்தும், முஸ்லிம்கள் தொழுகை நடத்த 20 கிலோமீட்டர் தொலைவில் ஒரு இடம் சமீபத்தில் தான் ஒதுக்கப் பட்டுள்ளது என்று அறியும்போது நடுநிலையாளர்களை  கொதிக்க விட்டது. அத்தோடு நில்லாமல் ஒரு நீதிபதிக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியும், இன்னொருவருக்கு கவர்னர் பதிவையும் அளித்து கவுரவப் படுத்தப் பட்டுள்ளது என்று நினைக்கும்போது அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை என்று நடு நிலையார் சொல்லியது பத்திரிக்கையில் வந்துள்ளது. அந்த தீர்ப்பு எப்படி இருந்தது என்றால் 'கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த செயலாகவே தானே கருத முடியும். இந்தியாவில் வெவ்வேறு சமூகத்தினர் பக்கத்தப் பக்கத்து வீடுகளில் குடியிருக்கும்  இந்த நவீன உலகில் இரு சமூகத்தினரை இரும்புத் திரை போட்டு மறைத்த 'உத்தமபுர நடுச்சுவர்' செயலாகவேதானே கருத  முடிகிறது. இந்த சமயத்தில் சமூக ஒற்றுமை பற்றி காஞ்சி பெரியவர் 'சந்திரசேகர ஸ்வாமிகள்' காலத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம் குறித்து உங்களுக்கு சொல்லலாம் என நினைக்கின்றேன்  சங்கர மடத்திற்கு பக்கத்தில் உள்ள பள்ளிவாசலில் அதிகாலை 4.15 மணிக்கு தொழுகைக்காக அழைக்கப் படும் பாங்கு ஒலியினை கேட்டுத் தான் ஸ்வாமிகள் எழுந்து அருகில் உள்ள குளத்தில் குளிர்ந்த நீரில் நீராடுவாராம். ஒரு நாள் அந்த பாங்கு ஒலி கேட்காததால் அவர் தூங்கி விட்டாராம். அப்போது மடத்து ஊழியர்களை அழைத்து ஏன் அந்த பள்ளிவாசலில் அதிகாலை பாங்கு சொல்லவில்லை என்று கேட்டாராம். அதற்கு ஊழியர்கள், 'சுவாமிகளே, உங்கள் தூக்கம் கெடுகிறது என்று நாங்கள் தான் புகார் செய்ததால் அவர்கள் குறைத்து வைத்து விட்டார்கள் என்றார்களாம். அதனை கேட்ட சுவாமிகள் 'அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு பணிக்கு செல்லாதவர்கள் சோம்பேறியாவார்கள்' என்று சொல்லி பள்ளிவாசல் குழுவினரை மடத்திற்கு அழைத்து தன்னுடைய வருத்தத்தினை தெரிவித்து எப்போதும் போல அதிகாலை பாங்கினை சொல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாராம். ஆகவே மதசார்பற்ற நமது நாட்டில் மத வேறுபாடுடன் கூறிய அயோத்யா  தீர்ப்பு நடுநிலை மாறியது தானே!

1)    இந்திய சமூகம் பாரம்பரிய நாகரீகமிக்க கலாச்சாரத்திற்கு புகழ் பெற்றது.  ஒருவனுக்கு ஒருத்தி என்றும், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற ஏக பத்தினி விரத கொள்கை கடைபிடித்து ஓரின சேர்க்கையினை இந்திய கிரிமினல் சட்டம் பிரிவு 377 படி குற்றமாக்கப் பட்டது. அதற்கு தண்டனையாக அதிக பச்சமாக 10 வருட கடுங்காவல் தண்டனையும் பரிந்துரைக்கப் பட்டது. அது மேலை நாடுகளை விட நமது நாடு பண்பாட்டில் வேறுபட்டது என்ற ஒரு எடுத்துக் காட்டாகும். ஆனால் அதற்கு மாறாக 6.9.2018 அன்று நீதிமன்றம் இ.பி.கோ. 377 குற்றமில்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் மூலம் நமது பாரம்பரிய கலாச்சாரம், பண்பாடு கெடுகிறது என்பது ஒருபக்கம், சிறார்கள் பாலின குற்றங்கள் அதிகரிக்க வழிவகை செய்யாதா?

2)    அடுத்த வினோதமான தீர்ப்பு எந்த ஆணும் எந்த பெண்ணும், அல்லது இரு வெவ்வேறு பெண்கள் சேர்ந்து வாழ வகை செய்யும் தீர்ப்பேயாகும். குஷ்பு மற்றும் கன்னியம்மாள் வழக்கில் உச்ச நீதிமன்றம் 'இரண்டு வயது வந்தோர் பாலின வேறுபாடு இல்லாமல் சேர்ந்து வாழலாம் என்று அனுமதி அளித்தது. அவ்வாறு செய்தால் சமூகத்தில் விவாகரத்து வழக்குகள் கூடாதா? கொடூர குற்றங்கள் நடக்க வழிவகை செய்யாதா?

தன் பாலின திருமணங்களை அங்கீகரிக்க வேண்டும் என்ற பொது நல மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அதற்கு மத்திய அரசு, 'இந்திய சமூகம், பாரம்பரியம் அதுபோன்ற திருமணங்களை அங்கீகரிக்க வில்லை' என்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதே பதில் தான் இருபாலினர் ஒரே இடத்தில் உறவு மீறி தங்கலாமா என்ற கேள்வி வந்தபோது தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்ததினால் நீதி மன்றமும் அனுமதியளித்தது என்று எடுத்துக் கொள்ளலாமா?

3)    உதாரணத்திற்கு டெல்லியில் ‘ஆர்பிட் பூனேவாலா’ என்ற வாலிபர் தன்னுடன் நெடுநாளைய தோழியும், தங்கியிருந்தவருமான வால்க்கர் என்ற பெண்ணை கூறு போட்ட சம்பவங்கள் தொடர் கதையாகிய வழி செய்யாதா? இன்னொரு சமீபகால சம்பவம் கூர்கிராமில் நடந்துள்ளது. கணினி பொறியாளர் ஒருவர் ம.பி. பிரதேச குவாலியர் பெண்ணை மணமுடித்து வாழ்ந்து வந்தார். அவர் மனைவி கர்பிணியானதும் பிரசவத்திற்காக ஊருக்கு அனுப்பி விட்டார். ஆனால் அதன் பின்னர் தன்னுடன் கணினி அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணுடன் வாழ்ந்து வந்தார். மனைவியினை மறந்து விட்டார். மனைவி திடீரென்று கூர்கிராம் வீட்டிற்கு வந்தது பேரதிர்ச்சியாக இருந்து காவல் நிலையம், கோர்ட்டு  வரை சென்றிருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பு என்ன தெரியுமா, 'கூர்கிராம் பெண் கணவருடன் மூன்று நாட்களும், குவாலியர் பெண் கணவருடன் மூன்று நாட்களும் பகிர்ந்து கொண்டு விடுபட்ட நாள் அவர் விருப்பப் பட இருவரில் ஒருவடன் வாழலாமாம். அப்போது  இ.பி.கோ 497 என்ற ‘அடல்ட்ரி’ சட்டம் காற்றில் பறக்க விடலாமா? என்ற கேள்வி உங்களுக்கு எழாமலில்லை தானே!

4)    ஆனால் புது உச்ச நீதிமன்ற தலைமை ஏற்ற பிறகு நீதி, நேர்மையாக வழங்கப் படும் என்ற நம்பிக்கை இந்திய மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது என்று கீழே கொடுக்கப் பட்ட தீர்ப்புகளில் ஏற்பட்டிருக்கிறது என்று பரவலாக பேசப் படுகிறது:

1) பி.ஜே.பி தலைவர் மற்றும் வழக்கறிஞர் அஸ்வினிக் குமார் உச்ச நீதிமன்றத்தில் 5.12.2022 அன்று தாக்கல் செய்த மனுவில், 'மத மாற்ற சட்டம் அமலுக்கு கொண்டு வரவேண்டும் என்று கேட்டிருந்தார்'. ஏனென்றால் மத்தியில் அதன் அரசு ஆட்சியில் இருக்கும் என்ற தைரியமா என்னவோ! அதற்கு உச்ச நீதிமன்றம் நாட்டின் பண்பாடு, பாரம்பரியம், அரசியல் சட்டப் படி நடந்து கொள்ள வேண்டும் என்று தள்ளுபடி செய்துள்ளது.

2) அதே வழக்கறிஞர் 18.12.2019ல் தாக்கல் செய்த மனுவில் எங்கெல்லாம் முஸ்லிம்கள், கிருத்துவர்கள் அதிகமாக இருக்கிறார்களோ அந்த மாநிலங்களில் ஹிந்துக்கள் மைனாரிட்டி என்ற நிலை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு 'இதுபோன்ற கோரிக்கையினை 'National Commission of Minorities Act 1992 அன்றே பரிசீலனை செய்து 23.10.1993 அன்று அறிக்கை வெளியிட்டது. ஆகவே தேவையுள்ளது என்று தள்ளுபடி செய்துள்ளது.

3) 10.12.2018 அன்று மேகாலயா உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் 'இந்தியா பிரிந்து பாகிஸ்தான் தனி நாடாக இல்லாமல், முஸ்லிம் நாடாக மாற்றி அறிவிக்கப் பட்டதோ அதேபோன்று இந்தியாவினையும் ஹிந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும்' என்ற தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் பரிசீலனை செய்து, 'மேகலைய உயர் நீதிமன்ற தீர்ப்பு அரசிலமைப்பு சட்டத்திற்கும், அதன் நோக்கத்திற்கும் நேர் மாறானது என்று நெத்தியடி தீர்ப்பு வழங்கியது' பாராட்டாமல் இருக்க முடிவதில்லையா?

4) அதேபோன்று தான் உச்சநீதி மன்றத்தில் வழக்கறிஞர் சச்சின் குப்தா ஒரு பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் இந்தியர் மாட்டுக் கறி தின்பதினை தடை செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார். அதற்கு உச்ச நீதிமன்றம் 'இந்திய மக்களில் பெரும்பான்மையோர் மாட்டுக் கறி தான் சாப்பிடுகின்றனர், குறிப்பாக பெரும்பான்மையான ஏழை, எளிய மக்கள் அதைத்தான் உணவாகவும் கொள்கின்றனர், வேலைவாய்ப்பும் அவர்களுக்கு மாட்டுக் கறி வியாபாரம் மூலமே உள்ளதால், அவ்வாறு செய்தால் இந்திய பொருளாதாரம் பாதிக்கும் என்றும், மக்களுக்கு எந்த உணவினை சாப்பிட வேண்டும் என்று தீர்மானிக்க உரிமையுண்டு' என்றும் பரபரப்பான தீர்ப்பும் வழங்கியுள்ளது. இதுபோன்ற தீர்ப்பு மாட்டுக் கறி வியாபத்திற்காக மட்டுமல்லாமல், மாட்டுக் கறி சமையலுக்காக சேகரித்து வைத்துள்ளார்கள் என்றும், மாடுகளை அறுவைக்காக கொண்டு செல்கிறார்கள் என்று மாட்டு வியாபாரிகளை கொல்லக் கூடிய 'cow vigilant' என்ற பாசிச குழுவின் வாலை ஓட்ட அறுத்த செயலாகத் தானே கருத வேண்டியுள்ளது.

5) இன்னொருவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'இந்தியாவினை ஆட்சி செய்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் உட்பட மற்ற வெளிநாட்டு ஆட்சியாளர்களை ‘கொள்ளைக்காரர்கள்’ என்று அறிவிக்க வேண்டும்' என்று கேட்டிருந்தார். அந்த மனு விசாரணைக்காக நீதியரசர்கள் ஜோசெப் மற்றும் நகரத்தானா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு, நீதிமன்றமும் மத சார்பற்றது, எங்கள் இருவரில் ஒருவர் கிருத்துவர், ஒருவர் ஹிந்து, அப்படி ஒற்றுமையான சமூகத்தினை  உருக்குலைய வைத்து வருங்கால சந்ததியினரை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம், அது போன்ற செயல்களால் முன்னேயரால் எழுதப் பட்ட உண்மை சரித்திரத்தினை மாற்றி எழுத வேண்டுமா என்று தள்ளுபடி செய்துள்ளனர்.

6) அதேபோன்று 15.06.1949 அரசியமைப்பு சபை தேர்தல் கமிஷனின் தலைமை கமிஷனர், மற்றும் உறுப்பினர் பற்றி சட்டப் பிரிவு 289, 324ல் விரிவாக கூறியுள்ளது. ஆனால் சமீப காலங்களில் மத்திய அரசு ஓய்வு பெறப்போகும் அரசு அதிகாரிகளை  அல்லது ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் அவர்கள் ஓய்வு காலம் 'cooling period' முடியுமுன்பே தேர்தல் கமிஷனர்களை நியமனம் செய்து அவர்களுக்கு வேண்டிய நேரத்தில் தேர்தல் அறிவிப்பது போன்ற நடவடிக்கைகள் பல குற்றச் சாட்டுகளுக்கு வழி வகுத்து விட்டது. ஐந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜோசெப் தலைமையில் கூடி தேர்தல் கமிஷன் தனி (Independent commission) உரிமை உள்ளதாக இருக்க வேண்டும், அதனை தேர்வு செய்ய பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதி மன்ற தலைமை நீதியரசர் குழு உறுப்பினர்களை தெரிந்தெடுக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

8) சமீபத்திய மகாராஷ்ட்ரா கவர்னர் மகாராஷ்டிரா மந்திரிசபை குழப்பத்தில் தலையிட்டு நம்பிக்கை ஒட்டு நடத்த வேண்டும் என்று உத்தரவு அரசு கவிழ்ப்பில் துணை போவதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பும் இந்திய மக்கள் மனதில் இன்னும் நீதி மறுக்க வில்லை என்றும், இனியும் நீதி தேவதை கண்ணை மூடிக் கொண்டு இருக்கப் போவதில்லை என்றும் ஒரு தடாலடி நடவடிக்கை என்றால் பாராட்டாமல் இருக்க முடிய வில்லை தானே. அதற்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மற்ற நீதியரசர்கள் வசை பாடுகள் வந்தாலும் அதனை கண்டிக்க வேண்டியது ஒவ்வொரு நடு நிலை இந்தியனின் கடமை என்றால் அது சரிதானே! சமூபத்திய ஒரு கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், மத்திய சட்ட அமைச்சரும் புது டெல்லியில் கலந்து கொண்டார்கள். அதில் சட்ட அமைச்சர் நீதிபதிகள் தேர்வு குழு(Collegium) தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது, தகுதியான நீதிபதிகள் தேர்வு செய்ய அரசு தான் சரியான அமைப்பு என்றும் சொல்லியுள்ளார். அவர் நோக்கமே அரசுக்கு வேண்டியவர்ளகளை உச்ச, உயர் நீதிமன்றங்களுக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது போல பேசியுள்ளார். அதற்கு பதிலடியாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களோ 'நீதிபதிகள் தேர்வுக் குழு(Collegium) நேர்மையாகத் தேர்ந்தெடுத்து அரசுக்கு பரிந்துரை செய்கிறது என்று சட்ட அமைச்சர் கூறியதிற்கு பதிலடியாக  பதிலடியாக கூறியது உண்மையிலே நடுநிலையானவர்களும், ஊடகங்களும் பாராட்டுகின்றன. ஆனால் மாண்புமிகு சந்திரசூட் போல எவ்வளவு தலைமை நீதிபதிகள் இனிமேலும் வருவார்கள் என்ற கேள்வி எழாமலில்லை தானே!,

 

Tuesday, 28 February, 2023

மாட மாளிகைகள் மண் குவியலானதே!

 


(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

 

6,2,2023 அதிகாலை 4.30 மணியளவில் அனைவரும் நீண்ட உறக்கத்தில் துயிலும் போது 7.8 ரிக்டர் அளவு நில நடுக்கம் துருக்கி-சிரியா நாடுகளில் ஏற்பட்டு மாட மாளிகைகளான குடியிருப்புகள் 2,64, 000 மண்ணோடு மண்ணாக இடிந்தது கண்டு உலகமே அதிர்ந்தது என்றால் மறுக்க முடியாது. அதில் கொல்லப் பட்டோர் 50,132, என்றும் இடம் பெயர்ந்தோர் 1.50 கோடியாக ஆய்வில் சொல்கின்றன. உலக வங்கி துருக்கி-சிரியா நில நடுக்கம் ஏற்படுத்திய சேதம் 4.84 லட்சம் கோடி என்று கணக்கிட்டுள்ளது. அவைகள் சீரமைக்கும் போது இன்னும் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்றும் சொல்லியுள்ளது.

            முதலில் நில நடுக்கம் என்றால் என்னவென்று காணலாம். நீங்கள் மரகூழால் செய்யப் பட்ட பிளைவுடை பார்த்திருப்பீர்கள். அதில் மரபலகைகள் ஒன்றுக்குமேல் ஒன்றாக அடுக்கு வைக்கப் பட்டிருக்கும். அதேபோன்று தான் பூமிக்குக்கீழே பாறைகள் ஒன்றோடு ஒன்றாக அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். அந்த பாறைகளின் தட்டுகள் அசைவினைதான்(fault) என்று அழைப்பார்கள். அந்த பாறைகளின் அசைவுகள் ஒரு சில அங்குலத்திலிருந்து பல ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலும் உணரக்கூடிய அதிசயமாகும். அந்த அசைவு  சாதாரண வகையினை(normal) என்றும், பின்னோக்கி அசைவினை( slip fault) என்றும், இடது-வலது அசைவு என்று நான்கு வகைகளாக பிரிக்கின்றனர் வல்லுநர்கள். பதினாறு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நில நடுக்கம்(Quaternary faults) என்றும் கணக்கிடுகின்றனர்.

            நாகரீகம் தோன்றுவதற்கு முன்பு, இருண்ட காலத்தில் பூகம்பத்தினை கடவுளின் கோபம் என்றே கருதி வணங்கியதும் உண்டு. எப்போது தொழில் புரட்சி 19ம் நூற்றாண்டில் ஏற்பட்டதோ அப்போதிருந்து தான் அறிஞர்கள் பூகம்பத்தின் பின்னெனியினை ஆராய முற்பட்டனர். 1960ம் ஆண்டு தான் புவியியலின் 'டெக்னோனிக்ஸ் கோட்பாடு' உருவாக்கப்பட்ட பின்பு பூகம்பத்தின் உண்மையான காரணம் அறியப் பட்டது.

எரிமலைகள் செயல் பாட்டில் மாறுதல், நிலாசுரங்கங்கள், பெரிய அணை கட்டுதல் அல்லது வின் கற்கள் விழுதல் போன்றவைகளாலும் ஏற்படுகின்றன. இதனைத் தவிர ஏழு காரணங்கள் பூகம்பத்தின் மூல காரணியாக கருதப் படுகிறது. அவை பின் வருமாறு:

1)    உங்களுக்கெல்லாம் தெரியும் பூமி தன்னைத்தானே சுற்றி சூரியனையும் சுற்றுமென்று.அப்படி பூமி சுற்றும்போது அதன் சுற்றில் சிறு துளி பாதை மாற்றம் ஏற்பட்டாலும் கூட நில நடுக்கம் ஏற்படும்.

2)    கடந்த 149 ஆண்டுகளில் 728 பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன. அவைகளுக்கெல்லாம் காரணங்கள் கனிவளத்திற்கு சுரங்கம் தோண்டுவது, அணு ஆயுத வெடிப்புகள் நடத்துவது, நிலத்திலிருந்து நீர் எடுப்பது போன்றாகும்.

3)     கட்டிடக் கலையின் தரமற்ற செயல்கள். அதற்கு உதாரணமாக துருக்கியில் தரமற்ற உயர்ந்த கட்டிடங்கள் கட்டிய குற்றச்சாட்டில் இது வரை 130 பேர்கள் கைது செய்யப் பட்டிருக்கிறதாம். நிலத்தைத் தோண்டி எண்ணெய் அல்லது எரிவாயு எடுத்தல், 

4)     பூமி பாறை அமைப்பில் குளிர் நிலை ஏற்படும் போது எரிமலை வெடித்து சிதறுதல்.

5)     நில நடுக்கம் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் அடிக்கடி ஏற்படுதல்.

6)     பூலோக அமைப்பின் மாற்றத்தால் பூமி ரேகையில் மாற்றம்(faults) ஏற்படுகின்றன.

7)     பூமியின் அடிபக்கத்தில் உள்ள அமைப்பில் வருடத்திற்கு 47 மில்லி மீட்டர் அசைவிற்கு நெருக்கம்  ஏற்படும்போது நில நடுக்கம் ஏற்படுகின்றது.

 

200 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்க தாக்கத்தினை சிறிது  பார்க்கலாம்.

1) 2005ம் ஆண்டு பாகிஸ்தானில் 7.6 ரிக்டர் நில நடுக்கம் ஏற்பட்டு 73,000 பேர்கள் மடிந்தனர்.

2) 2013ம் ஆண்டு பலுச்சிஸ்தானில் ஏற்பட்ட நிலச்சரிவில் 800 பேர்கள் உயிர் இழப்பு.

3) 2015ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 9000 பேர்கள் மாண்டனர்.

4) 2011ம் ஆண்டு ஜப்பானிய புகிசுமா, நியூகினியா நாடுகளில் 9.1 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டு 18,000 பேர்கள் அழிந்தனர்.

5) 2006ல் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா நாடுகளில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 6000 பேர்கள் பலியானர்

         6) 2016ல் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 7.8 ரிக்டர் அளவில் 600 உயிர் சேதம்

சிலி நாட்டில் 1960ம் ஆண்டு ஏற்பட்ட 9.5 ரிக்டர் நில நடுக்கம் சக்தி வாய்ந்ததாகி சுனாமி அலைகள் ஏற்பட்டு 3000 மக்கள் மாண்டனர். அதன் தாக்கம் பல ஆயிரம் மைல்களுக்கப்பால் உள்ள ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடு வரை உணரப் பட்டதாம்.

இந்தியாவில் 1993ம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலம் லத்தூரில் ஏற்பட்ட 6.4. ரிக்டர் நில நடுக்கத்தில் 10,000 பேர்களுக்கு மேல் இறந்தனர். அதன் காரணம் மலைப் பகுதியில் பாறைகளைக் கொண்டு கட்டப் பட்ட வீடுகள் குடியிருந்தோர் மீது விழுந்ததினால் உயிர் சேதம் அதிகமானதாம்.

 

அற்புதமான மீட்புப் பணி:

ஐ.நா. மற்றும் சர்வதேச மீட்புப் பணியினர் துருக்கி மற்றும் சிரியாவில் கண் துஞ்சாது பசி நோக்காது பணியாற்றி இதுவரை 6443 பேர்களை உயிருடன் இடிபாடுகளிடையே மீட்டுள்ளது பாராட்டத் தக்கது. ஒரு மனிதன் உயிர் வாழ முக்கியமாக கருதப் படுவது காற்று, நீர், உணவு. கல்லுக்குள் உயிர் வாழும் தேரை, வறண்ட பூமியில் இருக்கும் மீன் முட்டைகள் மழை பொழிந்ததும் எல்லாம் வல்ல அல்லாஹ் உயிர்  கொடுத்து வாழ்வு  அளிக்கின்றான் என்று உங்களுக்குத் தெரியும். அதுவும் மனிதன் 24 மணி நேரம் வாழலாம். ஆனால் என்ன அதிசயங்கள் பாருங்கள் மீட்புப்பணியினர் 12   நாட்களுக்குப் பின்பு ஒரு மனிதர் மற்றுமொரு  சிறுவனை மீட்டுள்ளனர். அந்த மனிதரிடம் நீங்கள் எப்படி அதிசயமாக உயிர் வாழ முடிந்தது என்ற வினாவிற்கு தான் இறந்து விடுவேன் என்று இறைவனிடம் வேண்டியதாகவும் அப்போது வெள்ளை உடையில் காட்சி தந்த ஒரு பெரியவர் தன் முன் தோன்றி எதுவும் பேசாமல் உணவு, தண்ணீர் கொடுத்ததாகவும் கூறியிருக்கிறாராம். நீங்கள் தொலைக் காட்சியில் பார்த்திருப்பீர்கள் ஒரு சிறுவன் மீது பெரிய தூண் விழுந்து அமுக்கி இருப்பதினையும், மீட்புப் பணியினர் கை கூட நுழையாத இடத்தில் சிக்கி இருப்பதினையும், ஆகவே அந்த பையன் தாகம் தீர்க்க தண்ணீர் பாட்டிலில் உள்ள மூடியில் நீர் நிரப்பி அந்த பையன் வாயில் ஊற்றி உயிர் பிழைக்க வைத்து மீட்டதையும், ஒரு சிறுமி மற்றும் அவளுடைய தம்பி ஆகியோரை இடிபாடுகள் இடையில் சிக்கி இருக்கும் போது அந்த சிறுவனை, சிறுமி மேலே படுத்து மீட்கும் வரை காப்பாற்றியதும்,   அதிசயம் அல்லவா?

            எரிகிற கொள்ளியில் பிடுங்கியது லாபம்:

ஐம்பது ஆயிரத்திற்கு மேல் உயிர் பலி வாங்கிய நில நடுக்கத்தில் இடிபாடுகளில் உள்ள கட்டிடங்களில் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளை யடித்த கும்பலைச் சார்ந்த 96 பேர்கள் கைது செய்துள்ளனர் துருக்கியில். சாதாரண யுத்த காலங்களில் தான் கொள்ளைமற்றும் அரசுக்கெதிரான கலவரங்கள் போன்ற  சம்பவங்களில்  கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் நிகழுந்துள்ளன. இரண்டாம் உலகப் போரில் வெற்றிபெற்ற படைகள் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்த்தின என்று வரலாறு கூறுகின்றது. ஆனால் உலகம் போற்றும் உத்தம நபி அவர்கள் காலத்தில் படைத்தளபதிகளுக்கும், வீரர்களுக்கும் கண்டிப்பான உத்தரவினை கொடுத்தார்கள். அது என்ன தெரியுமா? படை வீரர்கள் வெற்றி மமதையில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடக்கூடாது, வீடுகளை, மரங்கள் பயிர்களை  எரிக்கக் கூடாது, நீர்நிலைகளை நாசம் செய்யக் கூடாது, பிராணிகளை, வயதானவர், பெண்டிர் சிறார்களை  வதை செய்யக்கூடாது என்பதாகவும், புற முதுகிட்டு ஓடுவனையும், சரணடைவனையும் கொல்லக்  கூடாது, நாகரீகமாக நடத்த வேண்டுமென்றே கூறியிருப்பது இன்றைய காலக் கட்டத்தில் உக்ரைன் நாட்டில் ரஸ்யா போரினால் நடக்கும் அழிவினைக்கு ஒரு படிப்பினையாகாதா ரஸூலல்லாஹ்வின் பொன் எழுத்துக்கள்?

            துருக்கியில் சேதத்தினை பார்க்க வந்து அந்த நாட்டு அதிபர் சேதத்தினைப் பார்த்து கண்ணீர் சிந்தினாராம். அதற்கு சிலர் நெதர்லாந்து புவியியல் நிபுணர் ‘ஹுஹாபீட்’ மூன்று நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விட்டும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று. நீங்கள் கேட்கலாம் இவ்வளவு பெரிய இழப்பில் அவர் என்னதான் செய்ய முடியுமென்று. 2019-2021 வரை உலகம் முழுவதும் கொரானா என்ற நோயால் 7.5 கோடி மக்கள் பாதிக்கப்  பட்டும், 68.58 லட்சம் மக்கள் இறந்தனர் என்று. அதற்கு மூல காரணமே சீன நாட்டில் ஒரு ஆராய்ச்சி நிறுவன மையத்திலிருந்து கசிந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தியது என்று. ஆனால் சீனாவில் பெரும் பாதிப்பு ஏற்பட வில்லை. அதற்கொரு காரணம் என்னவென்றால் அங்கே மக்களை வீட்டுக்குள் அடைத்தும், வீதிகள், பொது இடங்கள் ஆகியவற்றில் நோய் தடுப்பு தெளிப்பான்களை தெளித்தும், பரிசோதனைகளை தீவிரப் படுத்தியும், மக்கள் நடமாட்டத்தினை கட்டுப் படுத்தியும் ராணுவ நடவடிக்கையினை எடுத்ததால் பெரும் சேதம் ஏற்பட வில்லையாம். அதேபோன்று துருக்கியில் மாட மாளிகைகளில் வசிக்கும் மக்களை திறந்த வெளி கொண்ட மைதானத்தில் தங்க வைத்தும், எச்சரிக்கை ஒலி மக்களுக்குக் அறிவித்தும் பெரிய இழப்பினை தடுத்திருக்கலாமாம்.

            அதன் பின்பு துருக்கிய அதிபர் ஒரு வருடத்திற்குள் அனைவரையும் குடியமைத்த வீடுகள் கட்டித்தரப் படுமென்று. அதற்கு சர்வதேச விஞ்ஞானிகள் ஹுஹாபீட் உட்பட  அவசரப்பட்டு எந்த மாடி வீடுகளையும் கட்ட வேண்டாம் ஏனென்றால் வரும் காலங்களில் வாடா அமெரிக்கா கலிபோர்னியாவிலிருந்து ஆரம்பித்து, அர்ஜென்டினா, ஜப்பான், சீனா, இந்தோனேசியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இமயமலை பகுதிகள், இலங்கை, முடிவில் இந்திய பெருங்கடல் பகுதியில் தனது கோர தாண்டவத்தினை நிறுத்துமாம். அவர்கள் சொன்னது போல துருக்கியில், 20.2.2023, 22.2.2023 மற்றும் 27.2.2023 ஆகிய தேதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கின்ற வீடுகளுக்கும் சேதம் விளைவித்துள்ளதாம். அதேபோன்று பாகிஸ்தான், கஜிஸ்தான் நாடுகளிலும் 22.2.2023 அன்று நில நடுக்கம் ஏற்பட்டிருக்காம்.

            புனித குர்ஆனில் சூரா 99அஸ்-ஸல்ஸாளாவில் பூகம்பத்தினைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறுகிறது. பூமி நடுங்கும் போது மனிதன் ஆடிப் போகிறான். பல்வேறு தீய செயல்களில் ஈடுபட்டிருக்கும் மனித வர்க்கம் பூமி ஆடும்போது தான் தான் செய்த தவறுக்காக கண்ணீர் சிந்துகிறான். அதனையே தான் துருக்கி அதிபரும்  நெதர்லாந்து விஞ்ஞானி எச்சரிக்கை விடுத்தும் மக்களை எச்சரிக்கை செய்து நடவடிக்கை எடுக்கவில்லையே என்றுகண்ணீர் சிந்தியிருக்கிறார். புனித குர்ஆனில்’ நூகு’ அலைஹி ஸலாம் எச்சரிக்கை செய்தும் அங்குள்ள மக்கள் ஓரிறை கொள்கைக்கு எதிராக இருந்ததினால் நீரினால் இறைவன் அழிவை கொடுத்ததும். அதே போன்று தான் ‘ஆது’ சமூகத்தினரை சூறாவளி காற்றால்  காவு கொண்டதையும், ஓரின சேர்க்கையில் சுகம் கண்ட ‘லூத்’ சமூகத்தினரை கல் மழை பொழிந்து அழித்ததையும் தவறிழைக்கும் மக்களுக்கு ஒரு பாடமாகவே அமைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

            ஆகவே இயற்கை பேரழிவான சுனாமி, நில நடுக்கம், நிலச்சரிவு, பனிக்கட்டி மழை, எரிமலை, பெரு வெள்ளம் ஆகியவை செல்வத்தால் பெருமை கொள்பவர்களுக்கு, பூமி அதிரும்படி நடப்பவர்களுக்கு, சர்வாதிகாரிகளுக்கு, நிராதிபதியாக இருக்கும் மக்களை கொல்பவர்களுக்கு, ஆயுத பலத்தினை நம்பி வாழ்பர்களுக்கு, பெற்றோரை கவனிக்காதவர்களுக்கு, மனைவி, மக்களை வெறுப்பவர்களுக்கு, உற்றார், உறவினர், உடன் பிறந்தோர் உறவை அறுத்து விடுபவர்களுகளும்  திருந்துவதற்கு ஒரு பாடமாக அமையாதா?

 

 

 

 

 

 

 

 

 

 

Saturday, 7 January, 2023

இஸ்லாம் விளையாட்டிற்கு எதிரானதா?

 


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

கத்தாரில் 2022 நவம்பரில் நடந்த உலக கால்பந்தாட்ட போட்டியில் சௌதி அராபியா, ஈரான் மற்றும் மொரோக்கோ போன்ற இஸ்லாமிய நாடுகள் முக்கிய பங்காற்றின. ஆனால் பல முஸ்லிம் நாடுகள் சிறப்பாக விளையாடததால்  முஸ்லிம்கள் விளையாட்டினை ஆதரிக்க வில்லையா என்ற கேள்விகள் பல திசைகளிருந்தும் எழும்பின. அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. செமி பைனலில் பிரான்ஸ் அணியுடன் மொரோக்கோ விளையாடும்போது போராடி தோற்றது. பிரான்ஸ் நாட்டில் மொரோக்கோ நாட்டினர் குடியேறிகளாக உள்ளனர். பைனலில் அர்ஜென்டினாவுடன் விளையாடிய பிரான்ஸ் அணி போராடி தோற்றது. அந்த அணி தோற்றதை கொண்டாடும் விதமாக மொரோக்கோ குடியேறிகள் பாரிஸ் நகரில் இறங்கி கலவரத்தில் இறங்கியதால் காவல்துறையினர் உதவியுடன் அடக்கப் பட்டது. அப்போது ஐரோப்பாவில் முஸ்லிம்கள் விளையாட்டில் வன்முறையினை புகுத்தியுள்ளனர் என்ற ஒரு குற்றச்சாட்டும், அவர்கள் மார்க்கம் விளையாட்டினை ஆதரிக்காததால் இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்றும், முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுப்பதிற்கே எதிர்ப்பும் கிளம்பியுள்ளதாம். அதனால் இஸ்லாம் விளையாட்டினை பற்றிய கருத்துக்கள் என்னென்ன என்று விளக்கலாம் என்று எண்ணி இந்த கட்டுரை எழுதுகிறேன்.

இஸ்லாம் தனிப்பட்ட மனிதனுக்கு விளையாட்டு ஒரு மூலதனமாக உள்ளதைத்தான் தடை செய்கிறது. உதாரணத்திற்கு சௌதி அராபிய ‘அல் நாசர்’ அணிக்கு சமீபத்தில் 37 வயதான போர்ச்சுகல் கால்பந்தாட்ட ஸ்டார் வீரர் ரொனால்டோ ரூ.2478 கோடி சம்பளத்தில் ஒரு வருடத்திற்கு கணக்கிட்டு இரண்டரை வருடம் ஒப்பந்தம் செய்து உள்ளது. ஆனால் அவர் முந்தைய மாஞ்செஸ்டர் யுனைடெட் விளையாட்டு அணிக்கு ரூ 250 கோடி ஒப்பந்தத்தில் தான் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது இதனை காட்டுகிறது என்றால் அராபியாவில் செல்வம் கொழிப்பதால் இதுபோன்ற ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது என்ற குற்ற சாட்டும் எழுகின்றது. அராபியாவில் எத்தனையோ ஆதி 'படோவின்' இன மக்கள் மற்றும் மக்கா, மதினாவில் கூட ஏழ்மையில் இருக்கின்றனர் என்பது பலருக்குத் தெரியாது. ஆகவே இதுபோன்ற வயதான விளையாட்டு வீரருக்கு உச்சக் கட்ட விலை பேசப் பட்டதுபோன்ற செயலைத்தான் வெறுக்கின்றது.

உண்மையிலே இஸ்லாம் முஸ்லிம்கள் உடல் வலிமையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது. ரசூலுல்லாஹ், 'உங்களுடைய குழந்தைகளை நீச்சல், வில் வித்தை,  குதிரையேற்றம், போன்றவற்றில் திறமையுள்ளவர்களாக உருவாக்குங்கள்' என்று சொன்னதாக ஹதீதுகள் உள்ளன. வலிமையான உடல் கூர்மையான அறிவு கொண்டதாக இருக்கும் என்பது அறிவியலே. இதனை ‘பத்வா குரு ஷேய்க் அப்தியாவும்’ உறுதி செய்கிறார். இமாம் ‘இபின் கையும்’ தனது 'ஜாத் அல் மாட்' என்ற புத்தகத்தில் 'இஸ்லாம் என்பது ஒரு இயக்கத்தின் அதாவது moovement ல் உள்ள 'core of sports' விளையாட்டின் மையம் என்று கூறுகிறார். விளையாட்டானது உடலில் உள்ள கழிவுகளை வேர்வையாக வெளியேற்ற்றி, நோயின்றி சுறுசுறுப்புள்ளவனாக ஆக்கிற்னறது. சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் விளையாட்டு உடலில் உள்ள உறுப்புகள் உள்ளேயும், வெளியேயும் தனி தனி விளையாட்டுக்களை செயகின்றன. அதன் செயல்பாடு இல்லையென்றால் மனிதன் உயிரற்ற மரக்கட்டையாகி விடுவான் என்றும் சொல்கிறது பல போதனைகள்.

இஸ்லாமிய வழிமுறைகள்  ஒவ்வொன்றையும் புனிதப் பயணம், உற்றார் உறவினர் வீடுகளுக்குச்  செல்வது, நோயுற்றவர்களை நலம் விசாரிக்கச் செல்வது, ஐவேளை தொழுகை, நோன்பு, ஓதுவது, மற்றும் சமூக-சமூதாய சேவைகள் அத்தனையும் ஒரு விதமான உடற் பயிற்சியும், மன பயிற்சியும் தானே!.

விளையாட்டில் இஸ்லாம் போதித்த ஒழுங்கு முறைகள்:

1)                  விளையாட்டில் நன்னடத்தையுடன் நடந்து கொள்ளவேண்டும் என்று சொல்கிறது. அங்கே வன்முறைக்கு இடமில்லையாம். 2006ம் ஆண்டில் நடந்த உலக கால் பந்தாட்ட விளையாட்டில் இத்தாலி நாடும், பிரான்ஸ் நாடும் விளையாடின. ஒரு கட்டத்தில் பிரான்ஸ் கேப்டன் ஜிடானேயும், இத்தாலி வீரர் மார்க்கோ மெட்ராஸியும் பந்தை எடுப்பதில் வேகம் காட்டினர். அப்போது மோதிக் கொண்டனர். அத்தோடு  நின்று விட்டால் பரவாயில்லை, மாறாக ஜிடானே சகோதரியினைப் பற்றி கேலியாக ஒரு அவதூறு சொல்லை மார்க்கோ சொல்லி விட்டார். அதனை அறிந்த ஜிடானே திரும்பி வந்து கோபத்தில் தனது தலையால் மார்க்கோவின் மூக்கில் முட்டியதால் மார்க்கோ காயத்துடன் கீழே விழுந்ததால் ஜிடானேக்கு சிகப்பு அட்டை கொடுக்கப் பட்டு வெளியேற்றப் பட்டார். அது போன்ற செயலை இஸ்லாம் ஆதரிக்கவில்லை.

2)                  இஸ்லாம்  விளையாட்டில் நெகிழ்வுடனும், அன்புடனு, பரந்த உள்ளத்துடன், நன்னடத்தையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. வெற்றி- தோல்வி என்பது மாறி, மாறி வருவது என்று கூறுகிறது. தோல்வி என்பது வருங்கால வெற்றிக்கு முதல் படி என்று கூறுகிறது. வெற்றிபெற்ற அணியினை அளவிற்கு அதிகமான புகழுரையினை அள்ளி பொழிவதும், தோல்வி பெற்றவர்களை இகழ்வதனையும் இஸ்லாம் வெறுக்கின்றது. பிரேசில் அணி தோற்று வருத்தத்துடன் நாடு திரும்பும் போது அவர்கள் சென்ற பஸ்ஸினை வழிமறித்து அழுகிய முட்டை, தக்காளி கொண்டு எறிவதுமான காட்சியினை தொலைக் காட்சி படம் பிடித்து காட்டின. இஸ்லாத்தில் தோல்வியில் எவ்வாறு அன்புடனும், ஆதரவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதினை ரசூலுல்லாஹ் ஒட்டக பந்தயத்தில் கலந்து கொண்ட செய்தியினை உதாரணமாக எடுத்துக் காட்டுகிறது. ஒரு தடவை ரசூலுல்லாஹ் ஒட்டக பந்தயத்தில் கலந்து கொண்டார்கள். அப்போது அவர்கள் ஒட்டகம் மற்ற ஒட்டகங்களை விட பின் தங்கியிருந்தது தாங்கிக் கொள்ள முடியாத முஸ்லிம்கள் மிகுந்த வருத்தத்துடன் இருந்ததினைக் கண்ட ரசூலுல்லாஹ் அவர்கள், 'முஸ்லிம்களை நோக்கி, 'உலகில் நிரந்தரமான வெற்றியுமல்ல, தோல்வியுமல்ல என்றும் , வெற்றியும், தோல்வியும் மாறி, மாறி வரும்' என்றும் ஆறுதல் கூறினார்கள்.

3)                  ரசூலுல்லாஹ் போதித்த ஆறுதல் கூற்று உண்மைபோல 2022ல் நடந்த உலக கால் பந்தாட்ட கடைசி போட்டியில் போராடி அர்ஜென்டினா அணியிடம் தோல்வி அடைந்த பிரான்ஸ் அணியினை அந்த நாட்டின் ஜனாதிபதி மக்ரோன் தேற்றினார். என்பதினை உங்களக்கு விளக்கெல்லாம் என எண்ணுகிறேன். கடைசி ஆட்டத்தினை காண வந்த பிரான்ஸ் அணியின் ஜனாதிபதி பிரான்ஸ் அணி தோற்றவுடன் அவர்கள்  உடைமாற்றும் அறைக்குச் கவுரவம் பார்க்காது சென்று நெடு நேரம் ஆறுதல் கூறினார். அதன் பின்னர் அவர்கள் சொந்த நாடு திரும்பி பாரிஸ் நகரில் உற்சாகமூட்ட வந்த ரசிகர்களை சந்திக்காது ஹோட்டல் அறையினுள் முடங்கி கிடந்தனர். அதனை கேள்விப்பட்ட ஜனாதிபதி மாக்ரோன் வீரர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெற்றியும் தோல்வியும் மாறி, மாறி வரும் அதற்காக உங்களை உற்சாகத்துடன் பார்க்க மணிக்கணக்கில் ஹோட்டல் முன்பு கூடியிருக்கும் ரசிகர்களை பால்கனியிலாவது நின்று கையினை காட்டவும் என்றதும் அவர்கள் வெளியே ரசிகர்கள் கொடுத்த ஆறுதலை ஏற்றுக் கொண்டார்களாம்.

4)                  ரஸூலலல்லாஹ் அவர்கள், 'வழியில் இருக்கும், குப்பைக் கூளங்கள், கல் போன்றவற்றை அகற்றுவதும் ஒரு நன்மையே(பரகத்து)' என்று போதித்தார்கள். அது ஒரு ஒழுக்க நடவடிக்கையும் ஆகும். இந்த கால்பந்தாட்ட போட்டியில் வீரர்கள், மற்றும் ரசிகர்கள் எவ்வாறு பண்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் சொன்னதோ அதேபோன்று நடந்ததினை அனைத்து ஊடகங்களும் பாராட்டின. ஜப்பான் அணி கலந்து கொண்ட அரங்கில் 5.12.2022 கலீபா இன்டர்நெஷனல் ஸ்டேடியத்தில் ரசிக்க வந்த ஜப்பான் நாட்டினர் போட்டி முடிந்ததும் சென்று விடாது அரங்கில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை எடுத்து தங்கள் கொண்டுவந்த பெரிய, பெரிய பைகளில் பெருக்கி எடுத்துச் சென்று அதற்காகான வெளியே வைக்கப் பட்ட தொட்டில்களில் போட்டனர். அத்துடன் ஜப்பான் அணியினர் தங்கள் உடை மாற்றும் அறையினை போட்டி முடிந்து வெளியேறியபோது அங்குள்ள அறையினை சுத்தம் செய்து விட்டுத்தான் சென்றனர் என்பது மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டிய பண்பாடு தானே!

5)                  இஸ்லாம் ஆண்களும், பெண்களும் ஒரே நேரத்தில் கலந்து கொள்கிற விளையாட்டினை ஆதரிக்கவில்லை. ஏனென்றால் பாலியல் குற்றங்களுக்கு ஆண்கள் ஆளாக நேரிடும்.

6)                   இஸ்லாம் பாலுணர்வை தூண்டுகிற விளையாட்டினை ஆதரிக்கவில்லை. உதாரணத்திற்கு பெண்கள் இறுக்கமாக உடை அணிந்து விளையாடுவதை.

7)                   சாலைகளை பாதசாரிகளுக்கு இடையூறு செய்யும் விளையாட்டை ஆதரிக்கவில்லை.

8)                  இஸ்லாமிய மார்க்க வழிபாடுகளுக்கு தடைபோடும் விளையாட்டினை ஆதரிக்கவில்லை.

9)                   கண்களை மூடிக்கொண்டு சில அணிகள், சிறப்பாக விளையாடும் அணிகளின் வீரர்கள் மீது அளவிற்கு அதிகமான தனிநபர் வழிபாடு(Hero worship) என்பதினை ஆதரிக்கவில்லை.

10)               இன வேறுபாடு காட்டும் விளையாட்டினை ஆதரிக்கவில்லை. அதேபோன்று ஆதிக்க உணர்வு காட்டும் விளையாட்டினை ஆதரிக்கவில்லை. உங்களுக்கெல்லாம் தெரியும் மூன்று முறை உலக ஹெவி வைட் குத்துச் சண்டை வீரராக திகழ்ந்த கேஷியஸ் கிளே என்ற முகமது அலி என்ற ஆப்பிரிக்க-அமெரிக்கர். 1967ம் ஆண்டு அமெரிக்க கொள்கைப்படி ஒவ்வொரு அமெரிக்கனும் ராணுவத்தில் ஒரு முறை பணியாற்றியிருக்க வேண்டும். அதன் படி அவரை வியட்நாம் யுத்தத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அரசு உத்தரவிட்டது. அப்போது முகமது அலி உலக குத்துச் சண்டையில் வெற்றி பெற்றிந்தார். அதனை முகமது அலி, 'நான் ஒரு கருப்பு இனத்தவன், எங்கள் மக்களுக்கே இன்னும் சம உரிமை அந்தஸ்து கொடுக்கவில்லை, அத்துடன் அநியாயமாக அப்பாவி வியட்நாம் மக்கள் மீது அமெரிக்க ஆதிக்கத்தினை காட்டுவதிற்காக தொடுக்கப் பட்ட யுத்தத்தில் கலந்து கொள்ள முடியாது’ என்று மறுத்து விட்டார். அதன் பலன் குத்துச் சண்டை கழகம் அவருடைய பட்டத்தினை பிடுங்கியது. அவருக்கு 5 வருட நன்னடத்தை சிறை தண்டனையும், பத்தாயிரம் டாலர் அபராதமும் 4 வருடம் விளையாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற விதிகளுடன் தண்டனை விதிக்கப் பட்டது. அந்தக் காலம் முடிந்ததும் 1971ம் ஆண்டு மறுபடியும் குத்துச் சண்டையில் கலந்து கொண்டு வெற்றி கொண்டார் என்பது எவ்வாறெல்லாம் ஒரு இஸ்லாமியர் விளையாட்டில் நடந்து கொள்ள வேண்டும் என்று எடுத்துக்காட்டவில்லையா?.

 

ஆகவே இஸ்லாம் விளையாட்டினை வெறுக்கக் கூடியது, இஸ்லாமியருக்கும் விளையாட்டிற்கும் மலைக்கும், மடுவுக்கும் கொண்டது  இல்லை என்பதினை இஸ்லாமிய கத்தார் நாட்டில் 2022ல் நடந்த உலக கால் பந்தாட்ட போட்டி உலகிற்கு ஒரு எடுத்துக் காட்டுகிறது என்று சொன்னால் யாரும் மறுக்க முடியுமா?