Tuesday 19 October, 2021

வாயால் வடை சுடும் வலைத் தளங்கள்

 


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)

 வலைத்தளங்கள் அறிவை விரிவு செய்யவும், புதிய தொடர்புகளை உருவாக்கி மனித நேசம் வளர்க்கவும், ஆரோக்கியமான கருத்துக்களை பகிர்ந்து கொள்வதிற்காகவும், சமூக பிரச்சனைகளுக்கு ஆரோக்கியமாக குரல் கொடுக்கவும், சமூக ஒற்றுமை மேன்படுத்தவும், வேற்றுமையில் ஒற்றுமை காண்பது  போன்ற பல்வேறு நன்மைக்காக  உருவாக்கப் பட்டதாகும். இந்த வலைத்தளத்தினை வயது வித்தியாசம் தெரியாமல் பயன்படுத்துகின்றனர். ஆனால் என்ன நடக்கின்றது என்றால் அதனை கட்டுப் பாடோது பயன்படுத்தாமல், அதிக அளவிற்கு சோறு தண்ணி சாப்பிடாமல், வேலை, குடும்பம், உறவுகள்,போன்றவற்றை தவிர்த்து  அதிலேயே மூழ்கி விடுகின்றனர்.  சிலர் தங்கள் குடும்பப் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளவும், தங்கள் ஊரில் நடக்கும் விருப்பு, வெறுப்பு செய்திகளை தங்கள் கருத்துடன் பகிர்ந்து கொள்ளவும், அரசியலில் தங்கள் பங்கு போன்றவற்றை வெளிக்காட்டவும், கல்வி நிலையங்களில் உள்ள உள்ளூர் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும், சமூக ஒற்றுமையினை சீர்குலைக்கவும் பயன் படுத்துகின்றனர். பல செய்திகள் வீண் சண்டைகளையும், சங்கடங்களையும் ஏற்படுத்துகின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். சில வியாபார பெருமக்களை தங்கள் சுயதொழில் செய்திகளை பரப்பவும், கொரானா காலங்களில் போலியான மருந்து உபகரணங்களை விளம்பரப் படுத்தி மக்களிடம் காசு பறிக்கும் தொழிலிலும் ஈடுபடுகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும் இருந்தாலும் வலைத்தளங்களிலிருந்து அவர்களுக்கு மீளத் தெரிவதில்லை.

            தற்போதைய இளைஞர்களிடமிருந்து அதனைப் பிரிப்பது மிகவும் சிரமம். ஆகவே உங்கள் பணிகளை விரைந்து முடிக்க ஒரு செயலியினை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதுபோன்ற செயலி நீங்கள் உங்கள் முக்கிய செயல்களை குறிப்பிட்ட நேரத்தில் முடித்துவிட உங்களுக்கு நினைவூட்டும். இதன் மூலம் நீங்கள் உங்கள் பொன்னான நேரத்தினை வீணான காரியங்களில் ஈடுபடுவதினை தவிர்க்கமுடியும். 

            உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை வலைத்தளங்கள் ஆரம்பிக்கும்போது பகிர்ந்து கொண்டீர்களென்றால் அதனை தனி பகுதியில் வைக்க மறந்து விடுவதால் உங்களைப் போல போலியான வலைத்தளங்களில் உறுப்பினர்களாக ஆகி உங்களுக்கு அவப் பெயர் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்வார்கள். ஆகவே உங்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். இப்போதெல்லாம் வலைத்தளங்கள் ஒரு பொழுது போக்குத் தளமாக மாறி வருகிறது உங்களுக்குத் தெரியும். சில பெண்கள் வலைத்தளங்களால் அதிகமாக ஈர்க்கப் பட்டு குடும்ப பாரம்பரியம் மறந்து குழந்தை, கணவன் போன்றவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு சீட்டாய்ப் பறந்து, பின்பு சீரழிந்தது செய்திகளில் தினந்தோறும் வந்த வண்ணம் உள்ளன. இதுபோன்ற நிலைகள் தேவையா என்று சுயசிந்தனை செய்யவேண்டும்.

ஆகவே வலைத்தளங்களை பயன்படுத்துபவர் அவை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றதா அல்லது அழிவுப் பாதைக்கும், அடிதடிக்கும் இழுத்துச் செல்கிறதா என்று சிந்தித்து செயலாற்ற வேண்டும். தற்போதெல்லாம் உங்கள் வலைத்தளங்களை அரசு கண்காணிக்கின்றது என்ற உணர்வு வேண்டும். அதனை உணரவில்லையெனில் கேஸு, கோர்ட்டு என்று அல்லல் பட வேண்டும். ஆகவே உங்கள் கவன ஈர்ப்பு ஆக்கப் பூர்வமான செயலைக் கொண்டதாக அமைய வேண்டும் என கேட்டுக் கொண்டால் தவறில்லை என நினைக்கின்றேன்!

Tuesday 5 October, 2021

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!

 

(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

ஹிந்துத்வா அமைப்புகள் இந்தியாவில் முஸ்லிம் ஜனத்தொகை ஹிந்துக்களை விட அதிகமாகி உள்ளனர், மற்றும் இடம் பெயர்ந்தோர் வருகையால் இந்தியாவிற்கே ஆபத்து என கூக்குரல் இடுகின்றனர். அந்த வகையான புகார்கள் உண்மையல்ல என்று ஸ்வாமிநாதன் எஸ் அங்காலேச்சாரிய அய்யர் அவர்கள் ஒரு விரிவான கட்டுரையினை அமெரிக்க வாஷிங்டன் நகரில் இயங்கும், தன்னார்வ, எந்த இயக்கத்தையும் சேரா அமைப்பான PEW ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வினை மேற்கோள் காட்டி தனது கருத்தினை தெரிவித்துள்ளார். பி.ஜெ.பி இரண்டு விஷயத்தில் பய உணர்வு கொண்டுள்ளதால் இந்தியாவில் மத மோதலுக்கு வழி வகுக்கின்றது.. இந்தியாவில் ஹிந்துக்கள் 80 சதவீதம் உள்ளனர். முஸ்லிம்களின் குழந்தை பிறப்பு அதிகமானால் ஹிந்துக்கள் ஜனத்தொகை குறைந்து விடும், 2) உள் துறை அமைச்சகம் சொல்வதுபோல பங்களா தேச இடம்பெயர்ந்தவர்கள் கரையான் போல உள்ளனர் என்றும் பயப்படுகின்றனர். அவைகளல்லாம் உண்மையல்ல என்று PEW அமைப்பு புள்ளிவிவரத்துடன் மறுத்துள்ளது.

            1951ஆண்டிலிருந்து 2011 ம் ஆண்டு வரை 50 ஆண்டுகளில் முஸ்லிம் ஜனத்தொகை 6 சதவீதம் உயர்ந்தாலும் அவை ஒரே நேரத்தில் உயரவில்லை. மாறாக சிறுக, சிறுக உயர்ந்ததாகும். அதே நிலை நீடித்தால் முஸ்லிம் ஜனத்தொகை இந்த நூற்றாண்டில் 20 சதவீதத்திற்கு மேல் கூடாது என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அந்த புள்ளி விவரங்கள் ஹிந்து-முஸ்லிம் பெண்கள் கருத்தரிப்பு எண்ணிக்கையினை வைத்துச் செல்கிறது.

            தேசிய குடும்பவியல் சுகாதார சர்வே 1992-2015ன் படி முஸ்லிம் பெண்கள் கருத்தரிப்பு 4.4 சதவீதத்திலிருந்து 2.1 சதவீதமாக குறைந்து விட்டது. ஆனால் 80 சதவீத ஹிந்து பெண்கள் கருத்தரிப்பு 3.3 சதவீதத்திலிருந்து 2.1 சதவீதமாக மட்டுமே குறைந்து விட்டது. இதிலிருந்து முஸ்லிம் பெண்கள் குறைவாகவே குழந்தை பெற்றுக் கொள்கின்றனர் என்று தெரிகின்றது.

            உலகத்தில் சராசரி வருமானம் அதிகரித்து விட்டாலும் குழந்தை பிறப்பது குறைந்து விட்டது. ஆனால் ஏழை குடும்பங்கள் குடும்ப கட்டுப் பாடு செய்து கொள்வதில்லை, காரணம் குழைந்தை அதிகமாக பெற்றால் அது குடும்ப வருமானத்தைப் பெருக்கும் என்றும் சொல்கின்றனர். உலகிலேயே குழந்தை பிறப்பில் பல்வேறு காரணங்களால் அரை சதவீதம் இறந்து விடுகின்றன. வருமானம் அதிகமாக இருந்தாலும், குறைவான குழந்தை பெற்று, அந்தக் குழந்தைக்கு கல்வியறிவு, வசதியாக வாழ வீடு, வாகனம் வசதி செய்து கொடுக்க வேண்டுமென்றும் விரும்புகின்றனர். ஆகவே தான் கருத்தரிப்பு குறைவாக உள்ளது. இந்த நிலைப் பாட்டில் இந்து-முஸ்லிம் என்ற பாகுபாடு இல்லை. முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் குறைவாக இருப்பதால் நாம் இருவர், நமக்கு ஒருவர் என்பதில் கவனமாக உள்ளனர். இதே நிலை நீடித்தால் முஸ்லிம்கள் கருத்தரிப்பு பூஜ்யமானாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்றும் சொல்கின்றனர்.

            இந்தியாவில் முஸ்லிம்களைவிட ஹிந்துக்கள் ஜனத்தொதை குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக ஹிந்து விதவைகள் மறுமணம் செய்து கொள்ள முன்பெல்லாம் அனுமதி வழங்கியதில்லை  ஆனால் இஸ்லாத்தில் முஸ்லிம் விதவைகள் திருமணம் செய்வதினை ஊக்கப் படுத்துகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு போரால் ஆண்கள் கொல்லப் படும்போது பெண்கள் சிறுவயதிலேயே விதவையாகி விடுகின்றனர். ஏனென்றால் முன்பு சிறுமிகள் சிறு வயதிலேயே திருமணம் முடிக்கும் பழக்கம் இருந்தது. இரண்டாவதாக முஸ்லிம்களைவிட இந்துக்கள் தான் அதிகமாக இடம்பெயர்ந்தவர்களாக உள்ளனர். ஆகவே ஹிந்துத்துவ இரண்டு கருத்துக்களும் உண்மையில்லை என்பது தெளிவாகிறது.

            1992ம் கருத்தரிப்பு புள்ளிவிவரப்படி முஸ்லிம்-ஹிந்து பெண்கள் கருத்தரிப்பு 1:1 ஆகத்தான் இருந்தது. அது 2015 புள்ளிவிவரப்படி 0:5 என்ற பாதியாக குறைந்து.  ஆகவே முஸ்லிம்கள் எண்ணிக்கை ஹிந்துக்களைஅவிட அதிகமாகும் என்ற ஹிந்துத்துவா குற்றச்சாட்டும் அடிபட்டுப் போகிறது.

            அடுத்தக் குற்றச்சாட்டு முஸ்லிம் இடம் பெயர்ந்தோர் ஹிந்துக்களை விட குறைவாகவே உள்ளனர் என்பதாகும். பியூ புள்ளிவிவரப்படி இந்தியாவில் பிறந்தவர்களில் 90 சதவீதம் ஹிந்துக்கள் தானாம். இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு  இடம் பெயர்த்தவர் எண்ணிக்கை  வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குல் வந்தவர்களை விட மூன்று மடங்கு அதிகமாம். 2015 அறிக்கைப்படி இந்தியர் வெளிநாட்டிற்கு இடம்பெயர்ந்து ஒரு கோடியே 50 லட்சமாம். ஆனால்  இந்தியாவிற்குள் வந்த வெளிநாட்டவர் வெறும் 56 லட்சமாம். அவ்வாறு வந்தவர்களில் வங்காளதேசத்திலிருந்து வந்தவர்கள் 32 லட்சமும், பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்தவர் 11 லட்சமும், நேபாளத்திலிருந்து வந்தவர் 5.40 லட்சமும், இலங்கையிலிருந்து வந்தவர்கள் 1,60,000 அடங்குமாம். அவர்களில் பெரும்பாலோர் ஹிந்துக்களாம்.

            இந்தியாவினைவிட்டு வெளியேறும் முஸ்லிம்கள் அதிகமாக உள்ளதாம். அவ்வாறு செல்பவர்களில் அராபிய, வளைகுடா நாடுகளுக்குச் சென்றவர் 35 லட்சமாம், பாகிஸ்தானுக்கு சென்றவர் 20 லட்சமாம், அமெரிக்காவிற்கு சென்றவர் 20 லட்சமாம். அதுபோன்று சென்றவர் முஸ்லிம் ஜனத்தொகை 14.2 சதவீதத்தில் 27 சதவீதமாம். ஆனால் 80 சதவீத ஹிந்துக்கள் கொண்ட சமுதாயத்தில் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்தது 45 சதவீதம் தானாம்.

            அடுத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்  குற்றச்சாட்டு கிருத்துவ மிஷினரிகள் ஹிந்துக்களை மதமாற்றம் செய்கின்றனர் என்பதாம். 1951லிருந்து 2015 வரை உள்ள மொத்த இந்திய ஜனத்தொகையில் வெறும் 2.3 சதவீதம் தான் கிருத்துவர்கள் உள்ளனராம். ஆகவே அந்தப் பயமும் அடிபட்டுப் போகிறது.

            சமீபத்தில் 2019ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட CAA, CRA என்ற சட்டங்கள் வெளிநாட்டு முஸ்லிம்கள் இந்தியாவில் அதிகமாக உள்ளனர் என்பது போன்ற பய உணர்வில் கொண்ட சட்ட மசோதாவாகுமாம். ஆனால் அதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் மெஜாரிட்டி ஹிந்துக்களை பயமுறுத்தி 2022 ம் ஆண்டில் நடைபெறும் சில மாநில தேர்தல் மற்றும் 2024ல் நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் நேரத்தில் அவர்கள் ஒட்டு வங்கியை பெறுவதிற்காக நடத்தப்படும் நாடகம் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். அடுத்ததாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் பகவத் இந்தியர் அனைவரும் ஹிந்துக்களே, அவர்கள் ஒரே பண்பாட்டின் குடையின் கட்டுப் பாட்டுக்குள் உள்ளவர்கள் என்ற புது வேதாந்தத்தினை சொல்கிறார். இந்திய நாடு பல்வேறு மத, கலாட்சார கோட்பாடுகளை கொண்டதாகும். முஸ்லிம்களுக்கு என்று தனி கலாட்சாரம், பண்பு உள்ளது. அவைகளையெல்லாம் பாதுகாக்கத்தான் இந்திய அரசிலமைப்பு 1950ல் தோற்றுவிக்கப் பட்டது. ஆகவே இனியாவது இந்திய மெஜாரிட்டி மக்களை மத துவேஷ பய உணர்வை ஏற்படுத்தி  பிரிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுவது காலத்தின் கட்டாயமாகுமல்லவா?

 

           

Saturday 2 October, 2021

மீலாதுநபி முக்கியத்துவம் உறுதிமொழி (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ )

 

உங்களுக்கெல்லாம் தெரியும் வருகிற அக்டோபர் 19ந்தேதி நானிலம் போற்றும் பெருமானார் ரசூலுல்லாஹ் பிறந்தநாளை மீலாது நபி என்று அழைத்து, அதற்கு தமிழக அரசும் விடுமுறை விட்டுள்ளது. ஆங்கில எழுத்தாளர் மைக்கேல் ஹார்ட்ஸ் உலகில் முக்கியமான 100 நபர்களை தேர்ந்தெடுத்து  அதில் மிக சிறந்த நபர் யார் என்று ஆராயும்போது முகமது  ரசூலுல்லாஹ் பெயரினை சொல்லியுள்ளார். பாலைவனம், வறண்ட பூமி, பசுமையில்லா மலை குன்றுகள் கொண்ட அராபியா நாட்டில் எழுத்தறிவில்லா ஒரு மனிதர் எல்லாம் வல்ல இறைவனால் புனிதராக்கப் பட்டு அங்குள்ள காட்டரபிகளை நல்வழிப் படுத்த ஏக இறைவனால் அல் குரானை 1400 ஆண்டுகளுக்கு முன்பு ரஸூலல்லாவிற்கு  அருளி இன்று கிட்டத்தட்ட 170 கோடி முஸ்லிம்களை கொண்ட மார்க்கமாக இருப்பதிற்கான பெருமை ரஸூலல்லாவினைப் பொருந்தும். ஆகவே தான் ரஸூலல்லா பிறந்த நாள் சிறந்த நாளாக கருதப் படுகிறது. அவ்வாறு கருதுவதினால்  ரஸூலல்லாவினை, அல்லாஹ்விற்கு இணையாக யாரும் நினைப்பதில்லை. ஏனென்றால் ரஸூலல்லாவே தனக்கு முதலிடம் கொடுக்கக் கூடாது என்றும், தன்னுடைய ஒரு சிறு வரைபடம் கூட இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள்.

            நம்மிடையே சிலரும், மாற்று மதத்தினவரும், சில தர்க்க வாதிகளும் ஏன் ரஸூலல்லாவே திருகுரானை எழுதி இருக்கக் கூடாது என்று விவாதம் செய்யவதினை பார்க்கின்றோம். அவர்களுக்கெல்லாம் நெத்தியடி பதில் சொல்லும் விதமாக திருகுரான் அல்லாஹ்வினாலேயே ரஸூலல்லாவிற்கு அருளப்பட்டது என்று இரத்தின சுருக்கமாக கீழ்கண்ட உதாரணத்துடன் விளக்க ஆசைப் படுகிறேன்:

1)    திருகுரான் 600 பக்கங்கள் கொண்டது. அது ஒரே மூச்சிலேயோ, ஒரே நாளிலேயோ, ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கிடையிலேயோ இறக்கி அருளப்படவில்லை மாறாக 23 நீண்ட வருடங்களில் ரஸூலல்லாவிற்கு அருளப்பட்டது. அது ஒரு குறிப்பிட்ட செய்தியினை மட்டும் சொல்லவில்லை மாறாக மக்களை நல்வழிப் படுத்த பல செய்திகளைக் கொண்டதாக உள்ளது.

2)    நீங்கள் சாதாரணமாக ஒரு புத்தகம் எழுத வேண்டுமென்றால் ஒரு தவறில்லாமல் எழுதமுடியாது. ஆனால் திருக்குரானில் இலக்கணப் பிழையில்லாமல், ஒன்னொன்றுக்கு முரண்படாமல் அறிவுபூர்வமான பல்வேறு உண்மையான தகவல்கள் உள்ளன.

3)    பாலைவனத்தில் ஒரு பாடசாலையோ, அல்லது அறிவினுக்கு உணவாக கூறப் படும்  லைப்ரரியோ அங்கு இருக்கவில்லை. அப்படியிருந்திருந்தால் அங்கே கற்று குரானை எழுதியிருக்கலாம் என்று சொல்வார்கள்.

4)    குர்ஆனில் மார்க்க சம்பந்தமாக மட்டும் சொல்லப் படவில்லை. மாறாக சிவில் சட்டம், கிரிமினல் சட்டம், குடும்பவியல் சட்டம், வேலை சம்பந்தமான சட்டம், ராணுவ சட்டம், தனிப் பட்டவர் காயம் ஏற்படுத்துதல் சட்டம், ரியல் எஸ்டேட் சட்டம், வரி விதிப்பு சட்டம் போன்ற பல்வேறு விதமான சட்ட நுணுக்கங்களை கொண்ட பொக்கிஷமாக உள்ளது. நீங்கள் அறிந்திருப்பீர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்ற அம்பேத்கார் தலைமையில் ஒரு கமிட்டி 1950ல் அமைக்கப் பட்டதும் அதில் பல்வேறு சட்ட ஓட்டைகள் உள்ளது என்றும் பல்வேறு தரப்பு மக்களால் சொல்லப் படுகிறது நமது நாட்டில். ஆனால் குர்ஆனில் சொல்லப் பட்ட சட்டங்கள் பல்வேறு நாடுகளில் நிறைவேற்றியும், இஸ்லாம் இல்லாத நாடுகளில் உள்ள மக்கள் கூட குர்ஆனில் கூறிய சட்டம் போன்று தங்கள் நாட்டில் அமைய வேண்டும் என்று சொல்லுவதினை காணலாம்.

5)    மக்காவில் வாழ்ந்த ரஸூலல்லாவிற்கு கிறித்துவ சமுதாயத்தினைப் பற்றிய தகவல் தெரிந்திருக்க நியாயமில்லை காரணம் அங்கே கிருத்துவர் வாழவில்லை. ஆனால் கிருத்துவர்கள் நமது மூதாதையர் என்றும், ஈஷா நபி என்ற ஜீசஸ் பற்றி விலாவாரியாக விவரித்துள்ளது. எந்த இடத்திலும் ரஸூலல்லா தான் மரித்த பின்பு மீண்டெழுப்பப் படுவேன் என்று சொல்லவில்லை. மாறாக ஈஸா நபி அவர்கள் மீண்டெழுவார் என்றும் கூறுகின்றது. ஈஸா நபி சரித்திரத்தினை எழுதிய சீடர் பர்னபாஸ் எழுதிய தோலிலான நூல் ஒன்று துருக்கி நூலகத்தில் உள்ளத்தினை கிருத்துவர்களின் தலைவர் போப் பெனெடிக் சென்று பார்த்து ஆச்சரியப் பட்டாராம். காரணம் தனக்குப் பின்பு முகமது ரசூலுல்லாஹ் என்பவர் வந்து மக்களை நல்வழிப் படுத்தியும், ஓரிறை கொள்கையினை எடுத்தியம்பியும் மக்கள் சேவை செய்வார் என்றும் உள்ளதாம். அது பாட்டுமல்ல ஈஸா நபி சிலுவையில் அறையப்படவில்லை மாறாக வேறொருவர் அறையப் பட்டார் என்றும், திருகுரானில் சொல்லப் பட்டதுபோல அவர்களை அல்லாஹ் தன்னிடம் அழைத்துக் கொண்டான் என்றும் கூறியதைக் கண்டு ஆச்சரியப் பட்டு பின்னாளில் இஸ்லாம் மார்க்க நெறியினை தேர்ந்தெடுத்தார் என்றும் கூறப் படுகிறது.

6)    ரஸூலல்லாவிற்கு வகி வருவதற்கு முன்பு ஒரு அரசு எப்படி இருக்கவேண்டும் அல்லது எப்படி அமைக்க வேண்டும் என்றும், அல்லாஹ்வினை வணங்குவதிக்கு முன்பு எப்படி தன்னை தூய்மை படுத்திக்  கொள்ளவேண்டும் என்றும் தெரியாது.

7)    மனோதத்துவ மந்திரங்கள் ரஸூலல்லாவிற்கு தெரிந்திருக்கின்றது நியாயமில்லை. குழந்தைச் செல்வங்களை எப்படி வளர்ப்பது, எவ்வாறு சமரச நடவடிக்கைகள் மேற்கொள்வது என்றும் தெரியாது. சொத்துக்களை பிரித்துக் கொள்ளும் முறைகள் மற்றும்  நிதித்துறை கையாள்வதும் தெரியாது.

8)    ஒரு தாய்க்கு எப்படி கருத்தரிக்கும் முறை, கடலின் அமைப்பு, பூகம்ப ரேகை அமைப்பு, மேகமூட்டம் சொல்லும் ஒன்று கூடுதல், அதன் விளக்கம், கதிரியக்கம், பறவை, செடி கொடி, விலங்கினங்கள் உயிர் வாழ்வது மற்றும் ஒன்றுக்கொன்று பேசிக்கொள்வது, மலை அமைப்பு, தேனை எடுக்கும் தேனீ எவ்வாறு வெளிப்படுத்துகிறது, ‘பிக் பங்’ என்ற உலக பெரு வெடிப்பு ஏற்பட்டதும், கோளரங்கம் அமைக்கப் பட்டது போன்ற எண்ணற்ற  செய்திகளை துல்லிதமாக ரஸூலல்லாவிற்கு வகி இறங்குவதற்கு முன்பு தெரியாது.

9)    வருங்காலத்தில் எழுத வேண்டுமென்றால் தனி மனிதரான ரஸூலல்லாஹ்வினால் எழுதமுடியாது. உலகத்தினைப் பற்றிய செய்திகளை பற்றி எழுத வேண்டுமென்றால் அந்தந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யவுமில்லை.

10)  பைபிளுக்கு வேறுபட்டு குரான் இருக்க முடியாது. வகியால் இறக்கியருளப்பட்டதால் தான் பைபிளை சார்ந்தே குரானும் உள்ளது.

11)  எழுத்தாளர்களுக்குத் தெரியும் ஒரு புத்தகத்தினை எழுதும் போது எழுத்தாளருடைய தனிப் பட்ட வாழ்க்கையினை எழுதாமல் இருக்க முடியாது. உதாரணத்திற்கு மனைவி இறந்த சோகம், எப்போது குழந்தை பிறந்தது, எப்போது மணமுடிக்க செய்தது, பேரக் குழந்தைகள் பிறந்த செய்தி, போரில் எப்போது வெற்றி மற்றும் தோல்விகளை கூறாமல் இருக்கமுடியாது.

12)  குரானை அர்த்தம் தெரிந்து படித்தவர்களுக்கு எப்படி ஒரு தனி மனிதரால் 1400 ஆண்டுகளுக்கு முன்னாள் எழுதமுடியும் என்ற கேள்விக்கணை எழுப்பாமல் இருக்க முடியாது. குரானை எந்தவித முரண்பாடுமில்லாமல் அறிவு சால் அறிஞர்கள் கொண்ட குழு அமைத்து காலத்திற்கு ஏற்ற மாறுபட்ட விஞ்ஞானம், வாழ்க்கை தத்துவம், போன்றவற்றை அனுசரித்து எழுத வேண்டும்.

13)  சரி, அப்படியென்றால் ஏன் சாத்தான் ஓதும் வேதமாக இருக்கக் கூடாது என்றும் சிலர் கேட்கலாம், அதற்கும் பதிலுண்டு. சாத்தான் ஈஷா நபி அவர்களை புகழுமா, ஏழைகளுக்கு உதவுங்கள் என்று சொல்லுமா, சாத்தானுக்கு பயந்து சொல்லுங்கள் என்று சாத்தானே சொல்வானா? என்றும் சிந்தித்துப் பாருங்கள்.

14)   ரசூலுல்லாஹ் தனிமனிதராக இருந்து பின்பு தனது கடைசி அரபா உரையினை லட்சக் கணக்கான மக்கள் கேட்கும் அளவிற்கு மார்க்க, அரசியல் தலைவராக இருந்தார் அராபிய துணைக் கண்டத்தில். அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் மக்கள் தன்னை வணங்குவதிற்கோ, காலில் விழுவத்திற்கோ, தான் வரும்போது எழுந்து நிற்பதிற்கோ, தன்னை யாரும் புகழ்வதிற்கோ, தான் இறந்த பின்பு தன்னை இறைவனுக்கு இணையாக ஆக்கிவிடக் கூடாது என்று கவனமாக இருந்த காரணத்தால் இன்று உலகில் அவருடைய சிறு கீரல் படம் கூட வெளிவந்தாலும் முஸ்லிம் மக்கள் வெகுண்டெழுகின்றனர். அவர்களுடைய மதினா அடக்கத் தலத்திற்கு செல்லும் முஸ்லிம்களை அங்கே இருக்கும் அதிகாரிகள் எங்கே கையேந்தி ரஸூலல்லாவினை இறைவனுக்கு இணையாக ஆக்கிவிடுவார்களோ என்று அடித்து விரட்டுகிறார்கள் என்றால் ரசூலுல்லாஹ் எவ்வளவு கவனமாக இருந்தார்கள் தான் வெறும் தூதர்தான் தான் மற்ற மதத்தலைவர்களை அவர்கள் மரித்த பின்பு அவர்களுக்கு  சிலைகள்  வைத்து வழிபடுவது போல தனக்கும் வைத்து விடுவார்கள் என்பதினுக்கு மிகவும் கவனமாக இருந்த மாமனிதர் ரசூலுல்லாஹ் ஆகும்.

ஆகவே அல் குரான் சைத்தானாலும் எழுதப் படவில்லை, அறிவு சால் அறிஞர்களாலும் எழுதப் படவில்லை, முகமது என்ற தனி நபராலும் எழுதப் படவில்லை, அது எல்லாம் வல்ல அல்லாஹ்வால் ரஸூலல்லாஹ்விற்கு அருளப் பட்ட ஒன்றே என்று பல மதத் தலைவர்கள், அறிஞர்கள் ஒப்புக் கொள்ளப் பட்ட ஒன்றாகும். ஆகவே அதில் தர்க்கம் செய்ய யாருக்கும் உரிமையில்லை. அதன் படி நடப்பதே நாம் ரஸூலல்லாஹ்விற்கும், வகியை இறக்கி அருளிய அல்லாஹ்விற்கும் செய்யும் நன்றிக் கடன் என்று மீலாது நபி நாளில் உறுதி கொள்ளலாமா?