Tuesday 30 March, 2021

கத்தியெடுத்தவன், கத்தியால் சாவானா?

 


டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்,(ஓ)

ஐ.நா. சபையின் இலங்கைக்கான மனித உரிமை மீறல் தீர்மான ஓட்டெடுப்பு 23.3.3021ல் நடந்தது. அதில் 22 நாடுகள் ஆதரவு அளித்தும், சீனா, பாகிஸ்தான்,மற்றும் 9 நாடுகள் எதிர்த்தும், இந்தியா உளபட 14 நாடுகள் வெளிநடப்பு செய்தாலும்,  தீர்மானம் நிறைவேறியது. இந்தியா வெளி நடப்பு செய்ததை எதிர்பாக்காத இலங்கை தமிழ் ஈழத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழக கட்சிகள், மத்திய அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தது ஊடகங்கள் வாயிலாக அறிவோம். இந்தியா அவ்வாறு செய்ததிற்கு சில காரணங்கள் இருக்கலாம், எங்கே குஜராத்தில் 2002 ம் ஆண்டு கோத்ரா ரயில் சம்பவத்தினை காரணம் காட்டி கிட்டத்தட்ட 3000 அப்பாவி முஸ்லிம் மக்களை கொன்று, அவர்கள் இருக்குமிடம் நாசப் படுத்தி, அவர்கள் வியாபார நிறுவனகங்கள் கொலுத்தப் பட்ட விவகாரம், மற்றும் சென்ற ஆண்டு CAA, CRC மசோதா நிறைவேற்றினத்தினைத் தொடர்ந்து ஏற்பட்ட முஸ்லிம் எழுச்சியினை எவ்வாறு சங் பரிவார் துணையுடன் அடக்க முயன்றனர் என்று உலகமே அறிந்திருக்கும்போது, எங்கே அந்த விவகாரம் மறு மனித உரிமை மீறல் தீர்மானத்திற்கு வழி வகுத்து விடக் கூடாதே என்ற அச்சத்தால் கூட இருக்கலாம் என ஊடகங்கள் எடுத்துக் காட்டின.

            இப்போது, இலங்கையில் அப்படி என்ன மனித உரிமை மீறல் என்று பார்க்கலாம். இலங்கை ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திலிருந்து 1948ல் சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் பெற்றதிலிருந்து சிங்கள மக்களின் அத்துமீறல் தமிழர் அதிகமாக வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தலையெடுத்தது. மேற்படி பகுதிகளில் குடியேறியவர்கள் தமிழ் நாட்டினை பூர்வீகமாக கொண்டவர்கள் என்றால் மிகையாகாது. 1956ம் ஆண்டு இலங்கை பிரதமர் பண்டார நாயகா சிங்கள மொழி ஆட்சி மொழி என்று அறிவிப்பு செய்தது இலங்கை  தமிழர்கள் தலையில் இடி விழுந்தது போல இருந்தது. 1970ம் ஆண்டு கல்வியில் கொண்டு வரப் பட்ட, 'Policy of Standardization' என்ற கொள்கை தமிழ் மாணவர்கள் உயர்கல்வி கட்க தடைக் கல்லாக இருந்தது. மாணவர்கள் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம், மறியல் போன்றவைகள் தொடர்ந்தன. தமிழ் மாணவர்கள் போராட்டத் தலமாக Jaffna பொது நூலகம் செயல் பட்டது.  1981ம் வருடம் சிங்கள மக்களாலும் அவர்களுக்கு உறுதுணையாக ராணுவமும் செயல் பட்டு Jaffna நூலகம் கொலுத்தப் பட்டது. பௌத்த மதத்திற்கு அரசு முக்கியத்துவம் கொடுத்தது தமிழ் மக்களை மொழி, இனம், மதத்தினால் அரசு பிரித்தாளும் கொள்கையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று அறிந்த படித்த இளைஞர்கள் வெகுண்டெழுந்து ‘தமிழ் ஈழம்’ பெறுவதே ஒரே வழி என்று முடிவெடுத்தனர்.

            ஈழ தமிழர்களின் எழுச்சி தலைவர்களான செல்வராஜா என்ற குட்டிமணி, நடராஜா என்ற தங்கதுரை மற்றும் 30 தமிழ் இளைஞர்கள் ‘வெளிகொடா’ என்ற சிறையில் இருந்தபோது 25.7.1983 அன்று சிங்கள சிறை அதிகாரிகள் துணையுடன் சிங்கள வெறியர்களால் பரிதாபமாக கொல்லப் பட்டது உலகெங்கும் உள்ள தமிழ் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதனைத் தொடர்ந்து தமிழ் ஈழம் சுயாட்சி என்ற குரலிலிருந்து தமிழ் ஈழம் விடுதலை என்ற கோசம் ஆரம்பித்தது. சிங்கள வெறியாட்டத்திற்குப் பயந்து போராளிகள் தமிழகத்திற்கு வர ஆரம்பித்தனர். அவர்கள் தங்கள் பயிற்சி முகாம், மற்றும் பிரசாரா பொருட்காட்சிகள் நடத்தப் பட்டன. அதற்கு மத்திய மாநில அரசுகளும் உதவி செய்தன. 1984ம் ஆண்டு ஊட்டியில் ADSP ஆக பணியாற்றியபோது என்னிடம் மூன்று இலங்கை தமிழ் இளைஞர்கள் வந்து தமிழர் போராட்ட பொருக்காட்சி நடத்த வேண்டுமென்றனர். அப்போது அதில் ஒருவர் கழுத்தில் செப்பு தகடால் ஆனா தாயத்து அணிந்திருந்தார். அதனை கூர்ந்து பார்த்தபோது அதில் Al Fatah என அரபிக் மொழியில் இருந்தது. அதனை சுட்டிக் காட்டி அவரிடம் கேட்டபோது அவர் சொன்னார் 'தான் பாலஸ்தீனத்தில் பயிற்சி பெற்றதாகவும், அவர்கள் பயிற்சி எடுத்ததிற்காக நம்பர்' என்றார். அதன் பிறகு  நான் 1986 ல் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது TELO இயக்கம் நடத்திய பயிற்சி முகாமை உத்தரவின் பேரில் வேலூர் சரக டி.ஐ.ஜி Nailwal அவர்களுடன் சென்று கொல்லிமலையில் சோதனையிட்டோம்.

1)    ஈழ விடுதலை போராளிகளில் இரு பிரிவுகளாக காணலாம். பிரபாகரன் தலைமையிலான LTTE மீனவர் சமுதாயமான ‘கரையார்’ என்ற சமூகத்தினை சார்ந்தவர்களாகவும், மற்ற அமைப்புகள் ‘வெள்ளாளர்’ என்ற விவசாய சமூகத்தினவராகவும் இருந்தனர். LTTE இயக்கத்தில் பிரபாகரனும், பாலசிங்கமும் இணைந்து செயலாற்றினர். அவர்களுக்கு வெளிநாடுகளிருந்து பணம் பெற்றது KP என்ற பத்மநாபனாகும் என்று உலக பயங்கரவாத பொருளாதாரம் ஈட்டும் பட்டியலில் உள்ளார். ஆரம்பத்தில் ஒன்றாக இணைத்து போராட்டம் நடத்திய விடுதலை இயக்கத்தினர் LTTE இயக்கத் தலைவர் பிரபாகரனால் மற்ற இயக்கங்களை கட்டுப் படுத்தும் முயற்சியில் இறங்கியதால் இரு பிரிவாக செயல் பட்டனர். ஒன்று பிரபாகரன் ஆதரவு மற்றொன்று அரசுக்கு ஆதரவானது.

2)    Elam Revolutionary Organisation of Students(EROS ) பாலகுமார் தலைமையில் ஈழப் போராட்டம் நடத்தினர்.

3) EPRLF Elam People's Revolutionary Libration Front Pathamanaba       தலைமையில் அரசு சார்ந்த இயக்கமாக LTTEக்கு மாற்றாக வரவேண்டும் என்று    தலையெடுத்தனர்.

4) EPDP Elam People Democratic Front டக்லஸ் தேவானந்தா தலைமையில்     அரசு சார்ந்த இயக்கமாக செயல்பட்டு இலங்கை பிரதமர் சந்திரிகா    பண்டாரநாயக்கா மந்திரி சபையில் மந்திரியாகவும் செயல் பட்டார். இவருடைய இயக்கம் சென்னை சூளைமேட்டில் இருந்தபோது அங்குள்ள மக்களுக்கு இடைஞ்சலாக இருக்கின்றது என்று 1986ம் ஆண்டு திருநாவுக்கரசு என்ற வக்கீல் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தபோது டக்ளஸ் தேவானந்தா கைத்துப்பாக்கியால் சுட்டபோது வக்கீல் இறந்தார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

   உலக அளவில் மிகவும் அபாயகரமான தீவிரவாத இயக்கங்களில் முக்கியமான   மிகவும் வல்லமை கொண்ட LTTE இயக்கம் தேய் பிறையாகு மங்கி மறைந்தது   ஒரு வரலாற்றுக் கதை எனலாம்:

25 வருட கால தமிழ் ஈழப் போர் வெற்றி கொண்டதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். அதற்கு முக்கிய காரணங்கள் ஆராய்வோமென்றால்:

1)    ஈழ போராட்டக் குழுவினரிடையே யார் பெரியவர் என்ற போராட்டம் உச்சக் கட்டத்தில் சகோதர யுத்தம் விஸ்வ ரூபம் எடுத்தது. அதன் பலன்  ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்த TELO அமைப்பின் தளபதி ஸ்ரீ சபாரத்தினம் LTTE முன்னாள் சரணடைந்தபோதும், தி.மு.க தலைவர்  'விடுதலைப் புலிகள் தளபதி பிரபாகரனை நோக்கி, 'தம்பி சபாரெத்தினத்திற்கு உயிர் பிச்சை கொடு' என்று வேண்டுகோள் விடுத்தும் சபாரத்தினம் 1986ல் கொல்லப் பட்டார். தமிழர் ஆதரவு தலைவர் பெரியவர் அமிர்தலிங்கம் 1989ம் ஆண்டு கொல்லப் பட்டார். பிரபாகரன் தமிழகத்தில் தஞ்சம் கொண்ட நாட்களில் புலிகளின் இயக்கத்தினை தலைமையேற்று நடத்தி இலங்கை அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த தளபதி மாத்தையா 1994ல் கொல்லப் பட்டார். பிரபாகரனுக்கு சிங்கப்பூரிலிருந்து கப்பலில் ஆயுதம் கொண்டு வந்த கிட்டு என்ற கிருஷ்ணகுமார் நடுக் கடலில் மடிந்தார். EPRLF சென்னை அலுவலகத்தில் இருந்த அதன் தலைவர் பத்மநாபா மற்றும் 12 ஸ்ரீலங்கன் தமிழர், ஒரு சென்னை வாசியும் விடுதலைப் புலிகளின் தாக்குதலால் 1990ல் கொல்லப் பட்டதால் அன்றைய தி.மு.க அரசுக்கு அவப் பெயர் உண்டானது.

2)    இலங்கை பெட்டிக்கோலா மாவட்டத்தில் பள்ளிவாசல்களில் அதிகாலை பாஜ்ர் தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது 1990 ல் துப்பாக்கி பிரயோகம் செய்து கிட்டத்தட்ட 300 அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப் பட்டது, முஸ்லிம்களிடையே இன்னமும் விடுதலைப் புலிகள் பெயர் கேட்டாலே அதிர்ச்சியில் உறைந்து விடும் அளவிற்கு பயங்கரமான இயக்கமானது.

3)    அன்றைய பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி  இலங்கையில் அமைதி ஏற்படவும், அனைத்து மக்களும் நிம்மதி பெறவும், புலிகளிடமிருந்து ஆயுதங்கள் களையவும் 1987ல் இந்திய ராணுவத்தினை அனுப்பினார். ஆனால் விடுதலிப் புலிகள் இந்தியப் படைகள் மீது அபாண்டமான பழிகள் சுமத்தியதுடன் இலங்கை அரசும் உங்கள் பணி போதும் என்று சொன்னதால் 1990ம் ஆண்டு ராணுவம் திரும்பப் பெறப் பட்டது. அதற்கு பலன் ராஜிவ் மீது கோபம் கொண்ட விடுதலைப் புலிகள் மே மாதம் 21ந்தேதி 1991ல் ஸ்ரீபெரும்புதூரில் கட்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றபோது மனித வெடிகுண்டு மூலம் அவரும் அவருடன் சேர்ந்து 13 பேர்களும் கொல்லப் பட்டனர். இந்திய மண்ணில் வருங்கால உலக தலைவர் ஒருவர் கொல்லப் பட்டது தமிழர் மட்டுமல்லாது உலக அளவில் சோகத்தினை ஏற்படுத்தியது.

4)    கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வர்கள், 'வினை விதித்தவன் வினை அறுப்பானென்று' அதற்கெனங்க புலிகள் மீது இருந்த கொஞ்ச நஞ்ச அனுதாபமும் காற்றில் பறந்தது. இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, கனடா மற்றும் 32 ஐரோப்பிய நாடுகள் LTTE இயக்கத்தினை தடை செய்தது.

5)    இந்தியாவில் நடத்திய கொலைவெறி தாக்குதல் இலங்கையிலும் நடத்தப் பட்டது. 1993ம் ஆண்டு இலங்கை பிரதமர் பிரேமதாசா கலந்து கொண்ட 1993 மே தின ஊர்வலத்தில் மனித வெடிகுண்டால் கொல்லப் பட்டார். அதேபோன்று அன்றைய பிரதமர் சந்திரிகா பண்டாரநாயகா கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தின் மீது கொலைவெறி 1999ல் நடத்தப் பட்டு ஒரு கண்ணை இழந்தார்.

6)    இந்திய மண்ணில் மற்றொரு தாக்குதலும் நடைபெற்றது. 1990ம் ஆண்டு விடுதலைப் புலிகள் சென்ற வாகனத்தினை இராமநாதபுரம் பட்டினப் காத்தான் செக் போஸ்டில் தடுத்து நிறுத்தியபோது சுப்பிரமணியன் என்ற காவலரை சுட்டுத் தள்ளிவிட்டு சென்றது தமிழக காலவரிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது.

7)    LTTE அமைப்பின் கிழக்குப் பகுதி தளபதியாக இருந்த கருணா,  பிரபாகரன் செயல் பிடிக்காது 5000 செயல் வீரர்களுடன் தனியாக இருந்து அரசு சார்ந்த நிலையினை எடுத்தார்.

8)    2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் 30,000 கடற்கரை ஒர மக்கள் மடிந்தது விடுதலை இயக்கத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

9)    25 வருட தமிழ் ஈழ போராட்டம் மூலம் தமிழர் பொருளாதாரம் பெரிதே பாதிக்கப் பட்டது. ஐ.நா. ஆய்வின்படி தமிழ் விடுதலை போரில் ஒரு லட்சம் மக்கள் மடிந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.

10)  உலகெங்கும் தீவிரவாதத்தினை அழித்திடும் இயக்கத்திற்கு குரல் கொடுத்தது மட்டுமல்லாமல் அந்தந்த அரசுக்கும் உதவியும் உலக நாடுகள்  செய்தது. தழீழ போரினால் பாதிக்கப் பட்ட இலங்கையில் அவர்களை ஒழிக்க நிலையான அரசு வேண்டும் என்று குரல் எழுப்பப் பட்டு அதற்கு பௌத்த சாமியார்களும் ஆதரவு தெரிவித்ததால் இலங்கையில் ராஜபக்சே அரசு பதவி ஏற்று இறுதி கட்ட போர் நடந்து 2009ம் ஆண்டு முல்லை வாய்க்கால் பகுதியில் ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகள், பனைய கைதிகளாக பிடிக்கப் பட்ட அப்பாவி தமிழர்கள் இறந்ததும், தளபதி பிரபாகரன் கொல்லப் பட்டும் LTTE இயக்கத்தால் 16, மே மாதம் 2009ல் தோல்வியினை ஒப்புக் கொள்ளப் பட்டது.

இதில் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், எந்த தீவிரவாத இயக்கமும் நிலையான அரசிடம் தோல்வி அடைவது உறுதி. 1991ல் ராஜிவ் காந்தி குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டு ஜெயிலில் உள்ளனர். அதனை ஒரு கருவியாக வைத்து தமிழ் நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகள் பொம்மலாட்டம் செய்கின்றனர். தண்டனை அடைந்தவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று. ஆனால் தண்டனை பெற்ற  முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பியாஸ், அவருடைய சகோதரர் ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர்

ஸ்ரீலங்காவிலிருந்து கள்ளத்தனமாக இந்தியா வந்தவர்கள். அதில் பேரறிவாளன் மட்டும் தான் தமிழகத்தினைச் சார்ந்தவன். ஸ்ரீலங்காவினைச் சார்ந்தவர்களை விடுதலை செய்தால் அவர்கள் இலங்கை அரசிடம் தான் ஒப்படைக்க வேண்டும். இப்போதுள்ள சூழலில் அவர்கள் அங்கு சென்றால் அவர்கள் உயிர் வாழமுடியுமா என்பதே சந்தேகம். அதெல்லாம் இங்குள்ள தமிழர் கட்சிகளுக்குத் தெரியும் ஆனாலும் அரசியலுக்காக குரல் கொடுக்கின்றனர். அப்படி உள்ளவர்கள் எத்தனையோ தமிழ்நாட்டின் கைதிகள் 20 வருடத்திற்கு மேலாக ஜெயிலில் வாடுகின்றனர் அவர்கள் விடுதலைக்கு குரல் எழுப்பவில்லையே அது ஏன் என்று கேட்க முடியவில்லை?

இந்த இடத்தில் ராஜிவ் காந்தியின் அருமை மகளார் பிரியங்கா வேலூர் சிறையில் இருக்கும் நளினியினை பார்த்து என்ன நடந்தது என்று விசாரிக்க 18.3.2008 ம் ஆண்டு முன்னறிவிப்பு இன்றி சென்றார். அவர் வந்ததினை ஒரு கனவு போல இருந்தது என்று பின்பு நளினி  கூறியுள்ளார். பிரியங்கா, நளினியினை பார்த்ததும், 'My father is a good and soft man, why did you do it? you would have sorted out the issues whatever it may be through dialogue' (என்னுடைய தந்தை நல்லவர், மென்மையானவர், ஏன் அவ்வாறு செய்தீர்கள், எந்த விஷயமாக இருந்தாலும் பேசி தீர்த்து இருக்கலாமே) என்று சொன்னது மட்டுமல்லாமல் கண்ணீர் விட்டு அழுதாராம். தந்தையினை இழந்த மகள் அதனைவிட மிகவும் மென்மையான ஆனால் கடுமையான உள்ளர்த்தம் உள்ள வார்த்தைகளை யாரும் சொல்ல இயலாது. நளினியும் அழுதாராம், ஆனால் தான் நிரபராரி என்று மட்டும் சொன்னாராம். 'எங்கள் குடும்பம் உங்களை மன்னித்து விட்டது' என்று சொல்லி வந்து விட்டாராம். அந்த வார்த்தைகள் நளினி உயிருடன் இருக்கும் வரை அவரை வாட்டி எடுக்கும் என்பது நிச்சயமல்லவா

தமிழர் பழமொழி, 'அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொள்ளும்',  'கொலைக் குற்றம் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தற்காலிகமாக தப்பிக்கலாம் ஆனால் ஒரு போதும் தப்பிக்க முடியாது' 'கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான்' போன்ற வாசகங்கள் LTTE பிரபாகரன் போன்றவர்களுக்கு தகும் என்றால் மிகையாகாது தானே?

 

Friday 5 March, 2021

நிரந்தர நண்பனுமில்லை, எதிரியுமில்லை நவீன உலகில்!


இந்த வருடம் பிப்ரவரி 25 ந்தேதி பாக் பிரதமர் அரசு பயணமாக இலங்கை பயணம் மேற்கொண்டபோது இந்திய வானில் அவருடைய விமானம் பறக்க நமது நாடு அனுமதி அளித்தது என்று அனைத்து பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் படம் பிடித்துக் காட்டின. அதற்கு காரணம் நமது நாட்டின் ஜனாதிபதி ஐலாண்ட் பயணமாக 2019 வருடம் செப்டம்பர் 7ல் பயணம் மேற்கொண்டபோது பாகிஸ்தான் நாட்டின் வான் வெளியினை பயன் படுத்த அனுமதி அளிக்கவில்லை. அதற்கு காரணம் அந்த நாடு சொல்லும்போது ஆகஸ்ட் மாதம் காஷ்மீரின் சிறப்பு சலுகையினை ரத்து செய்ததினை காரணமாக காட்டப் பட்டடது.

            பிரிட்டிஷ் அரசினை இந்திய மண்ணிலிருந்து இணைந்து போராட்டம் நடத்தி விரட்டி விட்டு இந்திய துணைக் கண்டத்தினை இரு கூறாக்கி இந்திய நாடு என்று 1947 ஆகஸ்ட் மாதம் 15 சுதந்திர நாடாகவும் இந்தியாவிற்கு மேற்கு-கிழக்குப் பகுதிகளை இரண்டாக இணைத்து பாகிஸ்தான் நாடாகவும் 1947 ஆகஸ்ட் மாதம் 14ந் தேதி சுதந்திர நாடாகவும் அறிவித்தது உங்களுக்குத் தெரியும். அவ்வாறு இரு கூறாக ஆக்கியத்திற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப் பட்டாலும், அவ்வாறு பிரிந்ததினால் இரு நாடுகள் சந்தித்த சவால்கள் பற்றி இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.

            இந்தியா சந்தித்த சவால்களை மூன்று பகுதிகளாக காணலாம்:

1) முதல் பகுதி(1947-1967)

சொத்துப் பிரித்தல்: ஒப்பந்தப் படி இந்தியா பாகிஸ்தானுக்கு ரூ 55/ கோடிகள் கொடுப்பது.

அகதிகள் பிரட்சனை: 1948ம் வருட மத்தியில் 50,50,000 இந்துக்கள் இடம் பெயர்ந்து இந்தியாவிற்கும், அதேபோன்று அதிக அளவில் முஸ்லிம்கள் இடம் பெயர்ந்து பாகிஸ்தானுக்கும் சென்றனர். அவர்களில் இந்துக்கள் ரூ 500 கோடி சொத்துக்களும், முஸ்லிம்கள் ரூ 100 கோடி சொத்துக்களும் விட்டுவிட்டு இடம் பெயர்ந்தனர்.

காஷ்மீர் பிரட்சனை: இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் நீங்கா பிரட்சனை இருப்பது காஷ்மீர் ஆகும். காஷ்மீரை ஆண்ட மன்னன் ஹரி சிங் ஆகும் ஆனால் 75 சதவீத மக்கள் முஸ்லிம்கள் ஆகும். பிரிவினையின் போது காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க ஒப்புதல் கொடுத்தது ஷேய்க் அப்துல்லா ஆகும். ஆனால் மன்னர் ஹரி சிங் தனி அரசராக இருக்க வேண்டும் என்று நினைத்தார்.

அதன் பின்னர் இந்திய அரசு காஷ்மீரை இணைக்கும்போது முஸ்லீம் வாழும் பகுதி பாகிஸ்தான் துணையுடன் ஆசாத் காஷ்மீனாரது. அதனை தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் சமரச பேச்சில் இந்திய காஷ்மீர் மக்கள் விருப்பம் என்ன என்று அறிய ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்வது என்றும் தீர்மானிக்கப் பட்டது. ஆனால் அது இது வரை நிறைவேறவில்லை.

1950ல் இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றிய பிறகு 1951ல் முதலாவது தேர்தல் நடந்தது. அதில் காங்கிரஸ் 70 சதவீத வாக்குகளைப் பெற்று அரியணையில் ஏறியது.  அப்படி பதவி ஏற்ற பிறகு முதல் சவால் மொழிவாரி மாநிலம் கேட்டு நடந்த போராட்டம். ஆங்கிலேயர் இந்தியாவினை பிரிவினை செய்யும்போது இங்குள்ள மக்கள் மொழி, பண்பாடு ஆகியவற்றிக்கு முக்கியத்துவம் கொடுத்து மாநிலங்களை பிரிக்கவில்லை. ஆகவே தான் சுதந்திரத்திற்கு பின்பு போராட்டம் நடந்தது.

இண்டஸ் நதி நீர் பங்கீடு சிக்கல்: இண்டஸ் நதி பியாஸ், செனாப், கார், கொல்கிட், ஹான்ஸ், ஜீலம், கபூர், ரவி உள்ளடக்கிய 19 நதிகளைக் கொண்டது. அவை சீனா, பாகிஸ்தான் மற்றும் இந்திய எல்கைக்குள் செல்கிறது.

இந்திய-சீன எல்லை வரம்பு லார்ட் மௌண்ட்பாட்டன் எல்லைக் கோடு இமய மலையினை ஒட்டியுள்ளது. திபெத்தினை சீனா ஆக்கிரமிப்பு 1959ல் செய்தபோது புத்த மத தலைவர் தலாய் லாமா இந்தியாவிற்கு அடைக்கலம் புகுந்தார். அதனை எதிர்த்த சீனா 1962 அக்டோபர் மாதம் தனது ஆக்கிரமிப்பினை தொடர்ந்தது. அதனை இந்தியா எதிர்த்தது. 1962 நவம்பர் மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியா-பாக் யுத்தம்-1965: பாகிஸ்தான் இந்திய காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளை 1965 ஏப்ரல் மாதம் அனுப்பத்தொடங்கியது. அதன் பின்னர் இரண்டு நாடுகளும் தீவிரமான யுத்தத்தில் இறங்கின. அதன் பின்பு ரஷியாவும், அமெரிக்காவும் முயற்சி எடுத்து  ஐ.நா மூலம் போர் நிறுத்த ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது. அதன் பின்பு ஜவஹர்லால் நேரு மறைவு, லால் பகதூர் சாஸ்திரி பதவியேற்று தாஷ்கண்ட் ஒப்பந்தமும் செய்து கொள்ளப் பட்டது. அதன் பின்பு லால் பகதூர் சாஸ்திரி மறைவு ஆகியவை காங்கிரஸ் ஆட்சியினை அதிகமாக பாதித்தது. பண்டிட் ஜவஹர்லால் நேருவின் மகள் இந்திரா காந்தி 1966ல் அரியணையில் பிரதமராக ஆனார்.

இரண்டாம் பாகம்(1967-1977)

1967ல் நடந்த தேர்தல் காங்கிரஸ் குறைந்த அளவே உறுப்பினர்களை கொண்டதாக இருந்தது. எதிர்க்கட்சிகள் தங்களுடைய பலத்தினை அதிகப் படுத்தினர்.

நக்சால்பாரி தலையெடுத்தல் : வேலையின்மை, மிட்டா மிராசுதாரர்கள் ஏழை விவசாயிகளை கொடுமைப்படுத்தியது போன்ற பிரச்சனைகள் நாக்சால்பாரி  என்ற தீவிரவாத இயக்கம் மேற்கு வங்காளத்தில் நாக்சால்பாரி என்ற கிராமத்தில் வித்திட்டு படிப்படியாக தென் மாநிலங்களுக்குப் பரவியது. அதன் குறிக்கோளே ஜனநாயகம் வன்முறையில் தான் செயல் படுத்தமுடியும் என்பது தான். பங்களாதேஷ்  யுத்தம்: இந்தியா பங்களா தேஷ் யுத்தத்தில் 1971ல் பங்கேற்றது. அதன் பின்பு தனியார்வங்கிகள் தேசியமாக்கப் பட்டது.

இளைஞர்கள் வேலையின்மை, நிர்வாகம், அரசியலில் ஊழல் ஆகியவை அரசினை மிகவும் பாதித்தது. மக்கள் கிளர்ச்சி பல இடங்களில் ஏற்பட்டது. வினோபாஜியின் சீடரான பிஹாரைச் சார்ந்த ஜெயபிரகாஷ் நாராயணன் ஒரு பெரிய இயக்கமே ஆரம்பித்து மக்கள் புரட்ச்சிக்கு வித்திட்டார். அதனை ஒடுக்க இந்திரா காந்தி எமெர்ஜென்சியினை அமல் படுத்தினார். அவருடைய இளைய மகன் சஞ்சய் காந்தி செய்த குடும்ப கட்டுப்பாடு, எதிர் கட்சி தலைவர்கள் சிறை போன்றவை மக்களை உலுக்கச் செய்து காங்கிரஸ் மீது வெறுப்பு உண்டாக்கியது.

பாகம் மூன்று1977-1984: தன்னுடைய கட்சி பலத்தினை அதிகரிக்க 1977ல் இந்திரா தேர்தல் அறிவித்தார். ஆனால்  பரிதாபமாக அவரும், சஞ்சய் காந்தியும் தேர்தலில் தோற்கடிக்கப் பட்டனர். எதிர் கட்சிகள் இனைந்து ஜனதா அரசு அமைத்தது. பாடுபட்டு அமைத்த அரசு கோமாளித்தனமான சில தலைவர்களாலும் அவர்கள் செயல் படுத்திய திட்டங்களாலும் மக்கள் நம்பிக்கையினை இழந்தனர். மறுபடி 1980ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.

பஞ்சாப் தீவிர வாத இயக்கம்: பழைய பஞ்சாப் மாநிலம் சீக்கியர்களையும், ஹிந்துக்களையும் கொண்டதாக அமைந்தது. பிரிவினைக்குப் பின்பு அகாலி தால்  தனி நாடு வேண்டும் என்று குரல் கொடுத்தது. சீக்கியரின் பொற்கோவிலிலே தங்கள் தீவிர வாத தளத்தினை அமைத்தினர். ஒரு பக்கம் லோங்கோவால் தலைமையில் மிதவாத இயக்கமும், இளைஞர் பட்டாளம் இளைஞர் மதகுரு பிந்தரன் தலைமையில் தீவிரவாத இயக்கமாகியது. வன்முறை தாங்காமல் இந்திரா காந்தி பொற்கோயிலுக்குள் டாங்கி படையினை அனுப்பி அவர்களை ஒதுக்கினார். அதன் விளைவு இரும்பு பெண் என்றழைக்கப் பட்ட இந்திரா காந்தி சீக்கிய தீவிரவாத படை பிரிவினரால் தனது வீட்டிலேயே கொல்லப் பட்டார்.

பாகிஸ்தான் சந்தித்த சவால்கள் :

14.8.1947 அன்று இரவு சுதந்திரம் அடைந்தது. அதன் ஜனாதிபதியாக முகமது அலி ஜின்னாவும், பிரதமராக லியாகத் அலி அவர்களும் பொறுப்பேற்றார்கள். அந்த நாடு அரசியல், பொருளாதாரம், பூகோள அமைப்பில் ஒத்துவராத நாடாக அமைந்தது. குறைந்த பொருளாதாரத்தினை வைத்து லட்சக் கணக்கான அகதிகளை சீரமைக்க பெரும் செலவானது. பாகிஸ்தானின் மேற்குப் பகுதி ஒரு பக்கமும், கிழக்கு பகுதி மேற்கு வங்காளத்தினை ஒட்டி அமைந்தது.

27, Oct, 1947ல் இந்தியாவுடன் அறிவிக்கப் படா போர் நடந்தது. 21.3.1948ல்  பல மாநிலங்கள் உரிமை கேட்கும் போராட்டமும் ஆரம்பித்தது.1948ம் வருடம் ஏப்ரல் மாத தண்ணீர் பகிர்தளித்தல் சம்பந்தமாக சச்சரவு ஏற்பட்டது. மகாத்மா காந்தி சுடப் பட்டு இறந்த வருடம், 11.9.1948 அன்று கவர்னர் ஜெனரலாக இருந்த ஜின்னா அவர்கள் மறைந்தார்கள்.

1) பூகோள தாக்கம்:

பாகிஸ்தான் இயற்கையான எல்லையும், நதியும், மலையுமில்லை. கிழக்கு பாகிஸ்தான் மேற்கு பகுதிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் அப்பால் இருந்தது. அவர்களுக்குள் அவர்களுடைய மார்க்கமான இஸ்லாத்தினைத் தவிர எந்த பிணைப்புமில்லை.

2) மதக் கலவரம்:

மதக் கலவரத்தில் 10 லட்சம் மக்களுக்கு மேல் இடம் பெயர்ந்தனர். எண்ணெற்றோர்  மறைந்தனர்.

3) அரசு சம்பந்தமான தஸ்தாவேஜுகள் டெல்லி, கோல்கட்டா மற்றும் கராச்சியிலிருந்து வரவேண்டிருந்தது.

மேற்கு பாகிஸ்தானிலுருந்து கிழக்கு பாகிஸ்தானுக்கு எண்ணெற்ற அதிகாரிகள் இடம் பெயர வேண்டியதிருந்தது.

4) பெரிய தொழிற்சாலைகள் இல்லை. 70 சதவீதம் விவசாயத்தினை நம்பி இருந்தனர். 90 சதவீதம் சணல் கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து ஏற்றுமதியானது.

5) பதிவு செய்யப் பட்ட தொழிற்சாலைகள் 10 சதவீதம், மின்சாரம் 5 சதவீதம், தாது வளங்கள் 10 சதவீதம்.

6) இந்தியா பொருளாதாரம் மற்றும் ராணுவ தளவாடங்களில் 17 சதவீதமும் பாகிஸ்தானுக்கு 5 சதவீதமும் என்ற விகிதாசாரத்தில் பிரிவு செய்யப் பட்டது.

7) இண்டஸ், ஜீலம், செனாப் நதிகள் சம்பந்தமான தகராறுகள் தீர்பாயத்திற்கு அனுப்பி வைப்பது.

பாகிஸ்தானின் நீங்கா சிக்கல்களாக கீழ்க்கண்டவை இருந்து வருகின்றன:

1) இங்குள்ள மக்கள் ஒரே கலாச்சாரத்தினை சேர்ந்தவர்களாக ஒற்றுமையாக இருந்ததில்லை. வடக்கே பக்துன் இனமும், மேற்கே பலூச் இனமும், தெற்கே சிந்தி இனமும், வட கிழக்கில் பஞ்சாபி மக்களும், கிழக்கே பெங்காலி இனமும், தனி மொழியுடன் செயலாற்றினர்.

2) பெங்காலி மக்கள் பாகிஸ்தான் ஜனத்தொகையில் 56 சதவீதம் இருந்தனர். ஆனால் 6 சதவீத மக்கள் உருது மொழி பேசுவதாகவும் இருந்தனர். 1948 ம் வருடம் ஜூன் மாதம் பாகிஸ்தான் கவர்னர் ஜெனரல் ஜின்னா அவர்கள் கிழக்கு பாகிஸ்தானுக்கு வருகை தந்தபோது இனிமேல் உருது பொழிதான் ஆட்சிமொழி என்ற பொரியினை கொழுத்திப் போட்டது தான் தாமதம் அங்குள்ள மக்கள் தங்களுக்கு சுயாட்சி வேண்டுமென்று கூறி குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

3) பாகிஸ்தானில் பொது மக்கள் கல்வி, கேள்வியில் பின் தங்கி இருந்தனர். கிழக்கு பாகிஸ்தானில் டாக்காவில் மட்டும் ஒரு பல்கலைக் கழகம் இருந்தது.

4) காஷ்மீர் சிக்கல் மிகவும் தலைவலியானது. மஹாராஜா ஹரி சிங் முஸ்லிம்களை மதித்து நடக்கவில்லை. ஆகவே லட்சக் கணக்கான மக்கள் பாகிஸ்தான் நோக்கி இடம் பெயர்ந்தனர். பாகிஸ்தான் தனது படையினை அனுப்பியது. ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு போர் நிறுத்த ஒப்பம் செய்தது. அதன் படி காஷ்மீர் மக்கள் தங்கள் அரசியல் அமைப்பை முடிவு செய்ய ஒரு பொது வாக்கெடுப்பு நடத்துவது என்று. ஆனால் அது இது வரை நடத்தப் படவில்லை.

5) கிழக்கு பாகிஸ்தான் மக்கள்தங்களை மேற்கு பகுதி மக்கள் புறக்கணிக்கின்றனர் என்று எண்ணி 1950ல் தங்களுக்கு தனி நாடு வேணுமென்று 1950ல் குரல் எழுப்பினர். அதனைத் தொடர்ந்து 1969ல் பொது மக்கள் புரட்சி கிழக்கு பாகிஸ்தானில் ஏற்பட்டு பொது வாக்கெடுப்பு 1970ல் நடத்தப் பட்டது. அந்த தேர்தல்   முடிவில் அவாமி லீக் அதிக இடம் பிடித்தது. முஜீப் ரஹ்மான் கிழக்கு பாகிஸ்தானுக்கு அதிபராக பிரகடனப் படுத்தப் பட்டார். மேற்கு பாகிஸ்தான் அவருடைய ஆட்சியினை கலைக்க படையினை அனுப்பியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஏப்ரல் மாதம் 1971ல் தனி நாடு என்று அறிவித்தனர். 3-4, டிசம்பர் 1971ல் இந்திய-பாகிஸ்தான் யுத்தம் ஆரம்பித்து மேற்கு பாகிஸ்தானிலிருந்து ஏற்கனவே அனுப்பிய படையினருக்கு உதவி வராததால் அங்குள்ள படையினர் இந்திய படையினரிடம் சரணடைந்தனர் என்பது ஒரு வரலாறு.

மேற்கோள் காட்டப் பட்ட தவிர்க்கமுடியா மற்றும் நீங்கா தகராறுகளால் இரண்டு நாட்டு அரசுகளும் எலியும், பூனையுமாக இருந்து வருகின்றனர். அதனை ஐநா சபை கூட தீர்க்க முடியவில்லை. கும்பனி ஆட்சியினை விரட்ட அண்ணன் தம்பிகளாக இணைந்து குரல் கொடுத்த நாம் அந்த இடியப்ப தீர்க்க முடியவில்லை என்பது ஒவ்வொரு குடிமகனுடைய குறையாக இருக்கின்றது என்பது சமீப கால நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன.

இது போன்ற இரு நாடுகள் மனஸ்தாபங்கள் நமக்கு மட்டுமல்ல மாறாக எங்கெல்லாம் ஐரோப்பிய காலனி ஆதிக்கம் நடந்து இரண்டாம் உலக போருக்கு பின்னால் விடுதலை அடைந்ததோ அங்கெல்லாம் இதுபோன்ற சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மனித இனம் ஒன்றே அவன் நிம்மதியாக அமைதியாக வாழ வேண்டும் என்று எண்ணம் எப்போது வருகின்றதோ அது வரை இந்திய-பாக் இடியாப்ப சிக்கல் போன்று தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அதற்கு நாடு நாயகமான ஐநா சபை தீவிர நடவடிக்கைகள் எடுத்து தீர்த்து வைப்பதே தலையாய கடமையல்லவா?