Sunday 5 August, 2018

மனிதனை மனிதன் சாப்பிடுறானே தம்பிப் பயலே!’



(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)
இந்திய உச்ச நீதி மன்றம் 17. 7 .2018 அன்று இந்திய துணை கண்டத்தில் ஹரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், சட்டிஸ்கர், ஜார்கண்ட், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அஸ்ஸாம், கர்நாடக, கேரளா போன்ற மாநிலங்களில் பசு மாடுகளை கடத்தினார்கள், குழந்தைகளை கடத்தும் கும்பல், செய்வினை செய்யும் கும்பல், வழிப்பறி செய்யும் கூட்டம் என்று சட்டத்தினை தங்கள் கையினில் சில வன்முறை கும்பல் எடுத்துக் கொண்டு அப்பாவிகளை தாக்கும் செயல்களை கண்டிக்கும் விதமாக இந்தியாவில் ஜனநாயகம் நடக்கின்றதா அல்லது ‘மாபோகிராசி’ என்ற ஒரு சில  வன்முறைக் கூட்டத்தால் நடக்கின்றதா என்று தனது கண்டனத்தினை தெரிவித்ததுடன், அவைகளை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது என்பதினை நீங்கள் அனைவரும் பத்திரிக்கை, தொலைக் காட்சி வாயிலாக தெரிந்திருப்பீர்கள்.
            நாகரீக உலகம் தோன்றுவதற்கு முன்பு உணவிற்காக, இருப்பிடத்திற்காக, தங்களின் துணைவிகளுக்காக  மனிதர்கள் உடன்பிறப்புகள் என்று பாராது கொன்று குவிக்கும்  வல்லமை உள்ளவர்கள்  வெற்றிக் கொடி நாட்டும் வரலாறுகளை படித்திருப்பீர்கள். அதனையே சிலர் நாகரீக உலகிலும் அமல் செய்யும் செயலினை பாட்டாக கவிஞர், 'மனிசனை மனிசன் சாப்பிடுறான்டா' என்று பாடியுள்ளது உச்ச நீதி மன்ற கண்டணக்கனை விடும் அளவிற்கு சென்றுள்ளது.
            ஏன் அவ்வாறு உச்ச நீதி மன்ற நீதி அரசர்கள், ஏ.எம். கன்வில்கர், டி.ஒய். சந்தராசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியிருக்கின்றார்கள் என்றால் இந்தியாவில் சமீப காலங்களில் வன்முறைக் கும்பலின் வெறியாட்டக் காட்டு தர்பார் 20 விழுக்காடு அதிகரித்து இருக்கின்றது என்ற ஆய்வினை பார்த்தால் தெரியும். மாட்டு வியாபாரிகள் மாடுகளை வாங்கி வண்டிகளில் கொண்டு செல்லும்போது மாடுகளை பலியிடுவதற்காக கொண்டு செல்கிறார்கள் என்றும்,  பசு மாடுகளை வளர்பவர்களை மாட்டுக் கறிக்காக வளர்க்கிறார்கள் என்ற போர்வையிலும், வீடுகளில் புகுந்து சமையலுக்காக வைத்திருந்த ஆட்டுக்கறியினை மாட்டுக் கறி என்று அக்லாக் கான் போன்றவர்களை கொடூரமாக கொன்ற செயலும், குழந்தைகளின் கிட்னி, லிவர் போன்றவைகளை திருட குழந்தைகளை கடத்தும் கும்பல் என்று ஆசம் கான் போன்ற என்ஜினீயர், மற்றும் பிட்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள், மனநிலை பாதித்த மக்கள், வழிப்பறி கும்பல் என்று வெளியிட தொழிலாளர்களை தாக்கி கொல்லும் சம்பவங்கள் தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை திகைக்க வைத்து தனது கடுமையான கண்டனத்தினையும் தெரிவிக்க செய்துள்ளது.
            'டெமாக்ரசி' என்றால்  ஜனநாயக அரசியல் சட்ட முன்வரைவு மக்கள் அத்தனை  மக்களாலும், அவர்களுடைய பிரதிநிதிகள் மூலம், மக்கள் நல் வாழ்விற்கு அமைக்கப் பட்ட ஒரு அமைப்பே ஆகும். உலகில் மன்னராட்சி, சில மாண்புமிகு பெருமக்கள் கொண்ட அரிஸ்டோக்ரசி, சில அறிவு ஜீவிகள் கொண்ட ஆலிகார்க்கி, கொடுங்கோலாட்சி  என்ற அமைப்புக் கெல்லாம் சாவுமணி அடித்து விட்டு நாட்டின் முழு மக்களின் நலனுக்காக, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் அவர்களுக்குள் ஜாதி, மதம், இனம், மொழி போன்றவற்றால் பிரிவு எதுவுமில்லாமல் யாரும், எங்கேயும் தன்னிச்சையாக உலா வரவும், வேலை வாய்ப்பினை தேடிக் கொள்ளவும், பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை கொண்டு வாழவும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஜனநாயக நாடு இந்தியாவில் 1950 ன் அரசியல் சட்டத்தால் வழிவகை செய்யப் பட்டது.
            ஆனால் உச்ச நீதிமன்றம் சொன்ன 'மாபாக்ரசி' என்பது அரசின் அதிகாரத்தினை ஒரு சிறு வன்முறைக்கு கும்பல் தங்களுக்கென்று தனி அதிகாரத்தினை கையிலெடுத்துக் கொண்டு அரசின் சட்ட திட்டங்கள், அரசு எந்திரம், உளவுப் படை, காவல் படை போன்றவற்றின் செயல் பாடுகளை  காலில் போட்டு மிதித்து விட்டு தங்களுக்கென்று தனி சாம்ராஜ்யம் அமைத்து செயலாற்றுவது என்ன நியாயம் என்று உங்களுக்கு கேட்கத் தோணுவது நியாயம் தானே!
            இதே போன்ற முறையினை பதினெட்டாம் நூற்றாண்டின் கிரேக்க நாட்டில் 'அகிலோகிராசி' என்ற கும்பல் செய்து வந்தது. ஒரு நாட்டில் எங்கெல்லாம் 'அனார்கி' என்ற குழப்பமான சூழ்நிலை ஏற்படுகின்றதோ அங்கெல்லாம் சமத்துவம் சாகடிக்கப் படும்.  அமெரிக்காவில் கூட 1837 ம் ஆண்டில் மனிதர்களை கொல்லும், 'லின்சிங்' என்ற கும்பலின் செயலினை அந்த நாட்டின் ஜனநாயகத்தின் தந்தை ஆப்ரஹாம் லிங்கன் அது ஒரு மிருகத்தனமான செயல் என்று கண்டித்திருக்கின்றார்.
            ஆனால் சில சமயங்களில் சில நாடுகளில் மொபாக்ரசி நன்மைக்காவும், வேடிக்கையாகவும் நடந்துள்ளது என்று கீழ்கண்ட சம்பவங்கள் மூலம் காணலாம்:
1 ) இரண்டாம் நூற்றாண்டில் ரோமா நாட்டின் அதிகார கும்பல்கள் தவறான ஆட்சி முறைகளைக் கண்டு மக்கள் சிலிர்த்து எழுந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது, 'கிளிண்டன்' என்ற அதிகாரி அவர்கள் மீது கொடூர தாக்குதலை ஏவினான். இருந்தாலும் மக்கள் புரட்சியினை அடக்க முடியவில்லை. ரோம் அரசு மக்கள் புரட்சியினை அடக்க என்ன செய்ய வேண்டும் என்று புரட்சியாளர்களிடம் கேட்டபோது தங்கள் மீது அடக்கு முறையினை ஏவிவிட்ட கிளிண்டன் தலையினை எடுக்க வேண்டும் என்று சொன்னதும் அவன் தலை வாங்கியபின்பு மக்கள் போராட்டம் ஓய்ந்ததாக வரலாறு.  ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், 'ரிமூவ் தி கார்ப்ஸ்' என்று. அது எதற்காக என்றால் ஒரு பிரட்சனை  பொருளாலோ அல்லது நபராலோ ஏற்பட்டது என்றால் அதனை நீக்கினால் அது ஒழிந்து விடுமாம். அதுபோல தான் தூத்துக்குடி ‘ஸ்டெர்லிட்’ ஆலையினை மூடியதும் ஆர்ப்பாட்டம் நின்று விட்டது ஒரு எடுத்துக் காட்டு.
            2) அமெரிக்காவின் மாசாச்சூசெட் மாநிலத்தில் ஒரு சமயத்தில் மந்திரவாதிகள் செய்வினைகள் அதிகமாகிவிட்டது அதனை தடுக்க வேண்டும் என்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அவ்வாறு சந்தேகிக்கின்றவர்களையெல்லாம் பிடித்து அவர்களை குற்றங்களை ஒத்துக் கொள்ள செய்து தூக்குத்தண்டனைகள் நிறைவேற்றியது, 'சேலம் விட்ச் ட்ரயல்' என்ற கரும்புள்ளி 1662 ம் ஆண்டு நிறைவேற்றப் பட்டதாக சரித்திரம் கூறுகிறது.
            3) அமெரிக்காவின் ஆளுமை செய்த ஆங்கிலேய ஆட்சியினர் அமெரிக்க மக்களிடம் வரி வசூல் செய்ய 'ஸ்டாம்ப் டூட்டி' என்ற ஒரு வரி விதித்தனர். அதனை எதிர்த்து மக்கள் வெகுண்டெழுந்து அரசு கட்டிடங்களை 1765 ல்   தகர்த்தெறிந்தனர். அதன் பின்பு ஆங்கிலேய அரசு அந்த கறுப்புச் சட்டத்தினை நீக்கியது. ஆனால் அமைதி பாரம்பரிய  மிக்க நாம் ஆங்கிலேயர் உப்பு எடுக்க வரி விதித்ததினை அமைதியான முறையில் சத்தியாகிரகம் நடத்தி அதனை திரும்பப் பெறச் செய்த பெருமை இந்திய மக்களை சாரும்.
            4) அதேபோன்று தான் பிரான்ஸ் நாட்டில் பிரபுக்கள் ஆட்சி சர்வாதிகாரமாகி எதிர்ப்பாளர்களை எல்லாம் மக்களின் துயரம் என்று அழைக்கப் பட்ட 'பஸ்லே' என்ற சிறையில் தள்ளி கொடுமைப் படுத்தியபோது 1789 ல்   மக்கள் அந்த சிறையினை தகர்த்து அவர்களை எல்லாம் விடுதலை செய்தார்கள், அதோடு பிரபுக்களின் ஆட்சியையும் அகற்றப் பட்டது.
            5) பிலிபைன்ஸ் நாட்டில் அதிபர் மார்கோஸ் அதிகார மீறல் ஏற்படுத்தி ஊழல் செய்தபோது 'மக்கள் எடிசா என்ற மஞ்சள் புரட்சியினை 1986 ல் நடத்தி அகற்றியும், 1991 ல் மிகில் கோபர்ச்சேவ் அரசினை மாற்றியும், தாய்லாந்தில் 'தக்ஷின்' ஆட்சியையும், எகிப்த்தில் 2006 ம் ஆண்டு கோசிமின் முபாரக் ஆட்சியையும், 2011 ல் யுக்ரைனிலும், 2018 ம் ஆண்டு பக்கத்து மலேசியாவில் அரசு வங்கி கணக்கை அதிகாரத்தால் தனது சொந்த வங்கி கணக்கில் மாற்றியும் வரம்பு மீறிய அதிபர்கள் நீக்க மக்கள் புரட்சிகள் உதவின.
            6) சில கடை திறப்பில், விளையாட்டு போட்டிகளில்  நடிகை நடிகர்களை பார்க்க கூடும் கூட்டம் கட்டுக் கடங்காமல் போகும்போது சில சம்பவங்கள் நடக்கலாம். ஆனால் அவையெல்லாம் கொண்டாட்டங்களின் அத்துமீறல் ஆகும்.
சமீப காலங்களில் செய்திகளை உடனுக்குடன் காட்டுத் தீபோல பரப்பும் முகநூல், வாட்சப் , இன்ஸ்டாங்க்ராம், ஆர்குட் போன்றவைகள் நல்ல செய்திகளை பரப்புவதற்கு பதிலாக பசுக்களை கடத்துகிறார்கள், பசுக்களை கொள்கிறார்கள், மாட்டுக் கறி சாப்பிடுகிறார்கள், கலப்புத் திருமண தம்பதிகள் என்றும் , பிள்ளை பிடிக்கும் ஆசாமிகள், வழிப் பறி கொள்ளையர்கள், ஆடு கடத்தும் ஆசாமிகள், திருடர்கள் என்று அப்பாவி மக்களை அவர்கள் தனி நபர்  சுதந்திரத்தினை பறிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் தாக்கிக் கொல்லும் அளவிற்கு அத்து மீறலும், அதற்கு துணையாக தடுக்க வேண்டிய காவல் துறையே ஏவல் துறையாக மாறுவதற்கு யார் அவர்களுக்குத் தைரியம் கொடுத்தது. அதனையே தான் உச்ச நீதி மன்றமும் கேட்டுள்ளது என்பது சாமானிய மக்கள் எழுப்பும் கேள்வியும் அது தானே!
புது டெல்லி ஜும்மா மஸ்ஜித் இமாம் புஹாரி 31 .7 . 2018  அன்று, 'முஸ்லிம்கள் தொப்பி, தாடி வைத்துக் கொண்டு வெளியில் போய் வீட்டுக்கு திரும்பி  வர பயப்படுகிறார்கள் என்று கூறியிருப்பதினை மெய்ப்பிக்கும் விதமாக 3 .8  2018  ல் ஹரியானா மாநிலம் குறுகிராம் என்ற இடத்தில் தாபா உணவகம் நடத்தும் 'ஜபாருடீன்' என்ற நபர் கடையில் இருக்கும் போது அவர் தாடி வைத்திருக்கின்றார் என்று, அங்குள்ள சேரில் கயிற்றைக் கொண்டு கட்டி அவர் வைத்திருந்த தாடியினை சிரைத்துவிட்டு ஓடியிருக்கின்றார்கள் அந்த பார்பர்களான காலிக் கூட்டத்தினைச் சார்ந்தவர்கள் என்றால் எந்தளவிற்கு கொடியவர்கள் அவர்கள் என்று பாருங்களேன்.
வன்முறை கும்பலால் பாதிக்கப் பட்ட முஸாபிர் நகர், மீரட் நகர் முஸ்லிம்கள் இன்னும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அச்சப்ப படுகிறார்கள் என்றால் எந்தளவிற்கு அவர்களை பயமுறுத்தி இருக்கின்றார் என்று அறியலாம்.
காஸ்மீர் எல்லையோர கிராமமான காத்துவாவில் குதிரை மேய்ப்பில் ஈடுபட்டிருந்த ஆசிபா பானு ஜனவரி 2018 ல் கற்பழித்து கொலை செய்ததின் நோக்கமே அந்த கிராமத்தினை விட்டு முஸ்லிம்கள் வெளியேற்றி அதனை காலி கூட்டம் தாங்கள் குடியேற செய்த சதியாக பத்திரிக்கைகள் கூறுகின்றன. அதனைத் தான் 'லேண்ட் ஜிஹாத்' என்று கூறுகிறார்கள்.
மாபாக்ரசி என்ற வன்முறைகளைத் தடுக்க உச்ச நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு 21 வழிமுறைகள் கோடிட்டு காட்டியுள்ளன. அதில் 12 வழிமுறைகள் வன்முறைகளைத் தடுப்பதும், 9 வழிமுறைகள் வன்முறை கும்பலுக்கு பரிகாரம் காணவும், ஒன்று அதற்கு துணைபோகும் காவல் துறையினரை தண்டனைக்கு உட்படுத்தியும் கொண்டதாக அமைந்துள்ளது.
இது போன்ற வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவதினைப் பார்க்கும்போது வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு முஸ்லிம்கள், கிறித்துவர்கள், பழங்குடியினர், தலித் மக்கள் ஆகியோரை பயமுறுத்தி சில கட்சிகளுக்கு ஆதரவாக வோட்டுப் போட வைக்கும் தந்தரம்போல் இருக்கின்றது என்று நடுநிலையாளர்கள் கூறுகின்றனர். ஆகவே சமுதாய மக்கள் தங்களை தாங்களே ஆபத்திலிருந்தும், வன்முறைக்கு கும்பலிருந்தும் பாது காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் நல்லது என்று கூறலாமா!

           

No comments:

Post a Comment