Friday 26 November, 2021

மீலாதுநபி முக்கியத்துவ உறுதிமொழி

 


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ )

உங்களுக்கெல்லாம் தெரியும் வருகிற அக்டோபர் 19ந்தேதி நானிலம் போற்றும் பெருமானார் ரசூலுல்லாஹ் பிறந்தநாளை மீலாது நபி என்று அழைத்து, அதற்கு தமிழக அரசும் விடுமுறை விட்டுள்ளது. ஆங்கில எழுத்தாளர் மைக்கேல் ஹார்ட்ஸ் உலகில் முக்கியமான 100 நபர்களை தேர்ந்தெடுத்து  அதில் மிக சிறந்த நபர் யார் என்று ஆராயும்போது முகமது  ரசூலுல்லாஹ் பெயரினை சொல்லியுள்ளார். பாலைவனம், வறண்ட பூமி, பசுமையில்லா மலை குன்றுகள் கொண்ட அராபியா நாட்டில் எழுத்தறிவில்லா ஒரு மனிதர் எல்லாம் வல்ல இறைவனால் புனிதராக்கப் பட்டு அங்குள்ள காட்டரபிகளை நல்வழிப் படுத்த ஏக இறைவனால் அல் குரானை 1400 ஆண்டுகளுக்கு முன்பு ரஸூலல்லாவிற்கு  அருளி இன்று கிட்டத்தட்ட 170 கோடி முஸ்லிம்களை கொண்ட மார்க்கமாக இருப்பதிற்கான பெருமை ரஸூலல்லாவினைப் பொருந்தும். ஆகவே தான் ரஸூலல்லா பிறந்த நாள் சிறந்த நாளாக கருதப் படுகிறது. அவ்வாறு கருதுவதினால்  ரஸூலல்லாவினை, அல்லாஹ்விற்கு இணையாக யாரும் நினைப்பதில்லை. ஏனென்றால் ரஸூலல்லாவே தனக்கு முதலிடம் கொடுக்கக் கூடாது என்றும், தன்னுடைய ஒரு சிறு வரைபடம் கூட இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். ஆகிய உலகில் சிறந்த மனோதத்துவ நிபுணரும், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளின் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவரும், பத்ம விருது பெற்றவருமான மதிப்புமிகு பேராசிரியர் பி.ராமகிருஷ்ண ராவ் அவர்கள் கூறியிருப்பதாவது: ரசூலுல்லாஹ் முகமது அவர்கள் பற்றிய முழு உண்மையும் மக்களுக்கு இன்னமும் அறிவதில்லை. அவர் சிறந்த போர் வீரர், நாணயமான வியாபாரி, சிறந்த நாட்டின் நலம் பேனிக் காத்தவர், மக்களைக் கவரும் பேச்சாளர், சீர்திருத்தவாதி, அனாதைகளுக்கு அடைக்கலம், அடிமைகளை காத்தவர், உலகிலேயே முதல் பெண் விடுதலைக்குக் குரல் எழுப்பியவர், நெறி தவறா நீதிமான், உண்மையிலே போற்றத்தக்க இறை தூதர் என்று வானளாவிய புகழ் சூடியுள்ளதினை பார்க்கும் போது ஒரு ஹிந்து மதத்தினை தழுவியவர், கல்விமான், உலக மாணவர்களுக்கு பாடம் எடுத்தவர் பல்வேறு தூதர்களை ஆராய்ந்து அதில் முகமது ரசூலுல்லாஹ் தான் சிறந்தவர் என்று கூறியிருப்பது சால சிறந்தது என்று நீங்கள் கருதவில்லையா?

            நம்மிடையே சிலரும், மாற்று மதத்தினவரும், சில தர்க்க வாதிகளும் ஏன் ரஸூலல்லாவே திருகுரானை எழுதி இருக்கக் கூடாது என்றும்  விவாதம் செய்யவதினை பார்க்கின்றோம். அவர்களுக்கெல்லாம் நெத்தியடி பதில் சொல்லும் விதமாக திருகுரான் அல்லாஹ்வினாலேயே ரஸூலல்லாவிற்கு அருளப்பட்டது என்று இரத்தின சுருக்கமாக கீழ்கண்ட உதாரணத்துடன் விளக்க ஆசைப் படுகிறேன்:

1)    திருகுரான் 600 பக்கங்கள் கொண்டது. அது ஒரே மூச்சிலேயோ, ஒரே நாளிலேயோ, ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கிடையிலேயோ இறக்கி அருளப்படவில்லை மாறாக 23 நீண்ட வருடங்களில் ரஸூலல்லாவிற்கு அருளப்பட்டது. அது ஒரு குறிப்பிட்ட செய்தியினை மட்டும் சொல்லவில்லை மாறாக மக்களை நல்வழிப் படுத்த பல செய்திகளைக் கொண்டதாக உள்ளது.

2)    நீங்கள் சாதாரணமாக ஒரு புத்தகம் எழுத வேண்டுமென்றால் ஒரு தவறில்லாமல் எழுதமுடியாது. ஆனால் திருக்குரானில் இலக்கணப் பிழையில்லாமல், ஒன்னொன்றுக்கு முரண்படாமல் அறிவுபூர்வமான பல்வேறு உண்மையான தகவல்கள் உள்ளன.

3)    பாலைவனத்தில் ஒரு பாடசாலையோ, அல்லது அறிவினுக்கு உணவாக கூறப் படும்  லைப்ரரியோ அங்கு இருக்கவில்லை. அப்படியிருந்திருந்தால் அங்கே கற்று குரானை எழுதியிருக்கலாம் என்று சொல்வார்கள்.

4)    குர்ஆனில் மார்க்க சம்பந்தமாக மட்டும் சொல்லப் படவில்லை. மாறாக சிவில் சட்டம், கிரிமினல் சட்டம், குடும்பவியல் சட்டம், வேலை சம்பந்தமான சட்டம், ராணுவ சட்டம், தனிப் பட்டவர் காயம் ஏற்படுத்துதல் சட்டம், ரியல் எஸ்டேட் சட்டம், வரி விதிப்பு சட்டம் போன்ற பல்வேறு விதமான சட்ட நுணுக்கங்களை கொண்ட பொக்கிஷமாக உள்ளது. நீங்கள் அறிந்திருப்பீர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்ற அம்பேத்கார் தலைமையில் ஒரு கமிட்டி 1950ல் அமைக்கப் பட்டதும் அதில் பல்வேறு சட்ட ஓட்டைகள் உள்ளது என்றும் பல்வேறு தரப்பு மக்களால் சொல்லப் படுகிறது நமது நாட்டில். ஆனால் குர்ஆனில் சொல்லப் பட்ட சட்டங்கள் பல்வேறு நாடுகளில் நிறைவேற்றியும், இஸ்லாம் இல்லாத நாடுகளில் உள்ள மக்கள் கூட குர்ஆனில் கூறிய சட்டம் போன்று தங்கள் நாட்டில் அமைய வேண்டும் என்று சொல்லுவதினை காணலாம்.

5)    மக்காவில் வாழ்ந்த ரஸூலல்லாவிற்கு கிறித்துவ சமுதாயத்தினைப் பற்றிய தகவல் தெரிந்திருக்க நியாயமில்லை காரணம் அங்கே கிருத்துவர் வாழவில்லை. ஆனால் கிருத்துவர்கள் நமது மூதாதையர் என்றும், ஈஷா நபி என்ற ஜீசஸ் பற்றி விலாவாரியாக விவரித்துள்ளது. எந்த இடத்திலும் ரஸூலல்லா தான் மரித்த பின்பு மீண்டெழுப்பப் படுவேன் என்று சொல்லவில்லை. மாறாக ஈஸா நபி அவர்கள் மீண்டெழுவார் என்றும் கூறுகின்றது. ஈஸா நபி சரித்திரத்தினை எழுதிய சீடர் பர்னபாஸ் எழுதிய தோலிலான நூல் ஒன்று துருக்கி நூலகத்தில் உள்ளத்தினை கிருத்துவர்களின் தலைவர் போப் பெனெடிக் சென்று பார்த்து ஆச்சரியப் பட்டாராம். காரணம் தனக்குப் பின்பு முகமது ரசூலுல்லாஹ் என்பவர் வந்து மக்களை நல்வழிப் படுத்தியும், ஓரிறை கொள்கையினை எடுத்தியம்பியும் மக்கள் சேவை செய்வார் என்றும் உள்ளதாம். அது பாட்டுமல்ல ஈஸா நபி சிலுவையில் அறையப்படவில்லை மாறாக வேறொருவர் அறையப் பட்டார் என்றும், திருகுரானில் சொல்லப் பட்டதுபோல அவர்களை அல்லாஹ் தன்னிடம் அழைத்துக் கொண்டான் என்றும் கூறியதைக் கண்டு ஆச்சரியப் பட்டு பின்னாளில் இஸ்லாம் மார்க்க நெறியினை தேர்ந்தெடுத்தார் என்றும் கூறப் படுகிறது.

6)    ரஸூலல்லாவிற்கு வகி வருவதற்கு முன்பு ஒரு அரசு எப்படி இருக்கவேண்டும் அல்லது எப்படி அமைக்க வேண்டும் என்றும், அல்லாஹ்வினை வணங்குவதிக்கு முன்பு எப்படி தன்னை தூய்மை படுத்திக்  கொள்ளவேண்டும் என்றும் தெரியாது.

7)    மனோதத்துவ மந்திரங்கள் ரஸூலல்லாவிற்கு தெரிந்திருக்கின்றது நியாயமில்லை. குழந்தைச் செல்வங்களை எப்படி வளர்ப்பது, எவ்வாறு சமரச நடவடிக்கைகள் மேற்கொள்வது என்றும் தெரியாது. சொத்துக்களை பிரித்துக் கொள்ளும் முறைகள் மற்றும்  நிதித்துறை கையாள்வதும் தெரியாது.

8)    ஒரு தாய்க்கு எப்படி கருத்தரிக்கும் முறை, கடலின் அமைப்பு, பூகம்ப ரேகை அமைப்பு, மேகமூட்டம் சொல்லும் ஒன்று கூடுதல், அதன் விளக்கம், கதிரியக்கம், பறவை, செடி கொடி, விலங்கினங்கள் உயிர் வாழ்வது மற்றும் ஒன்றுக்கொன்று பேசிக்கொள்வது, மலை அமைப்பு, தேனை எடுக்கும் தேனீ எவ்வாறு வெளிப்படுத்துகிறது, ‘பிக் பங்’ என்ற உலக பெரு வெடிப்பு ஏற்பட்டதும், கோளரங்கம் அமைக்கப் பட்டது போன்ற எண்ணற்ற  செய்திகளை துல்லிதமாக ரஸூலல்லாவிற்கு வகி இறங்குவதற்கு முன்பு தெரியாது.

9)    வருங்காலத்தில் எழுத வேண்டுமென்றால் தனி மனிதரான ரஸூலல்லாஹ்வினால் எழுதமுடியாது. உலகத்தினைப் பற்றிய செய்திகளை பற்றி எழுத வேண்டுமென்றால் அந்தந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யவுமில்லை.

10)  பைபிளுக்கு வேறுபட்டு குரான் இருக்க முடியாது. வகியால் இறக்கியருளப்பட்டதால் தான் பைபிளை சார்ந்தே குரானும் உள்ளது.

11)  எழுத்தாளர்களுக்குத் தெரியும் ஒரு புத்தகத்தினை எழுதும் போது எழுத்தாளருடைய தனிப் பட்ட வாழ்க்கையினை எழுதாமல் இருக்க முடியாது. உதாரணத்திற்கு மனைவி இறந்த சோகம், எப்போது குழந்தை பிறந்தது, எப்போது மணமுடிக்க செய்தது, பேரக் குழந்தைகள் பிறந்த செய்தி, போரில் எப்போது வெற்றி மற்றும் தோல்விகளை கூறாமல் இருக்கமுடியாது.

12)  குரானை அர்த்தம் தெரிந்து படித்தவர்களுக்கு எப்படி ஒரு தனி மனிதரால் 1400 ஆண்டுகளுக்கு முன்னாள் எழுதமுடியும் என்ற கேள்விக்கணை எழுப்பாமல் இருக்க முடியாது. குரானை எந்தவித முரண்பாடுமில்லாமல் அறிவு சால் அறிஞர்கள் கொண்ட குழு அமைத்து காலத்திற்கு ஏற்ற மாறுபட்ட விஞ்ஞானம், வாழ்க்கை தத்துவம், போன்றவற்றை அனுசரித்து எழுத வேண்டும்.

13)  சரி, அப்படியென்றால் ஏன் சாத்தான் ஓதும் வேதமாக இருக்கக் கூடாது என்றும் சிலர் கேட்கலாம், அதற்கும் பதிலுண்டு. சாத்தான் ஈஷா நபி அவர்களை புகழுமா, ஏழைகளுக்கு உதவுங்கள் என்று சொல்லுமா, சாத்தானுக்கு பயந்து சொல்லுங்கள் என்று சாத்தானே சொல்வானா? என்றும் சிந்தித்துப் பாருங்கள்.

14)   ரசூலுல்லாஹ் தனிமனிதராக இருந்து பின்பு தனது கடைசி அரபா உரையினை லட்சக் கணக்கான மக்கள் கேட்கும் அளவிற்கு மார்க்க, அரசியல் தலைவராக இருந்தார் அராபிய துணைக் கண்டத்தில். அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் மக்கள் தன்னை வணங்குவதிற்கோ, காலில் விழுவத்திற்கோ, தான் வரும்போது எழுந்து நிற்பதிற்கோ, தன்னை யாரும் புகழ்வதிற்கோ, தான் இறந்த பின்பு தன்னை இறைவனுக்கு இணையாக ஆக்கிவிடக் கூடாது என்று கவனமாக இருந்த காரணத்தால் இன்று உலகில் அவருடைய சிறு கீரல் படம் கூட வெளிவந்தாலும் முஸ்லிம் மக்கள் வெகுண்டெழுகின்றனர். அவர்களுடைய மதினா அடக்கத் தலத்திற்கு செல்லும் முஸ்லிம்களை அங்கே இருக்கும் அதிகாரிகள் எங்கே கையேந்தி ரஸூலல்லாவினை இறைவனுக்கு இணையாக ஆக்கிவிடுவார்களோ என்று அடித்து விரட்டுகிறார்கள் என்றால் ரசூலுல்லாஹ் எவ்வளவு கவனமாக இருந்தார்கள் தான் வெறும் தூதர்தான் தான் மற்ற மதத்தலைவர்களை அவர்கள் மரித்த பின்பு அவர்களுக்கு  சிலைகள்  வைத்து வழிபடுவது போல தனக்கும் வைத்து விடுவார்கள் என்பதினுக்கு மிகவும் கவனமாக இருந்த மாமனிதர் ரசூலுல்லாஹ் ஆகும்.

ஆகவே அல் குரான் சைத்தானாலும் எழுதப் படவில்லை, அறிவு சால் அறிஞர்களாலும் எழுதப் படவில்லை, முகமது என்ற தனி நபராலும் எழுதப் படவில்லை, அது எல்லாம் வல்ல அல்லாஹ்வால் ரஸூலல்லாஹ்விற்கு அருளப் பட்ட ஒன்றே என்று பல மதத் தலைவர்கள், அறிஞர்கள் ஒப்புக் கொள்ளப் பட்ட ஒன்றாகும். ஆகவே அதில் தர்க்கம் செய்ய யாருக்கும் உரிமையில்லை. அதன் படி நடப்பதே நாம் ரஸூலல்லாஹ்விற்கும், வகியை இறக்கி அருளிய அல்லாஹ்விற்கும் செய்யும் நன்றிக் கடன் என்று மீலாது நபி நாளில் உறுதி கொள்ளலாமா?

No comments:

Post a Comment